Sunday 29 January 2017

நீர்ப்பாம்பின் பாதையாய் ஒரு வாழ்வு

அஜ்வா- நாவல்

ஆசிரியர்- சரவணன் சந்திரன்

வெளியீடு- உயிர்மை பதிப்பகம்






ஒரு மித். அதன் வழியே விரியும் ஒருவனின் வாழ்வு. அஜ்வா என்பது பேரிச்சைபழத்தில் ஒருவகை. அதில் ஏழு பழங்களைச் சாப்பிட்டால் ஒருவன் தன் வாழ்வில் புரிந்த பாவ வினைகள் தீர்ந்துவிடும் என்கிறது குரான். நபிகள் நாயகம் சாப்பிட்ட அந்த அஜ்வா பழங்கள் நம் கதை சொல்லிக்குக் கிடைக்கிறது. அவன் அதைச் சாப்பிட்டு தன் கரும வினைகளை முடிக்கிறான். அதற்குள் அவன் வாழ்வில் இடறும் மனிதர்கள். அவர்கள் அனுபவங்கள், அதன் வழி கிடைக்கும் தரிசனங்கள் என்று விரிகிறது நாவல்.
  
அஜ்வா- ஓர் அனுபவம்தான். மறுப்பதற்கில்லை. அந்த ஒற்றை அனுபவத்தை நம்முள் கடத்துவதற்கு நாவலாசிரியர் பல உலகங்களை அறிமுகப்படுத்துகிறார். வேற்றுகிரகத்திலிருந்து எவரும் குதித்துவிடவில்லை. எல்லோரும் நம்முடன் பயணிப்பவர்களே. நாவலின் முதல் எழுத்திலிருந்து கதையைத் தொடங்கிவிடுகிறார் கதையாசிரியர். ஆனால் இதுதான் கதையென்று நம்மை முடிவு செய்யவிடாமல் அவர் செய்யும் மேஜிக் ஆச்சர்யம். இப்படித்தான் எழுதவேண்டும் என்ற சமரசங்களுக்கு உட்படாத எழுத்து. தனக்கான எழுத்து நடையை நன்றாகவே தீர்மானித்திருக்கிறார் சரவணன் சந்திரன். பின்விளைவுகள் குறித்து அலட்டிக்கொள்ளாத எழுத்து. ஏதோ ஒரு பத்தியில் வாழ்வின் நிலையாமையை, அபத்தத்தை, அற்புத தருணத்தை எளிதில் கடத்திச் செல்பவர் அடுத்த பத்தியில் நம் தோளில் கை போட்டு ' ஒரு டீ சாப்பிடலாமா நண்பா' என்கிறார்.

நாவலின் போக்கை, நம் எதிர்பார்ப்பை சட்சட்டென்று மாற்றுவதே சரவணனின் பலம். ஒரே நேர்கோட்டில் செல்லாவிட்டாலும் நீர்ப்பாம்பின் பாதை என்றுமே ஒரு நேர்கோடுதான். அதன் வழி என்பது நெளிதலில் உள்ளது. கதை சொல்லிதான் நாவலின் நாயகன். கதைசொல்லிக்கு நாவலில் பெயரில்லை. அது பெரிய தடையாகவும் தெரியவில்லை. அவனை நாம் சரவணனாகவே வரித்துக்கொள்வதில் சரவணனுக்கு எவ்விதத் தடையுமில்லை. ஏனெனில் நாவல் முழுவதும் சரவணன் பல உருக்கொள்கிறார். அவர், டெய்ஸி மற்றும் ஜார்ஜ் வழி தொடங்கும் நாவல் அதன் பின்பு பலவகையான மனிதர்களை அறிமுகப்படுத்துகிறது. எத்தனை மனிதர்கள், எவ்வளவு அனுபவங்கள். ஒரு வரியில், ஒரு பத்தியில், ஒரு பக்கத்தில் ஒவ்வொரு கதாபாத்திரங்கள், அதிரவைக்கும் அனுபவங்கள். நமக்குதான் மூச்சு முட்டுகிறது.

