Tuesday 18 September 2018

துர்சலை

துர்சலை









இரவுக் காற்றுக்கென்று தனி இசையுண்டு. தடாக நீரின் சிகை கலைத்து விளையாடிக்கொண்டிருந்தது விளையாட்டுப் பிள்ளையின் குதூகலத்துடன். காற்றின் மெல்லிய வருடலில் நீரில் மிதந்துகொண்டிருந்த முழு மதி நெளிந்து நெளிந்து தடாகப் படியைத் தொட்டு மீண்டுகொண்டிருந்தது. 

'' உங்கள் கண்களில் தெரியும் சோர்வினைப் பார்த்தால் இரவுறக்கம் இன்று தள்ளிப்போகும்போல் தெரிகிறது துர்சலை'' என்றாள் மாதங்கி. துர்சலை வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்திருந்தாள். ஒரு முழு நீள துகில். அவ்வளவுதான். அதைத்தான் உடம் முழுவதும் சுற்றியிருந்தாள். தான் அமர்ந்திருந்த இடம் வரை தன்னிருப்பை படரவிட்டிருந்த நிலவொளியைத் தன் வெண் சங்குநிற பாதத்தால் நிரடியபடி சொன்னாள். '' ஆமாம். இன்று நான் இரவு நீராடல்கூடப் புரியப் போவதில்லை'' குரலில் கிளர்ந்த அலட்சியப் பெருமூச்சுக்கு தடாகத்தினை ஒட்டி வளர்ந்திருந்த மரமொன்றிலிருந்து மலர் உதிர்ந்தது. உடன் அப்பிரதேசமெங்கும் சுவாசம் நிறைக்கும் பரிமளமொன்று எழுந்து அலைந்தது. இடைப்பகுதியை இறுக்கியிருந்த வெண்ணிற ஆடையை சற்றே நெகிழ்த்தினாள் துர்சலை. 

'' இதென்ன அரசகுலத்தில் இல்லாத புது வழக்கம். இளவரசி இப்படி நடந்துகொண்டால் குழைத்த சந்தனமும் தயாரான அகிற்பொடியும் தங்கள் ஜீவனை மறந்தல்லவா போகும்?'' என்றாள் மாதங்கி. அப்போது அவளின் வலதுகரம் துர்சலையின் தோள் தொட்டபடியிருந்தது. '' துரதிருஷ்டமான விதி போலும். சந்தனத்துக்கும் அகிற்பொடிக்கும் கவலைப்படுபவர்கள் அதன் ஆயுளை அனுபவிப்பர்களின் மனநிலையை ஏனோ புரிந்துகொள்வதில்லை'' துர்சலையின் இமைக்கா விழிகள் நனைந்த முழு நிலவை உற்று நோக்கிக்கொண்டிருந்தன. '' என்ன துர்சலை. சில நாட்களாகப் புதிரின் வழியே நடமாடிக்கொண்டிருக்கிறீர்கள்?'' ஆச்சர்யமானாலும் வினாவில் துயரம் ஒளிந்திருந்தது. '' என் அந்தரங்க வடு அறிந்தவள் நீதானே மாதங்கி. உனக்குமா எனது வாதை புரியவில்லை. அஸ்தினாபுரமோ, காண்டவப் பிரஸ்தமோ மாறினாலும் மாறாதது இந்தச் சாபம்தானே...''குழப்பமாய் புருவம் நெறித்த மாதங்கியின் நுதலிலிருந்து காய்ந்த சந்தனம் உதிர்ந்தது. '' உங்களுக்கென்ன வருத்தம். நூறு சகோதரர்களுக்கும் ஒரே சகோதரி என்ற கொடுப்பினை யாருக்கு வாய்க்கும் துர்சலை. இது முன்ஜென்மப் புண்ணியம்'' அவசரமாக மறுத்தாள். '' இல்லை மாதங்கி. இது இப்பிறவிச் சாபம். நூறு பேர்களுக்குப் பிறகான மிச்சம்தானே நான். என் மூத்த குடிமகள் வானதி வழி வந்த சாபம்தான் என் நாழிகைகளில் எந்தவோர் ஆடவனும் இடம் பெறாமல் போனது போலும்''துர்சலையிடமிருந்து பெருமூச்சு வெளிப்பட்டு அணிந்திருந்த ஆடையைக் கருக்கியது. 

'' புதிராக வாழ்கிறேன் மாதங்கி. கண்களை மூடினால் ஏதாவது ஒரு குறுநில மன்னனை வெல்ல களத்தில் வாள் பிடித்து நிற்பதுபோன்ற காட்சிதான் வருகிறது. இரவுறக்கத்தில் வரும் கனவுகள் உன்னிடம்கூட சொல்ல முடியாதவை மாதங்கி'' கண்ணீர் திரண்டு வழிந்து கனவைப் பேசியது. '' அது ஓர் அழகிய நந்தவனம். மலர்களின் அளவோ அங்கிருக்கும் மலர்ச்செடிகளையே மறைத்தபடி மிகப் பெரியதாகவும் நுரையீரல் ஆழம் சென்று படியும் பரிமளத்துடனும் வீற்றிருக்கிறது. இப்போதுகூட என் நாசியில் உறங்கிக்கொண்டிருக்கிறது அம்மலரின் நறுமணம். மெல்லிய துகில் அணிந்து நந்தவனத்தின் ஊடே நடந்துகொண்டிருக்கிறேன். ஒரு மலருக்குப் பின்னால் ஓர் ஆடவன் மறைவது கண்களுக்குத் தெரிகிறது. எனக்குள் ஓர் உற்சாகம். அவனைத் தேடி அலைகிறேன். மிக அகலமான தோள்கள், பின்புறத்திலிருந்து பார்க்கும்போதே திரண்ட அவன் புஜங்களும் இறுகிய மார்பின் ஓரங்களும் தெரிந்து தெரிந்து மறைகின்றன. பரந்த முதுகைத் தழுவியபடி நீண்ட கறுஞ்சிகை. காற்றில் ஆட ஆட மலரின் மணம் என்னை அவனை நோக்கித் தள்ளுகிறது. வானமே புதிதாய் ஒரு வண்ணத்தில் கிடந்ததுபோல் ஒரு நினைவு. என்ன ஓர் ஆச்சர்யம். அவனை நான் நெருங்க நெருங்க அவன் விட்டு விலகி தூரம் செல்கிறான். என் பார்வையில் படுவதெல்லாம் அவன் சிகையும் அது அலையாடும் விதமும். நான் அவனை நோக்கி ஓடத்துவங்குகிறேன். என்னுடம்பில் வியர்வை அரும்பத் தொடங்குகிறது. காற்ரில் மிதந்த மணத்தை மாற்றுகிறது என் வியர்வையிலிருந்து வெளிப்படும் கற்பூரம் கரைந்த காமத்தின் மணம். அத்தனை வெப்பமாய் நந்தவனத்தையே எரிக்கும் மணம் அது. ஒரு நிலையில் கண்ணீர் திரள அவனை நோக்கி விரைகிறேன். கரங்களில் அவன் சருமத்தினை உணரும் வேளை என் விரல் வலி காமம் வழிவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.  அவனைத் தொட்டுத் தழுவி என்னிதழ் பதிக்கிறேன் அவன் பின்னங்கழுத்தில். முகம் காணும் ஆவலில் என்னிதழ்கள் துடிக்க அவனை என் பக்கம் வளைக்கிறேன். அந்த முகம்...அந்த முகம்...'' வழியும் கண்ணீருடன் துர்சலை போராடிக்கொண்டிருந்தாள். நெற்றியில் அரும்பி துளிர்த்த அவளின் வியர்வைத் துளிகளை தன் ஆடையால் ஒற்றித் துடைத்தவாறு மாதங்கி '' துர்சலை...துர்சலை...'' என்று தோள் அசைத்தாள். இமைகளைத் திறந்த துர்சலை '' அது என் சகோதரன் மகாபாகு '' என்றாள். '' எங்கு நோக்கினும் ஆடவர்கள். ஆனால், அத்தனை பேரும் என் சகோதரர்கள் என்றால் எனக்கான ஆடவனை எப்படி நான் கற்பனை கொள்வது?'' துர்சலையின் சொற்கள் வறண்டு வெளிப்பட்டன. '' சற்றே எழுந்து வாருங்கள். தடாகம் சுற்றி வரலாம்'' மாதங்கியின் கைபிடித்து எழுந்த துர்சலை இடையிலிருந்து தளர்த்தியிருந்த ஆடையை சிறு முடிச்சிட்டு இறுக்கினாள். நடந்தவாறு பேசினாள். '' ஒவ்வொரு சுயம்வரத்திலும் இதுதான் நடக்கிறது. எல்லா ஆண்களும் இப்படி என் சகோதரர்களில் எவரையாவது நினைவில் கொண்டுவந்தால் எனக்கென்று எவரை நான் உணர்வது. ஆழி நடுவில் நெடுந்தாகத்துடன் கடற்பயணம் மேற்கொள்பளின் நிலைமையடி எனக்கு.'' தடாகம் அருகில் வந்ததும் நின்று நிமிர்ந்து வான் நோக்கினாள். முழு நிலவு நாள். கூடுதலாய் வெண்ணிற ஒளியில் ஆடையொன்றை போர்த்திக் கிடந்ததுபோல் ஆகாயம். '' துளி முகிலற்ற ஆகாயம் விண்மீன்கள் கொண்டு சமநிலைப்படுத்திக்கொள்கிறது. அப்படி ஒரு வாய்ப்பும் இல்லா வெற்று ஆகாயம் நான். வானதி, அம்பை வழியின் சாபம்தானே என் தந்தையின் பிறப்பு. ஈருடல்கள் ஒற்றைக் காமத்தில் கூடிக் களித்து அதன்வழி பிறப்பதுதானே இன்பமும் சிசுவும். இங்கு எந்தப் பெண்ணிற்கு அது சீராக வாய்த்தது. மனமுவந்து தன்னுடல் ஈந்திருக்கும்  கூடலில் கண் மூடியிருக்க மாட்டாள் என் முது கிழவி. கர்ப்பம் கண் மூட என் தந்தைக்குக் காட்சிகள் மூடப்பட்டன. நியாயமாய் அவள் தன் சுவாசத்தைத்தானே மூடியிருக்க வேண்டும். அப்போதே எல்லாம் மாறிவிட்டது. அது நூற்றுஒன்றாக என் சிரசில் படிய வேண்டுமென்பது விதி'' மேல் வரிசைப் பற்களால் உதடு கடித்து அழுகையை அடக்கினாள் துர்சலை. மாதங்கியின் வலதுகரம் துர்சலையின் இடது உள்ளங்கையை இறுகப் பிடித்தது. '' என் உலகம் ஆண்கள் நிறைந்ததாயிருக்கிறது. ஆனால், நான் எந்த ஆணுடனும் இல்லை. என் கனவில் நான் மட்டுமே இருக்கிறேன். முத்தம் என்றால் எப்படியிருக்குமென்று எம் குலப் பெண்கள் எவருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை மாதங்கி. நான் மட்டும் விதிவிலக்கா?'' பேசிக்கொண்டே தான் அணிந்திருந்த ஆடையின் இடை முடிச்சை நீக்கினாள். நெகிழ்ந்த ஆடை குவியலாக அவள் காலடியில் விழுந்தது. துர்சலையின் மார்புகளின் திரட்சியினைக் கவனித்தவாறே மாதங்கி தன் கரம் நீட்ட அதைப் பற்றியபடி தடாகப் படியில் கால் வைத்தாள் துர்சலை. '' முன்னிரவு நாழிகை கடந்துவிட்டது துர்சலை'' என்றாள் மாதங்கி. '' என்னுடலுக்கு இந்நீர்தான் இப்போதைக்கான ஆண் மாதங்கி. எத்தனை சுதந்திரமாய் என் வெப்பம் தீண்டுகிறது. நீருக்குள்ளிருக்கும் கணம்தான் நான் முழுமையான பெண்ணாக என்னை உணர்கிறேன். நீ சந்தனம் கொண்டுவா. நான் என்னுடலுடன் பேசிவிட்டு வருகிறேன்'' அடுத்த படியில் கால் வைத்தவள் நிர்வாணமாய் நீருக்குள் மூழ்கினாள். நிலா உடைந்து உடைந்து ஒன்று சேர்ந்துகொண்டிருந்தது.
.      

Thursday 6 September 2018

மேன்சனில் முனியாண்டி

மேன்சனில் முனியாண்டி


மேன்சன் நெருங்குவதை உணர்ந்ததும் முனியாண்டியின் கை அனிச்சையாய் அவன் பேன்ட் பாக்கெட்டுக்குச் சென்று அறை சாவி இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக்கொண்டது. இந்த மேன்சனுக்கு வந்து ஒரு வாரம்தான் ஆகிறது. தண்டையார்பேட்டையில் வேலை. அறை எடுத்துதான் தங்க வேண்டுமென்று வந்தபோது அருகில்தான் மேன்சன்களில் ரூம் கேட்டான். சொல்லி வைத்தாற்போல் அத்தனை மேன்சன்களிலும் ' ரூம் இப்போ காலியில்லை' என்பதே பதிலாய் வந்தது. வேளச்சேரியில் இருக்கும் சம்பத் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிபவன். முனியாண்டியின் ஊர்க்காரன். மேலும் தூரத்துச் சொந்தம் வேறு. திருவாரூருக்கு அருகில் மூலங்குடிதான் முனியாண்டி பிறந்த ஊர். மூலங்குடி என்ற ஊர் இருப்பது மூலங்குடியில் இருப்பவர்களுக்கே பெரும்பாலும் தெரியாது, காரணம், சிறிய வியாதி என்றால் அருகில் இருக்கும் குடவாசலுக்கும், பெரிய நோய் என்றால் சற்றுத் தொலைவில் இருக்கும் கும்பகோணத்துக்கும் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஒரு பேச்சுக்கு என்றாலும் குடவாசலையோ கும்பகோணத்தையோ இழுக்காமல் மூலங்குடியைக் காட்ட முடியாது என்பதில் தெள்ளத்தெளிவாயிருந்தார்கள் மூலங்குடிக்காரர்கள். குடவாசலில் ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்த்து வந்தான் முனியாண்டி. அதிக வருமானம் ஈட்டும் இடமாகத் தெரிந்தது சென்னைதான். அதற்கு சம்பத்தும் ஒரு காரணம். ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும் சென்னையின் அருமை பெருமைகளை சம்பத் விளக்கிய விதமும், தான் பார்க்கும் வேலை குறித்த பெருமிதமும் முனியாண்டிக்கு சென்னை குறித்த கனவு பூமி பிம்பத்தை ஊதிப் பெரிதாக்கின. ஒரு நல்ல நாள் பார்த்து சென்னைக்குப் பஸ்ஸேறினான். 

வேளச்சேரியில் ஏகப்பட்ட குடியிருப்புகளின் நடுவில் காணாமல் போயிருந்தது சம்பத்தின் கூடாரம். அந்தக் கூடாரத்துக்குள் முனியாண்டியால் ஒருநாள்கூட தங்க முடியவில்லை. இரைச்சல் இரைச்சல் பேரிரைச்சல். அடுத்த அதிர்ச்சி சம்பத் பார்க்கும் வேலை. தனியார் தொலைக்காட்சியின் அட்மின் போலவே தன்னைக் காட்சிப்படுத்திக்கொண்டிருந்த சம்பத்தின் வேலை மிகச் சிறிதினும் சிறியதாய் இருந்தது. சம்பத்துக்கே அவ்வளவுதான் இடம் என்னும்போது தனக்கான கனவை அங்கு முனியாண்டியால் தீர்மானிக்க முடியவில்லை. வேறு இடத்தில் இருவரும் சேர்ந்து வேலை தேட முயன்றதில் தண்டையார்பேட்டையில் ஒரு ப்ரைவேட் கம்பெனியில் சேல்ஸ்மேன் உத்தியோகம் கிடைத்தது. அந்த வேலை கிடைக்க ஒரே காரணம் முனியாண்டியின் சாதி. ஒரே சாதி என்பதாலே அதே சாதியைச் சேர்ந்த முதலாளிக்கு முனியாண்டியைப் பிடித்துப்போனது. வேலை கிடைத்ததும் தங்குமிடத்துக்கான தேடல். அதற்கு முனியாண்டி மட்டுமே துணையானான். சென்ட்ரல் கைவிட திருவல்லிக்கேணியில் அடைக்கலமானான். 4000 ரூபாய் வாடகை, ஒரு மாத அட்வான்ஸ் என்றதும் இந்த மேன்சனுக்கு வந்து சேர்ந்தான். கடல் நீலம் மேன்சனுக்கு முனியாண்டி வந்த கதை இதுவே. 

