Tuesday 18 September 2018

துர்சலை

துர்சலை









இரவுக் காற்றுக்கென்று தனி இசையுண்டு. தடாக நீரின் சிகை கலைத்து விளையாடிக்கொண்டிருந்தது விளையாட்டுப் பிள்ளையின் குதூகலத்துடன். காற்றின் மெல்லிய வருடலில் நீரில் மிதந்துகொண்டிருந்த முழு மதி நெளிந்து நெளிந்து தடாகப் படியைத் தொட்டு மீண்டுகொண்டிருந்தது. 

'' உங்கள் கண்களில் தெரியும் சோர்வினைப் பார்த்தால் இரவுறக்கம் இன்று தள்ளிப்போகும்போல் தெரிகிறது துர்சலை'' என்றாள் மாதங்கி. துர்சலை வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்திருந்தாள். ஒரு முழு நீள துகில். அவ்வளவுதான். அதைத்தான் உடம் முழுவதும் சுற்றியிருந்தாள். தான் அமர்ந்திருந்த இடம் வரை தன்னிருப்பை படரவிட்டிருந்த நிலவொளியைத் தன் வெண் சங்குநிற பாதத்தால் நிரடியபடி சொன்னாள். '' ஆமாம். இன்று நான் இரவு நீராடல்கூடப் புரியப் போவதில்லை'' குரலில் கிளர்ந்த அலட்சியப் பெருமூச்சுக்கு தடாகத்தினை ஒட்டி வளர்ந்திருந்த மரமொன்றிலிருந்து மலர் உதிர்ந்தது. உடன் அப்பிரதேசமெங்கும் சுவாசம் நிறைக்கும் பரிமளமொன்று எழுந்து அலைந்தது. இடைப்பகுதியை இறுக்கியிருந்த வெண்ணிற ஆடையை சற்றே நெகிழ்த்தினாள் துர்சலை. 

'' இதென்ன அரசகுலத்தில் இல்லாத புது வழக்கம். இளவரசி இப்படி நடந்துகொண்டால் குழைத்த சந்தனமும் தயாரான அகிற்பொடியும் தங்கள் ஜீவனை மறந்தல்லவா போகும்?'' என்றாள் மாதங்கி. அப்போது அவளின் வலதுகரம் துர்சலையின் தோள் தொட்டபடியிருந்தது. '' துரதிருஷ்டமான விதி போலும். சந்தனத்துக்கும் அகிற்பொடிக்கும் கவலைப்படுபவர்கள் அதன் ஆயுளை அனுபவிப்பர்களின் மனநிலையை ஏனோ புரிந்துகொள்வதில்லை'' துர்சலையின் இமைக்கா விழிகள் நனைந்த முழு நிலவை உற்று நோக்கிக்கொண்டிருந்தன. '' என்ன துர்சலை. சில நாட்களாகப் புதிரின் வழியே நடமாடிக்கொண்டிருக்கிறீர்கள்?'' ஆச்சர்யமானாலும் வினாவில் துயரம் ஒளிந்திருந்தது. '' என் அந்தரங்க வடு அறிந்தவள் நீதானே மாதங்கி. உனக்குமா எனது வாதை புரியவில்லை. அஸ்தினாபுரமோ, காண்டவப் பிரஸ்தமோ மாறினாலும் மாறாதது இந்தச் சாபம்தானே...''குழப்பமாய் புருவம் நெறித்த மாதங்கியின் நுதலிலிருந்து காய்ந்த சந்தனம் உதிர்ந்தது. '' உங்களுக்கென்ன வருத்தம். நூறு சகோதரர்களுக்கும் ஒரே சகோதரி என்ற கொடுப்பினை யாருக்கு வாய்க்கும் துர்சலை. இது முன்ஜென்மப் புண்ணியம்'' அவசரமாக மறுத்தாள். '' இல்லை மாதங்கி. இது இப்பிறவிச் சாபம். நூறு பேர்களுக்குப் பிறகான மிச்சம்தானே நான். என் மூத்த குடிமகள் வானதி வழி வந்த சாபம்தான் என் நாழிகைகளில் எந்தவோர் ஆடவனும் இடம் பெறாமல் போனது போலும்''துர்சலையிடமிருந்து பெருமூச்சு வெளிப்பட்டு அணிந்திருந்த ஆடையைக் கருக்கியது. 

'' புதிராக வாழ்கிறேன் மாதங்கி. கண்களை மூடினால் ஏதாவது ஒரு குறுநில மன்னனை வெல்ல களத்தில் வாள் பிடித்து நிற்பதுபோன்ற காட்சிதான் வருகிறது. இரவுறக்கத்தில் வரும் கனவுகள் உன்னிடம்கூட சொல்ல முடியாதவை மாதங்கி'' கண்ணீர் திரண்டு வழிந்து கனவைப் பேசியது. '' அது ஓர் அழகிய நந்தவனம். மலர்களின் அளவோ அங்கிருக்கும் மலர்ச்செடிகளையே மறைத்தபடி மிகப் பெரியதாகவும் நுரையீரல் ஆழம் சென்று படியும் பரிமளத்துடனும் வீற்றிருக்கிறது. இப்போதுகூட என் நாசியில் உறங்கிக்கொண்டிருக்கிறது அம்மலரின் நறுமணம். மெல்லிய துகில் அணிந்து நந்தவனத்தின் ஊடே நடந்துகொண்டிருக்கிறேன். ஒரு மலருக்குப் பின்னால் ஓர் ஆடவன் மறைவது கண்களுக்குத் தெரிகிறது. எனக்குள் ஓர் உற்சாகம். அவனைத் தேடி அலைகிறேன். மிக அகலமான தோள்கள், பின்புறத்திலிருந்து பார்க்கும்போதே திரண்ட அவன் புஜங்களும் இறுகிய மார்பின் ஓரங்களும் தெரிந்து தெரிந்து மறைகின்றன. பரந்த முதுகைத் தழுவியபடி நீண்ட கறுஞ்சிகை. காற்றில் ஆட ஆட மலரின் மணம் என்னை அவனை நோக்கித் தள்ளுகிறது. வானமே புதிதாய் ஒரு வண்ணத்தில் கிடந்ததுபோல் ஒரு நினைவு. என்ன ஓர் ஆச்சர்யம். அவனை நான் நெருங்க நெருங்க அவன் விட்டு விலகி தூரம் செல்கிறான். என் பார்வையில் படுவதெல்லாம் அவன் சிகையும் அது அலையாடும் விதமும். நான் அவனை நோக்கி ஓடத்துவங்குகிறேன். என்னுடம்பில் வியர்வை அரும்பத் தொடங்குகிறது. காற்ரில் மிதந்த மணத்தை மாற்றுகிறது என் வியர்வையிலிருந்து வெளிப்படும் கற்பூரம் கரைந்த காமத்தின் மணம். அத்தனை வெப்பமாய் நந்தவனத்தையே எரிக்கும் மணம் அது. ஒரு நிலையில் கண்ணீர் திரள அவனை நோக்கி விரைகிறேன். கரங்களில் அவன் சருமத்தினை உணரும் வேளை என் விரல் வலி காமம் வழிவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.  அவனைத் தொட்டுத் தழுவி என்னிதழ் பதிக்கிறேன் அவன் பின்னங்கழுத்தில். முகம் காணும் ஆவலில் என்னிதழ்கள் துடிக்க அவனை என் பக்கம் வளைக்கிறேன். அந்த முகம்...அந்த முகம்...'' வழியும் கண்ணீருடன் துர்சலை போராடிக்கொண்டிருந்தாள். நெற்றியில் அரும்பி துளிர்த்த அவளின் வியர்வைத் துளிகளை தன் ஆடையால் ஒற்றித் துடைத்தவாறு மாதங்கி '' துர்சலை...துர்சலை...'' என்று தோள் அசைத்தாள். இமைகளைத் திறந்த துர்சலை '' அது என் சகோதரன் மகாபாகு '' என்றாள். '' எங்கு நோக்கினும் ஆடவர்கள். ஆனால், அத்தனை பேரும் என் சகோதரர்கள் என்றால் எனக்கான ஆடவனை எப்படி நான் கற்பனை கொள்வது?'' துர்சலையின் சொற்கள் வறண்டு வெளிப்பட்டன. '' சற்றே எழுந்து வாருங்கள். தடாகம் சுற்றி வரலாம்'' மாதங்கியின் கைபிடித்து எழுந்த துர்சலை இடையிலிருந்து தளர்த்தியிருந்த ஆடையை சிறு முடிச்சிட்டு இறுக்கினாள். நடந்தவாறு பேசினாள். '' ஒவ்வொரு சுயம்வரத்திலும் இதுதான் நடக்கிறது. எல்லா ஆண்களும் இப்படி என் சகோதரர்களில் எவரையாவது நினைவில் கொண்டுவந்தால் எனக்கென்று எவரை நான் உணர்வது. ஆழி நடுவில் நெடுந்தாகத்துடன் கடற்பயணம் மேற்கொள்பளின் நிலைமையடி எனக்கு.'' தடாகம் அருகில் வந்ததும் நின்று நிமிர்ந்து வான் நோக்கினாள். முழு நிலவு நாள். கூடுதலாய் வெண்ணிற ஒளியில் ஆடையொன்றை போர்த்திக் கிடந்ததுபோல் ஆகாயம். '' துளி முகிலற்ற ஆகாயம் விண்மீன்கள் கொண்டு சமநிலைப்படுத்திக்கொள்கிறது. அப்படி ஒரு வாய்ப்பும் இல்லா வெற்று ஆகாயம் நான். வானதி, அம்பை வழியின் சாபம்தானே என் தந்தையின் பிறப்பு. ஈருடல்கள் ஒற்றைக் காமத்தில் கூடிக் களித்து அதன்வழி பிறப்பதுதானே இன்பமும் சிசுவும். இங்கு எந்தப் பெண்ணிற்கு அது சீராக வாய்த்தது. மனமுவந்து தன்னுடல் ஈந்திருக்கும்  கூடலில் கண் மூடியிருக்க மாட்டாள் என் முது கிழவி. கர்ப்பம் கண் மூட என் தந்தைக்குக் காட்சிகள் மூடப்பட்டன. நியாயமாய் அவள் தன் சுவாசத்தைத்தானே மூடியிருக்க வேண்டும். அப்போதே எல்லாம் மாறிவிட்டது. அது நூற்றுஒன்றாக என் சிரசில் படிய வேண்டுமென்பது விதி'' மேல் வரிசைப் பற்களால் உதடு கடித்து அழுகையை அடக்கினாள் துர்சலை. மாதங்கியின் வலதுகரம் துர்சலையின் இடது உள்ளங்கையை இறுகப் பிடித்தது. '' என் உலகம் ஆண்கள் நிறைந்ததாயிருக்கிறது. ஆனால், நான் எந்த ஆணுடனும் இல்லை. என் கனவில் நான் மட்டுமே இருக்கிறேன். முத்தம் என்றால் எப்படியிருக்குமென்று எம் குலப் பெண்கள் எவருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை மாதங்கி. நான் மட்டும் விதிவிலக்கா?'' பேசிக்கொண்டே தான் அணிந்திருந்த ஆடையின் இடை முடிச்சை நீக்கினாள். நெகிழ்ந்த ஆடை குவியலாக அவள் காலடியில் விழுந்தது. துர்சலையின் மார்புகளின் திரட்சியினைக் கவனித்தவாறே மாதங்கி தன் கரம் நீட்ட அதைப் பற்றியபடி தடாகப் படியில் கால் வைத்தாள் துர்சலை. '' முன்னிரவு நாழிகை கடந்துவிட்டது துர்சலை'' என்றாள் மாதங்கி. '' என்னுடலுக்கு இந்நீர்தான் இப்போதைக்கான ஆண் மாதங்கி. எத்தனை சுதந்திரமாய் என் வெப்பம் தீண்டுகிறது. நீருக்குள்ளிருக்கும் கணம்தான் நான் முழுமையான பெண்ணாக என்னை உணர்கிறேன். நீ சந்தனம் கொண்டுவா. நான் என்னுடலுடன் பேசிவிட்டு வருகிறேன்'' அடுத்த படியில் கால் வைத்தவள் நிர்வாணமாய் நீருக்குள் மூழ்கினாள். நிலா உடைந்து உடைந்து ஒன்று சேர்ந்துகொண்டிருந்தது.
.      