நாயகனின் சொத்தினை அடைய முற்படும் தாய்மாமன், அவனுக்கும் சிம்ம சொப்பனமாய் திகழும் அத்தை, பயந்தாங்கொள்ளி அப்பா ( இவரின் பயத்திலிருந்துதான் கதை உருக்கொள்கிறது ) பாசமிகு அம்மா என்று எல்லோரும் ஏதோ ஒரு அனுபவத்தை நமக்கு தந்து செல்கின்றனர். சரவணனிடம் இருக்கும் பகடிக்காரன் நாவல் முழுவதும் நம்மை குதூகலப்படுத்திக்கொண்டே இருக்கிறான். சினிமாவில் வருவதுபோல் இருந்தது என்று நாவலாசிரியரே சொல்லும் திருக்கைவாலால் மாமன் கதைசொல்லியை அடிக்கும் காட்சியும் அதைத் தொடர்ந்து தன்னை வீரனாக மாற்ற நினைத்து தோற்றுப்போகும் அத்தையிடம் சொல்வதாக நம்மிடம் சொல்கிறார் சரவணன். நான் என்ன வைத்துக்கொண்டா வஞ்சனை செய்கிறேன். அதேபோல் விஜி அண்ணனும் சுந்தர் அண்ணனும் சேர்ந்து செய்யும் கொலையைப் பார்க்கும்  நாயகனிடம் யாரிடமும் சொல்லக் கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொள்கிறார்கள். அவனும் அவ்வாறே சத்தியம் செய்கிறான். ஆனால் கதைசொல்லி நம்மிடம் அதைச் சொல்லிவிட்டு இப்போது ஏன் சொல்கிறேனென்றால் விஜியும், சுந்தரும்தான் உயிருடன் இல்லையே என்கிறார். இப்படிப் பல இடங்கள்.
          
ஒரு கதாபாத்திரத்தின் வழி கதை செல்கையில் சட்டென்று தன் அனுபவம், அதன் கூடவே பயணம் செல்கையில் இன்னொன்று என்று சளைக்காத, சலிக்காத விறுவிறு எழுத்துநடை. நாவலின் மையம் போதை. நிஜமான போதை. எத்தனை வகை போதையோ அத்தனையும் அறிமுகப்படுத்துகிறார். டெய்ஸியின் செல்போன் பற்றிச் சொல்ல ஆரம்பித்து கஞ்சா புகைப்பதைப் பற்றித் தொடர்கிறார். அது ஹாட் பாக்ஸ் என்று நீள்கிறது. ஹாட் பாக்ஸுக்குள் நம்மையும் திணிக்கிறார். தீரா போதை.
நாவலின் மையச்சரடு என்ன என்பதை அறியும் முன்னரே தெறித்து விழுகின்றன பல பகீர் நிகழ்வுகள்.  நாயகனின் இன்னொரு அத்தைக்கும் மாமாவுக்கும் இருக்கும் உறவினைப் பற்றிக் கூறும்போது, அத்தைக்கு கோபம் வந்தால் தீப்பெட்டி ஒட்டும் பசையினை அள்ளித் தின்றுவிடுவார். அதில் துத்தநாகம் கலந்திருக்கும். அதுவே உயிருக்கு ஆபத்து. ஆனால் அந்த சாப மனிதர்கள் மிக வறுமையான காலகட்டங்களில் துத்தநாகத்தை வடித்துவிட்டு தோசை சுட்டு சாப்பிடுவார்கள் என்கிறார். ஒரு வலியைச் சொல்லவந்து இன்னொரு வலிக்குத் தள்ளிவிட்டு கைகட்டி வேடிக்கைப் பார்க்கிறார் சரவணன்.

நாவலில் வரும் சம்பத் கதாபாத்திரம் தனி நாவலையே எழுதுகிறது. தன் குடும்பத்தின் மீது வீழ்ந்த சாப விளைவால் குடும்பத்தில் அனைவரும் பைத்தியமாக எல்லோருக்கும் விஷம் வைத்துக் கொன்றுவிட்டு தானும் மனநிலை பாதிக்கப்பட்டு பழனிமலை முருகனிடம் அடைக்கலமாகி மலை அடிவாரத்தில் தஞ்சமடையும் சம்பத்தின் கையில் 15 கோடி மதிப்புள்ள சொத்து பத்திரம் இருக்கிறது. இதை ஜஸ்ட் லைக் தட் இரண்டு பக்கங்களில் கடக்கிறார் நாவலாசிரியர். அடிவாரத்தில் தங்கி மலையேறும் வின்ச்சில் உயிர்விடும் சம்பத் நம் மனதில் தங்கும் பாத்திரப்படைப்பு.

