Tuesday 18 September 2018

துர்சலை

துர்சலை









இரவுக் காற்றுக்கென்று தனி இசையுண்டு. தடாக நீரின் சிகை கலைத்து விளையாடிக்கொண்டிருந்தது விளையாட்டுப் பிள்ளையின் குதூகலத்துடன். காற்றின் மெல்லிய வருடலில் நீரில் மிதந்துகொண்டிருந்த முழு மதி நெளிந்து நெளிந்து தடாகப் படியைத் தொட்டு மீண்டுகொண்டிருந்தது. 

'' உங்கள் கண்களில் தெரியும் சோர்வினைப் பார்த்தால் இரவுறக்கம் இன்று தள்ளிப்போகும்போல் தெரிகிறது துர்சலை'' என்றாள் மாதங்கி. துர்சலை வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்திருந்தாள். ஒரு முழு நீள துகில். அவ்வளவுதான். அதைத்தான் உடம் முழுவதும் சுற்றியிருந்தாள். தான் அமர்ந்திருந்த இடம் வரை தன்னிருப்பை படரவிட்டிருந்த நிலவொளியைத் தன் வெண் சங்குநிற பாதத்தால் நிரடியபடி சொன்னாள். '' ஆமாம். இன்று நான் இரவு நீராடல்கூடப் புரியப் போவதில்லை'' குரலில் கிளர்ந்த அலட்சியப் பெருமூச்சுக்கு தடாகத்தினை ஒட்டி வளர்ந்திருந்த மரமொன்றிலிருந்து மலர் உதிர்ந்தது. உடன் அப்பிரதேசமெங்கும் சுவாசம் நிறைக்கும் பரிமளமொன்று எழுந்து அலைந்தது. இடைப்பகுதியை இறுக்கியிருந்த வெண்ணிற ஆடையை சற்றே நெகிழ்த்தினாள் துர்சலை. 

'' இதென்ன அரசகுலத்தில் இல்லாத புது வழக்கம். இளவரசி இப்படி நடந்துகொண்டால் குழைத்த சந்தனமும் தயாரான அகிற்பொடியும் தங்கள் ஜீவனை மறந்தல்லவா போகும்?'' என்றாள் மாதங்கி. அப்போது அவளின் வலதுகரம் துர்சலையின் தோள் தொட்டபடியிருந்தது. '' துரதிருஷ்டமான விதி போலும். சந்தனத்துக்கும் அகிற்பொடிக்கும் கவலைப்படுபவர்கள் அதன் ஆயுளை அனுபவிப்பர்களின் மனநிலையை ஏனோ புரிந்துகொள்வதில்லை'' துர்சலையின் இமைக்கா விழிகள் நனைந்த முழு நிலவை உற்று நோக்கிக்கொண்டிருந்தன. '' என்ன துர்சலை. சில நாட்களாகப் புதிரின் வழியே நடமாடிக்கொண்டிருக்கிறீர்கள்?'' ஆச்சர்யமானாலும் வினாவில் துயரம் ஒளிந்திருந்தது. '' என் அந்தரங்க வடு அறிந்தவள் நீதானே மாதங்கி. உனக்குமா எனது வாதை புரியவில்லை. அஸ்தினாபுரமோ, காண்டவப் பிரஸ்தமோ மாறினாலும் மாறாதது இந்தச் சாபம்தானே...''குழப்பமாய் புருவம் நெறித்த மாதங்கியின் நுதலிலிருந்து காய்ந்த சந்தனம் உதிர்ந்தது. '' உங்களுக்கென்ன வருத்தம். நூறு சகோதரர்களுக்கும் ஒரே சகோதரி என்ற கொடுப்பினை யாருக்கு வாய்க்கும் துர்சலை. இது முன்ஜென்மப் புண்ணியம்'' அவசரமாக மறுத்தாள். '' இல்லை மாதங்கி. இது இப்பிறவிச் சாபம். நூறு பேர்களுக்குப் பிறகான மிச்சம்தானே நான். என் மூத்த குடிமகள் வானதி வழி வந்த சாபம்தான் என் நாழிகைகளில் எந்தவோர் ஆடவனும் இடம் பெறாமல் போனது போலும்''துர்சலையிடமிருந்து பெருமூச்சு வெளிப்பட்டு அணிந்திருந்த ஆடையைக் கருக்கியது. 