Thursday 6 September 2018

மேன்சனில் முனியாண்டி

மேன்சனில் முனியாண்டி


மேன்சன் நெருங்குவதை உணர்ந்ததும் முனியாண்டியின் கை அனிச்சையாய் அவன் பேன்ட் பாக்கெட்டுக்குச் சென்று அறை சாவி இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக்கொண்டது. இந்த மேன்சனுக்கு வந்து ஒரு வாரம்தான் ஆகிறது. தண்டையார்பேட்டையில் வேலை. அறை எடுத்துதான் தங்க வேண்டுமென்று வந்தபோது அருகில்தான் மேன்சன்களில் ரூம் கேட்டான். சொல்லி வைத்தாற்போல் அத்தனை மேன்சன்களிலும் ' ரூம் இப்போ காலியில்லை' என்பதே பதிலாய் வந்தது. வேளச்சேரியில் இருக்கும் சம்பத் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிபவன். முனியாண்டியின் ஊர்க்காரன். மேலும் தூரத்துச் சொந்தம் வேறு. திருவாரூருக்கு அருகில் மூலங்குடிதான் முனியாண்டி பிறந்த ஊர். மூலங்குடி என்ற ஊர் இருப்பது மூலங்குடியில் இருப்பவர்களுக்கே பெரும்பாலும் தெரியாது, காரணம், சிறிய வியாதி என்றால் அருகில் இருக்கும் குடவாசலுக்கும், பெரிய நோய் என்றால் சற்றுத் தொலைவில் இருக்கும் கும்பகோணத்துக்கும் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஒரு பேச்சுக்கு என்றாலும் குடவாசலையோ கும்பகோணத்தையோ இழுக்காமல் மூலங்குடியைக் காட்ட முடியாது என்பதில் தெள்ளத்தெளிவாயிருந்தார்கள் மூலங்குடிக்காரர்கள். குடவாசலில் ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்த்து வந்தான் முனியாண்டி. அதிக வருமானம் ஈட்டும் இடமாகத் தெரிந்தது சென்னைதான். அதற்கு சம்பத்தும் ஒரு காரணம். ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும் சென்னையின் அருமை பெருமைகளை சம்பத் விளக்கிய விதமும், தான் பார்க்கும் வேலை குறித்த பெருமிதமும் முனியாண்டிக்கு சென்னை குறித்த கனவு பூமி பிம்பத்தை ஊதிப் பெரிதாக்கின. ஒரு நல்ல நாள் பார்த்து சென்னைக்குப் பஸ்ஸேறினான். 

வேளச்சேரியில் ஏகப்பட்ட குடியிருப்புகளின் நடுவில் காணாமல் போயிருந்தது சம்பத்தின் கூடாரம். அந்தக் கூடாரத்துக்குள் முனியாண்டியால் ஒருநாள்கூட தங்க முடியவில்லை. இரைச்சல் இரைச்சல் பேரிரைச்சல். அடுத்த அதிர்ச்சி சம்பத் பார்க்கும் வேலை. தனியார் தொலைக்காட்சியின் அட்மின் போலவே தன்னைக் காட்சிப்படுத்திக்கொண்டிருந்த சம்பத்தின் வேலை மிகச் சிறிதினும் சிறியதாய் இருந்தது. சம்பத்துக்கே அவ்வளவுதான் இடம் என்னும்போது தனக்கான கனவை அங்கு முனியாண்டியால் தீர்மானிக்க முடியவில்லை. வேறு இடத்தில் இருவரும் சேர்ந்து வேலை தேட முயன்றதில் தண்டையார்பேட்டையில் ஒரு ப்ரைவேட் கம்பெனியில் சேல்ஸ்மேன் உத்தியோகம் கிடைத்தது. அந்த வேலை கிடைக்க ஒரே காரணம் முனியாண்டியின் சாதி. ஒரே சாதி என்பதாலே அதே சாதியைச் சேர்ந்த முதலாளிக்கு முனியாண்டியைப் பிடித்துப்போனது. வேலை கிடைத்ததும் தங்குமிடத்துக்கான தேடல். அதற்கு முனியாண்டி மட்டுமே துணையானான். சென்ட்ரல் கைவிட திருவல்லிக்கேணியில் அடைக்கலமானான். 4000 ரூபாய் வாடகை, ஒரு மாத அட்வான்ஸ் என்றதும் இந்த மேன்சனுக்கு வந்து சேர்ந்தான். கடல் நீலம் மேன்சனுக்கு முனியாண்டி வந்த கதை இதுவே. 

மேன்சன் மிக இருட்டியிருந்தது. இன்றுதான் இவ்வளவு தாமதம். எப்போதும் ஏழு மணிக்கு அறைக்கு வந்து எட்டு மணிக்கெல்லாம் தூங்கிவிடுவான். இப்போது நேரம் பதினொன்று காட்டியதை தன் மொபைலில் கவலையாய் பார்த்தான் முனியாண்டி. திறந்தே கிடந்தது வாசல் கதவு. ரிஷப்ஷனில் எரிந்த நீல வெளிச்சத்தில் கதவுக்கு அருகிலேயே யாரோ படுத்துக்கிடப்பது தெரிந்தது. காலையில் ரிஷப்சன் சோபாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போலீஸ்காரர் இப்போது மஃப்டியில் மல்லாந்திருந்தார். ஜாக்கிரதையாகத் தாண்டினான். படியேறினான். இரண்டாம் தளத்தில் இருந்தது அவன் அறை. முதல் தளத்துக்கான திருப்பத்தில் அவர்களைக் கண்டான். கண்ணுக்குத் தெரிந்த அறை வாசலில் இரண்டு பெண்கள் நின்றிருந்தனர். கதவுக்கு வெளியே ஒரு பெண் அந்த இரவிலும் அத்தனை இறுக்கமாய் உடையணிந்து யாரோ ஓர் ஆணுடன் பேசிக்கொண்டிருந்தாள். பேசிக்கொண்டிருந்தாள் என்பது குறைவு. சண்டை போட்டுக்கொண்டிருந்தாள் என்பதே சரி. தனக்கான பணம் தராமல் தன்னை ஏமாற்றிவிட்டதாகத் தெலுங்கு, தமிழ், இந்தி கலந்து கத்திக்கொண்டிருந்தாள். முனியாண்டிக்கு ஆச்சர்யமாயிருந்தது. முதலில் இந்த மேன்சன்களில் பெண்கள் தங்குவார்களா என்பதே கேள்வியாகவும் இந்த ஒரு வாரத்தில் ஒருநாள்கூட இவர்களைத் தான் பார்க்காததும் அவனுக்குள் நெருடலைத் தந்தது. முனியாண்டிக்கு வயது முப்பது ஆகிவிட்டது என்பதாலே அங்கே காணப்பட்ட பெண்களும் அவர்களின் உடை மற்றும் உடல்மொழி அவர்களை அப்பட்டமாய்க் காட்டிக்கொண்டிருந்ததை உணர்ந்தான். பாலியல் தொழிலாளிக்கும் இந்த மேன்சனில் இடம் இருக்கிறது போலும் என்று நினைத்துக்கொண்டான். அறைக்குச் சென்று படுத்தவன் தனது பாதுகாப்பின்மையை உறுதி செய்துகொண்டான். இது இரண்டாவது அனுபவம். 