நாவலின் இன்னொரு சிறப்பு மதங்கள் பற்றிய நாவலாசியரின் பார்வை. நாயகன் வாழ்வில் இன்னொரு தரிசனம் தரும் ஜார்ஜ் கிறிஸ்துவனாக இருந்தாலும் திருநீறு பூசிக்கொள்கிறான். அஜ்வா கொண்டுவரும் முத்தலிப், நாயகனை போதையிலிருந்து மீட்டு எடுப்பதற்கான மனநிலையிலே உறுதியாய் இருக்கிறான். கமுதியில் அறிமுகமாகும் மன்மோகன் சிங் கதாபாத்திரம் தன் பஞ்சாபி வீரத்தை விட்டுக்கொடுக்காமலே நாயகனுக்கு உதவி புரிகிறது. மனிதர்களின் விசித்திர மனநிலையை பிரமாதப்படுத்திப்போகும் நாவலாசிரியர் மதம் சார்ந்த மனிதர்களை அறிமுகப்படுத்துவதிலும் தெளிவாகவே இருக்கிறார். அங்கே போதையில்லை.

'எதிர்பார்த்து இருந்ததற்கு மாறாகப் பெருந்தன்மையுடன் இருப்பதும் பழி வாங்கும் உணர்ச்சிதான்.'  'ஒரே நேரத்தில் ஒன்றைப் பற்றி மட்டுமே சிந்திக்க முடியும். அப்படி ஒரு விஷயத்தைப் பற்றி மட்டுமே திரும்பத் திரும்ப சிந்திப்பவர்களைப் பைத்தியம் என்று வழக்கமாக இந்த உலகம் சொல்கிறது.' ' விரும்பினதை விட்டால் பாவம். விரும்பாததைத் தொட்டால் பாவம்.' போதையிலும் நிதானிக்கிறார் கதாசிரியர்.

தனது முந்தைய மூன்று புத்தகங்களில் இருந்த குழப்பம் நீங்கித் தெளிவான ஓர் எழுத்துநடைக்கு வந்திருக்கிறார் சரவணன் சந்திரன். கதை இன்னவென்று அறியப்படாமலே ஒரு நாவலைப் படிப்பது சுவாரஸ்யமான ஒன்றுதான். ஆனால் ஒருவனின் வாழ்வில் இடறும் மனிதர்களைப் பற்றிய அனுபவங்களை அடுத்து அடுத்து என்று அடுக்கிக்கொண்டே போவது நம் மூளைக்குத் தரும் பெரும் அயற்சி. டெய்ஸிக்கும் தனக்கும் இடையில் இருப்பது நட்பா, காதலா என்ற குழப்பத்தில் நாயகன் ஆழ்ந்துபோகும் இடங்கள் இயக்குநர் விக்ரமனின் ஹம்மிங். நாவலின் 75 -வது பக்கத்தில்தான் அஜ்வாவின் அறிமுகம் நடக்கிறது. அதுவரையில்( கிட்டத்தட்ட பாதி நாவல்) ஏகப்பட்ட கதாபாத்திரங்கள், ஏகப்பட்ட வாழ்வியல் முறையோடு அறிமுகமாகிக் கொண்டேயிருக்கிறார்கள். ஒருவரின் உருவ அமைப்பை வைத்து அறிமுகப்படுத்தும் எழுத்துக்கு மத்தியில் ஒருவரின் குணாதிசயத்தை வைத்து அறிமுகப்படுத்தும் உத்தி புதிதுதான். ஆனால் எத்தனைப் பேரைத்தான் ஞாபகம் வைத்துக்கொள்வது? இவர்கள் கதைக்கு உரிய மனிதர்கள்தானா என்ற சந்தேகத்துடனே பயணம் செய்வதில் களைக்கிறது மனம். சம்பத் நாவலில் முக்கியமான கதாபாத்திரம். சரி, அதற்காக சம்பத்தின் அம்மா கதையெல்லாம் சொல்ல வேண்டுமா என்ன? கதை நாயகனுக்கு மூன்று அத்தைகள். சரி. காது கேட்காமல் போகும் சின்ன அத்தைக்கும் ஒரு வாழ்வினை வைத்து அவரையும் நம் நினைவில் நிறுத்த முயல்வது எதற்கு? ஒருவேளை கதைசொல்லியே தனது வாக்குமூலமாக 111- ம் பக்கத்தில் முன்வைக்கும்...' ஒரு குடும்பத்துக் கதையில் இத்தனை திருப்பங்களாஎன்று கேட்டீர்களானால், உண்மை என்று சொல்வதைத் தவிர வேறெந்த வார்த்தையும் என் கைவசம் இல்லை. நான் கேள்விப்பட்டதையாவது கதை என்று நம்பலாம். ஆனால் கண்ணால் பார்த்ததை என்னவென்று சொல்ல?' - இது நாவல் வாசிக்கும் ஒவ்வொரு வாசகனுக்குமானது என்று எடுத்துக்கொள்ளலாமா சரவணன்?

