Monday 25 November 2013

அண்ணகர்

சிறுகதை:
 
அண்ணகர்



                   உடம்புரித்து நெளியும் நடனம்

வெயிலில் காய்ந்து காணாமல் போன அக்காவின் உள்ளாடையைக் கடைசிவரை என் பள்ளிப்பையில் கண்டுபிடிக்கவில்லை யாரும். பீக்காட்டில் நிகழ்ந்த நாடகத்தில் ஓர் ஊரில் ஒரே ராணி. மரங்கள் தழுவிய நடனம் காற்றில் விசிறியாடிய ஆடைகள் சுழன்று சுழன்று உடுத்தியிருந்த அக்காவின் தாவணி பாவாடை பூக்குடையாய் நிலத்தில் விரிந்த கணத்தில் மேலே வந்து மூடியது சாராய மூச்சின் அழுத்தம். காடு அதிர்ந்த காம வேட்டை முடிவில் பெண்ணாய் பிரயோகித்தவன் வனம் முழுவதும் வலி  தந்து விலகினான். பின்பு காடு தாண்டுதல் எளிதாயிற்று. நிலம் நீங்குதலும்.

இட வலம் மறந்து மத்தியில் மிதந்து கொண்டிருந்தது தலை வகிட்டுப் பாதை. குளியலறைச்சுவர்களெங்கும் விரிந்த நெற்றிகளில் ஒட்டப்பட்டன வட்டப்பொட்டுகள். திக்குத் தெரியாமல் அலைந்து திரிந்தன ஹார்மோன் நாகங்கள் விஷப்பற்கள் பதித்தபடி. கொண்டாட்டம் விரும்பிய உடம்பின் அசைவுகள் இரகசியமாய் இசைக்கப்பட்டன. கண்களிடுக்கில் கத்தி பதுக்கியவர்கள் உடம்பினை இரண்டாய் பிளந்தபடியே நகர்ந்தனர். வெகு இயல்பாய் தோளில் படியும் சில உள்ளங்கை நரம்புகளின் வழி பாய்ந்த மின்சார நீச்சலினை எதிர்கொள்ள திராணியற்று கண்கள் நிலம் குடைந்து சென்றுகொண்டே இருந்தன. இது எப்போது முடியுமெனத் தெரியவில்லை. எப்படி முடியுமெனத் தெரியவில்லை.

பெரியதான இவ்வுலகில் ஓர் உடம்பை மறைத்து வைத்தல் அத்தனை சுலபமல்ல. சர்ப்ப பாதை வரைந்த பாதங்களில் மருதாணி உயிர் வழிய இருளில் மை பூசிய இமைகளின் மேல் பொருந்தா உடல் மூடிய கணங்களில் சுய உடல் உரித்த பருவமது.ஓர் உடம்பு இன்னொரு உடம்பினைத் துரத்தியது. துரத்திய உடம்பு அத்தனை அழகாயிருந்தது. ரோஸ் நிற நகங்கள் நிரடிய மார்புக் காம்புகளைச் சுற்றிலும் மஞ்சள் வண்ண வீக்கம். புது உடம்பின் தோல் வளர்ந்து மூடியது வெறுப்புடலின் அடையாளக்குறிப்பினை. இருந்த உடம்பைச் சுமக்கும் இருக்கும் உடம்பு எவர் கண்களுக்கும் தெரியாமல் பின்னிய வலை கொஞ்சம் கொஞ்சமாக நைந்து வந்தது. கனவுகளில் கூடிய வெட்கம் பின்னிய நடை ஆளரவமற்ற பாலைகளில் நிகழ்ந்தது. அந்தியின் நிறம் மெல்ல ஏறிக்கொண்டிருந்தது உடம்பில்.