இங்கு வந்த மறுநாளே உறங்கிக்கொண்டிருந்த அவனின் அறைக்கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தால் போதை வடிவில் ஒருவர் நின்றிருந்தார். இவனைப் பார்த்ததும் ‘’ இது உங்க ரூமா...ஸாரி பிரதர்.’’ தள்ளாடி மேலே சென்றார். இப்போது கீழே ஒரு போலீஸ்காரர் போதையுடன் தூங்கிக்கொண்டிருக்க, மேலே வேறு தொழில் நடக்கிறது. முதலில் இந்த மேன்சலிலிருந்து வெளியேற வேண்டும் என்று தீர்மானித்தான். அப்படித்தான் அந்த சீ ப்ளூ மேன்சலிலிருந்து முனியாண்டி வெளியேறினான். அடுத்து தஞ்சமடைந்தது அமைதி தங்குமிடம். ரிஷப்சனில் 50 வயது மதிக்கத்தக்க பெரியவர்தான் இருந்தார். ‘’ என் பையந்தான் மேன்சனைப் பாத்துக்குறான். ஊருக்குப் போயிருக்கிறான். அவன் வர்றவரைக்கும் நான் பார்த்துக்குவேன்’’ என்றார். தனியாய் அறை எதுவும் இல்லையெனவும் ஷேரிங்குடன் ஒரே ஒரு அறைதான் இருப்பதாகவும் சொன்னார். ‘’ வாடகை 2, 000, அட்வான்ஸ் 4, 000 என்றதில் முனியாண்டி வீழ்ந்தான். ‘’ ரூமைப் பார்க்கலாமா?’’ என்றான். ‘’ ’’கியாரே பையா’’ என்று சவுண்ட் கொடுத்தார் பெரியவர். எங்கிருந்தோ வந்து நின்றான் அந்த 7 நாட்கள் படத்தில் வரும் ஹாஜா  ஷெரீப் போல ஒரு பையன். ‘’ சாருக்கு நூத்தியெட்டைக் காட்டு’’ என்றார். பகீரென்றது முனியாண்டிக்கு. அந்தப் பையன் பின்னாலே சென்றான். முதல் தளத்திலிருந்தது அறை. திறந்திருந்தது. உள்ளே ஆள் இருந்தது. அந்தப் பையன் மிக இயல்பாக உள் நுழைந்து அங்கிருந்தவருக்கு வணக்கம் வைத்தான். அவர் முனியாண்டியைப் பார்த்ததும் அகலமாய் சிரித்தார். என்ன வயதென்று யூகிக்க முடியாத உடல்வாகு. ‘’ ரூம் பார்க்க வந்துருக்கீங்களா...பாருங்க பாருங்க’’ என்றார் எள்ளல் சிரிப்புடன். ஏற்கெனவே இருந்த அறையைவிட இது பெரியது. ஜன்னல் திறந்திருந்ததில் வெளிச்சமும் காற்றும் உள்ளே வாடகையின்றி குடிகொண்டிருந்தன. மேலே ஒரு சிறிய டிவி இருந்தது. முனியாண்டி கேட்டான். ‘’ டிவி ஓடுமா?’’ எள்ளல் சிரிப்பு முகத்தில் மாறாமல், ‘’ டிவில்லாம் ஓடாது. சுவிட்ச் போட்டு ஆன் பண்ணினா, படம் பார்க்கலாம்’’ என்றான் அவன். முனியாண்டிக்கு யாரோ குரல்வளையைக் கடித்தது போல் இருந்தது. ஆனாலும், அந்த அறை அவனுக்குப் போதுமென்று தீர்மானித்தான். ‘’ என் பேரு முனியாண்டி’’ என்று கை நீட்டினான். ‘’ நான் செந்தில் . இங்க அஞ்சு வருசமா இருக்கேன். முனியாண்டின்னா ராத்திரிலையும் தனியா போகலாம். பயமாருக்காது’’ என்றான் செந்தில். முனியாண்டி புரியாமல் புருவம் சுருக்க’’ இல்ல... எங்க ஊர்ல முனியாண்டி காவல் தெய்வம். அந்த சாமிதான் ஊரைக் காப்பாத்துதுன்னு சொல்வாங்க. அந்தப் பேரையே வெச்சுருக்கிற நீங்க பயமில்லாம இருக்கலாம்ல... ஜஸ்ட் ஃபார் ஃபன்.’’ பல்லைக் காட்டி சிரித்த செந்தில் மீது முனியாண்டிக்குப் பரிதாபம்தான் வந்தது. கூடவே இந்த மொக்கையுடன்தான் நாம் காலம் தள்ளப் போகிறோமா என்று கவலையாகவும் இருந்தது. எல்லாமே முதல் அறிமுகத்துக்குத்தான். 

ஒரு நல்லநாள் பார்த்து தன் பெட்டி படுக்கையை இடம் மாற்றினான் முனியாண்டி. பேச்சுத்துணைக்கு ஒரு ஆள்; போரடித்தால் டிவி என்று சுவாரசியமாகத்தான் போயிற்று ஒரு வருடம். செந்திலுக்கும் 30 வயதுதான். மிகப்பெரிய தொப்பை முனியாண்டியை விட வயது முதிர்ந்தவனாய் காட்டியது. செந்திலின் பிரச்சினையே அதுதான் என்பது அவனுடன் பழகப் பழகத் தெரிந்தது. செந்திலுக்கு இன்னொரு பழக்கம் இருந்தது. குறட்டை. முனியாண்டி தன் வாழ்க்கையில் சந்தித்திராத குறட்டையது. அறைக்கு வந்த புதிதான நள்ளிரவுகளின் இடையில் விழிக்கும் முனியாண்டிக்கு செந்திலின் குறட்டை சத்தம் இன்னொரு உலகத்தில் இருக்கும் உணர்வைத் தோற்றுவித்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை இருவருக்குமே லீவ். ‘’ ட்ரிங்க் பண்ணுவீங்களா ப்ரோ?’’ என்றான் இடது காதில் கடுக்கண் அணிந்திருந்த செந்தில். இல்லையென்று தலையாட்டினான் முனியாண்டி. ‘’ சிகரெட்...?’’ அதற்கும் மறுக்க, ‘’ லவ் எதுவும் பண்றீங்களா?’’ என்றான் அடுத்தபடியாக. முனியாண்டி ஒரு நிமிடம் யோசித்தான். ஜானகி கீ போர்டில் எதையோ டைப் செய்தபடி, ‘’ ரெண்டு பேருமே கிரீன். சேம் பின்ச். ட்ரீட் வைங்க’’ என்றாள் காதில் அணிந்திருந்த பச்சை நிற ஸ்டட் அசைய. ஆமாம் என்று தலையசைத்தான் முனியாண்டி. ‘’ அதானே... கொஞ்ச நாளாவே ப்ரோ முகத்துல தனி தேஜஸ் தெரியுதேன்னு பார்த்தேன். எனக்கு சரக்கு, சிகரெட் எல்லாம் உண்டு. ஆனா, லவ் மட்டும் இல்ல. எதுவும் செட்டாகல ப்ரோ. அதனாலதான் சரக்கு. புரியுதா?’’ என்றான் செந்தில். லவ் மட்டும் இல்லை என்னும்போது செந்தில் குரல் உடைந்ததுபோல் இருந்தது முனியாண்டிக்கு. அவன் சொன்னது புரிந்ததுபோலவும் இருந்தது; புரியாதது போலவும் இருந்தது.  அன்றைய கனவில் ஜானகி, முனியாண்டியின் அறைக்கு வந்தாள். ஜானகி பிறந்து வளர்ந்தது இதே சென்னைதான். அப்பா கிடையாது. அம்மா மட்டும்தான். அந்தக் கம்பெனியில் இருக்கும் அனைவரும் வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்தவர்கள் என்றாலும் தஞ்சைப் பகுதியிலிருந்து வந்திருந்த முனியாண்டியின் பேச்சுத் தமிழ் வேறு விதமாயிருந்தது. தன்னை முதலில் கவர்ந்தது அந்தத்  தமிழ்தான் என்றாள் ஜானகி ஒருமுறை. தன் வீட்டிலிருந்து மீன் பொரித்துக்கொண்டு வந்து முனியாண்டிக்குத் தந்து சாப்பிடச் சொன்னாள். ‘’ எப்படி... உங்க வீட்ல செய்ற மாதிரியிருக்க்கா?’’ என்றாள். முனியாண்டியின் கூச்ச சுபாவம் அவனை அநியாயத்துக்கு நல்லவனாய் காட்டிற்று. அதுவே ஜானகியைப் பெரிதும் கவரவும் செய்தது. ‘’ ஒருநாள் சண்டே எங்க வீட்டுக்கு வாங்க. அம்மாவை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.’’ என்றாள். 

