Monday 16 July 2012

சம்மந்தப்பட்டவர்களின் நலன் கருதி பெயர்கள் மாற்றப்படவில்லை.-



கட்டுரை 

THE DIFFERENCE BETWEEN ME AND எ MAD MAN IS THAT MAD 
 என்கிறது ஆங்கில சொற்றொடர் ஒன்று.  உடை உதிர்த்து உலகமெங்கும் நடைபோடும் மனநிலை தவறியவர்களின் எச்சரிக்கையே 
மேற்சொன்ன தங்க மொழியில் தங்கி நிற்கிறது. மனிதன் உடல் உறுப்புகள் அத்தனைக்கும்  இன்று மாற்று வந்துவிட்டது, ஒன்றைத் தவிர. மண்ணையும் மற்ற உயிரினங்களையும் தன்  காலடியில் பணியவைத்த அவனது அறிவுத் திறனுக்கு காரணமான மூளை. கோடி நியூரான்கள் கொட்டிக்கிடக்கும் அற்புதம் நிகழ்த்தும் மூளை எந்த கட்டளைக்கு கீழ்படிந்து தன்னை முடமாக்கிக் கொள்கிறது? அதீத வறுமை, கொடூர பசியினைத் தாள முடியாத மென்மனம் ஒரு புள்ளியில் 
தன்னைப் பைத்தியமென அறிவித்துக்கொண்டு வறுமையும் பசியையும் கொல்கிறதா?

சொந்த வீடு, பேங்க் பேலென்ஸ், சொத்து மதிப்பு, 3 அண்ணன்கள், உறவுகள் என்று நிறைந்த வீட்டிலிருந்து வந்த செல்வராஜ் இன்றும் உங்கள் தோள் தொட்டு குதூகலமாய் சிரித்தபடி 5 ரூபா சார், 10 ரூபா சார் 
எனக் கேட்க எதுகாரணம்?  டிகிரி முடித்த செல்வராஜ் வேளை கிடைக்காத விரக்தியா, தன் படிப்பிற்கு வெளியில் கிடைத்த அவ மரியாதையா,ஆளுக்கு ஆடையில் சிக்கிய வாச போதையா.... தெரியவில்லை. மனிதனாய் வாழ்ந்த பணக்கார நாட்கள் மனதில் உறைந்து போனதன் விளைவுதான் அம்பது பைசா, ஒரு ரூபாய்க்கு பதிலாக 'அஞ்சு ரூபா சார்' ,'பத்து ரூபா சார்' ...பைத்தியங்கள் எப்படி உருவாகிறார்கள்  என்பதைவிட 'ஏன்' என்ற கேள்விஒன்றில்  வாழ்வின் அசட்டுத்தனங்கள் கோரமுகம் காட்டி நகரக்கூடும். உலகம் அறிவித்திருக்கும் விளிம்புநிலைப் பட்டியலில் பைத்தியங்கள் உண்டு. மனிதர்களின் விளிம்பு  பைத்தியமென்றால் பைத்தியத்தின் விளிம்பு எது? மையம் எது? 

கலியனுக்கு வயதென்னவோ தெரியாது. பார்க்க 35 இருக்கும். எப்போதும் நைனா வீட்டு திண்ணை  வாசம்.எப்போது அவர்கள் திண்ணையில் அவன் அடைக்கலாமானாவென யாருக்கும் தெரியாது. அந்த திண்ணையை படைத்த நைனாவிற்கு  கூட.  உடலில் துளி ஆடையின்றி அடையாய் படர்ந்த அழுக்குடன். தளர்ந்த நிர்வாணத்துடன்  படுத்துக்கிடக்கும் கலியன் பலருக்கு சாமி. காலை எட்டு  மணிக்கு தன் மளிகைக்கடையை திறக்கசெல்லும் அண்ணாச்சி தினமும் ஒரு காரியம் செய்வார்.  ஒரு ரூபா நாணயமொன்றை கலியன் கையில் தந்து வாங்கிசெல்வார். பத்து மணிபோல் அண்ணாச்சியிடமிருந்து கலியனுக்கு டிபன் போகும். கலியனின் மூன்று வேளை உணவுக்கும் உத்திரவாதமாய் ஊரில் ஆட்கள் இருந்தார்கள். பைத்தியமாதலின் முதல் தகுதி ஆடைகளைத்  துரத்தல் என்பது எவரிட்ட சட்டமோ. நிர்வாணமாய் நடை போடும் கலியனை மட்டும் ஊர் சகித்துக் கொண்டது பைத்தியமென்பதால்தான். ஒரு நாள் காலை ரத்தம் கக்கி செத்துக் கிடந்த கலியனை  நகராட்சி வண்டி அள்ளிச்சென்று எரித்து வந்தது. கலியன் எதற்கு பயந்தானோ? தன்னை  பைத்தியமென அறிவித்துக்கொண்டான். எவருக்கும் தொந்திரவு தராமலிருந்து இறந்தான்.  அவனால் பலன் அடைந்தவர்களே ஊரில் அதிகம். 