மேன்சன் மிக இருட்டியிருந்தது. இன்றுதான் இவ்வளவு தாமதம். எப்போதும் ஏழு மணிக்கு அறைக்கு வந்து எட்டு மணிக்கெல்லாம் தூங்கிவிடுவான். இப்போது நேரம் பதினொன்று காட்டியதை தன் மொபைலில் கவலையாய் பார்த்தான் முனியாண்டி. திறந்தே கிடந்தது வாசல் கதவு. ரிஷப்ஷனில் எரிந்த நீல வெளிச்சத்தில் கதவுக்கு அருகிலேயே யாரோ படுத்துக்கிடப்பது தெரிந்தது. காலையில் ரிஷப்சன் சோபாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போலீஸ்காரர் இப்போது மஃப்டியில் மல்லாந்திருந்தார். ஜாக்கிரதையாகத் தாண்டினான். படியேறினான். இரண்டாம் தளத்தில் இருந்தது அவன் அறை. முதல் தளத்துக்கான திருப்பத்தில் அவர்களைக் கண்டான். கண்ணுக்குத் தெரிந்த அறை வாசலில் இரண்டு பெண்கள் நின்றிருந்தனர். கதவுக்கு வெளியே ஒரு பெண் அந்த இரவிலும் அத்தனை இறுக்கமாய் உடையணிந்து யாரோ ஓர் ஆணுடன் பேசிக்கொண்டிருந்தாள். பேசிக்கொண்டிருந்தாள் என்பது குறைவு. சண்டை போட்டுக்கொண்டிருந்தாள் என்பதே சரி. தனக்கான பணம் தராமல் தன்னை ஏமாற்றிவிட்டதாகத் தெலுங்கு, தமிழ், இந்தி கலந்து கத்திக்கொண்டிருந்தாள். முனியாண்டிக்கு ஆச்சர்யமாயிருந்தது. முதலில் இந்த மேன்சன்களில் பெண்கள் தங்குவார்களா என்பதே கேள்வியாகவும் இந்த ஒரு வாரத்தில் ஒருநாள்கூட இவர்களைத் தான் பார்க்காததும் அவனுக்குள் நெருடலைத் தந்தது. முனியாண்டிக்கு வயது முப்பது ஆகிவிட்டது என்பதாலே அங்கே காணப்பட்ட பெண்களும் அவர்களின் உடை மற்றும் உடல்மொழி அவர்களை அப்பட்டமாய்க் காட்டிக்கொண்டிருந்ததை உணர்ந்தான். பாலியல் தொழிலாளிக்கும் இந்த மேன்சனில் இடம் இருக்கிறது போலும் என்று நினைத்துக்கொண்டான். அறைக்குச் சென்று படுத்தவன் தனது பாதுகாப்பின்மையை உறுதி செய்துகொண்டான். இது இரண்டாவது அனுபவம். 

இங்கு வந்த மறுநாளே உறங்கிக்கொண்டிருந்த அவனின் அறைக்கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தால் போதை வடிவில் ஒருவர் நின்றிருந்தார். இவனைப் பார்த்ததும் ‘’ இது உங்க ரூமா...ஸாரி பிரதர்.’’ தள்ளாடி மேலே சென்றார். இப்போது கீழே ஒரு போலீஸ்காரர் போதையுடன் தூங்கிக்கொண்டிருக்க, மேலே வேறு தொழில் நடக்கிறது. முதலில் இந்த மேன்சலிலிருந்து வெளியேற வேண்டும் என்று தீர்மானித்தான். அப்படித்தான் அந்த சீ ப்ளூ மேன்சலிலிருந்து முனியாண்டி வெளியேறினான். அடுத்து தஞ்சமடைந்தது அமைதி தங்குமிடம். ரிஷப்சனில் 50 வயது மதிக்கத்தக்க பெரியவர்தான் இருந்தார். ‘’ என் பையந்தான் மேன்சனைப் பாத்துக்குறான். ஊருக்குப் போயிருக்கிறான். அவன் வர்றவரைக்கும் நான் பார்த்துக்குவேன்’’ என்றார். தனியாய் அறை எதுவும் இல்லையெனவும் ஷேரிங்குடன் ஒரே ஒரு அறைதான் இருப்பதாகவும் சொன்னார். ‘’ வாடகை 2, 000, அட்வான்ஸ் 4, 000 என்றதில் முனியாண்டி வீழ்ந்தான். ‘’ ரூமைப் பார்க்கலாமா?’’ என்றான். ‘’ ’’கியாரே பையா’’ என்று சவுண்ட் கொடுத்தார் பெரியவர். எங்கிருந்தோ வந்து நின்றான் அந்த 7 நாட்கள் படத்தில் வரும் ஹாஜா  ஷெரீப் போல ஒரு பையன். ‘’ சாருக்கு நூத்தியெட்டைக் காட்டு’’ என்றார். பகீரென்றது முனியாண்டிக்கு. அந்தப் பையன் பின்னாலே சென்றான். முதல் தளத்திலிருந்தது அறை. திறந்திருந்தது. உள்ளே ஆள் இருந்தது. அந்தப் பையன் மிக இயல்பாக உள் நுழைந்து அங்கிருந்தவருக்கு வணக்கம் வைத்தான். அவர் முனியாண்டியைப் பார்த்ததும் அகலமாய் சிரித்தார். என்ன வயதென்று யூகிக்க முடியாத உடல்வாகு. ‘’ ரூம் பார்க்க வந்துருக்கீங்களா...பாருங்க பாருங்க’’ என்றார் எள்ளல் சிரிப்புடன். ஏற்கெனவே இருந்த அறையைவிட இது பெரியது. ஜன்னல் திறந்திருந்ததில் வெளிச்சமும் காற்றும் உள்ளே வாடகையின்றி குடிகொண்டிருந்தன. மேலே ஒரு சிறிய டிவி இருந்தது. முனியாண்டி கேட்டான். ‘’ டிவி ஓடுமா?’’ எள்ளல் சிரிப்பு முகத்தில் மாறாமல், ‘’ டிவில்லாம் ஓடாது. சுவிட்ச் போட்டு ஆன் பண்ணினா, படம் பார்க்கலாம்’’ என்றான் அவன். முனியாண்டிக்கு யாரோ குரல்வளையைக் கடித்தது போல் இருந்தது. ஆனாலும், அந்த அறை அவனுக்குப் போதுமென்று தீர்மானித்தான். ‘’ என் பேரு முனியாண்டி’’ என்று கை நீட்டினான். ‘’ நான் செந்தில் . இங்க அஞ்சு வருசமா இருக்கேன். முனியாண்டின்னா ராத்திரிலையும் தனியா போகலாம். பயமாருக்காது’’ என்றான் செந்தில். முனியாண்டி புரியாமல் புருவம் சுருக்க’’ இல்ல... எங்க ஊர்ல முனியாண்டி காவல் தெய்வம். அந்த சாமிதான் ஊரைக் காப்பாத்துதுன்னு சொல்வாங்க. அந்தப் பேரையே வெச்சுருக்கிற நீங்க பயமில்லாம இருக்கலாம்ல... ஜஸ்ட் ஃபார் ஃபன்.’’ பல்லைக் காட்டி சிரித்த செந்தில் மீது முனியாண்டிக்குப் பரிதாபம்தான் வந்தது. கூடவே இந்த மொக்கையுடன்தான் நாம் காலம் தள்ளப் போகிறோமா என்று கவலையாகவும் இருந்தது. எல்லாமே முதல் அறிமுகத்துக்குத்தான். 

ஒரு நல்லநாள் பார்த்து தன் பெட்டி படுக்கையை இடம் மாற்றினான் முனியாண்டி. பேச்சுத்துணைக்கு ஒரு ஆள்; போரடித்தால் டிவி என்று சுவாரசியமாகத்தான் போயிற்று ஒரு வருடம். செந்திலுக்கும் 30 வயதுதான். மிகப்பெரிய தொப்பை முனியாண்டியை விட வயது முதிர்ந்தவனாய் காட்டியது. செந்திலின் பிரச்சினையே அதுதான் என்பது அவனுடன் பழகப் பழகத் தெரிந்தது. செந்திலுக்கு இன்னொரு பழக்கம் இருந்தது. குறட்டை. முனியாண்டி தன் வாழ்க்கையில் சந்தித்திராத குறட்டையது. அறைக்கு வந்த புதிதான நள்ளிரவுகளின் இடையில் விழிக்கும் முனியாண்டிக்கு செந்திலின் குறட்டை சத்தம் இன்னொரு உலகத்தில் இருக்கும் உணர்வைத் தோற்றுவித்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை இருவருக்குமே லீவ். ‘’ ட்ரிங்க் பண்ணுவீங்களா ப்ரோ?’’ என்றான் இடது காதில் கடுக்கண் அணிந்திருந்த செந்தில். இல்லையென்று தலையாட்டினான் முனியாண்டி. ‘’ சிகரெட்...?’’ அதற்கும் மறுக்க, ‘’ லவ் எதுவும் பண்றீங்களா?’’ என்றான் அடுத்தபடியாக. முனியாண்டி ஒரு நிமிடம் யோசித்தான். ஜானகி கீ போர்டில் எதையோ டைப் செய்தபடி, ‘’ ரெண்டு பேருமே கிரீன். சேம் பின்ச். ட்ரீட் வைங்க’’ என்றாள் காதில் அணிந்திருந்த பச்சை நிற ஸ்டட் அசைய. ஆமாம் என்று தலையசைத்தான் முனியாண்டி. ‘’ அதானே... கொஞ்ச நாளாவே ப்ரோ முகத்துல தனி தேஜஸ் தெரியுதேன்னு பார்த்தேன். எனக்கு சரக்கு, சிகரெட் எல்லாம் உண்டு. ஆனா, லவ் மட்டும் இல்ல. எதுவும் செட்டாகல ப்ரோ. அதனாலதான் சரக்கு. புரியுதா?’’ என்றான் செந்தில். லவ் மட்டும் இல்லை என்னும்போது செந்தில் குரல் உடைந்ததுபோல் இருந்தது முனியாண்டிக்கு. அவன் சொன்னது புரிந்ததுபோலவும் இருந்தது; புரியாதது போலவும் இருந்தது.  அன்றைய கனவில் ஜானகி, முனியாண்டியின் அறைக்கு வந்தாள். ஜானகி பிறந்து வளர்ந்தது இதே சென்னைதான். அப்பா கிடையாது. அம்மா மட்டும்தான். அந்தக் கம்பெனியில் இருக்கும் அனைவரும் வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்தவர்கள் என்றாலும் தஞ்சைப் பகுதியிலிருந்து வந்திருந்த முனியாண்டியின் பேச்சுத் தமிழ் வேறு விதமாயிருந்தது. தன்னை முதலில் கவர்ந்தது அந்தத்  தமிழ்தான் என்றாள் ஜானகி ஒருமுறை. தன் வீட்டிலிருந்து மீன் பொரித்துக்கொண்டு வந்து முனியாண்டிக்குத் தந்து சாப்பிடச் சொன்னாள். ‘’ எப்படி... உங்க வீட்ல செய்ற மாதிரியிருக்க்கா?’’ என்றாள். முனியாண்டியின் கூச்ச சுபாவம் அவனை அநியாயத்துக்கு நல்லவனாய் காட்டிற்று. அதுவே ஜானகியைப் பெரிதும் கவரவும் செய்தது. ‘’ ஒருநாள் சண்டே எங்க வீட்டுக்கு வாங்க. அம்மாவை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.’’ என்றாள். 

திருப்தியாய் சாப்பிட்டு முடித்து சோபாவில் அமர்ந்திருந்த முனியாண்டியிடம் ‘’ ஆம்பள இல்லாத வீடுங்கிறதால எங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் போயிடுச்சு. வெளியில இருந்து ஒறவுக்காரங்க யாராவது வந்து பார்த்துட்டுப் போனாக்கூட இந்த ஊர் ஏகப்பட்ட கேள்வி கேட்டுச்சு. ஒரு பொம்பளப் புள்ளைய வளர்த்தெடுக்க ரொம்பக் கஷ்டப்பட்டுட்டேன் தம்பி. இப்ப நீங்க வந்துட்டுப் போறதைக்கூட இந்த ஊர் கண்ணு பார்த்துக்கிட்டுதான் இருக்கும். இதுவரைக்கும் ஜானகியோட ஆசைக்கின்னு எதுவும் பண்ணல. பயந்துக்கிட்டே  வாழ்ந்தாச்சி. உங்களைப் பத்தி சொன்னா. அவ அதிகமா யாரைப்பத்தியும் பேச மாட்டா. எங்க காலம் மாதிரி இப்ப இல்ல...அதான் அவ முடிவுக்குன்னு விட்டுட்டேன்’’ ஜானகியின் அம்மா பேசி முடிக்கும்வரை முனியாண்டியின் எதிரில் அமர்ந்து தன் கை வளையல்களை எண்ணி சரி பார்த்துக்கொண்டிருந்தாள் ஜானகி. முனியாண்டிக்கு இந்தக் காதல் புதிது. பிழைப்பதற்காகச் சென்னைக்கு வந்தவன். பணம் மட்டுமே குறிக்கோள் என்றிருந்தவனுக்கு இந்தப் பெண் சிநேகம் எல்லாம் பட்டியலிலேயே வராதது. பணம் சேமித்துக்கொண்டு ஜானகியைத் திருமணம் செய்துகொள்வதாய் இன்னொரு ஞாயிறின் மெரினா மாலையில் சொல்லியிருந்தான். சினிமாக்களில் வருவதுபோல் முனியாண்டியின் கையைப் பிடித்துத் தன் கையோடு சேர்த்து அழுத்தினாள் ஜானகி. 