நாவல் முடியப்போகும் நேரத்தில் திடீரென்று தோட்டக்கலையைப் பற்றிப் பேசுகிறது. சொட்டுநீர்ப் பாசனம் மூலமே வேர்பிடிக்கும் அஜ்வாவின் அந்த எபிசோட் நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்குமான போராட்டம். அதை இத்தனை வறட்சியாய் புள்ளி விவரங்களோடு கடந்திருக்க வேண்டுமா? இந்த உலகத்தின் பயம், அவநம்பிக்கை, துரோகம், குற்ற உணர்வில் உழலும் மனம் என அனைத்தையும் டெய்ஸியின் உண்மையான காதலே மீட்டெடுத்திருக்குமே... ஒற்றை பேரிச்சையில் முடிந்திருக்கும் ஒரு அவல வாழ்வின் சாபத்துக்கு ஏழு பேரிச்சைகள் தேவையா?கையில் சங்கு முத்திரையுடன் இருக்கும் நாயகன் போதை உலகத்துக்குள் கிடைக்கும் டெய்ஸியின் காதல் மூலமாகவே தன்னை மீட்டெடுத்திருக்கலாம். அப்படித்தான் நிகழ்கிறது. அதற்குள்தான் மற்றைய போராட்டங்கள்.  தனக்கான எழுத்துநடை இதுதான் என்பதில் உறுதியாயிருக்கிறார் சரவணன் சந்திரன். ஆனால் எடுத்துக்கொண்ட ஆழமான கருப்பொருளுக்கு ஏற்ப மொழி நடையில் கோட்டை விடுகிறார். கிண்டர் கார்டன் குழந்தைகளுக்கும் புரியும்படியான ஒற்றை ஒற்றை வரியில் நாவல் கடக்கிறது. போதை மையத்தின் மனிதர்களை வைத்து பிரமாதமான எழுத்து விளையாட்டு விளையாடியிருக்கலாமே சரவணன். தவற விட்டுவிட்டீர்கள். யானைப்பசிக்கு பேரிச்சை போதாது.

-கணேசகுமாரன்.
     
              







     
              

Monday 23 January 2017

தீச்சட்டிப் புகையில் நெளியும் உன்மத்த நடனம்

அழகான ஆறு என்றான் சித்தார்த்தன்
- காலத்தச்சனின் கவிதைத் தொகுப்பை முன் வைத்து...

தீச்சட்டிப் புகையில் நெளியும் உன்மத்த நடனம்************************************************************


விரைந்து செல்லும் ஆம்புலன்ஸின் சைரன் ஒலியை ரசித்தபடியே அதனுள் விரைத்துக் கிடக்கும் பிணமா நீங்கள்? இனி காலத்தச்சன் கவிதைகளை வெகு அழகாய் உள் வாங்கிக் கொள்ளலாம். ஒரு கவிதையை கவிதையாய் மட்டுமே அணுக காலத்தச்சன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. 
எளிய
எள்ளுப்பூக்கள்
எளிய 
என்னை
இப்படி
எளிதாகக்
கைவிட்டிருக்க வேண்டியதில்லை. என்ற அவரின் எளிய ஒரு கவிதையைப் போல எல்லா அனுபவமும் எளிய வார்த்தைகளால், எளிய வாதைகளால், எளிய சிலுவைகளால் நம்முள் சுமத்தப்படுகிறது.

இப்படியெல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும்தானே என்று நாம் எண்ணுபவற்றையெல்லாம் கவிதையாக்குகிறார் காலத்தச்சன். ஆனால் அவரின் பலம் அதுவல்ல. அப்படியில்லையே என்று முடிப்பதில் இருக்கிறது. 
 
