Tuesday 17 July 2012

குறும்பட விமர்சனம்



  
ஒரு குடியின் பயணம் -
குறும்படம் -
இயக்கம் இசாக்
 [பத்து நிமிடம்]
                                                             பயணப்படுவதற்குமுன்.....
 
பெரும் பங்களாக்களின் ஆடம்பர விருந்துகளில்,உயர் கனவான்களின் பிறந்த நாள், இறந்த நாள் விழாக்களில் மது அருந்துவது எப்போதும் பணக்கார நாகரீக அடையாளமாகவே உள்ளது.ஆனால் மது அருந்துவது நாட்டுக்கு,
வீட்டுக்கு, உயிருக்கு கேடு என்று அச்சிடப்பட்ட மது பாட்டில்களை அரசாங்கமே விலை போட்டு விற்கும் போது சாமானியன் அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்றுசெல்லத் துவங்குகிறான்.கொஞ்சம் கொஞ்சமாக மதுவுக்கு
அடிமையாகும் மனிதன் தன்னை மறக்கிறான் முதலில்.பின் குடும்பத்தை. அதன் பின் நாட்டை. இதைத்தானே  அரசாங்கமும் விரும்புகிறது. 
 
முன்னொரு காலத்தில் கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடும் ஏழை மக்கள் தங்கள் உடல் களைப்பினை  போக்கிக்கொள்ள சிறிது மது அருந்திவிட்டு உறங்கிப் பின் உற்சாகமாய் எழுந்து மறுநாள் வேலையைத் தொடர்வது அவர்களின் வாழ்வினில் அத்தியாவசியமான  ஒன்றாயிருந்தது.விடிய விடிய  வேஷம் போட்டு கூத்துக்கட்டி ஆடும் கலைஞர்கள் தங்கள் தீராத உடல்வலியைப் போக்கிக்கொள்ள சிறிது மது அருந்துவதாக  கூறியுள்ளார்கள்.கொம்பு என்ற இசைக்கருவியை இசைக்கும் கலை ஞர்கள் மிகுந்த மூச்சு  செலவிட்டு [தம் கட்டி ]கொம்பினைஊதகொஞ்சம்மதுஅருந்துவது உண்டு 
என்கிறார்கள்.இப்படி மது அருந்துவது ஆடம்பர மேட்டிமைத்தனமாகவும்,உடல் வலி போக்கும் மருந்தாகவும் இருந்து வந்தது எப்போது 
தன் முகம் மாற்றியது?
மதுவைக் களைப்பினை போக்கி உற்சாகம் தரும் ஒன்றாகக் கருதாமல் மனிதன் தன் கவலைகளை மறக்கடித்து மயக்கத்தில் ஆழ்த்தும் போதை வஸ்துவாக உபயோகிக்கத்தொடங்கினானோ  அப்போதே மது தன் ருசியை மாற்றிவிட்டது.சிறிய கவலைக்கு குவாட்டர் , அதைவிட சற்றுப் பெரிய கவலைக்கு ஆப் மிகப்பெரிய கவலைக்கு புல் என்றாகி இப்போது ஏழைகளின் வாழ்வு முழுவதையுமே புல்லிற்கு விற்கப் 
பட்டாயிற்று.தினம்  குடிக்காவிட்டால் நடுங்கும் விரல்கள்,பெருக்கெடுக்கும் 
கோபம்,பேதலிக்கும் புத்தி  என குடிகாரர்களின் உலகம் மிக கவலைக்குள்ளாகி கேள்விக்குறியினை சுமந்தபடி போதையில் புரள்கிறது.
 
இதில் இசாக்கின் 'ஒரு குடியின் பயணம்'   குறும்படம் எங்கே வருகிறது?
 