மேன்சனில் நிறைய இரவுகளை போதையிலே வைத்திருந்தான் செந்தில். ஒருநாள் மதியம்,  ஆஃப் பிராந்தி வாங்கிக்கொண்டு வந்தவன் முனியாண்டியிடம், ‘’ சைடு டிஷ் எடுத்துக்குங்க ப்ரோ’’ என்றபடி குடிக்கத் தொடங்கினான். கொஞ்சம் கொஞ்சமாக காலியானது பாட்டில். செந்திலுக்கு சொந்த ஊர் திண்டுக்கல். ஒயின் ஷாப்புகள் அரசு வசம் செல்வதற்கு முன்பு பார்களை ஏலம் எடுத்து எக்கச்சக்கமாய் காசு பார்த்த ஆள். அவ்வப்போது நடக்கும் தகறாரில் வாங்கிய கத்திக்குத்தின் தழும்பை பனியனை அவிழ்த்துக் காட்டினான். நீளமான அரக்கு நிற வாள் படுத்திருந்தது போல் அழுத்தமாய்த் தெரிந்தது தழும்பு. செல்வச் செழிப்பில் ஊறியிருந்த செந்திலுக்கு எதிரிகள் அதிகம் முளைத்தனர். ஒருகட்டத்தில் ஒட்டுமொத்தமாய் எல்லாமும் மாறிப்போக, நண்பரின் தயவில் சென்னைக்கு வந்து செட்டிலாகிவிட்டான். ஊரில் அம்மா, அப்பா, அண்ணன் தனக்குப் பெண் பார்த்துக்கொண்டிருப்பதாகச் சொன்னான். தன் உடல் எடையைப் பார்த்து எந்தப் பெண்ணும் தன் கனவில் இடம் கொடுக்க மறுப்பதை வலியுடன் பகிர்ந்தான் முனியாண்டியிடம். குடித்து முடித்ததும் எவ்வித போதையுமின்றி முனியாண்டியுடன் ஹோட்டலுக்கு வந்தான். சாப்பாடு, சிக்கன் 65 என்று முனியாண்டி  முடித்துக்கொள்ள, செந்திலோ சிக்கன் கிரேவி, மட்டன் சுக்கா, நண்டு வறுவல் என்று குடித்த சரக்கெல்லாம் வியர்வையாய் வெளியேறும்வரை சாப்பாட்டுடன் போராடிக்கொண்டிருந்தான். பெரியதாய் ஏப்பம் விட்டு எழுந்த செந்தில்தான் பில் செட்டில் செய்தான். அன்று இரவும் ஒரு ஆஃப் பாட்டில் வாங்கி வந்து குடித்தான் செந்தில். கூடவே முனியாண்டிக்கு பரோட்டா வாங்கி வந்தான். ‘ இப்படிக் குடித்தால் எப்படி உடம்பு குறையும்’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான் முனியாண்டி. பிராந்தி நெடியாலும் சிகரெட் புகையாலும் சூழ்ந்திருந்த அந்த அறை தன் தூக்கத்தை முனியாண்டியிடமிருந்து பறித்திருந்தது. தன்னை மறந்து அசந்தவன் திடுக்கிட்டு விழித்தபோது அறையில் விநோதமான சத்தத்தை உணர்ந்தான். எழுந்து சுவிட்சைப் போட்டான். பரவிய வெளிச்சத்தில் தெரிந்த செந்திலைப் பார்த்ததும் முனியாண்டியின் மூளைக்குள் மின்சாரம் பாய்ந்தது. உடலில் ஆடை எதுவும் இல்லாமல் தளர்ந்திருந்த குறியுடன் பெரிது பெரிதாய் மூச்சுவிட்டுக்கொண்டிருந்தான் செந்தில்.  கட்டிலிலிருந்து சரிந்திருந்தான். அப்படித்தான் சொல்ல வேண்டும். ஒரு காலினை மட்டும் கட்டிலில் தூக்கி வைத்து பாதி உடம்பை தரையில் வீழ்த்தி வினோதமாகத் தூங்கிக்கொண்டிருந்தான். வழக்கமான குறட்டையை விட மிகப் பயங்கரமான சத்தத்தில் அறை நடுங்கிக்கொண்டிருந்தது. ‘’ செந்தில்... செந்தில்...’’ அழைத்தான் முனியாண்டி. இரண்டு தொடைகளிலும் கெண்டைக்காலிலும் ஏகப்பட்ட தழும்புகள் முனியாண்டியிடம் சொல்லப்படாத செந்திலின் வாழ்க்கை சாட்சியங்களாய் பளீரெனத் தெரிந்தன. கைலியை எடுத்துப் போர்த்திவிட்டான் முனியாண்டி. மூக்கின் துவாரத்தில் கை வைத்துப் பார்த்தான். சாராய மூச்சு சகல திசைகளிலும் இருந்து வந்துகொண்டிருந்தது. தடித்த உதடுகளைப் பிரித்துப் பிரித்துக் காற்றை வெளியேற்றிக்கொண்டிருந்தான் செந்தில். நிறைய குடித்துவிட்டு உறங்குகிறான் என்பதையும் தாண்டி செந்திலின் மீது பரிதாபம் பெருகியது முனியாண்டிக்கு.  தன்னை எந்தப் பெண்ணும் ஏறிட்டுப் பார்ப்பதில்லை என்று செந்தில் சொன்னபோது அவன் கண்கள் லேசாகக் கலங்கியிருந்ததைக் கவனித்திருந்தான். 

மறுநாள் காலை முனியாண்டி எழும் முன்பே எழுந்து குளித்து ஃப்ரெஷ்ஷாக ஆபீஸுக்குத் தயாராகிவிட்டான். முனியாண்டி எழுந்து சோம்பல் முறித்துவிட்டு பாத்ரூம் செல்லும்போது ‘’ ஆல் தி பெஸ்ட் ப்ரோ’’ என்றபடி அறையை விட்டு வெளியேறினான் செந்தில். அன்று மதியம் எண்ணூரில் கலெக்ஷனிலிருந்தபோது முனியாண்டிக்கு போன் வந்தது. புது நம்பர். எடுத்து ‘’ ஹலோ’’ என்றான். ‘’ முனியாண்டிதானே...’’ ‘’ ஆமாம்... நீங்க...’’ ‘’ நான் உங்க ரூம் மேட் செந்தில் ஃப்ரெண்ட். அவர்தான் உங்க நம்பர் கொடுத்தாரு. செந்திலுக்கு ஒரு ஆக்ஸிடெண்ட். ஸ்டான்லி ஹாஸ்பிட்டல்ல சேர்த்துருக்கோம். உங்களால வர முடியுமா..’’ பாத்ரூம் செல்வதற்கு எதற்கு ஆல் தி பெஸ்ட் என்று மெலிதாய் புன்னகைத்தவாறே காலையில் செந்திலைப் பார்த்தது ஞாபகத்துக்கு வந்தது. ‘’ வர்றேங்க...’’ என்றபடி போனை வைத்தான். இந்த இரண்டு வருட மேன்சன் வாழ்வில் செந்தில் நல்ல நண்பனாகத்தான் நடந்து கொண்டான். நல்ல நண்பனென்றால், அவனின் சுதந்திரத்தில் முனியாண்டியை நுழைய விட்டதில்லை. முனியின் சுதந்திரத்தில் அவனும் வந்ததில்லை. ஆபீஸுக்கு போன் செய்து கலெக்ஷனுக்கு ஆள் மாற்றிவிட்டு ஸ்டான்லிக்கு விரைந்தான் முனியாண்டி. 4 மணியாகிவிட்டது. அந்தப் புதிய நம்பருக்கு போன் செய்து முனியாண்டி பேசுகிறேன் என்றதுமே, ‘’ நீங்க போஸ்ட் மார்ட்டம் லேபுக்கு வந்திடுங்க ப்ரோ’’ என்றார் எதிர் முனையிலிருந்தவர். முனியாண்டிக்கு நரம்பு முழுவதும் பதற்றம் பரவியது. என்ன வாழ்க்கை இது? இன்று இப்படி முடியத்தானா நேற்று அப்படிக் குடித்து சந்தோஷமாய் இருந்தியா செந்தில்..? ஒரே அறையில் பேச எதுவுமற்றுக் கடந்திருக்கிறோமே நாட்களை. அதெல்லாம் தவறவிட்ட  நாட்களோ. .. ஒரே வயதுக்காரன் இப்படி ஒரு மரணத்தில் வீழ்ந்திருப்பது முனியாண்டியால் ஜீரணிக்க முடியாததாய் இருந்தது. ஆற்றாமையாய் வந்தது. நெஞ்சு விம்மி அடக்க முடியாமல் கண்ணீர் வழிந்தது. பிணவறைக்கு விரைந்தான்.  இவனைப் பார்த்ததும்  செந்திலின் நண்பர்களாகவே வந்து பேசினார்கள். எல்லோருமே ஆபீஸ் நண்பர்கள். ‘’ அவன் அண்ணணுக்கு போன் பண்ணிச் சொல்லிட்டோம். திண்டுக்கல்லேர்ந்து வந்திட்டுருக்காரு...ஒடம்புல பெருசா அடியே இல்லைங்க. அதனாலதான் நம்பிக்கையா இருந்தோம். தலையில அடி. ப்ளட் உறைஞ்சி போயிருக்கு. எங்ககிட்ட நல்லா பேசிட்டுருந்தவன் அஞ்சு நிமிஷத்துல மயக்கத்துக்குப் போயி ... அடுத்த அஞ்சு நிமிஷத்துல எல்லாமே முடிஞ்சிருச்சி’’ முனியாண்டி அங்கிருந்த சிமெண்ட் திட்டில் அமர்ந்தான். அவ்வளவுதானா எல்லாம். வாழ்க்கையில் தான் நினைத்தது எதுவும் கிடைக்கவில்லையென்றாலும் குடியில் தஞ்சமடைந்து அதிலேயே திருப்தியடைந்து அப்படியே முடிந்து போய்விடுவதா எல்லாம்? கண்ணீரைத் துடைத்துவிட்டிருந்தாலும் உள்ளுக்குள் வழிந்தபடிதான் இருந்தது. தான் அறைக்குச் செல்வதாகவும் எதுவும் தேவையென்றால் போனில் கூப்பிடச் சொல்லித் திரும்பினான் முனியாண்டி. மேன்சனுக்கு வந்து மேனேஜரிடம் விவரத்தைச் சொன்னான். ‘’ இன்னும் கல்யாணம்கூட ஆகலைங்க அவருக்கு’’ என்றான் அவன். தளர்ந்து அறைக்கதவைத் திறந்ததும் செந்திலின் சிகரெட் வாசம் மெலிதாய் உறைந்திருப்பதை உணர்ந்தான். ஜன்னலை முழுவதுமாகத் திறந்து விட்டான். கதவைத் தாழிட்டதும் வெடித்துக்கொண்டு புறப்பட்டது அழுகை. செந்திலின் கட்டிலில் உட்கார்ந்தபடி அழுது தீர்த்தான்.

மறுநாள் ஆபீஸுக்கு லீவ் போட்டான். ஜானகியிடமிருந்து போன் வந்தது. ‘’ ரெண்டு நாளா உங்களை அர்ஜெண்ட்டா மீட் பண்ணணும்னு நெனச்சிட்டுருக்கேன். நேத்து காலைல ஆபீஸுக்கு வந்தவுடனே கலெக்ஷனுக்குப் போயிட்டீங்க. ஈவ்னிங்கும் வரல. இன்னிக்கும் வரலைன்னா என்ன அர்த்தம். நான் என்ன கஷ்டத்துல இருக்கேன்னு தெரியுமா உங்களுக்கு?’’ அழுகையும் கதறலுமாய் புறப்பட்ட ஜானகியின் வார்த்தைகளுக்கு முனியாண்டி மெளனத்தையே பதிலாய் தந்தான். அன்று மாலை ஜானகியின் வீட்டுக்குச் சென்றான். ஜானகியின் அம்மாதான் எல்லாம் சொன்னார். ‘’ அன்னிக்கே சொன்னேன்ல தம்பி. தெருவுல உள்ள எல்லா கண்ணும் நீங்க வந்துட்டுப் போனதைப் பாத்துட்டுருக்கும்னு...அதுல எந்தக் கண்ணு போய் சொல்லுச்சோ... இங்கே குரோம்பேட்டைல ஜானகியோட மாமன் ஒருத்தன் இருக்கான். தூரத்துச் சொந்தம்தான். இத்தனை நாளும் வராதவன் நீங்க வந்துட்டுப் போன மறுநாளு வந்து கேக்காத கேள்வியில்ல. பொண்ண ஊர் மேய விட்டுட்டு நீ என்ன பண்றேன்னு அசிங்கம் அசிங்கமா கேட்டான். அவன் கட்டப்பஞ்சாயத்து வச்சி சம்பாரிக்கிறவன் தம்பி. சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. ஜானகிக்கு எதுவும் நல்லது பண்றதா இருந்தா சீக்கிரம் பண்ணுங்க தம்பி.’’ முனியாண்டியால் எல்லாவற்றையும் உள் வாங்கிக்கொள்ள முடியவில்லை.  ஒரு விநாயக சதுர்த்தி விடுமுறையன்று ஆபீஸிலிருந்து அவனும் ஜானகியும் மெரினாவுக்குச் சென்று  ஒருபுறம் பிள்ளையாரைக் கடலில் கரைத்துக்கொண்டிருக்க, மறுபுறம் இருட்டில் ஜானகியின் மடியில் படுத்துக்கிடந்த முனியாண்டியின் நெற்றியிலும் கன்னத்திலுமாகப் படிந்து படிந்து விலகிக்கொண்டிருந்த ஜானகியின் உதடுகள் மட்டும் மென்மையான ஈரத்துடன் மூளையின் அடுக்கில் படிந்து கிடந்தது. ஒரு வாரம் கழித்து செந்திலின் அண்ணன் அறைக்கு வந்து செந்திலின் பொருட்களை எடுத்துச் சென்றார். முனியாண்டியிடம் ஆறுதலாகவோ, கேள்வியாகவோ ஒரு வார்த்தைகூட பேசவில்லை. முனியாண்டி தனியானான். ஜானகியுடன் போனில் பேசிக்கொண்டிருந்தான். அது நள்ளிரவு தாண்டி விடியும்வரை நீண்டது. மன அழுத்தம் தொடரவே அந்த சாந்தி மேன்சனை விட்டு விலகினான்.

தங்க அரண்மனை தங்குமிடம் தெருவின் முனையிலே அமர்க்களமான பலகையுடன் இருந்தது. ரிஷப்சனில் காட்டிய கடுமை முனியாண்டிக்குப் புதிது. அறையைச் சென்று பார்த்ததும் கடுமை கூடியது. ரூம் கட்டிவிட்டு அதன்பின் பாத்ரூம் அட்டாச் செய்ததுபோல் அத்தனை சிறிய வெஸ்டர்ன் டாய்லெட். பீங்கானிலிருந்து பாத்ரூம் முழுவதும் காப்பிக்கொட்டை நிறத்தில் இருந்தது. இரண்டு கட்டிலை நெருக்கியடித்துப் போட்டிருந்ததில் ஒன்று மேலாகவும் இன்னொன்று கீழாகவும் இருந்தது. அறையை ஒட்டி குடியிருப்புப் பகுதி. மேல் ஜன்னல்  மூடவே முடியாதபடி கயிறு ஒன்று குறுக்கே நீண்டிருந்தது. அதை அவிழ்க்கவோ அறுக்கவோ கூடாது என்றார்கள். ‘’ ஜன்னல் திறந்து இருக்கே’’ என்றதற்கு, ‘’ அதெல்லாம் யாரும் பார்க்க மாட்டாங்க’’ என்று வந்தது பதில். பாத்ரூம் தாழ்ப்பாள் இல்லாமல் இருந்தது. ‘’ என்னங்க தாழ்ப்பாளே இல்ல’’ என்றதற்கு ‘’ நீங்க மட்டும்தானே இருக்கீங்க. எதுக்கு தாழ்ப்பாள்? வேணும்னா சரி பண்ணிடலாம்’’ என்றான் மேனேஜர். திருவல்லிக்கேணியில் தடுக்கி விழுந்தாலோ, விழுந்து எழுந்தாலோ ஒரு மேன்சனில் அல்லது ஒரு மெஸ்ஸில்தான் விழிக்க வேண்டியிருக்கும். இருந்தும் வீட்டு சாப்பாட்டுக்கு ஏங்கியது முனியாண்டியின் நாக்கு. இந்த மேன்சனில் அவனுக்குப் பிடித்த ஒன்றாய் இருந்தது, மேன்சன் எதிரிலிருந்த வீட்டில் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வந்த இட்லி தோசை சட்னி வகையறா. ரூம்தான் அந்த லட்சணத்தில் இருந்ததே தவிர, அந்த அறைக்குச் சம்பந்தமில்லாமல் ஒரு எல்சிடி டிவி சுவரில் மாற்றப்பட்டிருந்தது. ரிமோட்டை உற்றுப் பார்த்தாலே சேனல்களாய் கொட்டியது. தன் ஊரில் புழங்கும் பழமொழி ஒன்று ஞாபகம் வந்து போனது முனியாண்டிக்கு.

