Monday 16 July 2012

திரை விமர்சனம்

புதிய கோணம் இணைய இதழுக்காக எழுதிய சினிமா விமர்சனம் 




சதுரங்கம்-


இயக்குநர் கரு. பழனியப்பனின் ஐந்தாவது படமாக வந்திருக்கும் சதுரங்கம் பார்த்திபன் கனவு என்ற அவரின் முதல் படத்திற்குப் பிறகு இரண்டாவதாக வந்திருக்க வேண்டியது.சதுரங்கம் அவரின் இரண்டாவது படமாக வந்திருக்கும் பட்சத்தில் கரு.பழனியப்பன் தனது மூன்றாவது படத்தினை மிக ஆழமாக,அசத்தலாக, அழகாக தந்திருக்கலாம்.சிவப்பதிகாரம் எழுதியிருக்க மாட்டார்.ஸ்ரீகாந்த் என்ற 
நடிகனுக்கு அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைத்து தன்னை இன்னும் சிறப்பாக நிரூபித்திருக்கலாம்.என்ன தந்திடுவேன் போன்றஅருமையான பாடல் வரிகள் தரும் பா.விஜய் என்ற கவிஞர் ஒவ்வொரு பூக்களுமே போன்ற அபத்த விளக்கங்கள் எழுதாமல் இருந்திருக்கலாம்.ஆட்டம் முடியுமுன்னே செக்மேட் சொன்னது யார் குற்றம் பழனியப்பன்?

முதல் காட்சியிலிருந்து இயக்குநரின் ஆட்சி தொடங்குகிறது சதுரங்கம் படத்தில். திசைகள் என்ற புலனாய்வுத்துறை பத்திரிகையின் நிருபராக திருப்பதிசாமி. கண்களால் கவிதை பேசும் அழகான காதலி. நிருபருக்கோ அவரின் நேர்மைக்கு கிடைக்கும் விருதுகளாக விரும்பிய திசையெல்லாம் விரோதிகள். இந்நிலையில் காதலி கடத்தப்படுகிறாள். கடத்தியது யார் என்ற சில பதட்டங்களுக்குப்பிறகு ஆள் யாரென்று தெரிகிறது. மீட்கப் போராடும் நிருபனின் கதை.


திரைக்கதையில் சுவாரசியமும் விறுவிறுப்பும் கலந்து ரசிக்க வைக்கிறார் இயக்குநர்.சென்னைக்குள்ளேயே சுற்றி வரும் கதையை  தொய்வின்றி கொண்டு செல்கிறார்.பஸ்ஸில்  டிக்கெட் எடுக்காமல் பைன் கட்டாமல் பதினைந்துநாள் சிறைவாசம் அனுபவிக்க ஸ்ரீகாந்த் 
சிறை சொல்லும் ஆரம்பக் காட்சியிலே ஆட்டம் சூடு பிடிக்கிறது.ஊழல் வழக்கில் கைதாகி சிறைக்கு  வந்திருக்கும் மந்திரிக்கு நடக்கும் பெருச்சாளி டார்ச்சர்,பத்து ரூபாய்க்கு கிடைக்கும் ஒரு சீப்பு 
வாழைப்பழம் சிறைக்குள் நூறு ரூபாய்க்கு மாறுவது என சிறை சுவாரசியங்கள்.

வெகு இயல்பான நிருபனாக ஸ்ரீகாந்த்.அலட்டிக் கொள்ளாத நடிப்பு.எதிரிகளின் உக்கிர சவால்களினை  அலட்சிய பார்வைகளில் மட்டும் எதிர்கொள்ளும் உடல்மொழியில் ஈர்க்கிறார். இயக்குன 
நடிகனை உபயோகிக்க தவறியது தமிழ் சினிமாவின் தவறன்றி வேறென்ன.

கதாநாயகி சோனியா அகர்வால்.மென்சோகம் படிந்த கண்களில் கவிதை படபடக்க ஸ்ரீகாந்திடம்  காதல் சொல்லவந்து நாஞ்சில் நாடன் சிறுகதைகள் பற்றி பேசுவதாகட்டும்,கழுத்துல குட்டியா 
ஒரு முத்தம் குடு என்ற கொஞ்சலாகட்டும், நான்தான் ஒன்ன காதலிச்சேன் நான்தான் ஒன்ன  பாக்க வந்தேன் நான்தான் ஒனக்காக காத்திருந்தேன் இந்த காதல் தோத்துட்ட  பிறகாவது 
நமக்காக ஒருத்தி காத்துக்கிட்டு இருந்தாளேன்னு நெனப்பியா என்று கண்ணீர் சிந்திக் கேட்கும்  தேவதை.காலம் நிறைய தவற விடுகிறது.

அப்போது இசையமைப்பாளர் வித்யாசாகர் musical hit தந்துகொண்டிருந்த காலகட்டம். சதுரங்கம்  படப் பாடல்கள் கவனத்தில் இருந்தது. காலம் கடந்து வந்திருந்தாலும் மயக்குவது melody யின்  சாதனை.பா. விஜய்யின் 'என்ன தந்திடுவேன்' யுகபாரதியின் 'எங்கே..எங்கே' அறிவுமதியின் 
'விழியும் விழியும் ' என்று மெல்லிசை தொகுப்பு. என்ன தந்திடுவேன் தந்த பா.விஜய் இப்போது  எங்கே?.  ஒவ்வொரு பூக்களுமே என்று அபத்த விளக்கங்களுக்கு விருது வாங்க ஆரம்பித்துவிட்டார். கவிதை வழியும் விழியும்  பாடல் அத்தனை அழகு.

'நெனச்சிக்கிட்டே இருக்கிறதுமட்டும்காதல்இல்ல...ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கிறதும் காதல்தான்' 'நாங்கெல்லாம் வெளிய வராட்டா அப்புறம் தமிழ்நாட்டுல பணத்துக்கு என்ன மரியாதை' காதலும்  கத்தியுமாய் வசனங்கள் மிரட்டுகின்றன.'நல்லவங்க நீங்க தோத்துடுவோம்னு பயப்புடுறீங்க...
கெட்டவங்க நாங்க ஜெயிப்போம்னு நம்புறோம்' வக்கீல் வக்கீல் வேலையை பாக்குறான் டாக்டர்  டாக்டர் வேலையை பாக்குறான்...பத்திரிகைகாரங்க நீங்கதான் எல்லா வேலையும் பாக்குறீங்க'

பல வருடங்களுக்கு முன் வந்த படம் என்பது சில காட்சிகளில் தென்பட்டு அலுப்பூட்டுகிறது.ஸ்ரீகாந்த் கூப்பிட்டவுடன் மூன்றுமுறை திரும்பிபார்க்கும் மகாதேவன், கன்னத்தில் முத்தமிட்டவுடன் 
தொடங்கும் பாடல், தமிழ் சினிமா கிளைமாக்ஸ் என்பதில் பழைய வாடை.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம். கரு. பழனியப்பனுக்கும் அது தெரியும் என்று நம்புகிறோம்.






No comments:

Post a Comment