பிறப்புடல் தொலைப்பதென தீர்மானித்த இரவில் அடிவயிற்றில் தொடங்கிய கூழாங்கற்களின்  பயணம் முடிவடையாது நீண்டது. ஒவ்வொரு நொடியிலும் கூர் வாளிருந்தது. நரம்புகளில் பஞ்சடங்கிய குருதி மறந்த இரு வெற்றுசதை உருண்டைகள் ஒட்டிக்கொண்டு விழ மறுத்தன. ஓர் ஆதரவு தேடிய உடம்பினை அணைத்த கைகளில் பாதுகாப்பிருந்தது. கூடவே ரோமங்கள்  அடர்ந்திருந்தன.இறுக்கிய கைப்பிடிக்குள் அடங்கத் துடித்த உடம்பின் கண்ணியினை ஏழு கடல்கள் தாண்டி ஒளித்து வைத்திருந்தார்கள். சுருள் சிகையும்,அடர் மீசையும்,சின்ன சிரிப்பும் துரத்திய நிலமெல்லாம் முளைத்தவெறுப்புடலின் அருவருப்பு. உறுத்திய உடைகள் உதிர்த்து வானம் அணிந்த இரவில் தோள் தொட்டு திருப்பிய கைகளுக்குள் அடங்கிய உடம்பின் உதடுகளில் படிந்த அவனது உதடுகள் உறிஞ்சிப்பகிர்ந்த நீரின் தித்திப்பில் புதிதாய் சில நட்சத்திரங்களும் சூரியன்களும். அவனின் மேலுதடு மூடிய மென்மயிர் கற்றைகள் உடம்பெங்கும் அசைந்தன. கனவுகளைத் துரத்திய உடம்பு இப்போது நிஜமாய் அழுந்திப் புரட்டியது. கொழுப்படர்ந்த  சதையினை பற்றியிழுத்து அணைத்த முடியடர்ந்த முரட்டு மார்பின் வியர்வைத் துளிகளைத் தின்று தீர்க்க யுகங்கள் பல ஆயின . நான் விரும்பிய எனது உடம்பிற்கான முதல் அங்கீகாரம் எனக்கு விருப்பமான உடம்புடன் அவ்வாறுதான் நிகழ்ந்தது.

பெருமிதத்தில் விம்மிய உடம்பு தன்னைக் கிழித்துக் கொடுத்தது வலியின்
முழுமையுடன். சதைப்பற்றான உள்ளங்கை உடம்பெங்கும் மேய்ந்து அழுந்திட கண்ணீர் உடைந்த கணம். பல் கடித்துப் பொறுத்துக் கொண்ட என் அசைவுகளின் வாதை மூளை நரம்புகளில் படிந்து ஞாபகமானது. ஞாபகமாக  மட்டுமே ஆனது வலி. உணர்வின் தவறு உடம்பின் தவறினை ஏற்றுக்கொண்டது. சூரியனைக் கடந்தது சிரமமென்றிருந்தது போக இப்போது நிலாக்களைத் தொலைத்தல் எளிதாக மறுத்தன. குளிரில் விறைத்து சாகத்தொடங்கின புதிர் கைகள் அறிந்த ரகசியங்கள். அடர் பௌர்ணமிகளில் வாசனை மாறிய மூச்சில் ஊமத்தம் பூக்களின் இருப்பின் துரத்தல். சாம்பல் மணத்தைக் கடக்க முடியாமல் திணறிய நிசியில் என் விரல்களில் நிராசையோவியங்கள். இறுகிய சதைக்குதிரையாய் அலட்சியமாய் வருகை தரும் ரோமங்கள்  அடர்ந்த உடம்புக்கு முன்னால்  பதறித் துடிக்கிறது பதுக்கி வைக்கப்பட்ட இவ்வுடம்பு. ஓர் அன்பை, காதலை, ஆறுதலை உள்ளங்கைக்குள் அடக்கிவிட முடிந்தால் எத்தனை நன்றாயிருக்கும். உள்ளங்கைக்குள் அடங்கத் துடித்த காதல் என்னுடையதாக மட்டுமே இருந்தது.

நெற்றி, கன்னம், மோவாய் பள்ளம் எங்கும் எழுதி விலகிய உதடுகளின் நிகோடின்
 ருசியினை சேமித்து வைத்து சுவாசிக்க வேண்டியதாயிருந்தது. முதுகு வியர்வையினில் என் பெயர் எழுதி அழித்து எழுதி விளையாடிய ஆட்டத்தின் ருசி அவன் தோல் தாண்டி இறங்கவில்லை.  என் முதுகெலும்புத் துளைகளில் அவன் விரல்கள் நுழைத்து இசைத்திருந்த இசை சூரியன் தொடங்கி சூரியன் வரை பரவியிருந்தது. எல்லாக் கனவுகளிலும் எழுப்பினான் என்னை. அகால இரவுகளில் நெளிந்த என் பாதையினைக் கண்டவன் கண்களில் முதன்முறையாய் கேள்வி நெளிந்தது. அவனது குரல், உடல், விரல்கள் செய்திருந்த மாயாஜாலங்களை முற்றும் தின்று செரிக்குமுன்னரே ஏதோ நிகழக் கூடாதது நிகழ்ந்தது. விலகியதை உணரவே எனக்கு மரணம் தேவைப்பட்டது. அவசர அவசரமாய் அவன் ரேகைகளை சேகரித்தேன். தப்பு நிகழ்ந்துவிட்டதா?