ஜானகி ஆபீஸிலும் போனிலும் பகிர்ந்த ஆறுதல் கொஞ்சம் கொஞ்சமாக டார்ச்சராக ஆரம்பித்தது. முனியாண்டிக்கோ பகிர்வதற்கு வேறு எதுவுமின்றி எப்போதும் ஒருவித ஜாக்கிரதைத்தனத்துடன் பேச வேண்டியதாயிற்று. ஜானகி தன் கஷ்டத்தையே பேசிக்கொண்டிருந்தாள். ஜானகியின் பாதுகாப்பின்மை அவளுக்குள் ஒருவித பயத்தை உண்டு பண்ணியிருந்தது. தன் காதலின் மீது அவளுக்குப் பெரிதும் நம்பிக்கையில்லை. அதே சமயம் முனியாண்டியின் மீதும் நம்பிக்கையில்லாமல் போனது முனியாண்டிக்கு எரிச்சலாய் இருந்தது. தங்க அரண்மனை அறையிலோ மூட்டைப்பூச்சிகள் தனது மூதாதையர்களுடன் குடியிருந்து வந்தது முனியாண்டிக்குத் தாமதமாகவே தெரிய வந்தது. அப்படி ஒரு உயிரினமே அழிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டிருந்த முனியாண்டியின் எண்ணத்தில் தூங்கா இரவுகள் அமிலம் ஊற்றின. பெட்ஷீட் மாற்றும் வழக்கம் இல்லையென்பதை விட பெட்ஷீட்டே இல்லை என்பதுதான் நிஜம். தலையணை உறைக்குள் கோடிக்கணக்கான மூட்டைப்பூச்சிகள் கொட்டக் கொட்ட விழித்தபடியிருந்தன. முனியாண்டி தலையைச் சாய்த்ததும் அவசர அவசரமாய் புறப்பட்டு வந்து அவன் கழுத்துக்குக் கீழ் கடித்து ரத்தம் உறிஞ்சத் தொடங்கின. முனியாண்டி விடியவிடிய மூட்டைப்பூச்சியுடன் போராடிக்கொண்டிருந்தான். தூக்கமின்றி கண்களில் எரிச்சலுடன் ஆபீஸுக்குச் சென்றான். ஜானகியும் எரிச்சலுடன் பேசினாள். ‘’ முன்ன மாதிரி இல்ல நீங்க. என் ஆறுதல் மொத்தமும் நீங்கதான்னு நெனச்சிட்டுருந்தேன். நீங்களும் இப்படியிருந்தா நான் சாகிறதைத் தவிர வேற வழியில்ல’’ ஒரு நாளைக்கு மூன்று முறை நேரிலும் போனிலும் முனியாண்டியிடம் இதையே சொன்னாள். முனியாண்டிக்குக் காதல் கசந்தது. ஆனாலும் ஜானகியைப் பிடித்திருந்தது. ஜானகியைத் திருமணம் செய்துகொண்டு நிம்மதியாய் வாழ்ந்து விட முடியுமா என்று யோசிக்கத் தொடங்கினான்.

ஒருநாள் மேன்சனில் பாத்ரூமிலிருந்து பெருச்சாளி ஒன்று  அவன் கண்ணில் தரிசனம் தந்தது. வெஸ்டர்ன் டாய்லெட்டின் ஃப்ளஷ் பட்டனை அழுத்தினால் தண்ணீர் வராமல் காற்று வந்தது. வாளியிலிருந்து தண்ணீர் மொண்டு பீங்கான்  பேஸினில் ஊற்றினான். ஆபீஸிலிருந்து அலுத்துப்போய் வரும் முனியாண்டிக்கு நிம்மதியான உறக்கம் தரும் இடமாயில்லை மேன்சன் அறை. இரண்டு மாதத்துக்குப் பிறகு புது பிரச்னை ஆரம்பித்தது. பக்கத்து அறையிலிருந்து நான் ஸ்டாப்பாக ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. அது முனியாண்டியின் பாத்ரூம் தாண்டி அவன் செவியை அடைந்தது. ரிஷப்சனில் கேட்டான். ‘’ அவர் கொஞ்சம் ஒரு மாதிரி சார். அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க’’ என்பதே பதிலாய் வந்தது . முனியாண்டிக்கு அந்த மேன்சன் வினோதமாயிருந்தது. ஜன்னல் கதவு திறந்திருக்கிறதே என்றால், யாரும் பார்க்க மாட்டார்கள் என்ற பதில். பாத்ரூம் கதவில் தாழ்ப்பாள் இல்லையே என்றால், நீங்க மட்டும்தானே இருக்கீங்க என்ற பதில். டைனோசர் மாதிரி அழிந்துபோய்விட்டது என்று நம்பிக்கொண்டிருந்த உயிரினமோ கும்பல் கும்பலாய் ரத்தம் குடிக்கிறது. முனியாண்டி மாற்று வழி தேடினான். அண்ணா சாலையில் உள்ள ஒரு மெடிக்கல் ஷாப்பில் எக்ஸ்பீரியன்ஸ் ஆட்கள் தேவை என்று சண்டே பேப்பரில் விளம்பரம் பார்த்தான். சென்று பார்த்துப் பேசியதில் இப்போது வாங்கும் சம்பளத்தைவிட அதிகமாகத் தருவதாகச் சொன்னர்கள். முனியாண்டி யோசிக்கவே இல்லை. தெரியாத வேலையில் கஷ்டப்படுவதைவிட தெரிந்த வேலையில் வித்தையைக் காட்டலாம் என்று தண்டையார் பேட்டை வேலையிலிருந்து விலகினான். மெடிக்கல் ஷாப்பில் சேர்ந்தான். அதற்குமுன்பு தான் இதுவரை இருந்த கோல்டன் பேலஸ் மேன்சனை காலி செய்தான். முனியாண்டி பச்சை வீடு சொர்க்கத்துக்கு வந்தபோது நிறைய மாற்றங்கள். அவன் வாழ்க்கையையே புரட்டிப்போடும் மாற்றம் அங்குதான் நிகழப்போகிறதென்று அப்போது அவனுக்குத் தெரியாது. 

அந்த மேன்சன் மற்ற மேன்சன்களிலிருந்து பெருமளவில் வித்தியாசப்பட்டிருந்தது. வாடகை அதிகம் என்றாலும் இரண்டு பெட்டுகள், நான்கு தலையணைகள் என்று ஆரம்பமே அவன் எதிர்பாராத வகையில் இருந்தது. மிகப்பெரிய ஷெல்ப். வெளிச்சமும் காற்றும் சும்மாவே அறைக்குள் வந்துபோயின. முக்கியமாக மூட்டைப்பூச்சி இல்லாத, லேசான டெட்டால் மணம் வீசும் அறை அவனுக்குப் பார்த்ததுமே பிடித்துப் போயிற்று. முனியாண்டி அந்த அறைக்கு வந்த அன்று டிவியில் இதயத்தைத் திருடாதே படம் ஓடிக்கொண்டிருந்தது. அவனுக்குப் பிடித்த படம். ரிஷப்சனில் இருந்தவர் மேனேஜர் என்றார். பெயர் மணிவண்ணன் என்றார். சமீபத்தில்தான் கல்யாணம் ஆனதாய் சொன்னார். அட்வான்ஸ் தரும்போதே அதற்கான ரசீதையும் தந்து கண்டிஷன்களையும் சொன்னார். பத்து மணிக்கு மேல்தான் முனியாண்டி அறைக்குத் திரும்பினான். கொஞ்சம் விடுதலையாக உணர்ந்தான். புதிய சூழல் என்றாலும் அவனுக்குப் பிடித்த வேலை. அவனுக்குப் பிடித்த மருந்து வாசனை. அறைக்கு வந்தபிறகுதான் ஜானகியுடன் போனில் பேச முடியும். பேசினார்கள் என்பதை விட ஜானகி அழுது கொண்டிருப்பாள். இவன் கேட்டுக்கொண்டிருப்பான். ‘’ வேலையிலேர்ந்து நிக்கிறதப்பத்தி ஒரு வார்த்த என்கிட்ட கேட்டீங்களா. நான் எவ்ளோ கஷ்டப்படுவேன்னு ஒரு நிமிஷம் யோசிச்சீங்களா.உங்க சுயநலம்தான் முக்கியம். என் எல்லா கஷ்டத்துக்கும் விடிவுகாலம் வந்துடுச்சின்னு நெனச்சேன். என் பொறப்பு சாபப்பொறப்பு. கடைசிவரைக்கும் எனக்கு விமோசனமே இல்லை. ‘’ அழுதாள் ஜானகி. ‘’ அப்போ நான் கஷ்டப்பட்டா ஒனக்குப் புடிக்குமா. நான் எவ்ளோ மன வருத்தத்துல அங்கே வேலை பார்த்தேன்னு ஒனக்குத் தெரியாது. அடிமை மாதிரி நடத்துனாங்க ஒங்க ஆபீஸுல. நீ மட்டும்தான் ஆறுதலா இருந்தே. சமீபமா நீயும் உன் நலன் மட்டும்தான் யோசிச்ச்சியே தவிர, என்னப்பத்தி யோசிக்கல. செந்தில் இறந்து போனதைப்பத்தி ஒன்கிட்ட அவ்ளோ சொல்லியும் சின்னதா ஒரு ஸாரி சொன்னியா. ஒனக்கு ஒன் கஷ்டம்னா எனக்கு என் கஷ்டம்’’ போனில் இதுபோன்ற உரையாடல் நிகழ்த்துவது என்பது எதற்கும் பிரயோசனப்படாது என்று முனியாண்டிக்கு நன்றாகவே தெரியும். எப்போது என் கஷ்டம் உன் கஷ்டம் என்று பிரிந்துபோனதோ அப்போதே மனதளவில் தூரமாகியாயிற்றென்பதை உணர்ந்தான்.

முந்தைய மேன்சனில் அறைதான் பிரச்னையாயிருந்ததே தவிர இங்கே அறைக்கு வந்தும் பிரச்சனை ஜானகி வடிவில் பேசியது. தொடர்ச்சியான ஞாயிறுகளில் ஜானகி வீட்டுக்குச் செல்ல முடியாமல் போகவே, ஜானகியின் பேச்சு எல்லை தாண்டியது. ‘’ ஒங்களுக்கு என்னைப் புடிக்கல. நான் வேணாம். நீங்களும் சராசரி ஆம்பளதான்னு நிரூபிச்சிட்டீங்க. பரவால்ல. எதா இருந்தாலும் ஷேர் பண்ணிக்க ஒங்களுக்கு ஆயிரம் பேரு. எனக்கு யாரிருக்கா. நானே உள்ளுக்குள்ள் புழுங்கிச் சாகுறேன். விட்ருங்க. இப்பிடி நம்பவெச்சு கழுத்தறுக்க வேணாம்.’’ ஜானகியின் குரலில் ஒரு சதவிகிதம் கூட காதலில்லை. ‘’ என்னாச்சுன்னு கத்துறே... என் நிலைமையில நின்னு யோசிச்சுப் பாக்க மாட்டியா. இங்கே வேலை அதிகம். அதான் ஒன்னைப் பாக்க வர முடியல. நேர்ல பாக்காட்டியும் விடிய விடிய போன்ல பேசுறேன்ல. அப்புறம் என்ன?’’ முனியாண்டியும் தன் குரலிலும் காதல் இல்லாததை உணர்ந்தான். ‘’ போன்ல பேசுணா போதுமா. போன்ல ஆயிரம் பேர்கூட பேசலாம். ஒரு ஜானகி இல்லைன்னா ஒங்களுக்கு ஒரு மாதவின்னு போவீங்க. ஒங்க ஆம்பள புத்தி எங்களுக்குத் தெரியாதா...’’ தன் நெற்றியில் மோதி வழிந்த அந்த மென்மையான உதடுகளின் தொடுகை ஒரு நிமிடம் முனியாண்டியின் ஞாபகத்தில் புரண்டது. அங்கிருந்துதான் இதுபோன்ற வார்த்தைகளும் வருகிறதா? ‘’ வேணாம் ஜானகி. இதே வார்த்தைய நான் திருப்பிச் சொல்ல ரொம்ப நேரம் ஆகாது.’’ போன் கட் செய்யப்பட்டது. முனியாண்டி மறுபடி மறுபடி முயற்சி செய்ய சுவிச்டு ஆஃப். அன்றிரவும் தூக்கம் தொலைத்தான் முனியாண்டி.  மறுநாள் இரவு அவனறைக்கு போலீஸ் வந்தது. உள்ளுக்குள் பயப்பந்து உருண்டோடுவதை உணர்ந்தான் முனியாண்டி. ஜானகி ஏதும் செய்துகொண்டுவிட்டாளா. மூன்று போலீஸுடன் மேன்சன் இன்சார்ஜும் வந்திருந்தார்.  சட்டை போடாமல் திறந்த மார்புடன் கைலி மட்டும் அணிந்திருந்த முனியாண்டியிடம் ‘’ எங்க வேலை பாக்குறீங்க?’’ என்றார் ஒரு போலீஸ்காரர். ‘’ மெடிக்கல் ஷாப்ல சார். ஏன் சார் என்னாச்சி?’’
 என்றான், பயத்தை வெளிக்காட்டாமல். அதற்கு பதில் சொல்லாமல், ‘’ எந்த ஊர்?’’ என்றார். பதில் சொன்னான். ‘’ ஊர் அட்ரஸ் சொல்ல்லுங்க. அம்மா அப்பா பேரு மொபைல் நம்பர் குறிச்சுக்குங்க’’ என்றார் இன்னொரு போலீஸிடம். முனியாண்டி சொல்லச் சொல்ல அவர் குறித்துக்கொண்டார். யதேச்சையாகத்தான் கவனித்தான். அவன் அறையையும் அவனையும் இன்னொரு போலீஸ்காரர் மொபைலில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். முனியாண்டி அவசர அவசரமாகத் துண்டை எடுத்து நெஞ்சின் மீது போட்டுக்கொண்டான். அவன் அறையிலிருந்து வெளியேறி அடுத்த அறைக்கதவைத் தட்டினார்கள். முனியாண்டி இன்சார்ஜின் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினான். காதோரம் கிசுகிசுப்பாகக் கேட்டான். ‘’ எதுக்கு இதெல்லாம்...’’ அவனும் அதே குரலில். ‘’ நாளைக்கு பிஎம் வர்ராருல்ல. அதான் செக்யூரிட்டி செக் பண்றாங்க. நீங்க படுங்க’’ என்றபடி அந்தப் போலீஸைப் பின் தொடர்ந்தான். வாழ்க்கையில் முதன்முறையாக இவ்வளவு பயத்தைத் தந்தது, நாம் இதுநாள்வரை காதல் என்று நினைத்துக்கொண்டிருந்த ஒன்று என நினைக்கும்போதே கசப்பாயிருந்தது முனியாண்டிக்கு.

