Tuesday 17 July 2012

பயண பாடல்

செவிகளில் அந்திமழை பொழிய 
இதழ்களிலும் விழியினிலும் சிறு நகையாட 
மாநகரை வேடிக்கை பார்த்தபடி 
பேருந்தில் பயணிக்கிறாள் 
ஒருத்தி 


தேனில் வண்டு மூழ்கும்போது 
முதல் நிறுத்தத்தினைக் கடக்குமவள் 
தண்ணீரில் நின்றும்  வேர்க்கும்
 பரிதவிப்பின் விளிம்பில் 
விழிகளில் நிறம் மாற கவனிக்கிறாள் 
இருளணியும் ஆகாயத்தினை 


மன்மதன் அம்புகள் தைத்த இடங்களில் 
ஒளிரும் நகரினைக் கடக்குமவள் 
நெற்றி சிகையினை கலைத்து  விளையாடும் 
காற்றினை ஒதுக்கியபடி எழுகிறாள் 


சிப்பியில் தப்பிய நித்திலமென 
தனது நிறுத்தத்தில் இறங்குமவள் 
கண்களில் இருந்து உடையும் நீரில் 
தொடரும் அடுத்த பயணம்.

உயிரோசைஇணைய இதழ் 2011 

No comments:

Post a Comment