ஒரு புள்ளியில் தொடங்கும் வாதை
கோடென நீண்டு வளைந்து நெளிந்து
பின் உயரத்தில் சுருக்கிட்டுக் கொள்கிறது நிலம் வனம் கடக்கும் அப்புள்ளி
நெடுந்தூரப் பயணத்திற்குப் பின்
மழை கண்டு மேலிருந்து வீழ்கிறது
தன்னை அழித்துக்கொள்ள
தனிமை தேடும் சிறுபுள்ளி
மெல்லப் பருத்து கணம் தாங்காமல்
சிதறிப் பரவுகிறது
ஆழ்கடல் கண்டு நடுங்கி
அறை திரும்பும் அப்புள்ளியின் தொண்டைக்குழியில்
தேங்கி நிற்கிறது
எக்காலத்திலும் தீராத துளி விஷம்.
மிக லேசாய் ஒரு மரணம்
ஓர் இலையென மிதக்கும் வாழ்வின் மீதுஒரு மலைப்பாம்பென அசைகிறது மரணம்
சருகின் மீது கிடக்கும் கல்லென
கனக்கும் மரணத்தினை
அத்தனை எளிதாய் நீக்கமுடிவதில்லை
மலம் கழிக்க திணறும் வயோதிகனின்
வீங்கிய அடிவயிறாய்
மெல்ல மெல்ல வாழ்வு
சுமக்க முடியாமல் போகையில்
பறவையின் உதிர்ந்த ஓர் இறகாய்
தன்னை எழுதிச்செல்கிறது மரணம்
அத்தனை வாதையினையும் துடைத்தபடி.
மழை சாட்சி
ஒரு கொலை புரியஅந்த மழை மாலையை தேர்ந்தெடுத்தது
அத்தனை அழகு
சன்னல் வழி இறங்கும் மழையினை
சாட்சியாய் வைத்து நிகழ்ந்த
அந்தக் கொலை அற்புதமாய் முடிந்தது
பிதுங்கி உறைந்த விழியில் படிந்த
மழையினைக் கண்ட மழையின்
நடுங்கிய கண்களின் வழி
மேலும் மேலும் மழை பொழிந்தபடி இருக்கிறது.
கடைசி விருப்பம்
நிரப்பப்பட்ட மதுக்குவளைதீர்ந்து முடிவதற்குள்
ஒரு சிகரெட்
தன் கடைசி சாம்பலை உதிர்த்து
காணாமல் போவதற்குள்
கடிகார முட்கள் புணர்ந்து
புதியதார் ஒரு நாளினை
பிரசவிப்பதற்குள்
ஒலித்துக் கொண்டிருக்கும் அழைப்பு மணி
ஓய்ந்து போவதற்குள்
இவ்வுலகின் பைத்தியப் பட்டியலில்
புதியதாய் ஒரு பெயர் இடம் பெறுவதற்குள்
வாழ்வின் கடைசித் துளிச் சுவை மீது
விருப்பம் வருவதற்குள்
நிகழ்ந்துவிட வேண்டும் ஒரு தற்கொலை.
தண்டவாளங்களின் அலறலில் கரையும் மௌனம்
கை குலுக்குவதற்கும்விடை பெறுவதற்கும் பயணிகளற்ற
ஓர் இரயில் நிலையத்தின் ஓரமாய் கிடக்கும்
சிமெண்ட் பெஞ்சில் உதிர்ந்த
மஞ்சள் பூக்களை ஒதுக்கி
ஒருவன் அமர்ந்திருக்கிறான்
தண்டவாளங்களின் கனத்த மௌனம்
விரைந்து கொண்டிருக்கிறது
மனத்தின் நிச்சலனப் பாதையில்
ஆயிரம் கால்களிலும் தகதகக்கும்
வெயில் சுவைத்தபடி
சரளைக் கற்களின் மீது நகரும் மரவட்டையினையும்
அடர் மழையில் மிதந்து செல்லும்
இமை திறவா நாய்க்குட்டியின்
சடலத்தினையும்
கவனித்தபடி இருக்கிறவன்
நிறைந்த பயணிகளுடன்
மிகப் பெரிய கூச்சலிட்டு நெருங்கும்
இரயிலின் முன்பு
எவ்வித அலறலுமின்றி மோதுகிறான்.
இன்னும் முடியாத கவிதை
கண்ணுக்கெட்டிய தொலைவில் கயிறும்கைகெட்டிய தொலைவில் பேனாவும்
ஓர் இறப்பின் இடைவெளியினைத் தீர்மானிக்கிறது
உடனடியாக அவன் இப்போது
ஒரு கவிதை எழுதியாகவேண்டும்
அசைவற்று நின்றிருக்கும் அம்மின்விசிறி
அச்சமூட்டுவதாய் இருக்கிறது
இன்று காலை கண்விழித்த
தற்கொலையின் விசாரணை
இன்னும் முடியாமல் தொங்கிக் கொண்டிருக்கிறது
மூன்றாம் பக்கத்தின் நான்காம் பத்தியில்
முதல் வரிக்குப் பிறகு
மூன்றாம் வரிக்கு முன் தீர்ந்துபோய்விடக்கூடாத
மையில் உறைந்திருக்கிறது
எழுதப்படாத வாழ்வு
ஒரு தற்கொலையினை
ஒரு கவிதை தவிர்க்குமென நம்புபவனை
தயவுசெய்து நம்புங்கள்
கூடவே
இந்தக் கவிதை இன்னும் முடியவில்லையென்பதையும்
மனதில் கொள்ளுங்கள்.
நன்றி பண்புடன் இணைய இதழ்
No comments:
Post a Comment