அந்த வாரம் ஞாயிறு ஸ்பென்சர் பிளாசாவில் முனியாண்டி, ஜானகியைப் பார்த்தான். யாரோ ஒரு ஆளுடன் கை கோத்தபடி எஸ்கலேட்டரில் இறங்கிக்கொண்டிருந்தாள். அந்த ஆண் நிச்சயம் அவள் மாமன் கிடையாது எனத் தெளிந்தான் முனியாண்டி. கட்டைப் பஞ்சாயத்து செய்து காசு வசூலிப்பவன் இன்ஷர்ட் செய்து முழுக்கைச் சட்டை அணிந்து ஷூ போட்டிருக்க மாட்டான். சிவப்பான உதடுகளுடன் ஸ்டைலாக பிரில்கிரீம் போட்டு தலை வாரியிருக்க மாட்டான். அதுவுமில்லாமல் தன் மாமனின் கைகளை இத்தனை இறுக்கமாய் தன்னுடன் ஜானகி பிணைத்திருக்க மாட்டாள் என்று நம்பினான் முனியாண்டி. அன்றிரவு போன் செய்யும்போது, எடுத்த எடுப்பிலே ‘’ ஸ்பென்சர்ல பார்த்தேன். சந்தோஷமா இருந்தே போல. அது யாரு புதுசா?’’ என்றான். ‘’ நானா, ஸ்பென்சர்லையா...வேற யாரையோ பார்த்துட்டு இப்படி ப் பேசாதீங்க...’’ குரலில் லேசான கிண்டலைக் கவனித்தான். ‘’ உன்னை மாதிரியே வேற யாரோன்னா எனக்குக் கவலையில்ல. அது நீங்கிறதாலதான் உன்கிட்ட வந்து கத்துறேன். எனக்குக் காதல்னா என்னன்னே தெரியாது. ஒரு பொண்ணோட இப்படியெல்லாம் பேசலாமா, சிரிக்கலாமா பெண் முத்தம் இப்படித்தான் இருக்குமால்லாம் தெரியாது. எல்லாத்தையும் தெரிய வெச்சது நீ. பரவால்ல. இதையும் தெரிஞ்சிக்கிறேன். எல்லாத்துக்கும் தாங்க்ஸ்’’ வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கின. ‘’ ஹலோ... ரொம்பப் பேசாதீங்க. நானும், உங்கள ஸ்பென்சர்ல பார்த்தேன். உங்கள வெறுப்பேத்தத்தான் அவர்கூட நெருக்கமா வந்தேன். அவர் என் சித்தி பையன். உங்களுக்குத்தான் என்மேல எந்த அக்கறையுமில்லையே... அப்புறம் ஏன் கோபம் வருது?’’ ‘’ ச்சை... சித்தி பையன்னு சொல்லி அந்த உறவையும் அசிங்கப்படுத்தாத. நீ எப்படிப்பட்டவன்னு இப்பதான் தெரியுது. உன்கூட பழகினதை நெனச்சாலே அருவருப்பாருக்கு. போனை வைடி’’ கோபத்தில் தெறித்து விழுந்தன வார்த்தைகள். ‘’ மொதல்ல நீங்க ஆம்பளையா நடந்துக்கப் பாருங்க. ஒரு பிரச்னைனா எதுத்து நின்னு ஃபேஸ் பண்றவன் ஆம்பள. அது நீயில்ல. வைடா போனை’’ ஜானகி போனை வைத்ததும் முனியாண்டியின் மண்டைக்குள் அந்தச் சத்தம் நின்றது. தன் போன் திரையையே வெறித்துப் பார்த்தான்.

மறுநாள் மதியம் மெடிக்கலுக்கு லீவ் போட்டான். ஒயின்ஷாப் சென்று ஆஃப் பாட்டில் பிராந்தி வாங்கி வந்தான். செந்தில் குடித்த அதே பிராண்ட். 7 மணிபோல் குடித்தான். படுக்கையில் படுத்தால் குடல் எரிந்தது. பாத்ரூம் சென்று ஓங்காரமிட்டு வாந்தியெடுத்தான். பாத்ரூம் தாண்டி அறையை மூழ்கடித்தது நாற்றம். அழுகையாய் வந்தது. சின்னச் சின்னதாய் ஜானகிக்குச் செய்த செலவுகள், நம்பிக்கைகள், முத்தங்கள் எல்லாம் ஞாபகம் வந்து போயின. காலையிலேயே கடையிலிருந்து எடுத்து வந்திருந்த 20 தூக்கமாத்திரைகளும் அவனைப் பார்த்துச் சிரித்தன. அப்படியே வாயில் கவிழ்த்தான். படுக்கையில் மல்லாந்தான். போன் அடித்தது. திரையில் ஜானகி. அவமானம், பயம், கழிவிரக்கம் எல்லாம் ஒன்றுகூட போனை எடுத்துக் காதில் வைத்தவுடன், ‘’ போனை வைடி தேவ்டியா முண்ட. ஒன்னால எல்லாமே நாசமாயிடுச்சேடி. அய்யோ அய்யோ’’ கதறி அழுதவனின் குரல் திறந்திருந்த கதவை மீறி மேன்சனின் பக்கத்து அறைகளில் நிறையத் தொடங்கியது. இமைகளை இழுத்துப் பிடித்துத் தூக்கம் வர, அப்படியே தரையில் சரிந்தான். அறை லைட் எரிந்துகொண்டிருந்தது. நள்ளிரவு தாண்டி அவனுக்கு மூச்சிரைப்பு வந்தது. மேன்சனே தலைகீழாய் சுற்றியது. எழ முடியாமல் பலவீனமாய் குரல் எடுத்துக் கத்தினான். ‘’ காப்பாத்துங்க’’. அறையைக் கடந்த யாரோ ஒருவர் அவன் நிலைமையைப் பார்த்துப் பதறி நைட் டூட்டியில் இருந்த இன்சார்ஜிடம் சொல்ல பதறியடித்துக்கொண்டு வந்தார். முனியாண்டியின் சீரியஸ் கண்டிஷன், அறை முழுவதும் நிரம்பியிருந்த ஆல்கஹால், பிரித்துக்கிடந்த மாத்திரை அட்டைகள் விபரீதம் உணர்த்தின. 108 ஆம்புலன்ஸில் முனியாண்டியுடன் அவர் ஏறும்போது இரவு மணி 2. 

இரவு நேர ஆஸ்பத்திரி தனக்கேயுரிய அமானுஷ்ய அமைதியில் இருந்தது. தற்கொலை முயற்சி எனப் பதியப்பட்டான் முனியாண்டி. போலீஸ் விசாரணை வந்தது. ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்த முனியாண்டியின் கன்னத்தில் தட்டி எழுப்பி ‘’ கேஸ் போட்டு உள்ள தள்ளிடலாமா?’’ என்றார்கள். முனியாண்டி சாப்பிட்ட தூக்க மாத்திரைகளை வாமிட் மூலம் வெலியேற்ற மூக்கில் டியூப் செருகியிருந்தார்கள். வலி. முனியாண்டியை உலக அளவு அயற்சியாக்கியிருந்தது. 4 மணிக்கு மேல் ஒருமுறை வாந்தியெடுத்தான். டியூபை அகற்றினார்கள். முனியாண்டியின் கண்களிலிருந்து கண்ணீர் வந்தவண்ணமிருந்தது. மேன்சன் இன்சார்ஜோ போலீஸ்காரர்களிடம் ‘’ சார் மேன்சன் பேரு வெளியில வர வேண்டாம் சார்’’ என்று கெஞ்சிக்கொண்டிருந்தார். ‘’ அப்போ ஏன் இந்த மாதிரி ஆளையெல்லாம் உள்ள விடுறீங்க?’’ என்றார் கோபமாய் பதிலுக்கு. ஒரு பேடில் செருகியிருந்த வெள்ளைத் தாளில் முனியாண்டியிடமிருந்து தகவல்கள் சேகரித்து எழுதிக்கொண்டார். ‘’ ஏன் இப்படிப் பண்ணுணீங்க?’’ ‘’ வயித்த வலி தாங்க முடியல சார்’’ ‘’ அடிங்...போலீஸ்கிட்ட பொய் சொல்லக் கூடாது. எதுவும் முக்கியமான காரணம் இருந்தா சொல்லிடு. இதனாலதான் நீ தற்கொலைக்கு முயற்சி பண்ணிணேன்னு கேஸை வேற பக்கம் மாத்திடலாம். வயித்தவலிக்காரன் பிராந்தி வாங்கிக் குடிப்பானாடா...’’ அவருக்கு மட்டும் எவரையும் சுடும் ஆணை தந்தால் முதலில் முனியாண்டியைத்தான் சுடுவார் போல இருந்தது ஆத்திரம்.  ‘’ இன்னிக்கிதான் சார் ஃபர்ஸ்ட் டைமா குடிச்சேன்.’’ ‘’ அது எங்களுக்குத் தெரியும். டாக்டர் சொல்லிட்டாரு. பார்த்தா படிச்ச நல்ல பையன் மாதிரி தெரியற... எதுக்கு இந்த வேலை. ஊருக்கு போன் பண்ணி உன் அப்பா அம்மாவ வரச் சொல்லிடலாமா...’’ முனியாண்டியின் தலையில் அந்த ஆஸ்பத்திரியே இடிந்து விழுந்தது மாதிரியிருந்தது. 

ஆஸ்பத்திரி மெல்ல பனி நிறத்திலிருந்து சூரிய நிறத்துக்கு மாறத் தொடங்கியது. கேண்டீனில் பாலுக்கும், டீக்கும் கியூவில் நிற்கத் தொடங்கினார்கள் மக்கள். முனியாண்டிக்குப் பால் வாங்க வந்த மேன்சன் இன்சர்ஜின் காதில் அந்தக் குரல் விழுந்தது. ‘’ அய்யோ... என்னவிட்டுப் போயிட்டியே..’’ குரல் வந்த திசையில் ஒரு பெண்மணி தலைவிரி கோலமாய் அழுதுகொண்டிருந்தாள். அருகில் சிலர் சத்தம் காட்டாமல் அவளுக்கு ஆறுதல் சொன்னபடி அழுதுகொண்டிருந்தார்கள். ஆஸ்பத்திரியின் காலை விடிந்துகொண்டிருந்தது. 6 மணிக்கு இன்னொரு போலீஸ்காரர் வந்து டூட்டி மாற்றினார். பெல்ட்டில் அடங்காத தளர்ந்த தொப்பை. வயதான அந்த போலீஸ்காரர் முனியாண்டியிடம் ‘’ நான் இன்னும் கொஞ்சநாள்ல ரிட்டயர்ட் ஆகப்போறேன். ஒன் வயசுல எனக்கொரு மகன் இருக்கான். அதனாலதான்  உன்மேல எதுவும் கேஸ் போடல. எதுவா இருந்தாலும் இது மாதிரி கோழைத்தனமா முடிவெடுக்காத. பெத்தவங்கள நெனச்சிப் பார்த்து நடந்துக்க.பத்து மணிக்கு மேல டாக்டர் வந்து பிபியெல்லாம் செக் பண்ணிப் பார்த்துட்டு நார்மல்னா டிஸ்சார்ஜ் பண்ணிடுவாரு. ஈவ்னிங் ஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்துப்  போட்டுடு. ‘’ முனியாண்டி தன்னைச் சுற்றிலும் பார்த்தான். ஆறுதல் பேசும் போலீஸ்காரர், நேற்று இரவிலிருந்து தன்னுடன் சேர்ந்து கண்விழிக்கும் அதிகம் பழகியிராத மேன்சன் இன்சார்ஜ் போன்றவர்களால்தான் இந்த பூமி இன்னும் சுற்றிக்கொண்டிருக்கிறது என நம்பினான். சுயநலம் மிகுந்த ஒரு பெண்ணின் எதிர்பார்ப்பை காதல் என்று நம்பியது எத்தனை அசிங்கம் என்று உணரும்போதே ஆஸ்பத்திரி வலியை மீறி அவமானம் சுட்டது. ட்ரிப்ஸ் ரிமூவ் பண்ணிய இடத்தில் லேசான வீக்கம் தெரிந்தது. 

ஆஸ்பத்திரியிலிருந்து ஆட்டோவில் செல்லும்போது மேன்சன் இன்சார்ஜ் காலையில் ஆஸ்பத்திரியில் பார்த்த மரணத்தைப் பற்றிச் சொன்னான். மேன்சனிலோ முனியாண்டியை அறைக்குப் போகச் சொல்லிவிட்டு பின் வந்தார் மேனேஜர் மணிவண்ணன். ‘’ மேன்சனுக்கு மறுபடியும் உங்களைத் தேடி போலீஸோ, ஆம்புலன்ஸோ வராம பாத்துக்குங்க. இந்த மாசம் வாடகை தர வேண்டாம். அட்வான்ஸ்ல கழிச்சிக்கலாம். வேற எங்கையாவது ரூம் பாத்துக்குங்க. எங்க ஓனர் கேட்டா எங்களால பதில் சொல்ல முடியாது. எங்க வேலை போயிடும். சீக்கிரம் காலி பண்ணிடுங்க’’ முனியாண்டி நீண்ட நேரம் குளித்தான். உடல் அழுக்கு, அசதி, ஆஸ்பத்திரி வாசனை, மன இறுக்கம் எல்லாம் கரைந்து ஓடும்படி குளித்தான். போன் செய்து கடைக்கு இன்றும் லீவ் என்று சொன்னான். ஜானகி நம்பரைத் தேடி அழித்தான். பசித்தது. கடைக்குச் சென்று கேரட் ஜூஸ் குடித்தான். சற்றே தெளிவாக உணர்ந்தான். அன்று சாயங்காலம் போலீஸ் ஸ்டேஷன் போகவில்லை. போன் வருமென்று எதிர்பார்த்தான். வரவில்லை. ஒரு வாரம் ஆயிற்று. முனியாண்டி வேறு மேன்சன்கள் தேடத்துவங்கினான். ‘ டெய்லி ரெண்டு மணி நேரம்தான் தண்ணி வரும்’ ‘ கரண்ட் பில் தனி’ ‘ மூணு மாச அட்வான்ஸ் தரணும்’ ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பதில். முனியாண்டி போல் எத்தனையோ பேர் சென்னை மேன்சன்களில் தங்கியுள்ளார்கள். அடுத்தமுறை நீங்கள் சென்னை செல்லும்போது ஏதாவது மேன்சன் கண்ணில் பட்டால், முனியாண்டி என்று யாராவது தங்கியிருக்கிறார்களா என விசாரித்துப் பாருங்கள்.

                                               

                                                      

Friday 24 August 2018

பூரணம்




பூரணம்

'' பத்து ஆம்பள சேர்ந்து செய்ற வேலைய ஒத்தப் பொம்பளையா செஞ்சி முடிச்சிட மாட்டாளா மாரி''

இப்போதெல்லாம் ஊர் இப்படிப் பேசுவதில்லை. ஊர் அப்படிப் பேசும்போதெல்லாம் சிறு முறுவலுடன் புன்னகைக்கும் மாரிக்கும் அதுபோன்ற வார்த்தைகள் தேவைப்படவில்லை. முன்பு ஒரு கர்வமிருந்தது. ஆணுக்கு அடங்கியதுதான் பெண் வாழ்க்கை என்ற பொதுப்புத்தியுடன் விடியும் கிராமத்தில் ' ஆம்பள மாதிரி ' என்ற வார்த்தை, தான் எதற்கும் சளைத்தவளல்ல  என்ற எண்ணத்தை உண்டாக்கியது. அதனாலேயே துணிச்சலாய்  சில வேலைகள் செய்யும்போதெல்லாம் ஊராரின் பாராட்டுதான் அவள் காதில் வந்து போகும். ஊர்ப்பெண்களுடன் குளிக்கும்போதும் முங்கு நீச்சல் போட்டு மணிக்கணக்கில் மூச்சடக்கிக் கிடப்பாள். நீர் விளையாட்டில் மாரிக்கே எப்போதும் முதலிடம். திங்கு திங்கென்று குதித்து சில்லுகோடு விளையாட்டில் கடப்பதும் பாவாடையை அள்ளி இடுப்பில் செருகிவிட்டு வளைந்து வாகாய் கிடக்கும் மாமரக் கிளைகளில் சரசரவென்று ஏறி மாங்காய் பறித்துப் போடுவதாகட்டும் மாரிக்கு எல்லாமே சுலபமாகத்தான் இருந்தது. மாரியைப் பெற்றவள்தான் முதலில் கவனித்தாள். மாரி பிறந்த நாளில் பிறந்து வளர்ந்த நாளில் கூடவே வளர்ந்து பள்ளிப் படிப்பு முடித்த அவளின் தோழிப்பிள்ளைகள் எல்லாம் வயதுக்கு வந்து அடுத்த வருடமே வயிற்றைத் தள்ளிக்கொண்டு நின்றபோதுதான் பட்டம்மாள் கவலையானாள். கணக்குப் போட்டு எதையும் வாழத்தெரியாத பட்டம்மாள் தன் மகளின் வயதைக் கணக்கிட்டுப் பார்த்தாள். 14 கடந்து 15 ஆகியிருந்தது. தன் பரம்பரையில் யாராவது இப்படித் தாமதமாய் பூத்திருக்கிறார்களா என்று மனத்திரை விரித்துப் பார்த்தாள். திரையில் தெரிந்த மூதாதைப் பெண்களின்  15 வயது இடுப்பிலும் மாரிலுமாய் இரண்டு குழந்தைகள் புரண்டு கொண்டிருந்தன. தன் மகள் குறித்து முதன்முறையாகக் கவலைகொண்டாள் பட்டம்மாள். கிணற்றில் நீர் எடுக்க நிற்கையிலும் காட்டு வேலைக்குச் செல்கையிலும் மாரி  பேசுபொருளாகிப் போனாள் ஊர்ப்பெண்களின் இன்னொரு நாக்கிற்கு. '' பொண்ணா லட்சணமா அடக்க ஒடுக்கமா இருந்தாதானே... தடிப்பயலுக மாதிரித் திரிஞ்சா இப்பிடி மரத்துப் போய் கெடக்க வேண்டியதுதான்'' சகலத்துக்கும் வளைந்து கொடுக்கும் பொரணி நாக்குகள். தான் பெண் என்ற தகுதியை உடல் ரீதியாக அடையவில்லையென்பதை மிகத் தாமதமாகவே உணர்ந்தாள் மாரி. தன் காலிலும் கையிலும் தென்பட்ட பூனை ரோமங்களின் மீது அதிகமாய் மஞ்சள் தேய்த்துக் குளித்தாள். தன்னுடன் படிக்கும் சிநேகிதிகள்  ஒவ்வொருவராகப் பூப்பெய்துவதும் தொடர்ந்து ஒரு வருடத்திலேயே திருமணம் முடிந்து போவதுமாய் இருந்ததை, தான் வழக்கமாய் கும்பிடும் மாரிமுத்தம்மாள் கோயிலில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தாள் மாரி. ஒரே குழந்தை என்பதனால் அம்மன் பெயரை வைத்ததற்கு அப்போதுதான் வருத்தப்பட்டாள் பட்டம்மாள். அந்த அம்மன் சிலை போலவே கல்லாகிக் கிடக்கிறாளே மாரி என்று விசனப்பட்டுப் போனாள். மாரியோ கோயிலுக்குப் போவதையே நிறுத்திக்கொண்டாள். மாரியின் பகலும் இரவும் எந்த மாற்றமுமில்லாமல் விடிந்தது; முடிந்தது. காலையில் எழுந்து குளித்து சடை பின்னி பூ வைத்துப் பொட்டிட்டு பாவாடை சட்டையில் பள்ளிக்குக் கிளம்பிப் போவது மட்டுமே மிகச் சரியாக நடந்துகொண்டிருந்தது. மற்ற எல்லாம் தவறாக. ஒருமுறை பட்டம்மாளே சந்தேகப்பட்டு மாரியிடம் கேட்டாள். '' வவுறு கிவுறு வலிக்கிற மாதிரி தெரியிலியாடி ஒனக்கு?''. அம்மா கேட்பது விளையாட்டில்லை என்பதை நன்கு உணர்ந்திருந்தாள் மாரி.

