Monday 16 July 2012

ஆவணப்பட விமர்சனம்



புதியகோணம் என்ற இணைய இதழுக்காக இயக்குநர் தனபால் பத்மநாபனை நான் எடுத்த நேர்காணல்.

a little dream [ english ] -
இயக்கம் p .தனபால் 
ஆவணப்படம் [ஒரு மணி நேரம்] 
வருடம் -2007
 
                                     கனவு காணும் முன்........

ஒரு குழந்தையை என்னிடம் கொடுங்கள். அதை டாக்டராகவோ, வக்கீலாகவோ, திருடனாகவோ மாற்றிக் காட்டுகிறேன் -மனோ தத்துவ நிபுணர் j .b. வாட்சன்
 
குழந்தைகள் நம் மூலமாக வருகின்றன. ஆனால் நம்முடையவை அல்ல.- கலீல் கிப்ரான்.
 
செயல் மூலம்தான் குழந்தைகள் வாழ்வினைப் படிக்கிறார்கள். அவர்களுக்கு உதாரணமாக பெற்றோர்களான நீங்களே செயல்படுங்கள். கேள்வி கேட்காமல் உங்களைப் பின்பற்றுவார்கள்.-  குழந்தைகள் உளவியல் நிபுணர் பிருந்தா சிவராமன். 

பிஞ்சுப் பருவத்தில் மனதில் படியும் அத்தனையும்தான் அவர்களின் பிற்கால வாழ்வினை தீர்மானிப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். அந்தக் குழந்தைகளுக்கான உலகம் எப்படியிருக்கிறது? எங்கே இருக்கிறது? பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து மீளவும் வாழ்வாதாரத்தினை நிலை நிறுத்திக் கொள்ளவுமே இப்போதைய பெற்றோர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. கால்களில் சக்கரமோ, சங்கிலியோ கட்டிய பெற்றோர்களுக்கோ தங்கள் குழந்தைகளுக்கு எதிர்கால உதாரணமாக வாழ முடியவில்லை. குழந்தைகளை நல்வழிப்படுத்த யாருமற்ற தேசமாக மாறிவிடாமல் தடுக்க அவ்வப்போது சில அதிசயங்கள் நிகழ்வதுண்டு.
அப்துல்கலாம்!  குழந்தைகளின் ஆதர்சமாக மாறியது எப்படி? ராமேஸ்வரத்தில் பிறந்த எவ்வித அரசியல் பின்புலமில்லாத ஒரு தமிழன் ராஷ்டிரபதிபவனுக்குள் நுழைந்தது எப்படி? இயக்குநர் p.தனபாலின் 'ஒரு சிறிய கனவு' ஆவணப்படம் சொல்லும் பெரிய விஷயம் என்ன? 

                                         சிறுவர்கள் சுண்டல் விற்கிற 
                                         சிறுமிகள் பூ விற்கிற 
                                         இதே கடற்கரையில்தான் 
                                         குழந்தைகள் பந்து விளையாடுவதும் 
                                                                                                                       [லலிதானந்த்]

இயக்குநர் இப்படத்தினை வீதிகளில் வாழ விதிக்கப்பட்ட அனாதைக் குழந்தைகளுக்கு சமர்ப்பணம்  செய்துள்ளார்.அதற்காக காட்டப்படும் ஆரம்பக் காட்சிகளில் ஒன்றில் குப்பை பொறுக்கி வாழும் அழுக்குச் சிறுமியின் கையில் divided and  ruling என்று தலைப்பிட்ட புத்தகம் இருக்கிறது. அட்டையில் அருகருகே இரு அம்பானிகள்.