'ஒரு புளிய மரத்தின் கதை' இல் சுந்தர ராமசாமி சொல்வதுபோல் எதையேனும் ஒன்றை இழந்து  தன்னைக் காப்பாற்றிக் கொண்டுவிடுவது என்பது எப்பதுமே புத்திசாலித்தனம்தானோ?.  பைத்தியம் என்பதும் ஒருவன் தன் அறிவை இழந்து தன்னை காப்பாற்றிக்கொள்ளும் காரியம்தானோ?.படிக்கும் காலத்திலிலேயே லாட்டரிசீட்டு விற்று சம்பாதித்த கால் ஊனமான ராஜேந்திரன் தன்னைத்தானே  ஒற்றைச் செருப்பால் தரையிலும் தலையிலும் மாறி மாறி அடித்தபடி வீதியில் ஓடியது ஏன்? பத்து ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்கும் பேரின்பம் வழங்கிய மணிக்கூண்டு மகாராணி ஆடி ஓடி தேய்ந்த  நாளில்ஆஞ்சநேயர் கோவில் வாசலில் பிச்சையெடுத்து பின்பொரு கோடையில் தலையெங்கும்  பிளாஸ்டிக் பூக்களைச் செருகிக்கொண்டு கிழிந்த புடவையுடன் கற்கள் பொறுக்கிக் கொண்டிருந்தது  யாரை அடிக்க?இனி இழப்பதற்கு எதுவுமில்லாமல் போனபின்பும் வாழும், பைத்தியமானாலும்  உயிரோடு இருக்க வேண்டுமென்ற ஆசையும் எதன் பொருட்டு? தற்கொலையின் வழிக்கு பயந்த அறிவு தன்னைப் பைத்தியமென பிரகடனப்படுத்திக்கொள்கிறதா...?

பள்ளியில் கற்றுத் தரப்படும் பாடத்தில் மனிதர்கள் இருவகையினர். 1 . ஆண்கள் 2 .பெண்கள். இவர்கள்  எப்போதும் மனிதர்களற்ற பைத்தியமாகலாம் என்பது கற்காமல் விட்ட பாடம்தானோ. பலருக்கும்  சாமியான பைத்தியக் கலியன், எல்லாமிருந்தும் ஏதுமற்றிருக்கும் அஞ்சு ரூபா செல்வராஜ், கல்வி காலத்திலயே காசின் அருமை புரிந்து சம்பாதித்து பின் அழுக்கு மூட்டைக்குள் அடங்கிப்போன செல்வராஜ்,
பலருக்கும் இன்பம் தந்து பின்பொருநாள் பைத்தியமாய் ஓடும் மகராணி. எல்லோரும் மனிதர்களின்  இரு பிரிவினரில் பிறந்து பின் எப்புள்ளியில் இணைந்து பைத்தியப் பிரிவு அடைந்தார்கள்?

ஒரு இந்தி பைத்தியம் தந்துபோன உதிரியான பீடிகளை தன் மேசைக்கல்லா மீது வைத்திருக்கும்  பலசரக்குகடைகாரரை நாம் பார்த்திருக்கிறோம்தானே. சமூகம் இப்போதெல்லாம் பைத்தியங்களை  கல்லால் அடிப்பதில்லை. கல்லடி தாங்கும் அளவிற்கு எந்த பைத்தியமும் இப்போது உறுதியில்லை. சிறு அதட்டலுக்கும் மிரண்டு விலகி விடுகின்றன. கோவில்கள் நிறைந்த சுற்றுலா ஸ்தலங்களில்  அலையும் பைத்தியங்களின் பிறந்த ஊர் யாருக்கு தெரிந்திருக்கும். பைத்தியர்கள் எல்லோரிடத்தும்  இருக்கிறார்கள். ஒரு குரலுக்கு காத்திருக்கிறார்கள். அவ்வளவுதான். நம் உலகத்தில் வர அவர்களுக்கு அனுமதி மறுக்கும் நாம் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் உலகத்தில் அவர்கள் அனுமதியின்றி  நுழையக் கூடும் என்பது மனம் நடுங்கும் உண்மை. மனிதனில் கடவுளையும் கடவுளில் மனிதனையும் 
கண்டு சமாதானமாகும் மானுடம் பைத்தியக் கடவுளை படைக்காமல் விட்டது எப்படி? பைத்தியத்தின்  கடவுள் எது? மனிதன் பைத்தியமாகாமல் காக்கும் வழிகளை மேற்கொள்ளும் மனம் பைத்தியம் மனிதனாகாமல் தடுக்கும் வழி செய்யுமா? ஒரு மனிதனாய் சக மனிதர்களிடம் நாம் கேட்டுக் கொள்ளப்  போவதெல்லாம் வேறொன்றுமில்லை. பைத்தியங்களை பைத்தியமாகவே விடுங்கள்.-

கணேசகுமாரன்.

நன்றி தடாகம் .காம் இணைய இதழ் 

No comments:

Post a Comment