தேங்குடி கிராமத்துக்காரர்களுக்கு விவசாயம், இல்லையேல் காட்டுப் பகுதிக்குச் சென்று விறகுவெட்டி வந்து சந்தையில் விற்றுப் பிழைப்பது. அவ்வளவுதான். படிக்காத கிராமத்து மக்கள் அப்படித்தானிருந்தார்கள். இதுபோதும் என்று வாழ்ந்தவர்கள் பெண்கள் வயதுக்கு வந்துவிட்டால் உடனே பள்ளிக்கூடத்துக்குச் செல்வதை நிறுத்திவிட்டு அடுத்த வருசமே பக்கத்து ஊரில் மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் செய்து வைத்தார்கள். இல்லையெனில் சொந்தத்திலே மணம் முடித்து கண்ணுக்கருகிலேயே வைத்துப் பார்த்துக்கொண்டார்கள். முதல்நாள் சாயங்காலம் பாலாமணிக்கும் மாரிக்கும்தான் ஓட்டப்பந்தயம்; பள்ளி விட்டதும் யார் முதலில் வீட்டுக்குப் போவதென்று. பையை இறுகப் பிடித்துக்கொண்டு பல் கடித்துக்கொண்டு ஓடிய ஓட்டத்தில் மாரியே  வழக்கம்போல வென்றாள். பாதிவழி கடக்கையிலே பாலாமணிக்கு அடிவயிற்றில் சுருக்கென்றது. மறுநாள் பாலாமணியின் அப்பா வகுப்பு ஆசிரியரிடம் இனிமேல் தன் மகள் பள்ளிக்கு வர மாட்டாளென்று சொல்லிச் சென்றார். மாரியின் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்கும் அடுத்த வீடு பாலாமணியுடையது. மாரி, பாலாமணியைப் போய் பார்த்தாள். வீட்டுக்குப் பின்புறம் அமர்ந்திருந்தாள் பாலாமணி. அவள் முன் நீளமான மர உலக்கை கிடந்தது. உலக்கைக்கு இந்தப்புறம் நின்றவாறே பேசினாள் மாரி. '' என்னடி பண்ணுச்சி?'' '' ச்சீ போடி. ஒனக்கு இது மாதிரி வரும். அப்ப பாரு . என்கிட்ட கேக்காத'' பாலாமணியின் வெட்கம் புதிதாய் இருந்தது மாரிக்கு. '' எனக்குத் தெரியலடி. அதான் கேக்குறேன்'' சுற்றுமுற்றும் பார்த்த பாலாமணி அருகில் இருந்த மஞ்சள் பையிலிருந்து ஒரு வெள்ளைத் துணியை எடுத்தாள். துணியில் அங்கங்கே வெளுத்த சிவப்பில் திட்டுத் திட்டாய் கறை. மாரியின் கண் முன் காட்டி '' இப்பிடித்தான் வருது'' என்றாள் பாலாமணி. அதைச் சொல்லும்போது அவளின் கை அடிவயிற்றைத் தொட்டுக்கொண்டிருந்தது. '' ஒண்ணுக்குப் போற எடத்துலேர்ந்தா?'' என்றாள் மாரி. கேள்வியில் கிடந்தது 16 வயதுக்கான ஒட்டுமொத்த ஆச்சர்யம். '' ம்ம்ம்ம்...ப்பே'' முறைத்த பாலாமணி  முகம் சுளித்தவாறு, '' நீ  போடி அப்புறம் பேசலாம்'' என்றவாறு பையிலிருந்து இன்னொரு வெள்ளைத் துணியை எடுத்தாள். மாரிக்கு அன்றிரவு தூக்கம் கெட்டது. கண்களை மூடினால் பாலாமணி காட்டிய வெளுத்த சிவப்பு வெள்ளம்போல் பொங்கிப் பெருத்தெடுத்து அவள் அடிவயிற்றை நனைத்தது. நிமிடத்துக்கொருமுறை தொட்டுப் பார்த்துக்கொண்டாள். பக்கத்தில் படுத்திருந்த பட்டம்மாள் எழுந்து மகளைப் பார்த்தாள். '' என்னடி பண்ணுது?'' '' ஒண்ணுமில்லம்மா. படு'' என்றபடி குப்புறப்படுத்தாள் மாரி. பட்டென்று அவள் முதுகில் அடித்தாள் '' எத்தினி தடவ சொல்லிருக்கேன். இப்பிடி குப்புறப் படுக்காத குப்புறப்படுக்காதன்னு'' 

வாசலில் கட்டிலில் படுத்திருந்த கோபால் மனைவியின் கோபக் குரலில் விழித்தார். எழுந்து கதவைத் தட்டினார். அன்றிரவு நிறம் மாறும் வரைக்கும் பட்டம்மாள் கணவனிடம் பேசிக்கொண்டிருந்தாள். '' நீ என்னடி புதுக் கிறுக்கியா இருக்கே. அவ கொழந்தடி. அதுக்கெல்லாம் இன்னும் நாள் இருக்கு. அதெல்லாம் தானா நடக்கும். ஒனக்கு வேணும்னா சொல்லு. வைத்தியர்கிட்ட காட்டலாம். எனக்கு இதுல மனசில்ல. புள்ள மனசு கஷ்டப்படும்டி'' என்றார். மனசு ஆறாமல்தான் போனாள் பட்டம்மாள். வெளியில் இதுபற்றி யாரிடமாவது கேட்டால் அதுவே தன் மகளின் எதிர்காலத்துக்குத் தான் வைக்கும் கொள்ளியாகிவிடுமோவென்று பயந்தாள். பத்தாம் வகுப்பில் ஃபெயிலானாள் மாரி. அத்துடன் பள்ளிக்குச் செல்வது நின்றுபோனது. வலியும் விரக்தியும் முகத்தில் நிரந்தரமாக எவருடனும் பேசாமல் தனியானாள். பட்டம்மாளும்  வேலை உண்டு தன் வீடு உண்டு என்றிருந்தாள். வயது இருபதைக் கடந்ததும் மாரியை அழைத்துக்கொண்டு திருப்பூருக்குப் புறப்பட்டாள் பட்டம்மாள். விஷயம் தெரிந்த கோபால் '' ஏன்டி அங்க போய்தான் இதுக்கு பாக்கணுமா. கொஞ்ச நஞ்ச தூரமா இருக்கு. போயிட்டு வர்றதுக்குள்ள ஒரு நாளாயிடும். அங்க நமக்குத் தெரிஞ்சவங்கன்னு யாருமே இல்லியேடி'' இடுங்கிய கண்களில் எரிச்சலிருந்தது. '' அதுக்காகத்தான் அவ்ளோ தூரம் போறேன். நமக்கும் யாரையும் தெரியாது. நம்மளையும் யாருக்கும் தெரியாது. கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரியில காட்டிட்டு அழைச்சிட்டு வந்துடுவேன். மொத பஸ்ஸுக்குப் போயிட்டு கடைசி பஸ்ஸுக்கு வந்துடலாம். என்ன பண்றது. ஊர் நாக்கு வெசம் வெச்சிக்கிட்டு இருக்கு. அதுக்குப் பயந்துதான் எல்லாம் பண்ண வேண்டியிருக்கு.''

பட்டம்மாளும், மாரியும் திருப்பூர் வந்து டெஸ்ட் செய்ததில் உடம்பில் சத்து இல்லாவிட்டாலும் இப்படி இருக்கலாம் என்று விட்டமின் ஊசி எழுதிக்கொடுத்தார்கள். வாரம் ஒன்று போடச்சொல்லி எழுதித்தந்த ஊசி மாதக்கணக்கில் நீண்டது. ஊரே வெளிச்சமாயிருந்தாலும் மாரியின் வீடு மட்டும் இருளில் இருக்க, அவ்வீட்டில் இருந்த மூவரும் ஊரின் கண்களுக்குத் தெரியாமல் தங்களை ஒளித்து மறைத்து வாழ்ந்து வந்தனர். மாரியின் 21 வது வயதில் அந்த விபரீத முடிவெடுத்தாள் பட்டம்மாள். '' பல்லடத்துல ஒரு பையன். ஜாதகத்துல கோளாறுன்னு கல்யாணம் தள்ளிப்போய் இப்போ 37 வயசாகுதாம். காட்டு வேலைக்குப் போறப்போ பேசிட்டுருந்தாங்க. நான் ரமணியம்மாக்கிட்ட கேட்டு அந்த வெலாசம் வாங்கிட்டேன். போய் ஒரு எட்டு பாத்துட்டு நம்ம பொண்ண பத்திச் சொல்லி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணலாம்ங்க'' கோபால் நெஞ்சடைத்துப் போனார். '' எல்லாத்தையும் சொன்னா அவங்க ஒத்துக்குவாங்களா?'' என்றார் பரிதாபமாய். '' யார் சொல்லப்போறா. மறைச்சி வெச்சித்தான் நடத்தி வைக்கணும். அப்படியாவது இவளுக்கு வேற வாழ்க்க அமையுதான்னு பாப்போம். மனச கல்லாக்கிக்கிட்டுதான் இந்தக் காரியத்த பண்ணணும்.'' மாப்பிள்ளைக்கு வயது அதிகம் என்பதாலே சில விஷயங்கள் ரகசியமாய் நடந்தன. அது பட்டம்மாளுக்கு சாதகமாய் போயிற்று. பெண் பார்க்க வராமல் போட்டோ மட்டும் பார்த்து சம்மதம் சொன்னார்கள். மாரி வடிவழகி. பெரிய கண்களும் குண்டு கன்னமுமாய் சின்ன உதடுகளுடன் புகைப்படத்தில் அவளின் குறையெதுவும் தெரியவில்லை. உறவினர்கள் யாருக்கும் தெரியப்படுத்தாமல் இரு வீட்டு பெற்றோர்கள் மட்டுமே இருக்க ஏதோ ஒரு கோயிலில் கல்யாணம் நடந்தது. யாருக்கோ நடப்பது போன்ற பாவனையுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் மாரி.