மூன்று விதமாக விரியும் இந்த ஆவணப்படம் ஒரு குறும்படத்தின் தன்மையுடன் ஆரம்பிக்கிறது. சுந்தர்  என்ற சிறுவனின் பிறந்த நாள் பரிசாக அவன் தாத்தா தரும் அப்துல் கலாம் எழுதிய அக்னிச் சிறகுகள் 
[wings of fire ] புத்தகத்தினை படித்துவிட்டு கலாமை ஆதர்சமாகக் கொண்டாடி தனது பிறந்த தினத்  தீர்மானமாக இரு ஏழைச் சிறுவர்களுக்கு தன் வீட்டில் படிப்பு சொல்லித்தர தீர்மானிக்கிறான். அதன்படியே  முத்து, லக்ஷ்மி, என்கிற பெற்றோரை இழந்த ஏழைச் சிறுவனையும் சிறுமியையும் தன் வீட்டிற்கு அழைத்து 
வந்து கல்வி கற்றுத் தருகிறான். அவன் அம்மா அதை விரும்பாதபோது மனம் உடையும் சுந்தருக்கு  வெற்றி என்பது அத்தனை எளிதான விஷயமில்லை என்று ஆறுதல் கூறி அதற்கு உதாரணமாக அப்துல் 
கலாம் வாழ்க்கையினை விவரிக்கிறார் தாத்தா. படகு தயார் செய்யும் பணி புரிந்து பிழைத்து வந்த  கடலோர ஏழைக் குடும்பத்து சிறுவன் தன் கனவின் வழியாக பாராளுமன்றம் சென்றது வரை விளக்குகிறார்.
கதை முடிவில் சிறுவனின் ஆசையை உணர்ந்த அம்மாவும் சம்மதிக்க மகிழ்வோடு ஏழைச் சிறுவர்களுக்கு  பாடம் சொல்லித் தந்து தன்னோடு கல்வி கற்க அழைத்துச் செல்கிறான். சிறுவனின் கனவு, அதற்கான 
முயற்சி, வரும் தடை, அம்மாவுடன் கொள்ளும் காந்திய வழியிலான எதிர்ப்பு,பின்தான் படிக்கும்  பள்ளியிலேயே அந்த ஏழைச் சிறுவனையும் சிறுமியையும் கல்வி கற்க அழைத்து செல்வது என்று அங்கங்கே கலாமின் வாழ்க்கையை,ஆசையை, விருப்பத்தை, தொட்டபடியே கதைச் சிறுவனின் வாழ்கையும்  நகர்கிறது. 

இன்னொருபுறம் கலாமின் உரையாடல் வழி குழந்தைகள் மீதான தனது ஆர்வத்தினையும்,புத்தக  வாசிப்புகளின் வழி நாம் அடையும் உயரம், தான் கல்வி பயின்ற காலத்தில் பெற்றோர்களுக்கும் 
ஆசிரியர்களுக்கும் இடையிலிருந்த உறவுமுறை,தனது பறக்கும் கனவுக்கு விதைபோட்ட பள்ளிக்கூட  சம்பவம், கல்வியின் சக்தி பற்றிய பேச்சு,ஐரோப்பிய நாட்டின் பொன்விழாக் கொண்டாட்டத்தின் உரையில்  
தமிழ்க் கவி பற்றிப் பேசி கைதட்டல் வாங்கியது என்று வெகு சகஜமான உரையாடலாகவும் தன்னம்பிக்கை  மிளிரும் அரங்க உரையாகவும் விரிகிறது. 

மற்றொருபுறம் கலாமின் சகோதரர் ,கலாமின் நண்பனின் சகோதரர்,கலாம் கல்வி பயின்ற பள்ளியின் தலைமையாசிரியர், கல்லூரியில் கலாம் தங்கியிருந்த விடுதி தோழர்,கலாம் எழுதிய 'இந்தியா 2020 ' யின் இணை எழுத்தரான y .s . ராஜனின் விரிவான உரையாடல்,இந்திய விண்வெளித் தந்தை எனப்படும்  விக்ரம் சாராபாய் அவர்களின் சிறு காட்சிப் பதிவு, மகாத்மா காந்தியின் 5 வருட அந்தரங்க காரியதரிசியாக  இருந்த கல்யாணம் என்பவரது கலாம் பற்றிய பேச்சு, கலாமின் இசையறிவினை விளக்கும் சீர்காழி சிவ சிதம்பரத்தின் உரையாடல் என்று பலரின் பெருமிதப் பகிர்தலாக நகர்கிறது ஆவணப்படம்.