திருப்தியாய் சாப்பிட்டு முடித்து சோபாவில் அமர்ந்திருந்த முனியாண்டியிடம் ‘’ ஆம்பள இல்லாத வீடுங்கிறதால எங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் போயிடுச்சு. வெளியில இருந்து ஒறவுக்காரங்க யாராவது வந்து பார்த்துட்டுப் போனாக்கூட இந்த ஊர் ஏகப்பட்ட கேள்வி கேட்டுச்சு. ஒரு பொம்பளப் புள்ளைய வளர்த்தெடுக்க ரொம்பக் கஷ்டப்பட்டுட்டேன் தம்பி. இப்ப நீங்க வந்துட்டுப் போறதைக்கூட இந்த ஊர் கண்ணு பார்த்துக்கிட்டுதான் இருக்கும். இதுவரைக்கும் ஜானகியோட ஆசைக்கின்னு எதுவும் பண்ணல. பயந்துக்கிட்டே  வாழ்ந்தாச்சி. உங்களைப் பத்தி சொன்னா. அவ அதிகமா யாரைப்பத்தியும் பேச மாட்டா. எங்க காலம் மாதிரி இப்ப இல்ல...அதான் அவ முடிவுக்குன்னு விட்டுட்டேன்’’ ஜானகியின் அம்மா பேசி முடிக்கும்வரை முனியாண்டியின் எதிரில் அமர்ந்து தன் கை வளையல்களை எண்ணி சரி பார்த்துக்கொண்டிருந்தாள் ஜானகி. முனியாண்டிக்கு இந்தக் காதல் புதிது. பிழைப்பதற்காகச் சென்னைக்கு வந்தவன். பணம் மட்டுமே குறிக்கோள் என்றிருந்தவனுக்கு இந்தப் பெண் சிநேகம் எல்லாம் பட்டியலிலேயே வராதது. பணம் சேமித்துக்கொண்டு ஜானகியைத் திருமணம் செய்துகொள்வதாய் இன்னொரு ஞாயிறின் மெரினா மாலையில் சொல்லியிருந்தான். சினிமாக்களில் வருவதுபோல் முனியாண்டியின் கையைப் பிடித்துத் தன் கையோடு சேர்த்து அழுத்தினாள் ஜானகி. 

மேன்சனில் நிறைய இரவுகளை போதையிலே வைத்திருந்தான் செந்தில். ஒருநாள் மதியம்,  ஆஃப் பிராந்தி வாங்கிக்கொண்டு வந்தவன் முனியாண்டியிடம், ‘’ சைடு டிஷ் எடுத்துக்குங்க ப்ரோ’’ என்றபடி குடிக்கத் தொடங்கினான். கொஞ்சம் கொஞ்சமாக காலியானது பாட்டில். செந்திலுக்கு சொந்த ஊர் திண்டுக்கல். ஒயின் ஷாப்புகள் அரசு வசம் செல்வதற்கு முன்பு பார்களை ஏலம் எடுத்து எக்கச்சக்கமாய் காசு பார்த்த ஆள். அவ்வப்போது நடக்கும் தகறாரில் வாங்கிய கத்திக்குத்தின் தழும்பை பனியனை அவிழ்த்துக் காட்டினான். நீளமான அரக்கு நிற வாள் படுத்திருந்தது போல் அழுத்தமாய்த் தெரிந்தது தழும்பு. செல்வச் செழிப்பில் ஊறியிருந்த செந்திலுக்கு எதிரிகள் அதிகம் முளைத்தனர். ஒருகட்டத்தில் ஒட்டுமொத்தமாய் எல்லாமும் மாறிப்போக, நண்பரின் தயவில் சென்னைக்கு வந்து செட்டிலாகிவிட்டான். ஊரில் அம்மா, அப்பா, அண்ணன் தனக்குப் பெண் பார்த்துக்கொண்டிருப்பதாகச் சொன்னான். தன் உடல் எடையைப் பார்த்து எந்தப் பெண்ணும் தன் கனவில் இடம் கொடுக்க மறுப்பதை வலியுடன் பகிர்ந்தான் முனியாண்டியிடம். குடித்து முடித்ததும் எவ்வித போதையுமின்றி முனியாண்டியுடன் ஹோட்டலுக்கு வந்தான். சாப்பாடு, சிக்கன் 65 என்று முனியாண்டி  முடித்துக்கொள்ள, செந்திலோ சிக்கன் கிரேவி, மட்டன் சுக்கா, நண்டு வறுவல் என்று குடித்த சரக்கெல்லாம் வியர்வையாய் வெளியேறும்வரை சாப்பாட்டுடன் போராடிக்கொண்டிருந்தான். பெரியதாய் ஏப்பம் விட்டு எழுந்த செந்தில்தான் பில் செட்டில் செய்தான். அன்று இரவும் ஒரு ஆஃப் பாட்டில் வாங்கி வந்து குடித்தான் செந்தில். கூடவே முனியாண்டிக்கு பரோட்டா வாங்கி வந்தான். ‘ இப்படிக் குடித்தால் எப்படி உடம்பு குறையும்’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான் முனியாண்டி. பிராந்தி நெடியாலும் சிகரெட் புகையாலும் சூழ்ந்திருந்த அந்த அறை தன் தூக்கத்தை முனியாண்டியிடமிருந்து பறித்திருந்தது. தன்னை மறந்து அசந்தவன் திடுக்கிட்டு விழித்தபோது அறையில் விநோதமான சத்தத்தை உணர்ந்தான். எழுந்து சுவிட்சைப் போட்டான். பரவிய வெளிச்சத்தில் தெரிந்த செந்திலைப் பார்த்ததும் முனியாண்டியின் மூளைக்குள் மின்சாரம் பாய்ந்தது. உடலில் ஆடை எதுவும் இல்லாமல் தளர்ந்திருந்த குறியுடன் பெரிது பெரிதாய் மூச்சுவிட்டுக்கொண்டிருந்தான் செந்தில்.  கட்டிலிலிருந்து சரிந்திருந்தான். அப்படித்தான் சொல்ல வேண்டும். ஒரு காலினை மட்டும் கட்டிலில் தூக்கி வைத்து பாதி உடம்பை தரையில் வீழ்த்தி வினோதமாகத் தூங்கிக்கொண்டிருந்தான். வழக்கமான குறட்டையை விட மிகப் பயங்கரமான சத்தத்தில் அறை நடுங்கிக்கொண்டிருந்தது. ‘’ செந்தில்... செந்தில்...’’ அழைத்தான் முனியாண்டி. இரண்டு தொடைகளிலும் கெண்டைக்காலிலும் ஏகப்பட்ட தழும்புகள் முனியாண்டியிடம் சொல்லப்படாத செந்திலின் வாழ்க்கை சாட்சியங்களாய் பளீரெனத் தெரிந்தன. கைலியை எடுத்துப் போர்த்திவிட்டான் முனியாண்டி. மூக்கின் துவாரத்தில் கை வைத்துப் பார்த்தான். சாராய மூச்சு சகல திசைகளிலும் இருந்து வந்துகொண்டிருந்தது. தடித்த உதடுகளைப் பிரித்துப் பிரித்துக் காற்றை வெளியேற்றிக்கொண்டிருந்தான் செந்தில். நிறைய குடித்துவிட்டு உறங்குகிறான் என்பதையும் தாண்டி செந்திலின் மீது பரிதாபம் பெருகியது முனியாண்டிக்கு.  தன்னை எந்தப் பெண்ணும் ஏறிட்டுப் பார்ப்பதில்லை என்று செந்தில் சொன்னபோது அவன் கண்கள் லேசாகக் கலங்கியிருந்ததைக் கவனித்திருந்தான். 