பன்னீர்செல்வத்துக்குசிகரெட், குடி மட்டுமல்ல; பெண்கள் தொடர்பு என்பது ஊரின் எல்லை தாண்டியும் நீண்டிருந்தது. அவனின் யோக்கியதை தெரிந்துதான் யாரும் அவனுக்குப் பெண் கொடுக்க மறுத்தார்களே  தவிர, அவன் ஜாதகத்தில் எந்தக் கோளாறும் இல்லை. மாரியை அவனுக்குப் பிடிக்கவில்லையென்றாலும் ஆசைக்குதான் ஊரெங்கும் பெண்கள் இருக்கிறார்களே என்றுதான் கல்யாணத்துக்குச் சம்மதித்தான். முதலிரவில் முதல் சந்தேக விதை விழுந்தது. அவசரமாய் ஆடை களைந்து மாரியை அணைத்தவன் மேலேறி இயங்கத் தொடங்கினான். அவன் உறுப்பு அவள் அந்தரங்கத்தில் படும்போது அவனுக்கு அது புது அனுபவமாய் இருந்தது. இத்தனை வெப்பமாய் கொதிநிலத்தில் வறண்ட பகுதியில் உரசுவதுபோல் உணர்ந்தது அவனுக்குப் புதிது. விரிய மறுத்த பெண்மையில் அழுந்திச் செருகினான் தன் பலத்தை. எவ்வித நெகிழ்வுத்தன்மையும் இல்லாமல் பாறைபோல் இருந்த இடத்தில் தன் குறியை வைத்துத் தேய்க்க வலி உச்சந்தலையைத் தாக்கியது மாரிக்கு. வேகமாய் பன்னீர்செல்வத்தைத் தள்ளிவிட்டாள். நெஞ்சுப் பகுதியில் கைவைத்துத் துழாவியவன் '' என்ன ஒனக்கு மாரே இல்ல'' என்றான். உதடுகள் நடுங்க மாரி '' எனக்கு இது வேணாம்'' என்றாள். முதல்நாள் பயத்தில் பேசுகிறாள் என்று பன்னீர்செல்வம் ஒன்றும் சொல்லவில்லை. மறுநாள் இரவு குடித்துவிட்டு அறைக்கு வந்தான். மூர்க்கமாய்  மாரிமேல் கவிழ்ந்தான். அவள் கழுத்தில் இவன் போதை படிந்தபோது விநோதமாய் ஒன்றை உணர்ந்தான். மாரியின் கைகள் அவன் முதுகை அணைக்காமல் இருந்தது அவனுக்குள் நெருடல் தந்தது. வேட்டியை அவிழ்த்து வீசி மாரியின் நிர்வாண உடம்பில் தன் உடம்பை வைத்து அழுத்தியவன் நேற்றுபோலவே இன்றும் அவள் அந்தரங்கத்தில் உறவுக்கான எந்தத் தயார் நிலையும் இல்லாமல்போக ஆத்திரமானான். சாராயத்தில் தெறித்து விழுந்தன வார்த்தைகள். '' இதோ பாரு... ஒன்கிட்ட என்னமோ கொறையிருக்கு. என்னான்னு சொல்லிடு. என்கூட படுக்கப் புடிக்கலியா...இல்ல இதுவே புடிக்கலியா. ஒன் மார்ல ஒனக்கு சதையே இல்ல. தொடையப் போட்டு இறுக்கிக்கிறே. என்ன கட்டிக்கூட புடிக்க மாட்டேங்குற. நான் ஊர்ல பாக்காத பொம்பளையே கெடையாது.  பொம்பள ஒடம்புல எது எப்பிடியிருக்கும், எங்க தொட்டா என்ன பண்ணும்னு எல்லாம் எனக்குத் தெரியும். எல்லாம் பண்ணியும் மரக்கட்ட மாதிரி கெடக்க. பொம்பளதான நீ.'' கேள்விக்கு நிமிர்ந்தாள். பாயில் எழுந்து அமர்ந்தவள் நிதானமாய் தன் ஜாக்கெட் ஊக்குகளைப் போட்டபடி சொன்னாள். '' என்கிட்ட எந்த சொகமும் ஒங்களுக்குக் கெடைக்காது. நான் பெரிய மனுஷியே ஆகல. என் ஒடம்புல ஏதோ கோளாறு. கல்யாணம் பண்னினா சரியாகிடும்னு பண்ணி வெச்சிட்டாங்க. எனக்கு இதுல விருப்பம் இல்ல.'' பன்னீர் செல்வம் பாயிலிருந்து எழுந்தான். வேட்டியை எடுத்துக் கட்டிக்கொண்டான். சட்டை அணிந்தவன் அறையை விட்டு வெளியேறினான். இரவு விளக்கை அணைத்துவிட்டு படுத்த மாரி அரைமணி நேரத்தில் தூங்கிப்போனாள். மறுநாள் பட்டம்மாளுக்கு செய்தி போய் பதறிக்கொண்டு பல்லடம் வந்து சேர்ந்தாள். மகளைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதாள். மாரியை அழைத்துக்கொண்டு கடைசி பஸ்ஸிலேறி வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். ஊர் அதே இருட்டில் இருந்தது. தன் வாழ்க்கையில் கல்யாணம் என்பதே இல்லை என்பதில் உறுதியானாள். அம்மாவுடன் சேர்ந்து வேலைக்குப் போகத் துவங்கினாள். தான் என்ன தப்பு செய்தோம்; தான் மட்டும் ஏன் இப்படி மற்றவரிடமிருந்து தனித்துப் போனோம் என்று யோசித்துக் களைத்துப் போனாள்.  இங்கு விலகுதல் வேறு. விலக்குதல் வேறு. ஆனால் இரண்டையும் ஒன்றாக்கி இரண்டுமே ஒன்றாகி எல்லோரிடமிருந்தும் விலகி எல்லோரையும் விலக்கித் தனித்திருந்தாள். மாரி என்றொரு மனுஷி வாழ்ந்துகொண்டிருக்கிறாள் என்பதே பலருக்கும் தெரியாமல் போயிற்று. ஆறுதலுக்காய் மீண்டும் மாரிமுத்தம்மாள் கோயிலுக்குப் போனாள். வயல் தாண்டி காட்டுப்பகுதியில் இருந்தது கோயில். உயரமான இடத்திலிருந்த கோயிலிலிருந்து ஊரின் மண் சாலையைக் காணலாம். வேலைக்குப் போகும் நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் கோயிலிலே கிடந்தாள் மாரி. அவள் பார்வையில் அந்த மண் சாலையில் சென்றுகொண்டிருந்தது ஊர். மாரிமுத்தம்மாள் இறுகிய பெரிய முலையுடன் நெளிந்து வளைந்த இடையுடன் அவளைப் பார்த்து சிரித்தது. மாரி தன் நெஞ்சுப்பகுதியைத் தொட்டுப்பார்த்தாள். அவளின் உடலும் மனமும் கனவும் வறண்டே இருந்தன. மாரிமுத்தம்மாள் மழை தரும் சாமி.  சிறிது தூரம் தள்ளி வெயில் முத்தம்மாள் ஆங்காரமாய் வீற்றிருக்கும் கோயிலுமுண்டு. மாரிமுத்தம்மாளிடம் ஆங்காரமில்லை. கனிவு மட்டுமே. மாரிக்கென்னமோ அலங்காரமற்ற எளிமையான தெய்வத்தைப் பார்க்கப்பார்க்க ஆத்திரம் பொங்கும். எதுவும் பேசத்தோன்றாது வெறுப்புடன் பார்த்தபடியிருப்பாள். கல்யாண ஊர்வலம் சென்றுகொண்டிருந்தது சாலையில். பெண்ணும் மாப்பிள்ளையும் உறவினர்களும் மேளச்சத்தத்துடன் சென்றுகொண்டிருக்க கோயில் சூலத்தின் அருகில் இருந்த சிறிய கல்லை எடுத்து ஊர்வலம் செல்லும்திசை நோக்கி எறிந்தாள். அன்றிரவு பெருமழை பெய்தது. நனைந்து வீடு திரும்பியவளைப் பார்த்துக் கத்தினாள் பட்டம்மாள். '' என்னடி நெனச்சிட்டுருக்க ஒம்மனசுல. இப்பிடி நனைஞ்சிட்டு வர்றே.'' '' நான் நனையத்தாம்மா இவ்ளோ மழையும் பெய்யுது'' என்றபடி வீட்டினுள்ளே சென்று தலை துவட்டிய மாரிக்கு அன்றுடன் வயது 35 பூர்த்தியடைந்திருந்தது. இன்னும் கொஞ்சம் வெயில். இன்னும் சில மழை. காட்டு வேலைக்குச் செல்வது நின்றுபோனது. காலைச் சாப்பாடும் இரவு உணவும் மட்டுமே. மாரி கோயிலே கதியென்று இருந்தாள். ஊர்க்காரர்களுக்கு அவள் கோயிலில் உள்ள மற்றொரு சிலைபோல ஆனாள். மாரியின் நாற்பதாவது வயதில் காசநோய் வந்து செத்துப்போனார் கோபால். வீட்டின் பட்டம்மாளும் மாரியும் தனியாகினர். இருவரின் வெப்பப் பெருமூச்சும் இரவுகளில் அவ்வீட்டின் சுவரில் எரிந்து படிந்தது. '' என்ன பொறப்புடி ஒம்பொறப்பு. இப்பிடி எதுக்கும் உபயோகப்படாம மலட்டு நெலமா கெடந்து போறதுக்கு ஒன்ன நான் பெக்காமலே இருந்துருப்பேனேடி. நான் பாவிடி'' தலையிலடித்துக்கொண்டு அழுதாள் பட்டம்மாள். ஏக்கத்திலேயே செத்துப்போனாள் ஒருநாள். மாரி அநாதையானாள். கோயிலுக்கு வருபவர்கள் தரும் உணவை உண்டு அங்கேயே கிடந்தாள். பசியென்பதே இல்லாமல் போயிற்று. கோயில் சுற்றிக் காடு. அதையொட்டிய ஆறொன்று. அதன் கரை தாண்டிச் சென்றால் வயல். காடு அவளைப் பயமுறுத்தவில்லை. மாறாக ஏற்றுக்கொண்டது. ஆற்றிலிருந்து தண்ணீர் மொண்டுவந்து சாமியைக் குளிப்பாட்டினாள். கருகருவென்ற நிறத்துடன் பெண்மையின் சகல லட்சணத்துடன் அமர்ந்திருந்த மாரிமுத்தம்மாள் முதன்முறையாக மாரியின் கண்ணுக்குக் கனிவாகத் தெரிந்தாள்.

நீண்ட கோடை ஆரம்பித்தது. வெயில் காட்டையும் விட்டுவைக்கவில்லை. ஆற்றில் நீர் குறையத் தொடங்கியது. அங்கங்கே ஊற்று  தோண்டி மக்கள் நீர் அள்ளிக்கொண்டிருந்தனர். மாரி கோயில்விட்டு அதிகம் வெளிவரவில்லை. ஒருநாள் இரவு தான் கட்டியிருந்த சேலையை அவிழ்த்து ஊற்று நீரில் துவைத்து அலசியவள்  நிர்வாணமாகவே கோயிலுக்கு வந்து உள்ளிருந்த கருங்கற் தரையின் இளஞ்சூட்டில் படுத்தாள். காட்டில் பெளர்ணமி இறைந்து கிடந்தது. மாரி பெண்ணுக்கு உரிய உள்ளுணர்வோடு இல்லாமல் போனாளே தவிர அழகிதான். முக லட்சணம் எல்லா இல்லாமையையும் மறக்கடிக்கும். மல்லாந்து கால்கள் விரித்துப் படுத்திருந்த அவளின் மீதும் சின்னச் சின்னதாய் பெளர்ணமிப் புள்ளிகள். அந்தப் பாம்பு நெளிந்து நெளிந்து நகர்ந்து நகர்ந்து கோயிலடைந்தது. உறக்கத்தில் தன் தொடையின் மீது உரசிப்போன பிசுபிசுப்புக்குக் கண் விழித்தாள் மாரி. அவள் வயிற்றின் மீது ஊர்ந்த பாம்பு தனது தலையை மேற்கொண்டு நகராமல் நிறுத்தியது. தனது வாலினை பின்னுக்கு இழுத்து தலையைத் தூக்கியது. நிலவொளியில் மாரியின் யோனி மீது நின்றபடி அந்தப் பாம்பு அசைந்தது. விஷ நாக்கை வெளியே துடிக்கவிட்டு துடிக்கவிட்டு நிறுத்தியது. மூச்சை மெலிதாய் விட்டபடி பாம்பின் முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள் மாரி. வந்த வழியே மெள்ளப் பின்னகர்ந்து தலை திருப்பி வாலசைத்தபடி வேக வேகமாய் விரைந்தது. மாரி தன் அடிவயிற்றின் கீழே தொட்டுப்பார்த்தாள். அவளின் சிறுநீர்ப்பாதையிலிருந்து ஆரம்பித்து யோனி தாண்டிப் பரவியிருந்தது பாம்பின் ஈரம். 

மாரி இறக்கும்போது அவளுக்கு வயது 80.
.


 




























     

கதிரேசன் வாத்தியாரின் இன்னொரு பெயர்


கதிரேசன் வாத்தியாரின் இன்னொரு பெயர்





ஒருவாரம் அம்மாவுக்கு போன் செய்யாமல் இருந்துவிட்டால் போதும். உடனே பிபி ஏறி , சுகர் கூடி, கொலஸ்ட்ரால் அதிகமாகி ஆஸ்பத்திரியில் அட்மிட் என்று அப்பாவிடமிருந்து போன் வரும். அதனாலேயே இந்த ஒரு வருடமாக வாரம் ஒரு முறை அம்மாவுடன் போனில் பேசிவிடுவதுண்டு. எனக்குப் பகிர்ந்துகொள்ள எதுவுமில்லையென்றாலும் அம்மா என்னிடம் பேச வாரம் முழுவதும் வாழ்க்கையை சேமித்து வைத்திருப்பாள். நான் துபாய்க்கு வந்ததிலிருந்து  அம்மா என் கல்யாணப் பேச்சை எடுக்காமல் இருந்ததில்லை. ‘’ டேய் கார்த்தி...கும்பகோணத்திலேர்ந்து ஒரு வரன் வந்திருக்கு. போட்டோ பார்த்துட்டு எப்படியிருக்குன்னு சொல்றியா?’’ இதில் கும்பகோணம் என்பது மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை என்று மாறுமே தவிர மற்ற வார்த்தைகள் எல்லாம் மானே தேனே பொன்மானேதான். அம்மாவல்லவா. அப்படித்தான் பேசுவாள். ‘’ அதுக்குள்ள ஏம்மா...நான் இங்க வந்ததே சம்பாரிக்கத்தான். சம்பாரிச்சிட்டு சொல்றேன். அப்ப எந்தப் பொண்ணா இருந்தாலும் ஓகேதான்’’ இது எனது மானே தேனே பொன்மானே. இன்று போனில் பேசும்போதுதான் இடையில் அதைச் சொன்னாள். ‘’ கதிரேசன் வாத்தியார் சீரியஸ்னு ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணிருக்காங்கடா’’ புரியாமல் ‘’ எந்தக் கதிரேசன்?’’ என்றேன். ‘’ டேய். உன் கணக்கு வாத்தியார்டா’’ எத்தனையோ கணக்கு வாத்தியார்கள். யாரை ஞாபகம் வைத்துக்கொள்வது. ‘’ தெரிலம்மா... ம் சொல்லு’’ என்றேன் அசிரத்தையாக. ‘’ அட... நீங்கள்லாம் இன்னொரு பேரு வெச்சி அவரைக் கூப்புடுவீங்கள்ல, நம்ம வீட்டு எதிர்ல குடியிருந்தார்ல... அவர்டா’’ எனக்கு ஞாபகம் வந்துவிட்டது. கதிரேசன் சார், கணக்கு சார். கூடவே அந்த இன்னொரு பெயர். ‘’ ஆமாம்மா. என்னாச்சி அவருக்கு?’’ என்றேன். வெளிச்சம் ஊடுருவி பனி விலக்கி சாலை தெரிவதுபோல் பளிச்சென்று எல்லாம் ஞாபகத்துக்கு வந்துவிட்டது. 

நான் நேரடியாக ஒன்றாம் வகுப்புக்குள் நுழைந்தவன். எல்கேஜி, யூகேஜி அனுபவமெல்லாம் கிடையாது. அதனாலோ என்னவோ பள்ளியின் முதல்நாள் என்பது அத்தனை பயமாய் இருந்தது. அதற்கேற்றார்போல் ஆஜானுபாகுவாய் அறிமுகமானார் என் வகுப்பு வாத்தியாரான கதிரேசன். வேட்டி கட்டியிருப்பார். குறிப்பிட்டுச் சொல்லக் காரணம் பள்ளியில் மற்ற ஆசிரியர்கள் மட்டுமின்றி எனக்குத் தெரிந்த ஆசிரியர்கள் அனைவரும் பேண்ட் போட்டிருக்க இவர் மட்டும் வேட்டி கட்டியிருந்ததில் அந்த 40 வயதிலேயே மிக வயதானவராகத் தோற்றமளித்தார். அப்படி ஒரு பருமனான உடம்பு. முகத்தில் கவலையும் சிடுசிடுப்பும் ஒருசேர தேங்கியிருக்கும். பம்மிய கன்னங்களில் அணிந்திருக்கும் கண்ணாடியின் தழும்பு பதிந்திருக்கும். கதிரேசன் சார் எங்களின் கவனத்துக்கு அதிகம் வந்ததற்கு அவரின் உருவமோ, வேட்டியோ, பிரம்பால் எங்கள் விரல்களில் பியானோ வாசிப்பதோ இல்லை. இன்னொரு முக்கியக் காரணம் . ஒருநாள் நாராயணன்தான் அதைக் கண்டுபிடித்துச் சொன்னான். " கார்த்தி...கதிரேசன் சார் கோவணம் கட்டியிருக்கார்டா." இதிலொன்றும் அதிசயமில்லை. எங்கள் ஊரில் வயதானவர்கள் கோவணம் மட்டுமே அணிந்து வயல் வேலைக்குச் செல்வதைப் பார்த்திருக்கிறேன். அடுத்து அவன் சொன்ன செய்திதான் அவரைத் தனி ஒருவனாக்கியது. " ஒண்ணுக்குப் போறதுக்குக் கீழ பெருசா இருக்குடா கார்த்தி" என்றான். " என்னடா ஒளர்றே" என்றேன் நிஜமாகவே புரியாமல். " ஆமாண்டா. அன்னிக்கி ஒண்ணுக்கிருக்கும்போது பார்த்தேன். பின்னாடி கோவணத்த அவுத்து வுட்டுட்டு ஒக்காந்திருந்தாரா...கறுப்பா பெருசா பாறாங்கல்லு மாதிரி தரைல ஒக்காந்துருந்துடா." " நெஜமாவாடா" என்றேன் சிரிப்பை அடக்க முடியாமல்.