இப்படி மூன்று தளங்களில் விரியும் ஆவணப்படத்தினை நமக்கு சற்றும் குழப்பமில்லாமல் மிகச் சிறப்பான  முறையில் தொகுத்துத் தந்த எடிட்டர் மனோகருக்குத்தான் முதல் கை குலுக்கல். கலாமின் ஊருக்குள் 
நுழையும் படத்தில் அவரின் பள்ளிப் பருவத்தினைப் பற்றி சுந்தரின் தாத்தா விவரிக்கும் போதே பள்ளி நிகழ்வான பிராமணரின் அருகில் முஸ்லிமா என்ற சம்பவத்தினை கலாமின் நண்பரின் தம்பி மூலமாக 
சொல்லியிருப்பதிலிருந்து உயர்நிலைப் பள்ளி , கல்லூரி, d.r.d.o -வில் பணிபுரியும்போது நடந்த சம்பவம்  என்று விரியும் கால கட்டங்களில் சம்மந்தப்பட்ட நபர்களது அனுபவங்களை தொகுத்திருப்பது பாராட்டத் 
தக்கது. கலாமின் நூலுக்கு உதவி புரிந்த கலாமின் நண்பரும் இணை விஞ்ஞானியுமான y .s . ராஜனின்  நேர்காணலை அங்கங்கே பிரித்து மிகச் சரியான இடத்தில் வைத்திருப்பதும் கலாமின் பாராளுமன்ற 
உரை, ஐரோப்பிய யூனியன் பேச்சு, மாணவர்களின் கலந்துரையாடல் என்று சரிவிகிதத்தில் இணைத்து  தன் பணியைத் திறம்பட செய்துள்ளார்.

அப்துல்கலாமின் வாழ்வினை அழகியல் நிரம்பிய ஆவணப் படமாக்கியிருப்பதில் ஒளிப்பதிவாளர் செழியன் பங்கு அழகு. தாத்தாவுக்கும் பேரனுக்குமான மொட்டைமாடி உரையாடலில் வெறுமனே எதிரெதிரே  அமர்ந்து சம்பிரதாயமாக்காமல் சிறு வெளிச்சம் மட்டும் இருவர் முகத்தில் படியவிட்டு வசனங்களுக்கு 
முக்கியத்துவம் தந்து கவனிக்க வைத்திருப்பது நன்று. கலாமின் பள்ளிக்கூட மாற்றுச் சான்றிதழைக்  காண்பிக்கும் கேமிரா சான்றிதழைப் படிப்பது போலவே நகர்வது அழகு. ராமேஸ்வரம், இராமநாதப்
புரப்பள்ளி, திருச்சி கல்லூரி, சென்னை m .i .t . கல்லூரி, pura அமைப்பின் தத்தெடுத்த அச்சம்பட்டி கிராமத்தின்  சோற்றுக்கற்றாழை நிறத்தினைக் கூட நிலமணம் மாறாமல் பதிவு செய்திருக்கிறார். அப்துல்கலாமின் 
'song of youth ' கவிதையினை மேடையில் பரதம் கொண்டு படமாக்கியிருப்பதில் ஒளி விளையாட்டு. கண்களை விட்டு அகலாத பதிவு. ஆனாலும் மகாத்மாவின் உதவியாளரின் நேர்காணலில் காட்சிப்பதிவில்  சிறு நடுக்கம் இருப்பது எதன் குறைபாடு என்று தெரியவில்லை.

'தென்மேற்கு பருவக்காற்று' திரைப்படத்தின் மூலம் தன் பாடல்கள் இசை மூலமாக செவிகளுக்குள்  சிம்மாசனமிட்டிருக்கும் n .r . ரகுநந்தன் என்கிற சத்யா 'a little dream ' ஆவணப்படத்தில் அதற்கான 
இறுக்கத்தை குறைத்து இசையோடு கலாமின் கனவில் நம்மையும் பயணிக்க வைத்திருக்கிறார்.கலாம் கவிதை பாடலானதில் சத்யாவின் இசைத்தொகுப்பு நமக்கு இன்னொரு முகம் காட்டுகிறது. 