உலகில் எல்லாவற்றுக்கும் ஓர் உச்சம் இருக்கிறது. அந்த உச்சம் எப்படி நிகழ வேண்டும் என்று காலத்தச்சன் எழுதுகிறார்.  
பேரழுகை முட்ட
பெருங்கருணை 
வெளிச்சத்தில்
பிரியமானதொரு
பிணத்தை
நீராட்டுவது போல. இப்படித்தான் எந்த ஓர் உச்சமும் நிகழ வேண்டும். வேறு எப்படி நிகழ்ந்தால் அது உச்சமாகும்? பொதுவாக நாம் அன்பால் ஆளப்பட்டவர்கள். அன்பை ஆள்பவர்கள். அன்பால் சூழப்பட்டவர்கள். சூழ்ந்துள்ள அன்பின் நிறம் சிலருக்கு மட்டும் கறுப்பாகத்தான் தெரியும். கறுப்பு வண்ணமில்லையென்று யாராலும் சொல்லிவிட முடியுமா என்ன? காலத்தச்சனின் கவிதைகளையும்.

மதுமிதாவிடம் காலத்தச்சன் பேசும் அத்தனையும் பயம் கொள்ள வைக்கிறது. பறவைகளின் சச்சரவில்லாத இடத்தைத் தீர்மானிக்கிறார். நாம் அப்படி ஓர் இடமே இருக்கக் கூடாதென்று பிரார்த்தனை செய்யத் துவங்குகிறோம். காலத்தச்சனுக்கு ஓர் ஆசை இருக்கிறது. அந்த ஆசை நிறைவேற இந்த உலகின் எந்த விதமான கொடூரத்தையும் நிகழ்த்தத் துணிகிறார். சின்ன உதவிகள், சின்ன சந்தோசங்கள், உச்ச இன்பம், அடையாளமற்றுப் போய், அசிங்கமாகி, குற்றம் புரிந்து, மீண்டு, சாத்தானாகி, கடவுளாகி இன்னபிற அனைத்தும் செய்ய அவர் தயார்; அவரின் அந்த ஆசை நிறைவேற. 
தங்களின்
இறுதிப்பயணத்தில்
உலகே பார்க்க
நான் மட்டுமே
ஆம்
நான் மட்டுமே
சா
நடனமாட வேணும். இதுதான் அவரின் ஆசை. கவிதை முடிந்ததும் இது என் ஆசையாகவும் உங்கள் ஆசையாகவும் நம் ஆசையாகவும் விரிகிறது. காலத்தச்சனின் சாகா ஆசையது. நான் இறுகப் பற்றிக்கொள்கிறேன் அவரின்  கால்களை.

மிக மெல்லிய காதலை பெரிய கடலில் தள்ளிவிட்டு அத்தனை உப்பு நீரையும் வெளியே தெறிக்கவிடும் காலத்தச்சனுக்குத் தெரிந்திருக்கிறது ஒரு கண்ணீர்த் துளியின் உண்மை ஆயுள். நூலேணியில் ஊர்ந்து செல்லும் கருணை, சூரிய உதயத்துக்கு முன் உப்பரிகைக் கண்ணீரைத் துடைத்துவிட்டால் எத்தனை நன்றாயிருக்கும். ஒரு நாயின் கனவில் கற்கள் அற்ற பிரதேசமும் கைகள் அற்ற கடவுளையும் வரம் கோரும் காலத்தச்சனின் மனம் நாம் நினைப்பது போல் சிக்கலானதில்லை. 

ஒவ்வொரு முறையும் அவர் அலாரம் வைக்கிறார். மிகச் சரியான நேரத்துக்குதான் வைக்கிறார். அது என்னமோ திடீரென அடித்துத் தொலைக்கிறது. திடீர் மணிக்கு அலாரம் வைக்காத ஒருவன் திடீர் மணிக்கு அலாரம் அடிக்காமல் இருக்க எத்தனை மணிக்கு அலாரம் வைக்க வேண்டும் என்கிறார். கவிஞனின் கேள்வியல்லவா? பதில் சொல்லக் கடவுளாலும் முடியாதுதான். 