மறுநாள் காலை முனியாண்டி எழும் முன்பே எழுந்து குளித்து ஃப்ரெஷ்ஷாக ஆபீஸுக்குத் தயாராகிவிட்டான். முனியாண்டி எழுந்து சோம்பல் முறித்துவிட்டு பாத்ரூம் செல்லும்போது ‘’ ஆல் தி பெஸ்ட் ப்ரோ’’ என்றபடி அறையை விட்டு வெளியேறினான் செந்தில். அன்று மதியம் எண்ணூரில் கலெக்ஷனிலிருந்தபோது முனியாண்டிக்கு போன் வந்தது. புது நம்பர். எடுத்து ‘’ ஹலோ’’ என்றான். ‘’ முனியாண்டிதானே...’’ ‘’ ஆமாம்... நீங்க...’’ ‘’ நான் உங்க ரூம் மேட் செந்தில் ஃப்ரெண்ட். அவர்தான் உங்க நம்பர் கொடுத்தாரு. செந்திலுக்கு ஒரு ஆக்ஸிடெண்ட். ஸ்டான்லி ஹாஸ்பிட்டல்ல சேர்த்துருக்கோம். உங்களால வர முடியுமா..’’ பாத்ரூம் செல்வதற்கு எதற்கு ஆல் தி பெஸ்ட் என்று மெலிதாய் புன்னகைத்தவாறே காலையில் செந்திலைப் பார்த்தது ஞாபகத்துக்கு வந்தது. ‘’ வர்றேங்க...’’ என்றபடி போனை வைத்தான். இந்த இரண்டு வருட மேன்சன் வாழ்வில் செந்தில் நல்ல நண்பனாகத்தான் நடந்து கொண்டான். நல்ல நண்பனென்றால், அவனின் சுதந்திரத்தில் முனியாண்டியை நுழைய விட்டதில்லை. முனியின் சுதந்திரத்தில் அவனும் வந்ததில்லை. ஆபீஸுக்கு போன் செய்து கலெக்ஷனுக்கு ஆள் மாற்றிவிட்டு ஸ்டான்லிக்கு விரைந்தான் முனியாண்டி. 4 மணியாகிவிட்டது. அந்தப் புதிய நம்பருக்கு போன் செய்து முனியாண்டி பேசுகிறேன் என்றதுமே, ‘’ நீங்க போஸ்ட் மார்ட்டம் லேபுக்கு வந்திடுங்க ப்ரோ’’ என்றார் எதிர் முனையிலிருந்தவர். முனியாண்டிக்கு நரம்பு முழுவதும் பதற்றம் பரவியது. என்ன வாழ்க்கை இது? இன்று இப்படி முடியத்தானா நேற்று அப்படிக் குடித்து சந்தோஷமாய் இருந்தியா செந்தில்..? ஒரே அறையில் பேச எதுவுமற்றுக் கடந்திருக்கிறோமே நாட்களை. அதெல்லாம் தவறவிட்ட  நாட்களோ. .. ஒரே வயதுக்காரன் இப்படி ஒரு மரணத்தில் வீழ்ந்திருப்பது முனியாண்டியால் ஜீரணிக்க முடியாததாய் இருந்தது. ஆற்றாமையாய் வந்தது. நெஞ்சு விம்மி அடக்க முடியாமல் கண்ணீர் வழிந்தது. பிணவறைக்கு விரைந்தான்.  இவனைப் பார்த்ததும்  செந்திலின் நண்பர்களாகவே வந்து பேசினார்கள். எல்லோருமே ஆபீஸ் நண்பர்கள். ‘’ அவன் அண்ணணுக்கு போன் பண்ணிச் சொல்லிட்டோம். திண்டுக்கல்லேர்ந்து வந்திட்டுருக்காரு...ஒடம்புல பெருசா அடியே இல்லைங்க. அதனாலதான் நம்பிக்கையா இருந்தோம். தலையில அடி. ப்ளட் உறைஞ்சி போயிருக்கு. எங்ககிட்ட நல்லா பேசிட்டுருந்தவன் அஞ்சு நிமிஷத்துல மயக்கத்துக்குப் போயி ... அடுத்த அஞ்சு நிமிஷத்துல எல்லாமே முடிஞ்சிருச்சி’’ முனியாண்டி அங்கிருந்த சிமெண்ட் திட்டில் அமர்ந்தான். அவ்வளவுதானா எல்லாம். வாழ்க்கையில் தான் நினைத்தது எதுவும் கிடைக்கவில்லையென்றாலும் குடியில் தஞ்சமடைந்து அதிலேயே திருப்தியடைந்து அப்படியே முடிந்து போய்விடுவதா எல்லாம்? கண்ணீரைத் துடைத்துவிட்டிருந்தாலும் உள்ளுக்குள் வழிந்தபடிதான் இருந்தது. தான் அறைக்குச் செல்வதாகவும் எதுவும் தேவையென்றால் போனில் கூப்பிடச் சொல்லித் திரும்பினான் முனியாண்டி. மேன்சனுக்கு வந்து மேனேஜரிடம் விவரத்தைச் சொன்னான். ‘’ இன்னும் கல்யாணம்கூட ஆகலைங்க அவருக்கு’’ என்றான் அவன். தளர்ந்து அறைக்கதவைத் திறந்ததும் செந்திலின் சிகரெட் வாசம் மெலிதாய் உறைந்திருப்பதை உணர்ந்தான். ஜன்னலை முழுவதுமாகத் திறந்து விட்டான். கதவைத் தாழிட்டதும் வெடித்துக்கொண்டு புறப்பட்டது அழுகை. செந்திலின் கட்டிலில் உட்கார்ந்தபடி அழுது தீர்த்தான்.

மறுநாள் ஆபீஸுக்கு லீவ் போட்டான். ஜானகியிடமிருந்து போன் வந்தது. ‘’ ரெண்டு நாளா உங்களை அர்ஜெண்ட்டா மீட் பண்ணணும்னு நெனச்சிட்டுருக்கேன். நேத்து காலைல ஆபீஸுக்கு வந்தவுடனே கலெக்ஷனுக்குப் போயிட்டீங்க. ஈவ்னிங்கும் வரல. இன்னிக்கும் வரலைன்னா என்ன அர்த்தம். நான் என்ன கஷ்டத்துல இருக்கேன்னு தெரியுமா உங்களுக்கு?’’ அழுகையும் கதறலுமாய் புறப்பட்ட ஜானகியின் வார்த்தைகளுக்கு முனியாண்டி மெளனத்தையே பதிலாய் தந்தான். அன்று மாலை ஜானகியின் வீட்டுக்குச் சென்றான். ஜானகியின் அம்மாதான் எல்லாம் சொன்னார். ‘’ அன்னிக்கே சொன்னேன்ல தம்பி. தெருவுல உள்ள எல்லா கண்ணும் நீங்க வந்துட்டுப் போனதைப் பாத்துட்டுருக்கும்னு...அதுல எந்தக் கண்ணு போய் சொல்லுச்சோ... இங்கே குரோம்பேட்டைல ஜானகியோட மாமன் ஒருத்தன் இருக்கான். தூரத்துச் சொந்தம்தான். இத்தனை நாளும் வராதவன் நீங்க வந்துட்டுப் போன மறுநாளு வந்து கேக்காத கேள்வியில்ல. பொண்ண ஊர் மேய விட்டுட்டு நீ என்ன பண்றேன்னு அசிங்கம் அசிங்கமா கேட்டான். அவன் கட்டப்பஞ்சாயத்து வச்சி சம்பாரிக்கிறவன் தம்பி. சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. ஜானகிக்கு எதுவும் நல்லது பண்றதா இருந்தா சீக்கிரம் பண்ணுங்க தம்பி.’’ முனியாண்டியால் எல்லாவற்றையும் உள் வாங்கிக்கொள்ள முடியவில்லை.  ஒரு விநாயக சதுர்த்தி விடுமுறையன்று ஆபீஸிலிருந்து அவனும் ஜானகியும் மெரினாவுக்குச் சென்று  ஒருபுறம் பிள்ளையாரைக் கடலில் கரைத்துக்கொண்டிருக்க, மறுபுறம் இருட்டில் ஜானகியின் மடியில் படுத்துக்கிடந்த முனியாண்டியின் நெற்றியிலும் கன்னத்திலுமாகப் படிந்து படிந்து விலகிக்கொண்டிருந்த ஜானகியின் உதடுகள் மட்டும் மென்மையான ஈரத்துடன் மூளையின் அடுக்கில் படிந்து கிடந்தது. ஒரு வாரம் கழித்து செந்திலின் அண்ணன் அறைக்கு வந்து செந்திலின் பொருட்களை எடுத்துச் சென்றார். முனியாண்டியிடம் ஆறுதலாகவோ, கேள்வியாகவோ ஒரு வார்த்தைகூட பேசவில்லை. முனியாண்டி தனியானான். ஜானகியுடன் போனில் பேசிக்கொண்டிருந்தான். அது நள்ளிரவு தாண்டி விடியும்வரை நீண்டது. மன அழுத்தம் தொடரவே அந்த சாந்தி மேன்சனை விட்டு விலகினான்.

தங்க அரண்மனை தங்குமிடம் தெருவின் முனையிலே அமர்க்களமான பலகையுடன் இருந்தது. ரிஷப்சனில் காட்டிய கடுமை முனியாண்டிக்குப் புதிது. அறையைச் சென்று பார்த்ததும் கடுமை கூடியது. ரூம் கட்டிவிட்டு அதன்பின் பாத்ரூம் அட்டாச் செய்ததுபோல் அத்தனை சிறிய வெஸ்டர்ன் டாய்லெட். பீங்கானிலிருந்து பாத்ரூம் முழுவதும் காப்பிக்கொட்டை நிறத்தில் இருந்தது. இரண்டு கட்டிலை நெருக்கியடித்துப் போட்டிருந்ததில் ஒன்று மேலாகவும் இன்னொன்று கீழாகவும் இருந்தது. அறையை ஒட்டி குடியிருப்புப் பகுதி. மேல் ஜன்னல்  மூடவே முடியாதபடி கயிறு ஒன்று குறுக்கே நீண்டிருந்தது. அதை அவிழ்க்கவோ அறுக்கவோ கூடாது என்றார்கள். ‘’ ஜன்னல் திறந்து இருக்கே’’ என்றதற்கு, ‘’ அதெல்லாம் யாரும் பார்க்க மாட்டாங்க’’ என்று வந்தது பதில். பாத்ரூம் தாழ்ப்பாள் இல்லாமல் இருந்தது. ‘’ என்னங்க தாழ்ப்பாளே இல்ல’’ என்றதற்கு ‘’ நீங்க மட்டும்தானே இருக்கீங்க. எதுக்கு தாழ்ப்பாள்? வேணும்னா சரி பண்ணிடலாம்’’ என்றான் மேனேஜர். திருவல்லிக்கேணியில் தடுக்கி விழுந்தாலோ, விழுந்து எழுந்தாலோ ஒரு மேன்சனில் அல்லது ஒரு மெஸ்ஸில்தான் விழிக்க வேண்டியிருக்கும். இருந்தும் வீட்டு சாப்பாட்டுக்கு ஏங்கியது முனியாண்டியின் நாக்கு. இந்த மேன்சனில் அவனுக்குப் பிடித்த ஒன்றாய் இருந்தது, மேன்சன் எதிரிலிருந்த வீட்டில் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வந்த இட்லி தோசை சட்னி வகையறா. ரூம்தான் அந்த லட்சணத்தில் இருந்ததே தவிர, அந்த அறைக்குச் சம்பந்தமில்லாமல் ஒரு எல்சிடி டிவி சுவரில் மாற்றப்பட்டிருந்தது. ரிமோட்டை உற்றுப் பார்த்தாலே சேனல்களாய் கொட்டியது. தன் ஊரில் புழங்கும் பழமொழி ஒன்று ஞாபகம் வந்து போனது முனியாண்டிக்கு.