சிறிய கனவிலிருந்து அறிய  தகவல்கள்:
கலாமின் சகோதரர் பேசுகையில்: 'நாங்க சகோதரர்கள் மொத்தம் ஏழு பேர்.இதுல ஆறு பேர் எங்க வீட்லதான்  பொறந்தோம்.எங்க அப்பா இந்த வீடு கட்டினதுக்கப்புறம் பொறந்தவர் அவர்[ அப்துல் கலாம்] இதில் 
கூட தன்னோட தனித்தன்மையைக் காட்டிட்டாரு. சின்ன வயசிலேயே பேப்பர் போடுற பணி செஞ்சார். அது அவரோட உறவினர் ஒருவருக்காக செஞ்ச உதவி.அவர் பதவி ஏற்புக்கு நாங்க நாப்பது பேர் டெல்லி 
போனோம். போயிட்டு வந்த அத்தனை செலவும் அவரோடதான்.                               -எளிமை 

கலாமின் பள்ளி நண்பரான ராமசாஸ்திரியின் தம்பி :'ஒரு தடவை பள்ளிகூடத்துக்கு வந்த புது டீச்சர் அண்ணாவையும் அவரையும் பாத்துட்டு பிராமணன் பக்கத்துல முஸ்லிமான்னுட்டு அவரைக் கடைசியில  ஒக்கார வச்சிட்டாங்க. அப்புறம் எங்க அப்பா அந்த டீச்சரை கூப்பிட்டு கண்டிச்சதுக்கப்புறம் எல்லாம் சரியாயிடுச்சி'                                                                                    -வியப்பு 

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மேலாளர் dr .லாசர் : 'பிரசிடெண்ட் ஆன பிறகு 2003 ல் அவர் பேசிய உரையில் தான் படித்த திருச்சி கல்லூரி பற்றிக் கூறும்போது கோயில்,சர்ச், இடையே மசூதி இருந்த இடத்தில் 
நான் படிக்க நேர்ந்தது அன்பின் இணக்கமான உணர்வு.'                                                   -நெகிழ்ச்சி 

இணை விஞ்ஞானியும் இந்தியா 2020 நூலின் இணை எழுத்தரான y .s . ராஜன்:
'சின்ன சின்ன முன்னேற்றங்களே நிலையான உயரத்துக்கு கொண்டு செல்லும் என்பதில் உறுதியாய் இருந்தார் கலாம். நம் எதிர்பார்ப்பில் நூறு நபர்கள் இருந்தால் அவர்களில் இருபது நபர் மட்டுமே சரியான பாதையில் செல்லக்கூடும்.அந்த இருபது சதவீதம் மீதான நம்பிக்கைதான் நமக்கு வேண்டும். அவருக்கு எல்லாமே பாசிடிவ் சிந்தனைகள்'                                                           -நம்பிக்கை 

நானோ டெக்னாலஜி உருவான விதம் பற்றி பொன்ராஜ்:
'மிகப்பெரிய தொகை செலவாகும் நானோ டெக்னாலஜிக்கு பத்து கோடி ஒதுக்கி அதை உருவாக்கிய விதம். ஒரு எதிர் பார்ப்பினை அத்தனை மக்களிடம் கொண்டு சேர்த்தது எது. நாம் சாதிப்போம் என்ற நம்பிக்கை.
அந்த நம்பிக்கையின் உருவம் கலாம். இப்போது 22 நாடுகளில் அந்த ஒரு எதிர்பார்ப்பு எத்தகைய முன்னேற்றத்தினை உருவாக்கியுள்ளது. ஒரு தனிப்பட்ட கனவு பரவலான தருணம் அது.' -
சாதனை 

மகாத்மாகந்தியின் தோழர் கல்யாணம் ; ' 5 வருடம் நான் மகாத்மாவின்அந்தரங்க காரியதரிசியாக இருந்தேன் .எனக்கு தெரிந்து இப்போதுள்ள சூழலில் காந்திக்கு இணையாக கலாமை மட்டுமே சொல்ல முடியும்.'- 
நேர்மை 