முன்பு ஒருமுறை நடிகை சுஹாசினியைப் பற்றி நான் ஒரு கவிதை எழுதியிருந்தேன். அது சரிவர முடிக்கப்படாமலே போயிற்று. மணிரதனம் அதற்கு ஒருபோதும் காரணமல்ல. ஆனால் காலத்தசசன் எழுதியிருக்கிறார். 'சுஹாசினி புன்னகை' என்ற தலைப்பிட்ட அந்தக் கவிதையில் சாமர்த்தியமாக தன் மதுமிதாவை உள் நுழைத்து விளையாட்டு காட்டியிருக்கிறார். விளையாட்டு வினையானது போல் கவிதையின் முடிவு. இவ்வுலகின் அத்தனை பாதிப்புகளையும் கண்டும் காணாமல் செல்லும் நீங்கள் தவணை முறையில் கடவுளாகிக் கொண்டிருக்கிறீர்கள் என்கிறது ஒரு கவிதை. ஏனோ இந்த வாழ்வு காலத்தச்சனுக்கு வெறுப்பூட்டுகிறது. இந்தக் காதல் தன் போதாமையில் அலைகிறது. ஆறுதல் தேடி வான் பார்த்துக் கிடக்கும் நிலாக் கண்களை உடைய பிணமாய் உணர்கிறார். காதல் பேசும் கவிதைகள் இடையே செவிட்டரசன் கவிதை போன்ற நையாண்டி அரசியலையும் ஆதங்கமாய் முன் வைக்கிறார். இரண்டு பத்தி. அதில் இரண்டு வரிகள். அவைதான் மொத்தக் கவிதையுமே. எல்லாவற்றையும் சொல்ல்லிப் போகின்றன அந்த இரண்டு வரிகள். நாம்தான் அடுத்த பக்கத்தைப் புரட்டும் சக்தியிழந்து இரண்டு வரிகளுக்குள் சிக்கிக் கொள்கிறோம். தூக்கத்தில் நடக்கும் ஒருவன் மொட்டை மாடி உச்சி சுவரிலிருந்து கீழே விழுகிறான். உங்களுக்குதான் மொட்டிமாடி கைப்பிடிச் சுவர். அவனுக்கு இல்லாமல் போன தன் காதலியின் வீடு அது. அவள் அழைக்கிறாள். அவன் சென்றுவிட்டான் நீலப் பூச்செண்டுடன். கவிதைகளில் நாம் இதுநாள்வரை பூட்டி வைத்திருக்கிற படிமங்கள் எல்லாம் காலத்தச்சனிடம் வேறு விதமாய் உருக்கொள்கின்றன. 

மாலை 5: 30 லிருந்து இரவு 11 மணிக்குள், பத்து என்கிற பத்மநாபனின் வாழ்வு சொல்லி முடிக்கப்படுகிறது. தொகுப்பை மூடிவைத்த பிறகும் திறந்து கொண்டேயிருக்கிறார்கள் நம் நாட்களின் தாள்களில் இடறிக் கிழிந்துபோன எண்ணற்ற பதமநாபன்கள். 

5:30 PM / 11:00 PM
*********************
பத்து என்கிற பத்மநாபனுடன்
கழித்த
நேற்றைய மாலை
மறக்கவே முடியாது
சிகரெட் பிடித்தான்
கிடார் இசைத்தான்
பைக்-கை 
சர்வீஸ் விடணுமென்றான்
அம்சவேணியை
மன்னித்து விட்டேன் என்றான்
எப்பப் பாத்தாலும்
பீய மிதிச்ச மாதிரியே
மூஞ்ச வச்சிக்கிற
சந்தோசமா இருடா மாப்ள என்றான்
முதுகிழவியை
சாலையைக் கடக்க உதவிவிட்டு
LIFE IS BEAUTIFUL என்றான்
அமர்ந்திருந்த காம்பவுண்ட் சுவரிலிருந்து உற்சாகமாய்க் குதித்து
என்னமோ தெரிலடா
எல்லாரையும் பிடிக்குது என்றான்
நான்தான் புரிந்து கொள்ளவில்லை
நேற்றிரவே
பத்து
தூக்கிட்டுக்கொண்டான்.
.
இறுதியாக பெரும் அனுபவங்கள் இடையே எவ்விதச் சலனத்தையும் ஏற்படுத்தாமல் கடக்கின்றன சில கவிதைகள். கைவசம் அல்லது கண்ணீர் வசம் இந்த உலகமே காலத்தச்சனின் காலடியில் கிடக்க  சில வகைமுறை கவிதைகளில் சிக்கி சலிப்பூட்டுகிறார். 

இத்தொகுப்பின் தலைப்பில் தொடங்கும் ஒரு கவிதை இருக்கிறது. அதுவும் இரண்டே வரிகள்தான். முதல் வரி இத்தொகுப்பின் தலைப்பு. இரண்டாம் வரி இத்தொகுப்புக்கான முழு விமர்சனத்துக்கான ஒற்றை.