ஜானகி ஆபீஸிலும் போனிலும் பகிர்ந்த ஆறுதல் கொஞ்சம் கொஞ்சமாக டார்ச்சராக ஆரம்பித்தது. முனியாண்டிக்கோ பகிர்வதற்கு வேறு எதுவுமின்றி எப்போதும் ஒருவித ஜாக்கிரதைத்தனத்துடன் பேச வேண்டியதாயிற்று. ஜானகி தன் கஷ்டத்தையே பேசிக்கொண்டிருந்தாள். ஜானகியின் பாதுகாப்பின்மை அவளுக்குள் ஒருவித பயத்தை உண்டு பண்ணியிருந்தது. தன் காதலின் மீது அவளுக்குப் பெரிதும் நம்பிக்கையில்லை. அதே சமயம் முனியாண்டியின் மீதும் நம்பிக்கையில்லாமல் போனது முனியாண்டிக்கு எரிச்சலாய் இருந்தது. தங்க அரண்மனை அறையிலோ மூட்டைப்பூச்சிகள் தனது மூதாதையர்களுடன் குடியிருந்து வந்தது முனியாண்டிக்குத் தாமதமாகவே தெரிய வந்தது. அப்படி ஒரு உயிரினமே அழிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டிருந்த முனியாண்டியின் எண்ணத்தில் தூங்கா இரவுகள் அமிலம் ஊற்றின. பெட்ஷீட் மாற்றும் வழக்கம் இல்லையென்பதை விட பெட்ஷீட்டே இல்லை என்பதுதான் நிஜம். தலையணை உறைக்குள் கோடிக்கணக்கான மூட்டைப்பூச்சிகள் கொட்டக் கொட்ட விழித்தபடியிருந்தன. முனியாண்டி தலையைச் சாய்த்ததும் அவசர அவசரமாய் புறப்பட்டு வந்து அவன் கழுத்துக்குக் கீழ் கடித்து ரத்தம் உறிஞ்சத் தொடங்கின. முனியாண்டி விடியவிடிய மூட்டைப்பூச்சியுடன் போராடிக்கொண்டிருந்தான். தூக்கமின்றி கண்களில் எரிச்சலுடன் ஆபீஸுக்குச் சென்றான். ஜானகியும் எரிச்சலுடன் பேசினாள். ‘’ முன்ன மாதிரி இல்ல நீங்க. என் ஆறுதல் மொத்தமும் நீங்கதான்னு நெனச்சிட்டுருந்தேன். நீங்களும் இப்படியிருந்தா நான் சாகிறதைத் தவிர வேற வழியில்ல’’ ஒரு நாளைக்கு மூன்று முறை நேரிலும் போனிலும் முனியாண்டியிடம் இதையே சொன்னாள். முனியாண்டிக்குக் காதல் கசந்தது. ஆனாலும் ஜானகியைப் பிடித்திருந்தது. ஜானகியைத் திருமணம் செய்துகொண்டு நிம்மதியாய் வாழ்ந்து விட முடியுமா என்று யோசிக்கத் தொடங்கினான்.

ஒருநாள் மேன்சனில் பாத்ரூமிலிருந்து பெருச்சாளி ஒன்று  அவன் கண்ணில் தரிசனம் தந்தது. வெஸ்டர்ன் டாய்லெட்டின் ஃப்ளஷ் பட்டனை அழுத்தினால் தண்ணீர் வராமல் காற்று வந்தது. வாளியிலிருந்து தண்ணீர் மொண்டு பீங்கான்  பேஸினில் ஊற்றினான். ஆபீஸிலிருந்து அலுத்துப்போய் வரும் முனியாண்டிக்கு நிம்மதியான உறக்கம் தரும் இடமாயில்லை மேன்சன் அறை. இரண்டு மாதத்துக்குப் பிறகு புது பிரச்னை ஆரம்பித்தது. பக்கத்து அறையிலிருந்து நான் ஸ்டாப்பாக ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. அது முனியாண்டியின் பாத்ரூம் தாண்டி அவன் செவியை அடைந்தது. ரிஷப்சனில் கேட்டான். ‘’ அவர் கொஞ்சம் ஒரு மாதிரி சார். அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க’’ என்பதே பதிலாய் வந்தது . முனியாண்டிக்கு அந்த மேன்சன் வினோதமாயிருந்தது. ஜன்னல் கதவு திறந்திருக்கிறதே என்றால், யாரும் பார்க்க மாட்டார்கள் என்ற பதில். பாத்ரூம் கதவில் தாழ்ப்பாள் இல்லையே என்றால், நீங்க மட்டும்தானே இருக்கீங்க என்ற பதில். டைனோசர் மாதிரி அழிந்துபோய்விட்டது என்று நம்பிக்கொண்டிருந்த உயிரினமோ கும்பல் கும்பலாய் ரத்தம் குடிக்கிறது. முனியாண்டி மாற்று வழி தேடினான். அண்ணா சாலையில் உள்ள ஒரு மெடிக்கல் ஷாப்பில் எக்ஸ்பீரியன்ஸ் ஆட்கள் தேவை என்று சண்டே பேப்பரில் விளம்பரம் பார்த்தான். சென்று பார்த்துப் பேசியதில் இப்போது வாங்கும் சம்பளத்தைவிட அதிகமாகத் தருவதாகச் சொன்னர்கள். முனியாண்டி யோசிக்கவே இல்லை. தெரியாத வேலையில் கஷ்டப்படுவதைவிட தெரிந்த வேலையில் வித்தையைக் காட்டலாம் என்று தண்டையார் பேட்டை வேலையிலிருந்து விலகினான். மெடிக்கல் ஷாப்பில் சேர்ந்தான். அதற்குமுன்பு தான் இதுவரை இருந்த கோல்டன் பேலஸ் மேன்சனை காலி செய்தான். முனியாண்டி பச்சை வீடு சொர்க்கத்துக்கு வந்தபோது நிறைய மாற்றங்கள். அவன் வாழ்க்கையையே புரட்டிப்போடும் மாற்றம் அங்குதான் நிகழப்போகிறதென்று அப்போது அவனுக்குத் தெரியாது. 

அந்த மேன்சன் மற்ற மேன்சன்களிலிருந்து பெருமளவில் வித்தியாசப்பட்டிருந்தது. வாடகை அதிகம் என்றாலும் இரண்டு பெட்டுகள், நான்கு தலையணைகள் என்று ஆரம்பமே அவன் எதிர்பாராத வகையில் இருந்தது. மிகப்பெரிய ஷெல்ப். வெளிச்சமும் காற்றும் சும்மாவே அறைக்குள் வந்துபோயின. முக்கியமாக மூட்டைப்பூச்சி இல்லாத, லேசான டெட்டால் மணம் வீசும் அறை அவனுக்குப் பார்த்ததுமே பிடித்துப் போயிற்று. முனியாண்டி அந்த அறைக்கு வந்த அன்று டிவியில் இதயத்தைத் திருடாதே படம் ஓடிக்கொண்டிருந்தது. அவனுக்குப் பிடித்த படம். ரிஷப்சனில் இருந்தவர் மேனேஜர் என்றார். பெயர் மணிவண்ணன் என்றார். சமீபத்தில்தான் கல்யாணம் ஆனதாய் சொன்னார். அட்வான்ஸ் தரும்போதே அதற்கான ரசீதையும் தந்து கண்டிஷன்களையும் சொன்னார். பத்து மணிக்கு மேல்தான் முனியாண்டி அறைக்குத் திரும்பினான். கொஞ்சம் விடுதலையாக உணர்ந்தான். புதிய சூழல் என்றாலும் அவனுக்குப் பிடித்த வேலை. அவனுக்குப் பிடித்த மருந்து வாசனை. அறைக்கு வந்தபிறகுதான் ஜானகியுடன் போனில் பேச முடியும். பேசினார்கள் என்பதை விட ஜானகி அழுது கொண்டிருப்பாள். இவன் கேட்டுக்கொண்டிருப்பான். ‘’ வேலையிலேர்ந்து நிக்கிறதப்பத்தி ஒரு வார்த்த என்கிட்ட கேட்டீங்களா. நான் எவ்ளோ கஷ்டப்படுவேன்னு ஒரு நிமிஷம் யோசிச்சீங்களா.உங்க சுயநலம்தான் முக்கியம். என் எல்லா கஷ்டத்துக்கும் விடிவுகாலம் வந்துடுச்சின்னு நெனச்சேன். என் பொறப்பு சாபப்பொறப்பு. கடைசிவரைக்கும் எனக்கு விமோசனமே இல்லை. ‘’ அழுதாள் ஜானகி. ‘’ அப்போ நான் கஷ்டப்பட்டா ஒனக்குப் புடிக்குமா. நான் எவ்ளோ மன வருத்தத்துல அங்கே வேலை பார்த்தேன்னு ஒனக்குத் தெரியாது. அடிமை மாதிரி நடத்துனாங்க ஒங்க ஆபீஸுல. நீ மட்டும்தான் ஆறுதலா இருந்தே. சமீபமா நீயும் உன் நலன் மட்டும்தான் யோசிச்ச்சியே தவிர, என்னப்பத்தி யோசிக்கல. செந்தில் இறந்து போனதைப்பத்தி ஒன்கிட்ட அவ்ளோ சொல்லியும் சின்னதா ஒரு ஸாரி சொன்னியா. ஒனக்கு ஒன் கஷ்டம்னா எனக்கு என் கஷ்டம்’’ போனில் இதுபோன்ற உரையாடல் நிகழ்த்துவது என்பது எதற்கும் பிரயோசனப்படாது என்று முனியாண்டிக்கு நன்றாகவே தெரியும். எப்போது என் கஷ்டம் உன் கஷ்டம் என்று பிரிந்துபோனதோ அப்போதே மனதளவில் தூரமாகியாயிற்றென்பதை உணர்ந்தான்.

