Tuesday 17 July 2012

சிக்னல்



சிறுகதை

திடுக்கிட்டு விழித்தேன். உடன் எழுந்து அமர்ந்தேன். அருகிலிருந்த செல்போனில் மணி பார்க்க 2 . 12  மணி வரையிலும் விழித்துக் கொண்டிருந்தது ஞாபகத்துக்கு வந்தது. முகத்தைத் தொட்டுப் பார்த்தேன். கன்னங்களில் கண்ணீர் காய்ந்திருந்ததை விரல்கள் உணர்ந்ததும் அடிவயிற்றில் சில்லென்று கத்தி நழுவிட இதயத்துடிப்பின் வேகம் தன முறையை மாற்றியிருந்தது. கனவில்தானே அழுதேன்? கனவில்தானே கிருஷ்ணன் செத்துப் போனான்? கிருஷ்ணன் செத்துக்கிடந்த காட்சி மலை கழுவிய பாறையாய் பளீரென மனதில் தென்பட மிக அனிச்சையாய் கண்கள் கலங்கி கண்ணீர் வழியத் துவங்கியது. அறைக்குள் அடர்ந்திருந்த இருட்டில் மிக லேசாக சுற்றிக் கொண்டிருந்த மின்விசிறி தெரியவில்லை. மெல்ல நகர்ந்து சுவற்றின் மீது சாய்ந்து கொண்டேன். கையில் இருந்த செல்போன் திரையில் கிருஷ்ணனின் என்னைத் தேடி காலிங் பட்டனை அழுத்த எதிர்முனையில்' நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நபர் இறந்து சில நிமிடங்கள் ஆகிவிட்டன' என்றது இளமை நிரம்பிய பெண்குரல். பெருந்துக்கத்துடன் மனம் வெடித்தது. ஏன் செத்தான் கிருஷ்ணன்?

எப்போதும் சிக்னல் வந்துவிட்டாலே என் நடை நிதானமாகிவிடும். ஊரில் இத்தனை டென்சனான வாழ்க்கை கிடையாது. நகரத்தில் தனது உளைச்சலையும் அடுத்தவர் மீது திணித்துவிட்டு ஓடும் எந்திர வாழ்வில் சிக்னல்களில் எப்போதுமே  நான் நிதானிப்பதுண்டு. மற்றொன்று  என்னால் வேகமாய் மட்டுமல்ல.மிக மெதுவாய் கூட ஓடமுடியாது. ஐந்து வருடங்களுக்கு முன் நடந்த விபத்தில் சிக்கி மீண்டது மறுபிறவி. இடது கால்முட்டியின் சில்லுகள் தெறித்து அங்கே சில்வர் பட்டைகள் பொருத்தப்பட்டுள்ளன. மண்டையில் விழுந்த விரிசலில் மிகப் பலமான தையல் போடப்பட்டிருக்கிறது. காபி குடித்தால் ஒத்துக்காது. குமட்டும். மூளை கொஞ்சம் பாதிக்கப் பட்டிருக்கிறது என்றார் டாக்டர். என் மீது எந்த தப்பும் இல்லை.பஸ் டிரைவர் மீதுதான் எல்லா தப்பும் என்று சொல்லியும் டாக்டர் கேட்கவில்லை. மூலையில் உறைந்த ரத்தத்தை அகற்றுகிறேன் பேர்வழி என்று தெறித்த மண்டையை உடைத்தார். கொஞ்ச நாட்களுக்கு வலிப்பு வந்து கொண்டிருந்தது. எப்டாயின்,பிரிசியம் 10  mg , கார்டினால் 60  என்று மாத்திரைகள் உற்ற நண்பர்கள் ஆனார்கள்.அதிலும்  கார்டினால் 60 மிகவும் பொசசிவ்னஸ். இரண்டு நாள் மறந்து விட்டால் போதும். மூன்றாம் நாள் மிகக் கொடூரமான வலிப்பினை வரவைத்து தன்னை ஞாபகப் படுத்தும் அளவுக்கு....ப்ச். கிருஷ்ணன் செத்ததை சொல்லவந்து நான் செத்துப் பிழைத்த கதையை சொல்கிறேன்.