கள்ளுண்ணுதல்  கற்காலத்திலேயே தமிழன் பண்பாடென்று சமாதானம் கூறி அரசாங்கம்  வீதிகள் தோறும் திறந்து வைக்கும் மதுபானக்கடைகளில் வருமானம் பெருக்கெடுத்துப்  பொங்குகிறது. மது நிரம்பிய குடிசையில் எழும் மரணத்தின் ஓலம் குடித்தவன் செவிகளுக்கு எட்டாமலே போய் விடுகிறது.
உலகம் போதையில் இருக்கிறது உறவுகளை நடுத்தெருவில் நிர்க்கதியாய் விட்டபடி....
 
இனி இசாக்கின் 'ஒரு குடியின் பயணம்' குறும்படத்துக்குள் ஒரு பயணம் செல்வோம்...
 
முதல் காட்சியில் பஸ்ஸில் பயணம் செய்யும் பெண் காட்டப்படுகிறாள்.முகம் இறுக்கத்திலிருக்க தோளில் சாய்ந்தபடி குழந்தை தூங்கிகொண்டிருக்கிறது.விரையும் பஸ்சின் பயணத்தில் இருள் மூட 'தமிழ் அலை ஊடகம் 'வழங்கும் 'ஒரு குடியின் பயணம்' என எழுத்து தோன்றி மறைகிறது.அடுத்து வெளிச்சமாய் விரியும் காட்சியில் ஒரு குடிசை. குடிசை முன்பு பஸ்ஸில் பயணம் செய்த பெண் சம்மணமிட்டு அமர்ந்தபடி அழுது கொண்டிருக்கும் தனது குழந்தையை சமாதானப்படுத்த முயன்று தோற்கிறாள்.வயதான கிழவி ஒருத்தி குழந்தையின்அழுகைக்குகாரணம்கேட்க நான்குநாட்களாகவே இடைவிடாமல் கத்திக்கொண்டிருப்பதாகவும்
 மருத்துவமனை அழைத்துச் செல்ல கணவனை எதிர்பார்த்து காத்திருக்க, குடித்துவிட்டு கணவன்எங்கே  விழுந்து கிடக்கின்றானோ என்றும் சொல்லிப் புலம்புகிறாள்.
கிழவி சொல்லும் தகவலின்படி குழந்தையை தூக்கிக்கொண்டு கணவனை நாடிச் செல்கிறாள்.நண்பர்களுடன் 
அரட்டையடித்தபடி பாலத்துச் சுவர் மீது அமர்ந்திருக்கும் கணவனைக் கட்டாயப்படுத்தி அழைக்க முனகியபடி அவள் பின் வருகிறான்.இருவரும் பஸ் ஏறி மருத்துவமனைக்குச் செல்கிறார்கள்.அழும் குழந்தையுடன் மனைவியை 
ஒரு பெட்டிக்கடை வாசலில் அமரவைத்துவிட்டு வருகிறேன் என்று விலகுகிறான் கணவன்.டாஸ்மாக் என்று 
எழுதிய பலகையைக் கடந்து மதுக்கடைக்குள் நுழைகிறான்,கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு.கத்தும் குழந்தையுடன் கணவனை எதிர்பார்த்து கடைவாசலில் அமர்ந்திருக்கும் மனைவியின் கண்களில் 
இயலாமையின் துக்கம் ,சென்ற கணவனை எதிர் நோக்கிய ஏக்கம்.அழும் குழந்தையைக் கவனித்த சிலர்  மருத்துவமனை இருக்கும் திசை காட்டி போகச் சொல்கின்றனர். மருத்துவமனைக்குள் நுழையும் அவள் 
நர்சிடம் குழந்தையைக் காண்பிக்க மருத்துவமனை பெட்டில் குழந்தையை படுக்க வைக்கச் சொல்கிறார்.டாக்டர்  வந்து குழந்தையைப் பரிசோதித்துவிட்டு குழந்தை இறந்துநீண்ட நேரமாகிவிட்டதாக கூறுகிறார்.கதறி அழுகிறாள்  தாய்.குழந்தையைத் தோளில் போட்டுக்கொண்டு  மருத்துவமனை விட்டு வெளியேறும் சமயம் அவள் கணவன் 
போதையில் தள்ளாடியபடி எதிரேவந்து குழந்தையைத் தொடமுயல கணவனை பிடித்து தள்ளிவிட்டு விலகி 
நடக்கிறாள்.தரையில் வீழ்ந்து உருண்டு போதையில் உளறியபடி மயக்கமுறுகிறான்.இறந்த குழந்தையை தோளில் 
சாய்த்தபடி பஸ்ஸில் அமர்ந்திருக்கும் அவள் அழவில்லை.சிறு கண்ணீர் கூட உகுக்காமல் அத்தனை
துக்கத்தையும் அடக்கிவைத்தபடி அவள்பயணம் நகர்கிறது.ஊர் வந்துபஸ்ஸைவிட்டு இறங்கியதும் மடியில் குழந்தையைப் போட்டுக்கொண்டு வெடித்துக் கதறி அழுகிறாள்.பின்னணியில் மனதை அறுக்கும் ஒப்பாரிக்குரல்  ஒலிக்கிறது.குழந்தையைத்தோளில் கிடத்தியபடி ஊர்நோக்கி செல்லும் அவள்மீதுஇருள் மூட படம் நிறைவடைகிறதுபத்து நிமிடங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்  'ஒரு குடியின் பயணம்' குறும்படம் பார்வையாளனின் மனத்தில்  என்னவிதமான பாதிப்பினை ஏற்படுத்துகிறது?
 