- கணேசகுமாரன்.
     

”பைத்திய ருசி” - சிறுகதைகள் குறித்து....பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

கணேசகுமாரனின் “பைத்திய ருசி” சிறுகதை தொகுப்பில் 9ம் பக்கத்தில் இருந்து 94ம் பக்கம் வரையிலும் உலவும் மனிதர்கள் இந்த உலகால் ரோகத்தின் காரணமாக நிராகரிக்கப்பட்டவர்கள். அழகின் மினுமினுப்பை இவ்வுலகு அசிங்கத்தால் குறைக்கிறது. நிராகரிக்கப்படும் அசிங்கம் அதன் இருண்மையை பரப்பி ஒளியின் மீது கருமையைப் பூசுகிறது. இந்தத் தொகுப்பின் கதைகளின் வழியாக சொல்லபட்டவை(வர்கள்) அந்த இருண்மையின் குரல்கள். மீட்சியின்றி அதனுள் சிக்குண்டுவிட்ட மனிதர்களின் விசும்பல்களும், சமூகத்திற்கு மிக வலிமையானதொரு அறிவிப்பாகவே நிகழும் தற்கொலைகளும் நிரம்பியது.
உடல் மற்றும் மனதின் ரோகங்களால் நேரும் சிக்கல்களை, ஏமாற்றங்களை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் உடலின் ரோகத்திற்கு தீர்வாக தற்கொலையையும், மனதின் ரோகத்திற்கு பைத்தியத்தையும் அடைகின்றனர். மனதின் ரோகத்தை உடல் தாங்கிக் கொள்ளும் அளவிற்கு உடலின் வலிகளை, அழகின்மையை மனம் தாங்கிக் கொள்வதில்லை. “காமத்தின் நிறம் வெள்ளையில்” லுயூகோடெர்மா பரவும் தயாளனை பவானி விலக்க இறுதியில் தற்கொலை செய்து கொள்ளும் அவனுக்கு இணையாக தன் கணவனது ஓரினச் சேர்க்கையின் காரணமாக (அதனால்தான் என அறியாமலேயே) விலக்கப்படும் பானுமதியும் இந்த “விலக்கப்படுவதால்” என்பதால் மாத்திரமே மரணித்திடம் ஆறுதல் தேடி புகுந்தவர்கள். இருவருக்கும் வாழ்வில் இதைத்தவிர ஏதொரு சிக்கலும் இருப்பதாக கதையில் தெரிவதில்லை. அவர்களால் தங்களுக்கே உரிமையான ஓர் உடல் அவர்களின் உடலுக்குச் செய்யும் அநீதியை தாங்க முடியாமல் மரணிக்கின்றனர்.
“ஏவல்”, “சிக்னல்”, “பைத்திய ருசி” ஆகிய கதைகள் மூன்றும் மனதின் ரோகத்தை பேசுபவை. “நான் பேசுவதை யாராவது கேட்டிருந்தா இந்த நிலைமை வந்திருக்காது” என “ஏவல்” கதையில் வரும் ஒரு வாக்கியத்திற்கு பதிலாக “சிறிதும் ஓய்வின்றி ஒரு துரோகத்தினை உலகுக்கு அறிவித்துக் கொண்டிருக்கும் உதடுகளை சந்திக்கும் போதெல்லாம் உங்கள் செவி கேட்காமல் போகிறது” எனும் “பைத்திய ருசி”யின் வாக்கியம் அமைகிறது (இதன் context வேறாக இருப்பினும் பொருத்திப் பார்க்கலாம்).
எப்போதுமே நாம் கேட்க விரும்புகின்றவை அல்லாமல் வேறெவற்றையும் கேட்க மறுக்கிறோம். அதைப் போலவே காதுள்ளவர்கள் எல்லோருமே கேட்கக் கூடியவர்களும் அல்ல.
ஓரினச் சேர்க்கை, லுயூகோடெர்மா, வலிப்பு, “டிரின்னிடஸ்”, “பிரீஃப் சைக்கோசிஸ், ஏவல், புற்றுநோய் என கதைகளில் விரியும் நோய்மைக்கு பலியாகும் உடல்களோடு, அணு உலைகள், வேதி ஆலைகள், போர்களால் சிதைக்கப்படும் உடல்கள் இணைகின்றன.