முந்தைய மேன்சனில் அறைதான் பிரச்னையாயிருந்ததே தவிர இங்கே அறைக்கு வந்தும் பிரச்சனை ஜானகி வடிவில் பேசியது. தொடர்ச்சியான ஞாயிறுகளில் ஜானகி வீட்டுக்குச் செல்ல முடியாமல் போகவே, ஜானகியின் பேச்சு எல்லை தாண்டியது. ‘’ ஒங்களுக்கு என்னைப் புடிக்கல. நான் வேணாம். நீங்களும் சராசரி ஆம்பளதான்னு நிரூபிச்சிட்டீங்க. பரவால்ல. எதா இருந்தாலும் ஷேர் பண்ணிக்க ஒங்களுக்கு ஆயிரம் பேரு. எனக்கு யாரிருக்கா. நானே உள்ளுக்குள்ள் புழுங்கிச் சாகுறேன். விட்ருங்க. இப்பிடி நம்பவெச்சு கழுத்தறுக்க வேணாம்.’’ ஜானகியின் குரலில் ஒரு சதவிகிதம் கூட காதலில்லை. ‘’ என்னாச்சுன்னு கத்துறே... என் நிலைமையில நின்னு யோசிச்சுப் பாக்க மாட்டியா. இங்கே வேலை அதிகம். அதான் ஒன்னைப் பாக்க வர முடியல. நேர்ல பாக்காட்டியும் விடிய விடிய போன்ல பேசுறேன்ல. அப்புறம் என்ன?’’ முனியாண்டியும் தன் குரலிலும் காதல் இல்லாததை உணர்ந்தான். ‘’ போன்ல பேசுணா போதுமா. போன்ல ஆயிரம் பேர்கூட பேசலாம். ஒரு ஜானகி இல்லைன்னா ஒங்களுக்கு ஒரு மாதவின்னு போவீங்க. ஒங்க ஆம்பள புத்தி எங்களுக்குத் தெரியாதா...’’ தன் நெற்றியில் மோதி வழிந்த அந்த மென்மையான உதடுகளின் தொடுகை ஒரு நிமிடம் முனியாண்டியின் ஞாபகத்தில் புரண்டது. அங்கிருந்துதான் இதுபோன்ற வார்த்தைகளும் வருகிறதா? ‘’ வேணாம் ஜானகி. இதே வார்த்தைய நான் திருப்பிச் சொல்ல ரொம்ப நேரம் ஆகாது.’’ போன் கட் செய்யப்பட்டது. முனியாண்டி மறுபடி மறுபடி முயற்சி செய்ய சுவிச்டு ஆஃப். அன்றிரவும் தூக்கம் தொலைத்தான் முனியாண்டி.  மறுநாள் இரவு அவனறைக்கு போலீஸ் வந்தது. உள்ளுக்குள் பயப்பந்து உருண்டோடுவதை உணர்ந்தான் முனியாண்டி. ஜானகி ஏதும் செய்துகொண்டுவிட்டாளா. மூன்று போலீஸுடன் மேன்சன் இன்சார்ஜும் வந்திருந்தார்.  சட்டை போடாமல் திறந்த மார்புடன் கைலி மட்டும் அணிந்திருந்த முனியாண்டியிடம் ‘’ எங்க வேலை பாக்குறீங்க?’’ என்றார் ஒரு போலீஸ்காரர். ‘’ மெடிக்கல் ஷாப்ல சார். ஏன் சார் என்னாச்சி?’’
 என்றான், பயத்தை வெளிக்காட்டாமல். அதற்கு பதில் சொல்லாமல், ‘’ எந்த ஊர்?’’ என்றார். பதில் சொன்னான். ‘’ ஊர் அட்ரஸ் சொல்ல்லுங்க. அம்மா அப்பா பேரு மொபைல் நம்பர் குறிச்சுக்குங்க’’ என்றார் இன்னொரு போலீஸிடம். முனியாண்டி சொல்லச் சொல்ல அவர் குறித்துக்கொண்டார். யதேச்சையாகத்தான் கவனித்தான். அவன் அறையையும் அவனையும் இன்னொரு போலீஸ்காரர் மொபைலில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். முனியாண்டி அவசர அவசரமாகத் துண்டை எடுத்து நெஞ்சின் மீது போட்டுக்கொண்டான். அவன் அறையிலிருந்து வெளியேறி அடுத்த அறைக்கதவைத் தட்டினார்கள். முனியாண்டி இன்சார்ஜின் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினான். காதோரம் கிசுகிசுப்பாகக் கேட்டான். ‘’ எதுக்கு இதெல்லாம்...’’ அவனும் அதே குரலில். ‘’ நாளைக்கு பிஎம் வர்ராருல்ல. அதான் செக்யூரிட்டி செக் பண்றாங்க. நீங்க படுங்க’’ என்றபடி அந்தப் போலீஸைப் பின் தொடர்ந்தான். வாழ்க்கையில் முதன்முறையாக இவ்வளவு பயத்தைத் தந்தது, நாம் இதுநாள்வரை காதல் என்று நினைத்துக்கொண்டிருந்த ஒன்று என நினைக்கும்போதே கசப்பாயிருந்தது முனியாண்டிக்கு.

அந்த வாரம் ஞாயிறு ஸ்பென்சர் பிளாசாவில் முனியாண்டி, ஜானகியைப் பார்த்தான். யாரோ ஒரு ஆளுடன் கை கோத்தபடி எஸ்கலேட்டரில் இறங்கிக்கொண்டிருந்தாள். அந்த ஆண் நிச்சயம் அவள் மாமன் கிடையாது எனத் தெளிந்தான் முனியாண்டி. கட்டைப் பஞ்சாயத்து செய்து காசு வசூலிப்பவன் இன்ஷர்ட் செய்து முழுக்கைச் சட்டை அணிந்து ஷூ போட்டிருக்க மாட்டான். சிவப்பான உதடுகளுடன் ஸ்டைலாக பிரில்கிரீம் போட்டு தலை வாரியிருக்க மாட்டான். அதுவுமில்லாமல் தன் மாமனின் கைகளை இத்தனை இறுக்கமாய் தன்னுடன் ஜானகி பிணைத்திருக்க மாட்டாள் என்று நம்பினான் முனியாண்டி. அன்றிரவு போன் செய்யும்போது, எடுத்த எடுப்பிலே ‘’ ஸ்பென்சர்ல பார்த்தேன். சந்தோஷமா இருந்தே போல. அது யாரு புதுசா?’’ என்றான். ‘’ நானா, ஸ்பென்சர்லையா...வேற யாரையோ பார்த்துட்டு இப்படி ப் பேசாதீங்க...’’ குரலில் லேசான கிண்டலைக் கவனித்தான். ‘’ உன்னை மாதிரியே வேற யாரோன்னா எனக்குக் கவலையில்ல. அது நீங்கிறதாலதான் உன்கிட்ட வந்து கத்துறேன். எனக்குக் காதல்னா என்னன்னே தெரியாது. ஒரு பொண்ணோட இப்படியெல்லாம் பேசலாமா, சிரிக்கலாமா பெண் முத்தம் இப்படித்தான் இருக்குமால்லாம் தெரியாது. எல்லாத்தையும் தெரிய வெச்சது நீ. பரவால்ல. இதையும் தெரிஞ்சிக்கிறேன். எல்லாத்துக்கும் தாங்க்ஸ்’’ வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கின. ‘’ ஹலோ... ரொம்பப் பேசாதீங்க. நானும், உங்கள ஸ்பென்சர்ல பார்த்தேன். உங்கள வெறுப்பேத்தத்தான் அவர்கூட நெருக்கமா வந்தேன். அவர் என் சித்தி பையன். உங்களுக்குத்தான் என்மேல எந்த அக்கறையுமில்லையே... அப்புறம் ஏன் கோபம் வருது?’’ ‘’ ச்சை... சித்தி பையன்னு சொல்லி அந்த உறவையும் அசிங்கப்படுத்தாத. நீ எப்படிப்பட்டவன்னு இப்பதான் தெரியுது. உன்கூட பழகினதை நெனச்சாலே அருவருப்பாருக்கு. போனை வைடி’’ கோபத்தில் தெறித்து விழுந்தன வார்த்தைகள். ‘’ மொதல்ல நீங்க ஆம்பளையா நடந்துக்கப் பாருங்க. ஒரு பிரச்னைனா எதுத்து நின்னு ஃபேஸ் பண்றவன் ஆம்பள. அது நீயில்ல. வைடா போனை’’ ஜானகி போனை வைத்ததும் முனியாண்டியின் மண்டைக்குள் அந்தச் சத்தம் நின்றது. தன் போன் திரையையே வெறித்துப் பார்த்தான்.

மறுநாள் மதியம் மெடிக்கலுக்கு லீவ் போட்டான். ஒயின்ஷாப் சென்று ஆஃப் பாட்டில் பிராந்தி வாங்கி வந்தான். செந்தில் குடித்த அதே பிராண்ட். 7 மணிபோல் குடித்தான். படுக்கையில் படுத்தால் குடல் எரிந்தது. பாத்ரூம் சென்று ஓங்காரமிட்டு வாந்தியெடுத்தான். பாத்ரூம் தாண்டி அறையை மூழ்கடித்தது நாற்றம். அழுகையாய் வந்தது. சின்னச் சின்னதாய் ஜானகிக்குச் செய்த செலவுகள், நம்பிக்கைகள், முத்தங்கள் எல்லாம் ஞாபகம் வந்து போயின. காலையிலேயே கடையிலிருந்து எடுத்து வந்திருந்த 20 தூக்கமாத்திரைகளும் அவனைப் பார்த்துச் சிரித்தன. அப்படியே வாயில் கவிழ்த்தான். படுக்கையில் மல்லாந்தான். போன் அடித்தது. திரையில் ஜானகி. அவமானம், பயம், கழிவிரக்கம் எல்லாம் ஒன்றுகூட போனை எடுத்துக் காதில் வைத்தவுடன், ‘’ போனை வைடி தேவ்டியா முண்ட. ஒன்னால எல்லாமே நாசமாயிடுச்சேடி. அய்யோ அய்யோ’’ கதறி அழுதவனின் குரல் திறந்திருந்த கதவை மீறி மேன்சனின் பக்கத்து அறைகளில் நிறையத் தொடங்கியது. இமைகளை இழுத்துப் பிடித்துத் தூக்கம் வர, அப்படியே தரையில் சரிந்தான். அறை லைட் எரிந்துகொண்டிருந்தது. நள்ளிரவு தாண்டி அவனுக்கு மூச்சிரைப்பு வந்தது. மேன்சனே தலைகீழாய் சுற்றியது. எழ முடியாமல் பலவீனமாய் குரல் எடுத்துக் கத்தினான். ‘’ காப்பாத்துங்க’’. அறையைக் கடந்த யாரோ ஒருவர் அவன் நிலைமையைப் பார்த்துப் பதறி நைட் டூட்டியில் இருந்த இன்சார்ஜிடம் சொல்ல பதறியடித்துக்கொண்டு வந்தார். முனியாண்டியின் சீரியஸ் கண்டிஷன், அறை முழுவதும் நிரம்பியிருந்த ஆல்கஹால், பிரித்துக்கிடந்த மாத்திரை அட்டைகள் விபரீதம் உணர்த்தின. 108 ஆம்புலன்ஸில் முனியாண்டியுடன் அவர் ஏறும்போது இரவு மணி 2. 