கிருஷ்ணனுக்கு ப்ராய்லர் சிக்கன் என்றால் பிடிக்காது. மேச்சேரி சென்றுவிட்டால் பெரும்பாலும் இரவு சாப்பாடு ஓட்டலில்தான் இருக்கும். கிருஷ்ணன் எனக்காக நாட்டுக்கோழி ஆர்டர் சொல்வான். கிருஷ்ணனிடம் என் தாயைப் பார்த்திருக்கிறேன் அப்போதெல்லாம். அம்மா இருந்தபோது மார்க்கெட் சென்று நாட்டுக்கோழி வாங்கிவந்து அரிவாள் மனையில் தலையை அறுத்துவிட்டு துடிக்கத் தொடங்கும் கோழியின் உயிரை அலுமினிய அன்னக் குண்டானில் போட்டு மூடி வைத்துவிடும். வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் என்னை ' ஊட்டுக்குள்ள போடா...' என்று சத்தம் போட்டுவிட்டு சிறிது நேரம் அந்த அன்னகுண்டான் தரையிலே அங்குமிங்கும் நகரும். இறக்கைகளின்    படபடப்பு அலுமினிய சுவற்றில் பட்டுத் தெறிக்க அசைவு அடங்கியதும் இறக்கைகளைப் பிய்த்துவிட்டு சுத்தம் செய்து கழுவி துண்டு துண்டாக கோழியை அரிவதை அருகிலிருந்தவாறு பார்த்துக் கொண்டிருப்பேன். கோழியின் சூடான உடல் வாசனை என் நாவில் எச்சில் ஊறவைத்தபடியிருக்கும்.நான் கிருஷ்ணன் செத்ததை சொல்லவந்து கோழி செத்ததை சொல்லிக் கொண்டிருக்கிறேன்...பாருங்கள்.

அன்று அப்படித்தான்.சிக்னலில் நின்று கொண்டிருக்கும்போதுதான் கவனித்தேன். கிருஷ்ணனுக்கும் எனக்கும் பிடித்த நாட்டுக்கோழி ஒன்று சாலையில் எங்களோடு தயங்கி நின்றது. நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அறிவுகெட்ட கோழி மடத்தனமாய் ஒரு காரியம் செய்தது. பச்சை விளக்கு விழும் முன்பே சாலையைக் கடக்க முற்பட, வேகமாய் விரைந்து கொண்டிருந்த கார்களில் சிவப்பு நிற ஆல்ட்டோவும் இருந்தது. முதலில் அதன் சக்கரத்தில் தான் சிக்கியது. பிளாஸ்டிக் சத்தத்துடன் பட்டெனத் தெறித்து பின்னாலே வந்த ஜென்னில் மோதியது. அதற்குப் பிறகு அந்தக் கோழி மெல்ல ஒரு காலியான மினரல் வாட்டர் பாட்டிலாகவும் மெல்ல மெல்ல கிருஷ்ணனாகவும் மாறி மாறி அந்த பரபரப்பான நெடுஞ்சாலையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்ததை என்னால் பார்க்க முடியவில்லை. திடுக்கிட்டு விழித்து விட்டேன்.