கதிரேசன் வேட்டி கட்டுவதற்குக் காரணம் புரிந்துபோனது. அவர் அடிவயிற்றுக்குக் கீழே எப்போதும் புடைத்துக்கொண்டு தெரியும் வேட்டி. நாராயணன் சொன்னபின்பு வகுப்பில் இருக்கும் அனைவரின் பார்வையும் அங்கேதான் இருக்குமே தவிர அவர் நடத்தும் பாடத்தில் இருக்காது. என் பாட்டி கையில் பிடித்துக் கொஞ்சுவதால் ஒண்ணுக்குப் போகும் இடத்தை குஞ்சுமணி என்று முன்பே அறிந்திருந்த எனக்கு அதன் கீழ் உள்ளது விரைகள் என்பதைத் தெரிந்துகொள்ள ஆறாம் வகுப்புக்குச் செல்லும்வரை காத்திருக்க வேண்டியதாயிருந்தது. ஆறாம் வகுப்புக்குச் செல்லும்போது என்னுடன் இணைந்தான் அவர் மகன் . பெயர் வினோத். ‘’ வினோத். ஒங்கப்பாவுக்கு ஏண்டா அப்படியிருக்கு?’’ என்றால் ‘’ எப்படியிருக்கு. தெரியலையே... ஆனா, அதனால டெய்லி எங்கம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை வரும்’’ என்றான். எங்களுக்கு அது புதுத் தகவல். டிராயரிலிருந்து பேண்ட்டுக்கு மாறிய தைரியத்தில் என் அப்பாவிடம் கேட்டேன். ‘’ அதை ஓதம்னு சொல்வாங்கப்பா. சின்ன வயசுல அங்கே அடிபட்டு கவனிக்காம விட்ருந்தா வீங்கிடும்ப்பா. இல்லாட்டி நீர் கோத்திருந்தாலும் அப்படியிருக்கும்.’’ ‘’ வலிக்குமாப்பா’’ என்றதற்கு ’’ தெரியல. ஒனக்கு எதுக்கு அது. அவரையெல்லாம் கிண்டலா பார்க்கக் கூடாது’’ என்று என்மீது கோபமான அப்பாதான் டீக்கடை பெஞ்சுக்காரர்களிடம் ‘’ யாரு அந்த ஓதப்புடுக்கானா?’’ என்று அடையாளப்படுத்தி குறிப்பிட்டு வெடித்துச் சிரித்தார். ஓதப்புடுக்கான். கதிரேசன் சாரை நேருக்கு நேர் பார்க்கும்போதெல்லாம் அந்தப் பெயரே மனதில் வந்துபோனது. நான் வளர்ந்தேன். கதிரேசன் சாருக்கும் வளர்ந்ததுபோல்தான் இருந்தது. வீட்டுக்குள் நடந்துவந்த கணவன் மனைவி பிரச்னை வீதிக்கு வந்தபோது அது உறுதியானது.

கோடை விடுமுறை நாட்களில் அவர் வீட்டுக்கு விளையாடப் போகும்போதெல்லாம் , எங்கள் கண்ணெதிரிலேயே வினோத்தை கன்னாபின்னாவென்று திட்டிவிட்டு தன் மனைவியை அழைத்துக்கொண்டு அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொள்வார். சிறிது நேரத்தில் அந்த வீட்டைவிட்டு வெளியேறும் அந்த அம்மாவின் அலறல். அக்கம்பக்கத்தில் அது வேறுவிதமாய் புரிந்துகொள்ளப்பட்டது. ‘’ ஓதப்புடுக்கானுக்கு ரொம்பத்தான். பகல்லையும் அவனுக்கு அது தேவைப்படுதுபோல. பாவம் அந்தம்மா. அவன் கையில மாட்டிக்கிட்டு என்ன பாடுபடுறாங்களோ’’ கதிரேசன் சார் இருந்தது வாடகை வீடு. வீட்டின் பின்புறம் வேலை என்று அந்த ஹவுஸ் ஓனர் வீட்டின் வாசலில் செங்கல் அடுக்கி ஆற்று மணலைக் கொட்டி வைத்திருந்தார். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அந்தச் செங்கல்லும் மணலும் அப்படியே இருந்தது; மழையில் கரைந்து வெயிலில் காய்ந்து. 50 வயதில் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டார் கதிரேசன் சார். வீட்டில்தான் இருந்தார். அதிகம் வெளியில் தென்படுவதில்லை. ஆனால் அது எதற்கென்று சில நாட்களில் புரிந்துபோனது. கதிரேசன் சாருக்குதான் 50 வயது. உடலும் நடையும் எடையும் ராட்சசனாய்க் காட்டும். அவர் மனைவி அப்படியே நேர் எதிர். இருவருக்கும் வயது ரீதியாக  நிறைய வித்தியாசம். மாணவர்களிடம் கத்திக் கத்தியே கதிரேசன் சாருக்கு கம்பீரமான குரல். குரலில் மட்டுமே கம்பீரம். ‘’ நல்லாத்தானடி இருந்தேன். இந்தப் பாழாப்போன இம்சை வந்து எல்லாத்தையும் நாசமாக்கிடுச்சி. அது என் தப்பா?’’ ஊரடங்கிய தனி இரவில் அவர் குரலின் இயலாமை அந்த அம்மாவின் காலில் விழுந்து கெஞ்சும். கேட்க பாவமாயிருக்கும். கதிரேசன் சாருக்கு நெருங்கிய நண்பர்கள், மனிதர்கள் எனக்குத் தெரிந்து இல்லை. இந்த ஒரு விஷயத்துக்காகவே அவர் யாரையும் அருகில் சேர்த்துக்கொள்ளவில்லையோ என்றும் தோன்றியது. கடும் மன உளைச்சலில் இருந்த அவருக்கு ஆறுதல் சொல்லக்கூட யாருமில்லை. பத்தாம் வகுப்புக்குச் சென்றபோது கதிரேசன் சார் அவர் மகன் வினோத்தை பக்கத்து ஊர் ஸ்கூலில் கொண்டுபோய் சேர்த்தார். சாரும் அவரின் மனைவியும் தனியானார்கள். அவர்கள் இருவருமே தனித்தனியாகத்தான் இருந்தார்கள். கதிரேசன் சாருக்கு தன் நோய்மையின் பொருட்டு தன் மனைவிமீது சந்தேகம் அதிகமிருந்தது. அவ்வப்போது வெளிப்படும் ஆத்திரக் குரலில் அது பிரதிபலித்தது. 

ஒருநாள் மதியம் அவர் வீட்டு வாசலில் பைக்கொன்று நிற்பதைப் பார்த்தேன். சிறிது நேரத்தில் என் வயதொத்த ஒருவன் அந்த பைக்கை ஸ்டார்ட் செய்து விரைந்தான். அன்றிரவு தற்கொலைக்கு முயன்றார் கதிரேசன் சாரின் மனைவி. சார் அலறிய அலறலில் விழித்து எழுந்து ஓடிப்போய் பார்த்தோம் நாங்கள். உத்தரத்தில் கயிறு தொங்கிக்கொண்டிருக்க , மயங்கியிருந்த தன் மனைவியை மடியில் போட்டு அழுதுகொண்டிருந்தார் கதிரேசன் சார். என் அம்மாதான் சாரின் மனைவி முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவித்து கலைந்திருந்த ஆடையை சரி செய்தார். தலையில் கை வைத்துக்கொண்டு ஓரமாய் உட்கார்ந்திருந்த கதிரேசன் சாரின் வேட்டி விலகியிருந்ததில் கோவணம் கட்டாதது தெரிந்தது. என்ன நடந்திருக்குமென்று எங்கள் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் எதுவும் கேட்காமல் வந்துவிட்டோம். ஆனாலும், அன்றிரவு தூக்கம் தொலைந்துபோனது. வீட்டு வாசலில் கொட்டப்பட்டிருந்த மணலில் உட்கார்ந்தபடி விடிய விடிய அழுதுகொண்டிருந்தார் கதிரேசன் சார். என் அம்மா மறுநாள் சார் வீட்டுக்குச் சென்று அவர் மனைவியைப் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு வந்தார். ‘’ அவர்கிட்ட படிச்ச பையன் அவரைப் பார்க்கணும்னு வந்தான். நல்ல மார்க் எடுத்துருக்கேன்னு சொல்லி ஸ்வீட் பாக்ஸ் கொடுத்துட்டுப் போனான். அது தெரிஞ்சி நைட் சண்டை. நான் என்ன சொல்லியும் நம்பல’’ அழுதுகொண்டே அவர் மனைவி சொன்னதை அம்மா, அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். கோவணம் கட்டாமல் நெகிழ்ந்துகிடந்த கதிரேசன் சாரின் வேட்டி எனக்கு இரவின் இன்னொரு பாதியைச் சொன்னது. அதன்பின்பு மேலும் ஒடுங்கிப் போனார் கதிரேசன் சார். அவர் மனைவிக்காவது ஆறுதல் வார்த்தைகள் பேச என் அம்மா இருந்தாள். கதிரேசன் சாருக்கு யார் என்னவென்று ஆறுதல் சொல்வது. அம்மாவிடம் கதிரேசன் சார் மனைவி சொல்வதை அம்மா, அப்பாவிடம் சொல்லும்போதெல்லாம் படிப்பது போன்ற பாவனையில் காதைத் தீட்டிவைத்துக்கொண்டு ஒட்டுக் கேட்டதன் பலன் கதிரேசன் சாரின் முன் வாழ்க்கை தெரிந்தது. 

கதிரேசன் சாருக்கு மிகத் தாமதமாகத்தான் திருமணம் ஆகியிருக்கிறது. வினோத் பிறக்கும்வரை பிரச்னையில்லை. அதன்பின்பு எப்படியோ இந்த பாரம் வந்து சேர எவ்வித சிகிச்சைக்கும் பலனளிக்காமல் வளர்ந்துகொண்டே போயிருக்கிறது. கதிரேசன் சாருக்கும் அவர் மனைவிக்கும் நிம்மதி குறைந்துகொண்டே போயிருக்கிறது. உறவில் ஈடுபட முடியாத அவரின் இயலாமையைத் தன் மனைவியிடம் வெவ்வேறு வடிவங்களில் காட்டத் தொடங்கியிருக்கிறார். அது ஒன்றும் மறைத்து வைக்கக்கூடிய விஷயமில்லையே. எங்கே சென்றாலும் அவர் இயலாமையின் மொத்த வெளிப்பாடு துருத்திக்கொண்டு தெரிய, அவமானத்தில் சுருங்கிய கதிரேசன் சார் தன்னை, தன் நட்பு வட்டாரத்தை, தன் ஆசைகளை எல்லாம் சுருக்கி சின்ன வட்டத்துக்குள் வாழத் துவங்கியிருக்கிறார். அம்மா சொன்னதைக் கேட்டதும் கதிரேசன் சார்மீது தாள முடியாத இரக்கம் ஏற்பட்டது. அவரிடம் சென்று உங்கள் மீது இரக்கம் கொள்கிறேன் என்பதே அவரை உயிரோடு கொல்லும் ஒன்று. ஒருநாள் செகண்ட் ஷோ சினிமா முடிந்து திரும்பும்போது தன் வீட்டு  வாசலில் கொட்டப்பட்டிருந்த ஆற்று மணல் மீது கதிரேசன் சார் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். கோடைக்காலம் என்பதால் புழுக்கம் தாளாமல் வெளியே வந்து அமர்ந்திருக்கிறார் என்று நினைத்தேன். தளர்ந்த மார்புகள் அவருடைய பெரிய தொப்பையின் மேல் விழுந்து படிந்திருந்தன. தெருவிளக்கின் வெளிச்சத்தை, அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கற்கள் சாரின் மீது முழுவதும் படியவிடாமல் அங்கங்கே மறைத்திருந்தன. சார் வினோதமான காரியம் ஒன்றைச் செய்துகொண்டிருந்தார். கால்கள் இரண்டையும் அகலவிரித்து தன் இடது உள்ளங்கையில் அவரின் பருத்த பெரிய சைஸ் விரைகளைத் தாங்கியிருந்தார்.  வலது கையில் ஆற்று மணல் அள்ளி விரைகளின் மீது வைத்து சரசரவெனத் தேய்த்துக்கொண்டிருந்தார். அவரின் முகம் முழுவதும் இருளில் இருக்க அவ்வப்போது வெளிச்சத்துக்கு வந்து மீளும் சில நொடிகளில் அவரின் கண்ணீர் தெரிந்து மறைந்தது. நாய்க்குட்டி முனகுவது போன்ற ஒலியுடன் அழுதுகொண்டிருந்தார். புழுக்கம் வெளியில் இல்லை என்பது தெரிந்தது. இப்படிச் செய்வதன் மூலம் எதனிலிருந்தோ விடுபட நினைக்கிறார் என்பது மட்டும் புரிந்தது. என் வருகையை அவர் லட்சியம் செய்ததுபோல் தெரியவில்லை. தெருவில் நடமாட்டம் ஓய்ந்த நிசியில் கதிரேசன் சார் மட்டும் அவருக்கே தெரியாதபடி அழுதுகொண்டிருந்தார். எவ்வளவு நேரம் அப்படியிருந்தாரென்று தெரியவில்லை. மறுநாள் ஆச்சர்யமாய் கதிரேசன் சார், வாசலில் நின்றிருந்த என் அப்பாவிடம் வந்து ‘’ ருசி என்னன்னே தெரியாம ஒரு உணவைச் சாப்பிடுறது கொடுமை சார்’’ என்றார். என் அப்பா பதிலுக்கு ஏதோ சொல்லும் முன்பே நகர்ந்துவிட்டார். கதிரேசன் சார் எவ்வித பதிலையும் யாரிடமும் எதிர்பார்க்காமல் வாழ்ந்துகொண்டிருந்தார். 

வினோத் வீட்டுக்கு வந்திருந்த ஒருநாள் இரவில் கதிரேசன் சாருக்கும் அவர் மனைவிக்கும் சண்டை நடந்தது. வீடுதாண்டி வெளியில் வந்த இருவரின் வாக்குவாதத்தில் குறுக்கிடாமல் கண்ணியம் காத்தோம். மறுநாள் விடிந்ததும் எங்களை வந்து அடைந்தது கதிரேசன் சார் மனைவி இறந்துவிட்ட தகவல். துக்கத்துக்கு வந்திருந்த ஊர் கதிரேசன் தொல்லை தாளாமல் அந்த அம்மா தற்கொலை செய்துகொண்டுவிட்டதாகவும், கதிரேசன் சார்தான் ஆத்திரத்தில் அவர் மனைவியைக் கொன்றுவிட்டதாகவும் கதைகள் பேசிப்போனது. நெஞ்சுவலி வந்து இறந்துபோன கதிரேசன் சாரின் மனைவியை எல்லோரும்  சேர்ந்து எரித்துவிட்டு வந்தோம். வினோத்துக்கு ஆறுதலாய் நான் இருக்க, துளிக் கண்ணீர்கூட சிந்தாத கதிரேசன் சாரின் உள் அழுத்தம் எரியாமல் இருந்தது. சில நாட்களில் கதிரேசன் சார் வீட்டைக் காலி செய்தார். இதே ஊரில் எங்கேயோ இருக்கிறார் எனக் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால், அதன் பின்பு அவரை நான் பார்க்கவில்லை. நடுவில் ஒருமுறை வினோத்தை மட்டும் பஸ் ஸ்டாப்பில் வைத்துச் சந்தித்தேன். அத்தை வீட்டில் தங்கி டிகிரி படிப்பதாய்ச் சொன்னான். அவனிடமும் உன் அப்பா எப்படியிருக்கிறார் என்று கேட்கவில்லை. விடை தெரிந்த கேள்விகள் கேட்கப்படாமல் இருத்தலே நலமெனப் பட்டது.  அவ்வளவுதான். காலேஜ், படிப்பு, வேலை , வெளிநாட்டுப் பயணம் என்பதில் சுத்தமாய் அப்படி ஒரு ஜீவன் வாழ்வதையே மறந்துபோனேன். இன்றைய போன்காலில் அம்மா எல்லாவற்றையும் ஞாபகப்படுத்திவிட்டாள். சீரியஸாய் இருக்கும் கதிரேசன் சார் நலமடைந்துவிட்டாரா என்று நாளை போன் செய்து அம்மாவிடம் கேட்க வேண்டும்.
.