இரவு நேர ஆஸ்பத்திரி தனக்கேயுரிய அமானுஷ்ய அமைதியில் இருந்தது. தற்கொலை முயற்சி எனப் பதியப்பட்டான் முனியாண்டி. போலீஸ் விசாரணை வந்தது. ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்த முனியாண்டியின் கன்னத்தில் தட்டி எழுப்பி ‘’ கேஸ் போட்டு உள்ள தள்ளிடலாமா?’’ என்றார்கள். முனியாண்டி சாப்பிட்ட தூக்க மாத்திரைகளை வாமிட் மூலம் வெலியேற்ற மூக்கில் டியூப் செருகியிருந்தார்கள். வலி. முனியாண்டியை உலக அளவு அயற்சியாக்கியிருந்தது. 4 மணிக்கு மேல் ஒருமுறை வாந்தியெடுத்தான். டியூபை அகற்றினார்கள். முனியாண்டியின் கண்களிலிருந்து கண்ணீர் வந்தவண்ணமிருந்தது. மேன்சன் இன்சார்ஜோ போலீஸ்காரர்களிடம் ‘’ சார் மேன்சன் பேரு வெளியில வர வேண்டாம் சார்’’ என்று கெஞ்சிக்கொண்டிருந்தார். ‘’ அப்போ ஏன் இந்த மாதிரி ஆளையெல்லாம் உள்ள விடுறீங்க?’’ என்றார் கோபமாய் பதிலுக்கு. ஒரு பேடில் செருகியிருந்த வெள்ளைத் தாளில் முனியாண்டியிடமிருந்து தகவல்கள் சேகரித்து எழுதிக்கொண்டார். ‘’ ஏன் இப்படிப் பண்ணுணீங்க?’’ ‘’ வயித்த வலி தாங்க முடியல சார்’’ ‘’ அடிங்...போலீஸ்கிட்ட பொய் சொல்லக் கூடாது. எதுவும் முக்கியமான காரணம் இருந்தா சொல்லிடு. இதனாலதான் நீ தற்கொலைக்கு முயற்சி பண்ணிணேன்னு கேஸை வேற பக்கம் மாத்திடலாம். வயித்தவலிக்காரன் பிராந்தி வாங்கிக் குடிப்பானாடா...’’ அவருக்கு மட்டும் எவரையும் சுடும் ஆணை தந்தால் முதலில் முனியாண்டியைத்தான் சுடுவார் போல இருந்தது ஆத்திரம்.  ‘’ இன்னிக்கிதான் சார் ஃபர்ஸ்ட் டைமா குடிச்சேன்.’’ ‘’ அது எங்களுக்குத் தெரியும். டாக்டர் சொல்லிட்டாரு. பார்த்தா படிச்ச நல்ல பையன் மாதிரி தெரியற... எதுக்கு இந்த வேலை. ஊருக்கு போன் பண்ணி உன் அப்பா அம்மாவ வரச் சொல்லிடலாமா...’’ முனியாண்டியின் தலையில் அந்த ஆஸ்பத்திரியே இடிந்து விழுந்தது மாதிரியிருந்தது. 

ஆஸ்பத்திரி மெல்ல பனி நிறத்திலிருந்து சூரிய நிறத்துக்கு மாறத் தொடங்கியது. கேண்டீனில் பாலுக்கும், டீக்கும் கியூவில் நிற்கத் தொடங்கினார்கள் மக்கள். முனியாண்டிக்குப் பால் வாங்க வந்த மேன்சன் இன்சர்ஜின் காதில் அந்தக் குரல் விழுந்தது. ‘’ அய்யோ... என்னவிட்டுப் போயிட்டியே..’’ குரல் வந்த திசையில் ஒரு பெண்மணி தலைவிரி கோலமாய் அழுதுகொண்டிருந்தாள். அருகில் சிலர் சத்தம் காட்டாமல் அவளுக்கு ஆறுதல் சொன்னபடி அழுதுகொண்டிருந்தார்கள். ஆஸ்பத்திரியின் காலை விடிந்துகொண்டிருந்தது. 6 மணிக்கு இன்னொரு போலீஸ்காரர் வந்து டூட்டி மாற்றினார். பெல்ட்டில் அடங்காத தளர்ந்த தொப்பை. வயதான அந்த போலீஸ்காரர் முனியாண்டியிடம் ‘’ நான் இன்னும் கொஞ்சநாள்ல ரிட்டயர்ட் ஆகப்போறேன். ஒன் வயசுல எனக்கொரு மகன் இருக்கான். அதனாலதான்  உன்மேல எதுவும் கேஸ் போடல. எதுவா இருந்தாலும் இது மாதிரி கோழைத்தனமா முடிவெடுக்காத. பெத்தவங்கள நெனச்சிப் பார்த்து நடந்துக்க.பத்து மணிக்கு மேல டாக்டர் வந்து பிபியெல்லாம் செக் பண்ணிப் பார்த்துட்டு நார்மல்னா டிஸ்சார்ஜ் பண்ணிடுவாரு. ஈவ்னிங் ஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்துப்  போட்டுடு. ‘’ முனியாண்டி தன்னைச் சுற்றிலும் பார்த்தான். ஆறுதல் பேசும் போலீஸ்காரர், நேற்று இரவிலிருந்து தன்னுடன் சேர்ந்து கண்விழிக்கும் அதிகம் பழகியிராத மேன்சன் இன்சார்ஜ் போன்றவர்களால்தான் இந்த பூமி இன்னும் சுற்றிக்கொண்டிருக்கிறது என நம்பினான். சுயநலம் மிகுந்த ஒரு பெண்ணின் எதிர்பார்ப்பை காதல் என்று நம்பியது எத்தனை அசிங்கம் என்று உணரும்போதே ஆஸ்பத்திரி வலியை மீறி அவமானம் சுட்டது. ட்ரிப்ஸ் ரிமூவ் பண்ணிய இடத்தில் லேசான வீக்கம் தெரிந்தது. 

ஆஸ்பத்திரியிலிருந்து ஆட்டோவில் செல்லும்போது மேன்சன் இன்சார்ஜ் காலையில் ஆஸ்பத்திரியில் பார்த்த மரணத்தைப் பற்றிச் சொன்னான். மேன்சனிலோ முனியாண்டியை அறைக்குப் போகச் சொல்லிவிட்டு பின் வந்தார் மேனேஜர் மணிவண்ணன். ‘’ மேன்சனுக்கு மறுபடியும் உங்களைத் தேடி போலீஸோ, ஆம்புலன்ஸோ வராம பாத்துக்குங்க. இந்த மாசம் வாடகை தர வேண்டாம். அட்வான்ஸ்ல கழிச்சிக்கலாம். வேற எங்கையாவது ரூம் பாத்துக்குங்க. எங்க ஓனர் கேட்டா எங்களால பதில் சொல்ல முடியாது. எங்க வேலை போயிடும். சீக்கிரம் காலி பண்ணிடுங்க’’ முனியாண்டி நீண்ட நேரம் குளித்தான். உடல் அழுக்கு, அசதி, ஆஸ்பத்திரி வாசனை, மன இறுக்கம் எல்லாம் கரைந்து ஓடும்படி குளித்தான். போன் செய்து கடைக்கு இன்றும் லீவ் என்று சொன்னான். ஜானகி நம்பரைத் தேடி அழித்தான். பசித்தது. கடைக்குச் சென்று கேரட் ஜூஸ் குடித்தான். சற்றே தெளிவாக உணர்ந்தான். அன்று சாயங்காலம் போலீஸ் ஸ்டேஷன் போகவில்லை. போன் வருமென்று எதிர்பார்த்தான். வரவில்லை. ஒரு வாரம் ஆயிற்று. முனியாண்டி வேறு மேன்சன்கள் தேடத்துவங்கினான். ‘ டெய்லி ரெண்டு மணி நேரம்தான் தண்ணி வரும்’ ‘ கரண்ட் பில் தனி’ ‘ மூணு மாச அட்வான்ஸ் தரணும்’ ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பதில். முனியாண்டி போல் எத்தனையோ பேர் சென்னை மேன்சன்களில் தங்கியுள்ளார்கள். அடுத்தமுறை நீங்கள் சென்னை செல்லும்போது ஏதாவது மேன்சன் கண்ணில் பட்டால், முனியாண்டி என்று யாராவது தங்கியிருக்கிறார்களா என விசாரித்துப் பாருங்கள்.