                                                              2
தனபாலிடமிருந்து போன் வந்தது உடனே புறப்பட்டு வரச்சொல்லி. காரணம் கேட்க எதுவும் சொல்லவில்லை. இரண்டு  நாட்களுக்கு முன் கிருஷ்ணன் போனில் என்னிடம் பேசிய வார்த்தைகளுக்குப் பிறகு கிருஷ்ணனைப் பற்றி நினைத்தாலே அந்த வார்த்தைகள்தான் ஞாபகம் வந்து கொண்டிருந்தது. அதற்கு முன்பெல்லாம் அவனின்  கூத்து கட்டும் புன்னகைதான் நினைவுரும். 'கிருஷ்ணனுக்கு என்னாச்சி' என்று பூடகமாய் நான் கேட்டதற்கும் தனபால் பதில் சொல்லவில்லை. பஸ் ஆம்பூர் தாண்டி திருப்பத்தூர் நோக்கிச் செல்லும்போது மனது கேட்காமல் கிருஷ்ணனுக்குப் போன் செய்தேன். அன்று அவன் அப்படிபேசியபிறகுமறுபடியும்போனி
ல் நானும்பேசவில்லை.அவனும்  பேசவில்லை. கிருஷ்ணனாய் போன் செய்யட்டும் என்றுதான் விட்டிருந்தேன். இன்று தனபால் அழைத்ததும் புறப்பட்டு விட்டாலும் கிருஷ்ணனிடம் சொல்லாமல் மேச்சேரி செல்வது உறுத்தலாயிருந்தது. எப்போது ஊருக்குச் செல்வதாயிருந்தாலும் கிருஷ்ணனிடம் போனில் பேசி தகவல் தெரிவித்துவிட்டுத்தான் செல்வது. சமயங்களில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் தருமபுரிக்கு பஸ் ஏறும் முன்பு போன் செய்து கேட்டிருக்கிறேன். ' கம்பெனியில டைட் ஒர்க்...ரெண்டு நாள் கழிச்சு வா' என்றதும் பஸ் ஏறாமல் திரும்பியிருக்கிறேன். ஆனாலும் அந்த இரண்டு நாட்களில் பத்து முறையாவது போன் வந்துவிடும். ' என்ன எதுவும் பிரச்சனையா...பணம் எதுவும் தேவைப்படுதா..ஒருமுறை திருப்பித் திருப்பி இதையே கேட்டதும் கோபம் உச்சந்தலைக்கு ஏற ' பணம்னா மட்டும்தான் ஒன்கிட்ட வருவேனா...பேசறதுக்கு எனக்குன்னு யாருமே இல்லாமத்தான ஒன்னத் தேடி வரேன்..' என்று அழுததும் பின்பு அதைப் பற்றி பேசுவதில்லை.

ரிங் போய்க்கொண்டேயிருந்தது. போனை யாருமே எடுக்காதது ஒருவித பயத்தையே உண்டாக்கியது. கண்களை மூடியதுமே கண்ணீர் பெருக பஸ்ஸில் சுற்று முற்றும் பார்த்துவிட்டு கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன். மெச்சேரியில் இறங்கியதும் தனபாலிடமிருந்து போன் வந்தது. பைக்கில் வந்து என்னை அழைத்து செல்வதாய் கூறிய தனபால் ஒருமணி நேரமாகியும் வரவில்லை. பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கும் போது தனபாலின் பைக்கை யாரோ ஒருவர் ஓட்டிக் கொண்டு வந்தார். தனபால் பைக்கின் முன்புறம் மயில் ராவணன் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும். இதற்கு முன்பு பார்த்திராத அவர் அருகில் சென்று ' தனபால் வரலையா...' என்றதும், என்னைப் பார்த்ததும் ' ஓ...நீங்கதான் கருப்புசாமியா..தனபால் வெளியில கொஞ்சம் வேலையாப் போயிருக்காப்ல..நான் ராதா. பக்கத்தூர்தான்.நீங்க வாங்க போவோம்...' என்றார். கிருஷ்ணனின் வீட்டினை நெருங்கும்போதே புரிந்துவிட்டது. பெருங்கூட்டமே கூடியிருந்தது. பைக் நின்றதும் மிக  மெதுவாய்த்தான் இறங்கினேன். இதயப் படபடப்பெல்லாம் இல்லை.கால்களில் மட்டும் லேசான நடுக்கம்.