பீத்தோவனின் ”இசை” அவனது செவிப்புலன் திறன் இழந்த பிறகும் பொங்கிப் பெருகிய அவனது வெள்ளம். இதை ஒரு சிறுகதை என்பதை விட சிறப்பாக சொல்லப்பட்டதொரு குறு வாழ்க்கை வரலாறு என சொல்லலாம். பீத்தோவனது கட்டுப்பாடு மிக்க தந்தையின் -, மொசார்ட் எனும் மேதையைக் கடந்து செல்லும் பெருவிருப்போடு - பிரம்படிகள் காலில் விழ பியானோக்களில் விரல்கள் மிதந்த சிறுவனோடு எதை துணை நின்றதோ அதுவே அவனது கேட்கும் திறன் அவனை விட்டு நீங்கிய பிறகும் துணையாக இருந்தது. தயாளனுக்கும், பானுமதிக்கும், ”அழுகிய புத்தனிடம் சொன்ன” கதைகளில் வரும் பெண்களுக்கும் ஒரு வயலின் துணை இல்லாமல் போனதே தற்கொலைக்குக் காரணம்.
ஒரு பிரிவினால் உச்சமுடிவுகளுக்குப் போகாத ரகுநந்தனும், புவனாவும் தற்கொலை செய்யாமல், மனம் குழம்பாமல் போன அளவிற்கு மற்றவர்கள் வண்ணத்துப்பூச்சியை அறுக்கப் பழகியவர்கள் அல்ல.
“அக்காக்களின் கதையும்”, ”மார்ச் 13”, ”தேவதைக்கு வாழ்க்கைப்பட்டவன்”, ”தந்தூரி கசானா 400 ரூபாய்” ஆகிய கதைகள் அவற்றின் வடிவத்தினாலோ, உள்ளடக்கத்தினாலோ வழமையானவை என்பதால் கவனத்தை ஈர்க்கவில்லை.
இக்கதைகள் சிறுகதைகள் எனும் வடிவத்தின் இலக்கணங்களை கடந்தவை. பெரும்பாலான கதைகள் Biographical தன்மையோடு இருக்கின்றன. ஒரு பெரிய கேன்வாஸில் சம்பவங்களின் துணையோடு சொல்ல வேண்டியவற்றை சில பக்கங்களில் சொல்ல முனைந்தவை இக்கதைகள். அதனாலேயே சிறுகதை வடிவத்தினுள் நில்லாமல் வெளியே நிற்கின்றன. இக்கதைகளின் இலக்கியத் தகுதி குறித்து இப்போது பேச முடியாது.
இத்தொகுப்பில் எனக்குப் பிடித்த கதையாக இருப்பது “சிக்னல்”. சமிக்ஞையைக் கடக்கும் கோழிதான் மனம். தவறான ஒரு முன்னகர்வில் விபத்திற்குள்ளாகி இயல்பு நிலையைக் கடந்து பைத்தியத்திற்குள் நுழைந்து திரும்ப வராது.
ஒரு தந்தை அவனது குழந்தையை கையில் வாங்கிய மறுகணம் அக்குழந்தையின் முதுகுப்பக்கம் முளைத்திருந்த பெரிய கட்டியைத் தொட்டதுமே “ஊறிய தந்தைமையின் அமுதம் சட்டென உள் சுருங்கி அருவருப்படைந்து” (பக். 39) பின்னகர்வதே இவ்வுலகின் இயல்பென நாம் அறிந்தவர்கள்.
”சாமிகளே” இல்லாத உலகின் (ஏவல்) சிக்கல்களுக்கு தீர்வாக நவீன மருத்துவத்தின் மாத்திரைகளும், தற்கொலைகளும் அமைகின்றன. நிறுவனங்கள், அறிவியல், தொழில்நுட்பம், போர் இயந்திரங்கள் அனைத்தும் இவ்வுலகை ஒரு பைத்திய விடுதியாக மாற்றுவதை எழுதிய கணேசகுமாரன் வடிவத்தின் மீதும் கவனம் செலுத்தினால் இன்னும் சிறப்பான கதைகள் எழுதிவிட முடியும்.
எல்லாவற்றிற்கும் மேலாக இலக்கிய வாசகன் காண விரும்புவது அசிங்கமானவற்றிடம் இருந்து கூட பிறக்கும் அழகே.

Tuesday 17 January 2017

யாரையும் முழுமையாய் நேசிக்கவும் முடியாமல்
யாரையும் முழுமையாய் வெறுக்கவும் முடியாமல்
ஏன் இந்தக் கயமை வாழ்வு?
// ................