ஒரு கிராமத்து குடிசையின் முதல் காட்சியிலிருந்து இது இயக்குனரின் படமாகவே  விரிகிறது.குடிகாரனின் மனைவியின் கழுத்திலோ மூக்கிலோ காதிலோ துளித் தங்கமில்லை.அழுக்கேறிய 
மஞ்சள் கயிற்றினை மட்டும் நம்பியபடி காத்திருக்கும் அவள் ஆண்களின் உலகின் முன் அடக்கிவைக்கப்பட்ட ஒருத்தியாகவே காட்சியளிக்கிறாள்.அவளிடம் விசாரிக்கும் கிழவி நிற்குமிடத்தில் முள் அடர்ந்திருக்கிறது.
அதே காட்சியில் கிழவியின் கேள்விக்கு பதில் சொல்லும்மனைவியை
முள்ளுக்கு அப்பாலிருந்து
 படமாக்கியிருக்கிறார்கள்.வெகு சிறப்பான பிரேம். காலம் காலமாக கிராமத்துப் பெண்ணானவள் சிறு 
செயலுக்கும் இன்னொரு ஆணை எதிர்பார்ப்பவளாக சமூகம் அவளுக்கு இட்ட முள்வேலியைத் தாண்டி வர  முடியாதவளாக இருக்கிறாள் என்பதை பளிச்சென்று உணர்த்துகிறார் இயக்குநர்.அதே மனைவி கணவனை 
வெறுத்து  தாயாகும் போது அவளின் தனிமை பயணத்திற்கான 
தொடக்கத்தில் வானமே விரிந்து அழைக்கிறது. படம் குடிக்கு அடிமையாகி மனித உணர்வுகள் மரத்துப்போன ஒருவனால் சிதையும் ஒரு பெண்ணின் ,ஒரு தாயின் வலியைப் பற்றி பேசும் அதே சமயம் இது அத்தனைக்கும் காரணமான ,மது கிடைக்குமிடம் என்று பெரிதாய் பலகையில் எழுதி வைத்து குடித்துக் கும்மாளமிட தனி பார் வசதி உண்டு என்று அரசாங்கமே  அறிவிப்பு செய்து,குடிகெடுக்கும் செயலை செவிட்டில் அறைவது போல் ஒரு காட்சியில் உணர்த்தியிருக்கிறார்.  குறும்படம் செய்யவேண்டிய பணியை அந்த ஒரு காட்சி அற்புதமாக செய்துவிடுகிறது.வாழ்த்துக்கள் இசாக்.
 