கலங்கிச் சிவந்த கண்களுடன் வேகமாய் வந்த தனபால் என்னைக் கண்டதும் வாய்விட்டு அரற்றியபடி என் தலையில் ஓங்கியடித்தான்.வலி சுரீரென்று மூளையைத் தாக்க வலிப்பு வந்தது எனக்கு.

லேசான விழிப்பிலேயே தெரிந்துவிட்டது உடல் துடிக்கத் தொடங்கியிருப்பது. இனிமேல் செய்வதற்கு எதுவுமில்லை. மூன்று நிமிடமோ நான்கு   நிமிடமோ உடலின் ஒரு பாகம் முழுவதும் வெட்டி இழுத்துவிட்டுத்தான் அடங்கும். மனம் எல்லாம் உணரும் நிலையில் இருந்தாலும் எதையும் வெளிப்படுத்திவிட முடியாது. திறந்து விரிந்திருக்கும் வலது கண்ணில் மையாய் இருட்டு. எதுவும் செய்யமுடியாமல் உடம்பை அதன் போக்கிலேயே விட்டுவிட்டுக் கிடந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது உடல்.நீளநீளமான மூச்சுகள் விட்டபின் மிகத் தெளிவாய் தியான அமைதி மனதில் நிரம்ப உடல் நடுங்க எழுந்து அமர்ந்தேன். அப்போதுதான் தெரிந்தது,என் புட்டத்துக்கு அடியில் செல்போன் சிக்கிக் கிடப்பது. எப்போதும் அருகில் வைத்தபடிதான் படுப்பது. வலிப்பு வந்து உடல் வெட்டி இழுத்ததில் எப்படியோ போன் அங்கே போய்விட்டது. போனை எடுத்ததும் வெளிச்சம் தெரிய, கிருஷ்ணன் காலிங் என்றது திரையில்.
                                                                  3
பஸ் விரைந்து கொண்டிருந்தது.கண்கள் கலங்கிய வண்ணமிருக்க மீண்டும் மீண்டும் அந்த வார்த்தைகளே ஞாபகம் வர,காதுக்குள் கிருஷ்ணனின் குரல் மிகத்  தெளிவாய் கேட்டபடியிருந்தது. எல்லா நிறுத்தங்களிலும் மக்கள் கும்பல் கும்பலாய் ஏறிக் கொண்டிருக்க பஸ் நெரிசலில் பிதுங்கிக் கொண்டிருந்தது. எவனோ ஒருவன் முழு போதையில் ஏதேதோ அசிங்கமாய் சத்தம் போட்டுக் கத்திக் கொண்டிருந்தான்.பஸ்ஸில் யாரும் அவனைக் கண்டிக்கவில்லை. கண்டக்டர் காதிலேயே விழாதது போல் அமர்ந்திருக்க கால் வைக்கக் கூட இடமில்லாமல் கூட்டம் நெருக்கியபடியிருக்க எனக்கு லேசாக மூச்சுத் திணறியது. நாலாபுறமும் அழுத்திக் கொண்டிருக்கும் மனிதர்களின் சுவாசங்களை மிகவும் கஷ்டப்பட்டு விலக்கி போதையின் உளறலைக் கடந்து கண்ணாடி வழியே சாலையைப் பார்க்க எதிர் திசையில் விரைந்து கொண்டிருக்கும் வாகனங்களைத் தாண்டி பிளாட்பாரத்தில் யாரோ படுத்திருப்பது தெரிந்தது.உற்றுப் பார்க்க கிருஷ்ணன் போர்வை போர்த்திப் படுத்திருப்பதும் அருகில் அமர்ந்தபடி தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்த என்னைக் கண்டதும் உறைந்தேன். இப்போது போட்டிருக்கும் இதே சட்டை, பேண்ட்தான். அருகில் எனது பேக். திடீரென்று ஞாபகம் வந்து நின்று கொண்டிருந்த நான் என் பேக்கைத் தேடமுயல சடர்ன் பிரேக்கில் நிலை தடுமாறி பஸ்சின் கம்பியில் நெற்றி வேகமாய் மோதியது.
                              