சீர்காழி சிவசிதம்பரம்:அவர் ஒரு சிறந்த இசைக் கலைஞர். அற்புதமாக வீணை வாசிப்பார். அவரை நான் சந்தித்தபோது என்னிடம் தியாகராஜா கீர்த்தனையின் 'எந்தரோ மகானுபாவலு அந்தரிகி வந்தனமு'
பாடினார். மிகவும் அற்புத சந்திப்பு அது. அவர் ஒரு கவிஞர், இசைஞர், சிறந்த மனிதர், மிகப்பெரிய ஆளுமை.
- பரவசம் 


இப்படி பலதரப்பட்ட மனிதர்களின் வெவ்வேறுவிதமான விவரணைகள் கலாமின் சிறப்பியல்புகளை  தெளிவாக எடுத்து கூறுகிறது. மதம் கண்டு தனியே பிரித்துவைத்த ஆசிரியரைக் கண்டித்த சாஸ்திரியின் அப்பா இருந்த காலம் கற்காலமோ என்று எண்ணும்படி இருக்கிறது அந்த மதநேய ஒற்றுமை . நானோ டெக்னாலஜி சாதித்த சந்தோசத்தினை பொன்ராஜ் விவரிக்கும்போது அவரின் கண்களில்தான் எப்படி 
எல்லாம் நம்பிக்கை தெறிக்கிறது. அவரின் உற்சாகச் சக்தி நம்மையும் தொற்றிக்கொள்வதை படம்  பார்க்கையில் உணரமுடிகிறது. 

அப்துல் கலாமின் நேர்காணலிலிருந்து:
 
' எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. முத்து அய்யர்தான் என் முதல் ஆசிரியர். ஐந்து வயது பையன் ஒருவன் ஒருநாள் பள்ளிக்கு வரவில்லை என்றால் பையனின் வீட்டுக்கு வந்து என்னாச்சு? என்று விசாரித்து செல்வார். அப்போது பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான உறவு ஆத்மார்த்தமாக இருந்தது. 5 ,6 ,7 வகுப்புகளுக்கு சிவசுப்ரமணிய அய்யர் ஆசிரியராய் இருந்தார். என் வாழ்வின் மிக முக்கியத் தருணம் அது.
பறவைகள் எப்படிப் பறக்கின்றன என்பதை அறிவியல் பூர்வமாய் விளக்கியிருந்தாலும் என் வாழ்வின் கனவுச் சிறகுகள் விரிந்திருந்தன. ஒரு விமானியாக வேண்டும், பறக்கவேண்டும் என்பதை என் மனதில் 
அழுந்தப் பதிந்தார் அவர். ஆசிரியர்கள் கையில்தான் இருக்கிறது மாணவர்கள் மனத்தில் கனவினை  விதைப்பதும், வளர்ப்பதும், அதற்கான தீவிரத்தை நிலைநிறுத்துவது போன்றவை ஆசிரியர்கள் மட்டுமே 
செய்யமுடியும்.

என்னைப் பொறுத்தவரை இந்தியா ஏழை நாடல்ல. இந்திய மக்களின் சிந்தனையில்தான் வளமையில்லை. அடுத்த 20 ,25 , வருடங்களில் நாட்டின் முன்னேற்றம் என்பது அதன் டெக்னாலஜி முன்னேறுவதில்தான்  இருக்கிறது.பெரிதாய் சிந்தியுங்கள்.பெரிதாய் சாதியுங்கள்.

மிகச் சிறு வயதிலேயே கலாமின் வீட்டில் அவர் படிக்கும் அறையில் ' t ' வடிவ கோண அளவி [ t square ] இருப்பது அவருக்கு இஞ்சினியரிங் படிப்பின் மீதான ஆர்வத்தைக் காட்டுகிறது. கலாம் திருச்சி செயின்ட் 
ஜோசப் கல்லூரியில் physics படித்தபோது தங்கியிருந்த மாணவர் விடுதி அறையில் இப்போது [ படம் எடுக்கப்பட்ட 2007 ம் ஆண்டு] பாரதி என்ற மாணவர் கலாம் தேர்ந்தெடுத்திருப்பதும் இன்னொரு கலாமுக்கான 
நம்பிக்கையை நமக்குள் விதைக்கிறது. சிறுவனின் நடிப்பில் லேசான மிகை இருந்தாலும் கலாம் வாழ்க்கையினை விவரிக்கும் சீனிவாசனின் குரல் ஏற்ற இறக்கத்துடன் பல உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது. வசனத்திற்கான பணியினை சிறப்பாக செய்திருக்கிறார் பி. ஆர். ராமானுஜம்.