படத்தில் குழந்தையின் அழுகையும்  வேதனையும் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் கடைசிக்காட்சியில் டாக்டர் வந்து அறிவிக்கும் குழந்தை எப்பவோ இறந்திடுச்சி 
என்னும் வார்த்தைகளில் பார்வையாளனுக்கு தரும் பேரதிர்ச்சியை இயக்குநர் முன்பே தயார் செய்திருக்கலாம். குழந்தை இறந்த கணம் என்பது கிட்டத்தட்ட குழந்தையின் அப்பா டாஸ்மாக் கடை உள்ளே நுழையும்  கணத்தில் இருக்கலாம் என்பதை பார்வையாளன் சிந்தனைக்கே விட்டிருந்தாலும் அப்பிஞ்சின் உயிரை 
விழுங்கியதில் அவன் விழுங்கும் அரசாங்கம் விற்கும் மதுவில் பெரும் பங்கு உண்டு என்பதை ஒரு ஷாட் 
பதிவு செய்திருக்கலாம்.
 
 ரசினியின் இசை படத்தில் ஒரு ரகசியபயணம் மேற்கொண்டிருக்கிறது. தனது இசையாதிக்கத்தை தேவையற்று எக்காட்சியிலும் புகுத்திவிடாமல் அங்கங்கே மௌன இசையும் தந்து இறுதிக்காட்சியில் ஆஸ்பத்திரியில் குழந்தை இறந்தபின் அழும் தாய்க்கு ஆறுதல் சொல்லமுடியாமல் பெரும் 
துக்கத்துடன் ஒருபுல்லாங்குழல் தன் வேதனையைவிவரிக்கும் காட்சியில் இசையும் பாத்திரமாகிறது.
 
  சக்கரக்கட்டி,சித்து பிளஸ் டூ  போன்ற திரைப்படங்களின் இயக்குநரான ராசாமதி  என்கிற கவினின் ஒளிப்பதிவு இருளையும் ஒளியையும் பக்கத்துணைக்கு வைத்துகொண்டு  பயணப்படுகிறது. ஆஸ்பத்திரி காட்சிக்குள்  படம்நுழையும் போது அதன் இருளும் ஒளியும் விபரீதத்தை முன்கூட்டியே அறிவித்து பார்வையாளனை பதற்றத்துக்கு உட்படுத்துகிறது.வறண்ட நிலத்தில் தனித்துவிடப்பட்ட மரமாய்  க்ளைமாக்சில் அவள் செல்லும் பாதை கட்டுப்பாடுகள் தகர்ந்த ஒன்றாய் இருக்கிறது. பஸ்ஸிலிருந்து இறங்கிய  அவளை உடனேபின்தொடராமல் பஸ்சின் போக்கிலேயே ஒருவினாடிநகரும் கேமிரா இறங்கியவளின்சோகத்தை 
தேடச்சொல்கிறது. இயக்குனருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் சேர்ந்து கிடைத்த வெற்றி. இறந்த குழந்தையை  சுமந்து பயணப்படும் பஸ்சினில் இருள் பாத்திரத்தினை தேர்வு செய்த விதத்தில் ஒளிப்பதிவு கண்களுக்குள் பதிவாகும் ஒளி
.
இயக்கம் மற்றும் ஒளிப்பதிவோடு ஒலிப்பதிவும் இணைந்து வெல்லும் 
காட்சிகள் இரண்டு.குழந்தை இறந்த செய்தி கேட்டதும் கதறி அழுகிறாள் தாய்.அடுத்த காட்சியில்  குழந்தையைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனை விட்டு வெளியேறும்போது  முகத்தில் இறுக்கம் கலந்த சோகம் மட்டுமே இருக்கிறது.ஆனால் கதறல் ஒலிமட்டும் பின்னணியில் கேட்டுக்கொண்டிருக்க துக்கம்  மரத்துப்போன மனத்தின் உள்அழுகையை பிரமாதமாக்கியிருக்கிறார்கள். இரண்டாவதாக அடக்கிவைக்கப்பட்ட  அழுகை கதறலாய்வெடிக்கும் காட்சி.அவளின் கதறல் அழுகைக்கு பின்னணியாக   தழுதழுக்கும் அந்த ஒப்பாரி  'வாழ்வும் செறக்கலையே   வாரிசும் நெலைக்கலியே'உயிரை அறுக்கிறது.குடிகார கணவன்களுக்கு மனைவியாகப்பட்டவர்களின் ஒட்டுமொத்த கதறலாய் ஒலிக்கும் அந்த ஒப்பாரி பார்வையாளன் செவிகளுக்குள் 
ஈட்டியென செருகுகிறது.
 