                                                    4 பஸ்ஸிலிருந்து இறங்கியதும் மறுபடியும் செல்போன் சிணுங்கியது. கிருஷ்ணன். எடுத்து காதில் வைத்து பழக்க தோஷமாய் ' கிருஷ்ணா' என்றேன். கிருஷ்ணன்தான் பேசினான்.
' வந்துக்கிட்டுருக்கியா'

'ம்' 

'எங்க வந்துக்கிட்டுருக்க'

'மேச்சேரி'

'எறங்கிட்டியா'

' ம்'

சரி..அங்கேயே இரு..வரேன்..'

குழப்பமாயிருந்தது. கிருஷ்ணனின் குரல்தான் அது. எப்படி முடியும் கிருஷ்ணன் இறந்தது எனக்குத் தெரியும். என்னிடம் சொல்லிவிட்டுத்தானே செத்துப்போனான். அவன் உடல் பார்த்து கதறி அழுதேனே. கன்னமெல்லாம் காய்ந்து கிடந்ததே அழுத கண்ணீர். இரவு போன் செய்து பேசினான். இன்று வரச் சொன்னான். நம்பிக்கையேயில்லை. என் மனத்தில்தான் பிரச்சனை என்று புரிந்தது. கிருஷ்ணனிடமிருந்து அந்த வார்த்தைகள் கேட்டபின் என்னமோ ஆகிவிட்டது. அதுதான் மனம் போன போக்கில் சென்று கொண்டிருக்கிறேன். கடைசியாய் கிருஷ்ணனின் வீட்டையும், பேசிக்கழித்த  கிணற்றடி மேடையையும், வழுக்குப் பாறைப் பதிவுகளையும், பெரியாச்சியம்மனின் காவல் குதிரையும் பார்த்துவிட்டு எங்கேயாவது போய்விடலாம் என்றுதான் புறப்பட்டு வந்தது. மிகச்சரியாய் மேச்சேரியில் இறங்கியதுமே போன் வருகிறது. கிருஷ்ணன் சொல்லி ஒருமணி நேரமாகியும் வரவில்லை. பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தபோது தனபால் பைக்கில் வருவது தெரிந்தது. சிரித்தபடி என் அருகில் பைக்கை நிறுத்திய தனபால் தோள் தொட்டு இறங்கியது...கிருஷ்ணன்தான். என் கால்கள் நடுங்கின.  கலங்கிச் சிவந்த கண்களுடன் பாய்ந்து கிருஷ்ணனின் சட்டையைப் பிடித்தேன். உலுக்கியபடியே கத்தினேன்.' நான் செத்ததுக்கப்புறம் என்ன நெனச்சிப் பாப்பேன்னு சொன்னீல்ல...இப்ப பாத்தியா..நீ சாகல...நான் நெனச்சிக்கிட்டுருக்கேன்' கிருஷ்ணனின் கன்னத்தினை என் விரல்கள் வருடிய உணர்வு அப்படியே உறைந்து நின்றது. வேறு எதுவும் எனக்குத் தெரியவில்லை.
                                                                  5 

