Thursday 19 July 2012

தற்கொலைக் கவிதைகள்




123linesep

ஒரு புள்ளியில் தொடங்கி

ஒரு புள்ளியில் தொடங்கும் வாதை
கோடென நீண்டு வளைந்து நெளிந்து
பின் உயரத்தில் சுருக்கிட்டுக் கொள்கிறது நிலம் வனம் கடக்கும் அப்புள்ளி
நெடுந்தூரப் பயணத்திற்குப் பின்
மழை கண்டு மேலிருந்து வீழ்கிறது
தன்னை அழித்துக்கொள்ள
தனிமை தேடும் சிறுபுள்ளி
மெல்லப் பருத்து கணம் தாங்காமல்
சிதறிப் பரவுகிறது
ஆழ்கடல் கண்டு நடுங்கி
அறை திரும்பும் அப்புள்ளியின் தொண்டைக்குழியில்
தேங்கி நிற்கிறது
எக்காலத்திலும் தீராத துளி விஷம்.
123linesep

மிக லேசாய் ஒரு மரணம்

ஓர் இலையென மிதக்கும் வாழ்வின் மீது
ஒரு மலைப்பாம்பென அசைகிறது மரணம்
சருகின் மீது கிடக்கும் கல்லென
கனக்கும் மரணத்தினை
அத்தனை எளிதாய் நீக்கமுடிவதில்லை
மலம் கழிக்க திணறும் வயோதிகனின்
வீங்கிய அடிவயிறாய்
மெல்ல மெல்ல வாழ்வு
சுமக்க முடியாமல் போகையில்
பறவையின் உதிர்ந்த ஓர் இறகாய்
தன்னை எழுதிச்செல்கிறது மரணம்
அத்தனை வாதையினையும் துடைத்தபடி.
123linesep

மழை சாட்சி

ஒரு கொலை புரிய
அந்த மழை மாலையை தேர்ந்தெடுத்தது
அத்தனை அழகு
சன்னல் வழி இறங்கும் மழையினை
சாட்சியாய் வைத்து நிகழ்ந்த
அந்தக் கொலை அற்புதமாய் முடிந்தது
பிதுங்கி உறைந்த விழியில் படிந்த
மழையினைக் கண்ட மழையின்
நடுங்கிய கண்களின் வழி
மேலும் மேலும் மழை பொழிந்தபடி இருக்கிறது.
123linesep

கடைசி விருப்பம்

நிரப்பப்பட்ட மதுக்குவளை
தீர்ந்து முடிவதற்குள்
ஒரு சிகரெட்
தன் கடைசி சாம்பலை உதிர்த்து
காணாமல் போவதற்குள்
கடிகார முட்கள் புணர்ந்து
புதியதார் ஒரு நாளினை
பிரசவிப்பதற்குள்
ஒலித்துக் கொண்டிருக்கும் அழைப்பு மணி
ஓய்ந்து போவதற்குள்
இவ்வுலகின் பைத்தியப் பட்டியலில்
புதியதாய் ஒரு பெயர் இடம் பெறுவதற்குள்
வாழ்வின் கடைசித் துளிச் சுவை மீது
விருப்பம் வருவதற்குள்
நிகழ்ந்துவிட வேண்டும் ஒரு தற்கொலை.
123linesep

தண்டவாளங்களின் அலறலில் கரையும் மௌனம்

கை குலுக்குவதற்கும்
விடை பெறுவதற்கும் பயணிகளற்ற
ஓர் இரயில் நிலையத்தின் ஓரமாய் கிடக்கும்
சிமெண்ட் பெஞ்சில் உதிர்ந்த
மஞ்சள் பூக்களை ஒதுக்கி
ஒருவன் அமர்ந்திருக்கிறான்
தண்டவாளங்களின் கனத்த மௌனம்
விரைந்து கொண்டிருக்கிறது
மனத்தின் நிச்சலனப் பாதையில்
ஆயிரம் கால்களிலும் தகதகக்கும்
வெயில் சுவைத்தபடி
சரளைக் கற்களின் மீது நகரும் மரவட்டையினையும்
அடர் மழையில் மிதந்து செல்லும்
இமை திறவா நாய்க்குட்டியின்
சடலத்தினையும்
கவனித்தபடி இருக்கிறவன்
நிறைந்த பயணிகளுடன்
மிகப் பெரிய கூச்சலிட்டு நெருங்கும்
இரயிலின் முன்பு
எவ்வித அலறலுமின்றி மோதுகிறான்.
123linesep

இன்னும் முடியாத கவிதை

கண்ணுக்கெட்டிய தொலைவில் கயிறும்
கைகெட்டிய தொலைவில் பேனாவும்
ஓர் இறப்பின் இடைவெளியினைத் தீர்மானிக்கிறது
உடனடியாக அவன் இப்போது
ஒரு கவிதை எழுதியாகவேண்டும்
அசைவற்று நின்றிருக்கும் அம்மின்விசிறி
அச்சமூட்டுவதாய் இருக்கிறது
இன்று காலை கண்விழித்த
தற்கொலையின் விசாரணை
இன்னும் முடியாமல் தொங்கிக் கொண்டிருக்கிறது
மூன்றாம் பக்கத்தின் நான்காம் பத்தியில்
முதல் வரிக்குப் பிறகு
மூன்றாம் வரிக்கு முன் தீர்ந்துபோய்விடக்கூடாத
மையில் உறைந்திருக்கிறது
எழுதப்படாத வாழ்வு
ஒரு தற்கொலையினை
ஒரு கவிதை தவிர்க்குமென நம்புபவனை
தயவுசெய்து நம்புங்கள்
கூடவே
இந்தக் கவிதை இன்னும் முடியவில்லையென்பதையும்
மனதில் கொள்ளுங்கள்.

நன்றி பண்புடன் இணைய இதழ்

No comments:

Post a Comment