Tuesday 17 July 2012

பிரச்சனை



வண்ணத்துப் பூச்சிகள் நிறைந்த வனத்துக்கு
என்னை இடம்பெயரச் செய்யுங்கள்
கருகிய புல்லாங்குழல் என் கண்ணுக்கு காணக் கிடைக்கும்
நிறைநிலா இரவுகளைப் பரிசளியுங்கள்
இமை திறவா நாய்க்குட்டியின் மார்கழிச் சடங்கில்
பங்கேற்பேன் நான்
பூக்களின் வாசனை பொதிந்த ஒலி நாடாவினை
எனதறையில் சுழலவிடும்போது
நேற்றிரவு பிறந்து இறந்த ஈசல்களுக்காக
கண்ணீர் அஞ்சலி வாசித்துக் கொண்டிருப்பேன்
மூன்றாம் நாளில் உயிர்ப்பித்த கதையை
ஆனாந்தம் பொங்க அறிவிக்கும் போதெல்லாம்
முள்முடியும் ஆணியும் சிலுவையும் களையாத
பிதாவின் உறைந்த கண்களில் நான்
என்னதான் உன் பிரச்சனை என்கிறீர்கள்
ஆமையின் ஆயுளினை
வரம்பெறாத ஈசல்கள் வாழும் உலகில்
சிலுவையை விரும்புவனின் வாதையை
பிரச்சனையென்கிறீர்கள்

நன்றி மலைகள் .காம் இணைய இதழ் 

No comments:

Post a Comment