' இதை நாங்க பிரீப் சைக்கோசிஷ்னு சொல்லுவோம். தான் நேசிக்கிற ஒருத்தர் திடீர்னு இறந்துபோனாலோ அல்லது அது போன்ற மன நெருக்கடிக்கு ஆளானாலோ திடீர்  நிகழ்வாய் இது மாதிரி ஆயிடலாம். உறவுகளை வெறுத்த கருப்புசாமிக்கு எல்லாமே நண்பர்கள்தான். கருப்புசாமியோட இன்பதுன்பங்கள்ள  கூடவே வந்துக்கிட்டிருந்த கிருஷ்ணன்தான் அவருக்கு எல்லாமுமா இருந்திருக்காரு. அப்பேர்பட்ட கிருஷ்ணன் ஏதோ சின்ன மன வருத்தத்துல சொன்ன வார்த்தைகள்தான் ' நான் செத்ததுக்கப்புறம் என்ன நெனச்சிப் பாப்பே' ன்னது.கருப்புசாமியோட மனச அந்த வார்த்தைகள் வெகுவா பாதிச்சிடுச்சி.போன்ல பேசிட்டு அந்த வார்த்தைகளோட வலி தாங்க முடியாம சிக்னல்ல வந்து நிக்கும்போது ஒரு மினரல் வாட்டர் பாட்டில் ட்ராபிக்ல சிக்கி எல்லா கார் சக்கரங்கள்ளேயும் அடிபட்ருக்கு. கிருஷ்ணனோட வார்த்தைகள்ல இருந்த கருப்புசாமிக்கு அது கிருஷ்ணனா தெரிஞ்சிருக்கு. அதோட பஸ்ல ட்ராவல் பண்ணும்போது அதிக போதையில் அராஜகம் பண்ணிக்கிட்டு இருந்த குடிகாரன தன்னால தட்டிக் கேட்கமுடியாத இயலாமை, நகரத்து நெருக்கடிகள்ல சிக்கிக் கொண்டு தவிக்கிற தன்னோட இயல்பு எல்லாம் கருப்புசாமியோட மூளையில சிறிதளவு பாதிப்பு ஏற்படித்திடிச்சு. தொடர்ந்த ரெண்டு மூணு நாட்கள்ல கிருஷ்ணன் இறந்து போய்விட்டது போலவும் அதற்கு தான் போவது போலவும் கனவு கண்டிருக்கிறார். ஸ்ட்ரெஸ் அதிகமாகி இடையில கொஞ்ச நாள் கருப்புசாமிக்கு இருந்த வலிப்பு மறுபடியும் வந்துருக்கு...மற்றபடி அவர நாங்க ஆழ் மன சிகிச்சைக்கு உட்படுத்தி பேச வச்சதில நகரத்துல வாழப் பிடிக்காத அவரோட குணாம்சம்தான் வெளிப்பட்டது. கிராமத்து சூழல்ல பொறந்து வளர்ந்திட்டு வாழ்வின் நெருக்கடிகளினால நகரத்தில பிழைக்க வர்ற பல இளைஞர் களோட மனநிலையில இப்படி ஒரு அனாதைத் தன்மை உணர்ற பீல் இருக்கு. இது வியாதியில்ல.தொடர் கவனிப்புல சரியாயிடும்.ஆனாலும் கனவு என்பது சின்ன மனநோய் னு ப்ராயிட் சொன்னது வச்சி பார்க்கும்போது கருப்புசாமிக்கு இப்போ தேவை நிறைய பணமோ ஆறுதலோ இல்ல. அவர்மேல உண்மையா அன்பு செலுத்துற கிருஷ்ணன் மாதிரியான நபர்களோட அருகாமை மட்டும்தான்.'

டாக்டர் தனபாலிடம் பேசும்போது என் பெயரையும் குறிப்பிட்டதில் ஆர்வம் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தேன். கிருஷ்ணன் உயிரோடு இருப்பதை மட்டும் என்னால் நம்பமுடியவில்லை.  அவனை நேரில் பார்த்ததே பெரும் நிம்மதியாயிருந்தது. ஆனால் எவ்வளவுதான் மறக்க நினைத்தாலும் கிருஷ்ணனின் அந்த வார்த்தைகள் திரும்பத் திரும்ப ஞாபகம் வந்து தலையை லேசாக வலிக்கச் செய்கிறது. டாக்டர் தனது பிரிஸ் கிருப்ஷனில்  மாத்திரை மருந்துகள் எழுதிக் கொண்டிருக்கும்போது தீர்மானித்தேன். வலி தீர ஒரே வழிதான் உள்ளது. கிருஷ்ணன் என்னிடம் சொன்ன அதே வார்த்தைகளை நான் அவனிடம் சொல்லாமலே...


                                                         
நன்றி உயிர்மொழி இதழ் 

No comments:

Post a Comment