பத்து வயது நண்பன் ராமசாஸ்திரியின் நட்பினை பாராளுமன்றத்தில் உரைக்கும் காட்சி, விக்ரம் தேசாய்  சந்திப்பும் தொடர்ந்த அவரது மரணமும் பற்றி கலாமின் உணர்ச்சிமிகு உரையாடல், western  கலந்த 
பரதம் ' song of youth ' கவிதைக்கான நடனத்தினைப் பார்க்கும் போது ஆவணப்படம் என்பதை மறக்கிறோம். முதல் ராக்கெட் சோதனை முயற்சி தோல்வியுற்றதை அடுத்து வந்த பிருத்வி, ஆகாஷ் வெற்றிகளின்  இடையே அக்னி ஏவுகணை முயற்சியின் போது நிகழ்ந்த கலாமின் இளைய சகோதரர் மனைவியின் மரணமும் இருந்தும் கலாமின் ஏவுகணை பணிக்கு ஒத்துழைப்புத் தந்த குடும்பத்தாரின் செயல்பாடும் 
மறக்கமுடியாமல் நெஞ்சில் பதிகின்றன. கலாமின் தன்னம்பிக்கை, குழந்தைகள் மீதுள்ள பாசம், படிப்பின் மீதிருந்த வெறி, ராக்கெட் சோதனைகள், வெற்றிகள், அண்ணாமலைப் பல்கலைக்கழக 
மதிப்புக்குரிய பதவி, ஜனாதிபதி பதவிஎன்று உலகமெங்கும் செயல்பட்ட அவர் நாட்டின் முன்னேற்றத்துக்கான டெக்னாலஜி பற்றியெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே வேறு பாதையில்  ஆச்சர்ய மாற்றமாக சட்டென்று திரும்புகிறது சீர்காழி சிவசிதம்பரத்தின் கலாமைப்பற்றிய பேச்சு. வீணை வாசிக்கத்  தெரிந்த கலாம், கர்நாடக சங்கீதத்தில் ஈடுபாடு கொண்டவர்.அவரின் கவிதை எழுதும்  லாவகம் பற்றி பேசுபவர் அவரின் ஆங்கிலக் கவிதையினை தமிழில் மொழிபெயர்த்து காம்போதி 
ராகத்தில் பாடும்போது மனம் விஞ்ஞான உலகத்திலிருந்து சற்றே இளைப்பாறுகிறது. 

இறுதியாகஒருவிஞ்ஞானி,கவிஞன்,இசைஞன்,ஜனாதிபதி,
எல்லாவற்றுக்கும் மேலான தன்னம்பிக்கை 
ஒன்றினையே மூச்சாக கொண்டு முன்னேறிய நாட்டின் முன்னேற்றத்துக்கும், குழந்தைகள், டெக்னாலஜி,கிராமப்புறப் பகுதிகளை மேம்படுத்துதல், மக்களின் கல்வி அவசியம் என்று சகலவிதத்திலும் சிந்தித்த  மிகப்பெரிய ஆளுமையினை 1 மணி நேர ஆவணப்படத்தில் நம் மனதுக்கு மிக சமீபத்தில் சந்திக்க வைக்கிறார் இயக்குநர் p . தனபால்.

சிறிய கனவை விழிகளுக்கு சொந்தமாக்கிய இயக்குநர் p . தனபாலை சந்தித்தபோது.....

புகோ: தங்கள் சொந்த ஊர் பற்றி சொல்ல முடியுமா?
 
       த: கோவை மாவட்டத்தினை சேர்ந்த உடுமலைப் பேட்டைதான் எனது ஊர்.
 