'' புதிராக வாழ்கிறேன் மாதங்கி. கண்களை மூடினால் ஏதாவது ஒரு குறுநில மன்னனை வெல்ல களத்தில் வாள் பிடித்து நிற்பதுபோன்ற காட்சிதான் வருகிறது. இரவுறக்கத்தில் வரும் கனவுகள் உன்னிடம்கூட சொல்ல முடியாதவை மாதங்கி'' கண்ணீர் திரண்டு வழிந்து கனவைப் பேசியது. '' அது ஓர் அழகிய நந்தவனம். மலர்களின் அளவோ அங்கிருக்கும் மலர்ச்செடிகளையே மறைத்தபடி மிகப் பெரியதாகவும் நுரையீரல் ஆழம் சென்று படியும் பரிமளத்துடனும் வீற்றிருக்கிறது. இப்போதுகூட என் நாசியில் உறங்கிக்கொண்டிருக்கிறது அம்மலரின் நறுமணம். மெல்லிய துகில் அணிந்து நந்தவனத்தின் ஊடே நடந்துகொண்டிருக்கிறேன். ஒரு மலருக்குப் பின்னால் ஓர் ஆடவன் மறைவது கண்களுக்குத் தெரிகிறது. எனக்குள் ஓர் உற்சாகம். அவனைத் தேடி அலைகிறேன். மிக அகலமான தோள்கள், பின்புறத்திலிருந்து பார்க்கும்போதே திரண்ட அவன் புஜங்களும் இறுகிய மார்பின் ஓரங்களும் தெரிந்து தெரிந்து மறைகின்றன. பரந்த முதுகைத் தழுவியபடி நீண்ட கறுஞ்சிகை. காற்றில் ஆட ஆட மலரின் மணம் என்னை அவனை நோக்கித் தள்ளுகிறது. வானமே புதிதாய் ஒரு வண்ணத்தில் கிடந்ததுபோல் ஒரு நினைவு. என்ன ஓர் ஆச்சர்யம். அவனை நான் நெருங்க நெருங்க அவன் விட்டு விலகி தூரம் செல்கிறான். என் பார்வையில் படுவதெல்லாம் அவன் சிகையும் அது அலையாடும் விதமும். நான் அவனை நோக்கி ஓடத்துவங்குகிறேன். என்னுடம்பில் வியர்வை அரும்பத் தொடங்குகிறது. காற்ரில் மிதந்த மணத்தை மாற்றுகிறது என் வியர்வையிலிருந்து வெளிப்படும் கற்பூரம் கரைந்த காமத்தின் மணம். அத்தனை வெப்பமாய் நந்தவனத்தையே எரிக்கும் மணம் அது. ஒரு நிலையில் கண்ணீர் திரள அவனை நோக்கி விரைகிறேன். கரங்களில் அவன் சருமத்தினை உணரும் வேளை என் விரல் வலி காமம் வழிவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.  அவனைத் தொட்டுத் தழுவி என்னிதழ் பதிக்கிறேன் அவன் பின்னங்கழுத்தில். முகம் காணும் ஆவலில் என்னிதழ்கள் துடிக்க அவனை என் பக்கம் வளைக்கிறேன். அந்த முகம்...அந்த முகம்...'' வழியும் கண்ணீருடன் துர்சலை போராடிக்கொண்டிருந்தாள். நெற்றியில் அரும்பி துளிர்த்த அவளின் வியர்வைத் துளிகளை தன் ஆடையால் ஒற்றித் துடைத்தவாறு மாதங்கி '' துர்சலை...துர்சலை...'' என்று தோள் அசைத்தாள். இமைகளைத் திறந்த துர்சலை '' அது என் சகோதரன் மகாபாகு '' என்றாள். '' எங்கு நோக்கினும் ஆடவர்கள். ஆனால், அத்தனை பேரும் என் சகோதரர்கள் என்றால் எனக்கான ஆடவனை எப்படி நான் கற்பனை கொள்வது?'' துர்சலையின் சொற்கள் வறண்டு வெளிப்பட்டன. '' சற்றே எழுந்து வாருங்கள். தடாகம் சுற்றி வரலாம்'' மாதங்கியின் கைபிடித்து