 குடிகாரகணவனாக ஏழுமலை,மனைவியாக செல்வி...
தொழில்முறை நடிகர்களல்ல. ஆனாலும் உடல்மொழி,முகமொழியில் கண் முன்னே யதார்த்தம் நிறுத்துகிறார்கள். அதிலும் ஏழுமலையின் குடிமொழி நடை பிரமாதம். குழந்தையை தூங்குற மாதிரி வச்சிட்டு போம்மா... அழுதிடாதே ' என்று பின்னணியில் 
ஒலிக்கும் குரலுக்கு பஸ்ஸில் பயணப்படும் செல்வியின் முகத்தில்தான் என்ன ஒரு இறுக்கம். மிகச் சரியான தேர்வு 
 
 பத்து நிமிடத்தில் சொல்லப்படவேண்டிய விஷயத்தை எவ்வித 
நெருடலுமின்றி கச்சிதமாக தொகுத்து தந்திருக்கிறது ஹரி கோபியின் படத்தொகுப்பு.
 
'தமிழ் அலை ஊடகம் ' வழியாக ஒரு குடியின் பயணம் சென்ற இயக்குநர் இசாக்கினை ஒரு வெயில் மதியானத்தில் அவரின் அலுவலகத்தில் சந்தித்து  உரையாடியபோது...
 
புகோ:உங்கள் சொந்த ஊர் உளுந்தூர் பேட்டை அருகில் உள்ள நெய்வினையில் டாஸ்மாக் உண்டா?
 
இ: [சிரித்தபடி] டாஸ்மாக்கெல்லாம் இப்போது வந்ததுதானே.நான் அறிந்தவரையில் பாக்கெட் சாராயம் விற்கப்படுவதை கேள்விப்பட்டிருக்கிறேன்.
 
புகோ : அடிப்படையில் நீங்கள் ஒரு கவிஞர். துபாய் போன்ற நகரத்தில் கொஞ்சநாள் வாழ்ந்திருக்கிறீர்கள்.
அப்படியிருக்க இப்படி ஒரு கரு எதற்கு தேர்ந்தெடுத்தீர்கள்.தனிப்பட்ட காரணங்கள் உண்டா?
 
இ: நான் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவன் என்பதால் சொல்லவில்லை. பொதுவாக எனக்கு இது போன்ற விசயங்களில் எவ்விதத்திலும் ஒத்துப் போக முடியாது. குடிப்பது தனிப்பட்டஒருவனின் சுதந்திரமாக இருந்தாலும்  
அதனால் பாதிக்கப்படும் குடும்பம் மற்றும் சமூகத்தினை அவன் நினைத்துப்பார்ப்பதில்லை. சமூகத்தின் மீதானஎனது அக்கறையின் வெளிப்பாடு இக்குறும்படம். அது மட்டுமின்றி நாங்கள் கண்ட ஒரு உண்மைச் சம்பவத்தின் 
அடிப்படையில் பின்னப்பட்டதுதான் இத்திரைக்கதை. இறந்த குழந்தையை கையில் வைத்துக்கொண்டு கணவனின் வருகைக்காக காத்திருந்த ஒரு பெண் இப்படத்துக்கு தூண்டுகோலாக  இருந்தாள்.
 
