நீ யாரென்று எனக்குத் தெரியாது
ஒருமுறை என் கூட்டுக்குள் இறகொன்றை உதிர்த்திருந்தாய்
மற்றொருமுறை என் விக்கலுக்குக் கீழே
தேன் சுனையினை உருவாக்கியிருந்தாய்
பின்பொருநாள் அழகிய தீவொன்றின் மௌனத்தில்
நிறுத்திச் சென்றிருந்தாய்
தீவின் சௌந்தர்யம் மீண்டும் மீண்டும்
புதிதாக்கிக் கொண்டிருந்தது என் பால்யத்தை
எனக்குத் தெரியாது நீ யாரென்று
டாம் துரத்தும் ஜெர்ரியானேன்
கணுக்கால் அளவு ஏரி நீரில் சாப்ளினுடன் டைவடித்தேன்
லக்கிலூக் சவாரி செய்யும் குதிரையானேன்
சிரித்துக்கொண்டேயிருந்தேன்
இன்னமும் நீ யாரென்று எனக்குத் தெரியாது
என் கூட்டினைக் களவாடிச் சென்றிருந்தாய்
என் கால்களுக்குக் கீழே கடலினை உருவியிருந்தாய்
அத்தனைச் சொற்களையும் அபகரித்துவிட்டு
அம்போவென்று என்னை விட்டுச் சென்றிருந்த தீவு முழுவதும்
ஊமைகளும் செவிடர்களும்
இன்னமும் நீ யாரென்றே எனக்குத் தெரியவில்லை.
No comments:
Post a Comment