எழுந்த துர்சலை இடையிலிருந்து தளர்த்தியிருந்த ஆடையை சிறு முடிச்சிட்டு இறுக்கினாள். நடந்தவாறு பேசினாள். '' ஒவ்வொரு சுயம்வரத்திலும் இதுதான் நடக்கிறது. எல்லா ஆண்களும் இப்படி என் சகோதரர்களில் எவரையாவது நினைவில் கொண்டுவந்தால் எனக்கென்று எவரை நான் உணர்வது. ஆழி நடுவில் நெடுந்தாகத்துடன் கடற்பயணம் மேற்கொள்பளின் நிலைமையடி எனக்கு.'' தடாகம் அருகில் வந்ததும் நின்று நிமிர்ந்து வான் நோக்கினாள். முழு நிலவு நாள். கூடுதலாய் வெண்ணிற ஒளியில் ஆடையொன்றை போர்த்திக் கிடந்ததுபோல் ஆகாயம். '' துளி முகிலற்ற ஆகாயம் விண்மீன்கள் கொண்டு சமநிலைப்படுத்திக்கொள்கிறது. அப்படி ஒரு வாய்ப்பும் இல்லா வெற்று ஆகாயம் நான். வானதி, அம்பை வழியின் சாபம்தானே என் தந்தையின் பிறப்பு. ஈருடல்கள் ஒற்றைக் காமத்தில் கூடிக் களித்து அதன்வழி பிறப்பதுதானே இன்பமும் சிசுவும். இங்கு எந்தப் பெண்ணிற்கு அது சீராக வாய்த்தது. மனமுவந்து தன்னுடல் ஈந்திருக்கும்  கூடலில் கண் மூடியிருக்க மாட்டாள் என் முது கிழவி. கர்ப்பம் கண் மூட என் தந்தைக்குக் காட்சிகள் மூடப்பட்டன. நியாயமாய் அவள் தன் சுவாசத்தைத்தானே மூடியிருக்க வேண்டும். அப்போதே எல்லாம் மாறிவிட்டது. அது நூற்றுஒன்றாக என் சிரசில் படிய வேண்டுமென்பது விதி'' மேல் வரிசைப் பற்களால் உதடு கடித்து அழுகையை அடக்கினாள் துர்சலை. மாதங்கியின் வலதுகரம் துர்சலையின் இடது உள்ளங்கையை இறுகப் பிடித்தது. '' என் உலகம் ஆண்கள் நிறைந்ததாயிருக்கிறது. ஆனால், நான் எந்த ஆணுடனும் இல்லை. என் கனவில் நான் மட்டுமே இருக்கிறேன். முத்தம் என்றால் எப்படியிருக்குமென்று எம் குலப் பெண்கள் எவருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை மாதங்கி. நான் மட்டும் விதிவிலக்கா?'' பேசிக்கொண்டே தான் அணிந்திருந்த ஆடையின் இடை முடிச்சை நீக்கினாள். நெகிழ்ந்த ஆடை குவியலாக அவள் காலடியில் விழுந்தது. துர்சலையின் மார்புகளின் திரட்சியினைக் கவனித்தவாறே மாதங்கி தன் கரம் நீட்ட அதைப் பற்றியபடி தடாகப் படியில் கால் வைத்தாள் துர்சலை. '' முன்னிரவு நாழிகை கடந்துவிட்டது துர்சலை'' என்றாள் மாதங்கி. '' என்னுடலுக்கு இந்நீர்தான் இப்போதைக்கான ஆண் மாதங்கி. எத்தனை சுதந்திரமாய் என் வெப்பம் தீண்டுகிறது. நீருக்குள்ளிருக்கும் கணம்தான் நான் முழுமையான பெண்ணாக என்னை உணர்கிறேன். நீ சந்தனம் கொண்டுவா. நான் என்னுடலுடன் பேசிவிட்டு வருகிறேன்'' அடுத்த படியில் கால் வைத்தவள் நிர்வாணமாய் நீருக்குள் மூழ்கினாள். நிலா உடைந்து உடைந்து ஒன்று சேர்ந்துகொண்டிருந்தது.
.      

No comments:

Post a Comment