புகோ :ஷூட்டிங் எங்கே எத்தனை நாள் நடந்தது?
 
இ:உளுந்தூர்ப்பேட்டையில்தான் படப்பிடிப்பு நடந்தது.ஒரே நாள்தான் ஷூட்டிங்.
 
புகோ:ஷூட்டிங் சிரமங்கள்...
 
இ:அது சிரமம் என்ற பட்டியலில் வராது. படப்பிடிப்பு சமயத்தில் எங்களைச் சுற்றி நின்ற கூட்டத்தினை 
சமாளிப்பது மிகப்பெரிய சவாலாய் இருந்தது. முதலாவது அவர்களுக்கு இது புதுசான ஒன்று. இரண்டாவது நானும் 
பங்குபெற்ற நடிகர் நடிகைகள் அவர்கள் ஊர்க்காரர்கள் என்பதும். இதெல்லாம் எங்களுக்கு அடுத்த படிக்கான 
ஒத்திகைதானே.
 
புகோ :வேறு சுவாரசிய சம்பவம் ?
 
இ:ஆஸ்பத்திரி காட்சி எடுக்கும்போது அறைக்கு வெளியே நிறைய கூட்டம். குழந்தை இறந்ததை கேள்விப்பட்டவுடன் தாயின் கதறல் தொடங்க ஷூட்டிங் என்பதையும் மறந்து குழந்தைக்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைத்த 
மக்கள் அறைக்குள்ளே முண்டியடித்துக்கொண்டு நுழைய அவர்களை 
அமைதிப்படுத்த குழந்தை சிரித்தது.
 
புகோ:தமிழ் அலை ஊடகம் உங்களுடையது.இப்படத்தயாரிப்பில் நண்பர்களின் உதவி எப்படி ?
 
இ: நான் எடுக்க விரும்பிய முதல் குறும்படம் அன்னியம். அது நான் எழுதிய ஒரு கவிதையை அடிப்படையாகவைத்து அதற்கான திரைக்கதை தயார் 
செய்திருந்தேன். முக உணர்வுகளை துல்லியமாக பிரதிபலிக்கக்கூடிய 
நடிகர்கள் அப்படத்திற்கு தேவையாயிருந்தார்கள். ஒரு லாங் ஷாட்டிலோ மிட் ஷாட்டிலோ சொல்லி நகர்த்தமுடியாதபடி குளோசப்  காட்சிகளுக்கான முகத்தேடலில் தாமதம் ஏற்பட்டது. இடையில் துபாயிலிருந்து  விடுமுறையில் வந்த ஒரு சமயம் நண்பர்களின் உற்சாகக் குரல்களோடு திடீரென முடிவாகி ஒரு நாளில் எடுக்கப்பட்டதுதான் ஒரு குடியின் பயணம்.
 
புகோ :இதற்கான ரெஸ்பான்ஸ் எப்படியிருந்தது ?
 
இ: துபாயில் என் நண்பர்கள் மத்தியில் திரையிட்டபோது கிளைமாக்ஸ் காட்சியில் வரும் அந்த ஒப்பாரியினை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.கதறல் வார்த்தைகளில் அப்பெண் வாழ்ந்த வாழ்க்கையை அந்த 
ஒப்பாரியில் சொல்லப்பட்டிருக்கும். படம் முடிந்த பிறகும் இப்படி ஒரு விளக்கம் தேவையா என்பது அவர்களின் கேள்வி. ஆனால் எங்கள் ஊரான நெய்வினையில் இதுபோன்ற சாவுகளின் போதெல்லாம் இறந்தவர்களின் வாழ்க்கையை சம்மந்தப்படுத்தி பாடப்படும் ஒப்பாரியினை துபாய் மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பின்பு அவர்களுக்கு விளக்கம் சொல்லப்பட்டது . மற்றபடி ....சில கிராமப்புறங்களில் எங்கள் நண்பர்களின்  முயற்சியால் இப்படம் திரையிட்டுக்காட்டப்பட்டது.அவ்வளவுதான்.
 