புகோ: இதற்கு முன்பான குறும்படம்,ஆவணப்படம் ஏதாவது?
 
       த: சின்னசின்னதாய் அனிமேசன் வேலைகள் மட்டும் எனது மின்வெளி மீடியா ஒர்க்ஸ் மூலமாக செய்திருக்கிறேன்.
 
புகோ: அதில் குறிப்பாய்?
 
       த: மகாபாரதம் பற்றிய அனிமேசன் படம் தயாராகி வருகிறது.
 
புகோ: சரி. ஏன் அப்துல் கலாம். கனவு காணுங்கள் என்பதாலா?
 
       த: அதெல்லாம் இப்போதுதானே. இந்த ஆவணப்படத்துக்கு அடிப்படையா அமைஞ்சது 2001 ம் வருட  சமயத்தில நான் நடத்திய பட்டாம்பூச்சிங்கிற குழந்தைகளுக்கான இதழ்தான். 2002 ல தான் கலாம் 
பிரசிடெண்ட் ஆனார். பொதுவா இந்த காலகட்டத்துல நேர்மையா கஷ்டப்பட்டு உழைச்சி முன்னேறி ஒரு பெரிய இடத்துக்கு போறதுங்கிறது சாதாரமான விஷயமில்ல. அப்பேர்பட்ட மனிதர்களை நம் குழந்தைகளுக்கு இப்போ தெரியப் படுத்த வேண்டிய நிலைமை. எனக்கு குழந்தைகள் நலனில் மீதான ஆர்வத்தில் தொடங்கியதுதான் பட்டாம் பூச்சி. கலாம் பிரசிடெண்டா என்ட்ரி ஆன நேரம். அவரோட 
பேச்சும் சிந்தனைகளும் வாழ்வும் குழந்தைகளுக்கான ஒன்றாகவே இருந்தது. நாட்டின் முன்னேற்றம் சரியான வழியில் செல்ல குழந்தைகளுக்குத்தான் நாம அதற்கான சக்தியை தரமுடியும்கிற அவரோட  சிந்தனை சகல இடத்துக்கும் போய்ச் சேரவேண்டுமென்று நினைத்து செய்தது ' குருத்து' ங்கிற நிகழ்வு 
அதன் மூலமா அவரைத் தொடர்பு கொண்டு பேசியபோது அவர் கடந்து வந்த வாழ்வியலை எல்லோருக்கும் சொல்ல வேண்டுமென்று நினைத்து செய்ததுதான் இந்த ஆவணம். 
 
புகோ: இதற்கான ரெஸ்பான்ஸ்...விருதுகள்?
 
       த: விருதுக்கெல்லாம் அனுப்பவில்லை. இரண்டாவது இது என்னுடைய மனதிருப்திக்கான ஒன்றுதான்.
நல்ல விஷயங்களை நாம நேரடியா சொல்றதை விட அப்படிக் கஷ்டப்பட்டு வாழ்ந்து ஜெயித்த ஒரு ஆளுமை மூலமா கொண்டு செல்லலாம்னு செய்தது இந்தப் படம். நிறைய பள்ளிககூடங்கள்ல  இப்படம் குழந்தைகளுக்கு காட்டப்பட்டது.
 
புகோ: உங்க முயற்சியிலேவா?
 
       த: ஆமாம்.



குழந்தைகளுக்கான உலகம் பறிபோய்க்கொண்டிருக்கின்ற இந்நிலையில் அவர்களைப் பற்றி சிந்தித்து அவர்களுக்கான ஒரு பயனுள்ள ஆவணம் தந்த இயக்குனர் தனபாலின் முயற்சியை பாராட்டிவிட்டு விடைபெற்றேன்.
 
' இது ஐரோப்பிய யூனியனின் பொன்விழாக் கூட்டம். இங்கே எனது ஞாபகத்துக்கு வருவது 3000 வருடங்களுக்கு முன்பே ஒரு தமிழ் புலவன் கணியன் பூங்குன்றனார் பாடிய 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கவி வரிகள்தான்'. கலாம் குரல் காதில் ஒலிக்கிறது.                                                                                                                                                                                      
 








No comments:

Post a Comment