புகோ :குறும்படம் தாண்டிய வேறு முயற்சிகள் ?
 
இ : கஞ்சி என்ற ஒரு டாக்குமெண்டரி முடிந்திருக்கிறது.விரைவில் வெளியிடப்படும்.
 
புகோ :கஞ்சி எதைப்பற்றி ?
 
இ: இஸ்லாமியர்களுக்கென்று பொதுவான வாழ்வியல் மரபு இருந்தாலும்  இங்கே வாழும் முஸ்லிம்கள் இங்குள்ள வாழ்க்கையைத்தான் வாழ்கிறார்கள்..அதேபோல்தான் எங்கும். ரம்ஜான் நோன்பு பெருநாளில் முப்பது நாள் நோன்பு 
மேற்கொள்பவர்கள் நோன்பு முடிக்க பள்ளிவாசல்களில் கஞ்சி தருவதுண்டு.  முப்பது நாளுக்கு முறை வைத்து  ஊர்ப்பெரியவர்கள் , ஒவ்வொருநாளும் இந்த நோன்புக்கஞ்சி தயாரித்து தருவார்கள். இப்பழக்கம் அரபு நாடுகளில் கிடையாது. அப்படியிருக்க இங்கிருந்து அங்கு செல்லும் முஸ்லிம்கள் இந்தபழக்கத்தினை அங்கு மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். இது மட்டுமில்லாமல் இந்தக்கஞ்சி தயாரிப்பதென்பதே தனியாய் பதிவு 
செய்யப்படவேண்டிய ஒரு அழகு. கஞ்சி தயாரிக்கும்  முறையை இந்த ஆவணப்படம் பதிவு செய்கிறது.
 
புகோ :கவிதை பற்றி பேசாமல் இந்த உரையாடல் நிறைவு பெறாது.உங்களின் முதல் கவிதை தொகுப்பு 
'இரண்டாவது கருவறை' அதன் பின்னான 'காதலாகி' 'மௌனங்களின் நிழல்குடை' 'மழை ஓய்ந்த நேரம்'
சமீபமாக 'துணையிழந்தவளின்  துயரம் ' வரை தொகுப்புகள் வெளிவந்துள்ளன.இதில் 2004ல் சாரல் வெளியீடாக 
வந்த 'மழை ஓய்ந்த நேரம்' கவிஞர் தாராபாரதி பரிசு பெற்றது தெரியும் .'துணை இழந்தவளின்  துயரம்' எதை பேசுகிறது ?
 
இ :துபாய் வாழ்க்கையினைப்பற்றிய பதிவுகளை மட்டுமே தாங்கிய 
தொகுப்புதான் 'துணை இழந்தவளின்  துயரம் ' பொருள் தேடி பிரிந்திருக்கும் காலகட்டத்தின் வேதனை, வலி, ஆறுதலினை எளிய மொழியில் 
 அனுபவங்களாக்கியுள்ளேன். பதிவு பரவலாயிருக்கிறது.
 
குறும்படம், ஆவணம், கவிதை என்று பலவிதமான அனுபவங்கள் தந்த இசாக்கிற்கு நன்றி கூறி விடைபெற்று  வெளியே  வந்தோம்.தகிக்கும் வெயிலுக்கு நிழல் தேடி நிறைய பேர் டாஸ்மாக் பக்கம் ஒதுங்கியிருந்தது கண்ணில்பட்டது. ஒரு குடியின் பயணம் தொடர்கிறது.
 
 
 

No comments:

Post a Comment