அப்போது என்னுடம்பில் காதலுடன் கவிழ்ந்த கண்களில் இப்போது பெரு
நிராகரிப்பு. ஓர் அலட்சியத்தில் சிதறிய அங்கீகாரத்தின் முடிவில்
தனிவனத்தில் மிதந்த உடம்பெங்கும் மென்மயிர் வருடிய வாசனை கடந்ததொரு ரணக் கோடுகள். எனது நிர்வாணப் பதற்றங்களைக்  கடந்து சென்ற இகழ்ச்சியூறிய கண்களைத்  தாளமுடியாமல் தவித்தது உடம்பெங்கும் நிறைந்திருந்த அவனது பிசுபிசுப்பு.  பின்தொடர்ந்த பாதைகளின் முடிவில் கண்டதுதான் நிலத்தினைப் பெயர்த்து உள்வாங்கியது என்னுடம்பின் நடுக்கத்தினை. மோகமாய் மேல் விழுந்த உதடுகள் இப்போது வரைந்து கொண்டிருந்தது வேறொரு உடம்பில் காமச்சித்திரங்களை.

அந்த உடம்பில் இருந்தது இந்த உடம்பில் இல்லை. அந்த உடம்பில் இல்லாதது
  இந்த உடம்பில் இருந்தது. அது மட்டுமே எனது உடம்பாக இருந்தது. அவன் கைகள் படர்ந்த இடங்களெல்லாம் மூளையில் புரண்டன. என் உடம்பின் உறுத்தலை அதி ஜாக்கிரதையாய் தவிர்த்திருந்தான். அவனுக்குள் சிறைப்பட்ட என் உடம்பின் தேர்ந்தெடுத்த பாகங்கள் என்னைப் பிறிதொரு பிறவியாய் மாற்றியிருக்க அங்கீகாரம் என்று நினைத்து நான் மகிழ்ந்ததெல்லாம் அவனின் எச்சரிக்கை உபாயங்களினால் நொறுங்கிச் சிதைந்தன.
                      பைபிள் - மத்தேயு:19  வசனம்:12

" தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு.

மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும்  உண்டு. பரலோக ராஜ்யனிமித்தம்
தங்களை அண்ணகர்களாக்கிக்  கொண்டவர்களும் உண்டு. இதை ஏற்றுக்கொள்ள வல்லவன்
ஏற்றுக்கொள்ள கடவன் என்றார்"

தண்டவாளத்தில் விரைந்து கொண்டிருந்தது இரத்தக் கோடொன்று. தோலின் மீது படிந்த கத்தி மெல்ல அழுந்தி சற்றே வேகமாய் நரம்பின் மீது தடவி மூச்சிறுக்கி இறங்கியதில் இடது கையினால் இழுத்துப் பிடித்திருந்த அது தன்  தொடர்பினை இவ்வுடம்பிலிருந்து விடுவித்துக் கொண்டது. ஆசனவாய் வழியே மூளையின் நியூரான்களில்  படிந்து விரட்டத்துவங்கியது வலி. இருள் அப்பிய தண்டவாளப் பாதையில் ஓடிக் கொண்டிருந்த உடம்பில் எவ்விதத் தடையுமில்லை. தூரத்தில் இரயில் வரும் சத்தம் மங்கலாய் செவியில் விழ தடுமாறிய கால்களை நிலை நிறுத்திச் செல்ல மிகுந்த பிரயாசைப்பட வேண்டியிருந்தது. தொடை வழி பெருகிய குருதி உள்ளங்காலில் படிந்து சரளைக் கற்களிலும் மரத் தடுப்புகளிலும் கால் அச்சுப் பதிந்து பதிந்து விலகியது. இந்த மரணத்திற்கு சாட்சியாய் எதையும் நிறுத்த விரும்பவில்லை.  நிலா இல்லை. காற்று தன்  வாய் பொத்தி ஒடுங்கியிருந்த நிசி. இருள் தன கண்களை மூடிக் கொண்ட கணத்தில் மயக்கமுற்று சரிந்தேன். இரும்புத் தண்டவாளம் தலையணையாய் மாற இரு கால்களையும் அகல விரித்திருந்தேன். மேலும் மேலும் காட்சியைப் பெரிதாகிப் பார்த்தது கண்களெங்கும்  கருப்பு அப்பிய ஆகாயம்.

இப்போது என் நிர்வாணம் வானமாயிருந்தது. எதுவுமற்ற  நிர்வாணம்.
இதழோரத்தில் சிரிப்பு வழிந்தோடியது. என் மண்டைக்குள் சூடாய் ஒரு முத்தம் பளிச்சென்று இறங்கிட வலது கைக்குள் சிக்கியிருந்த அவன் பின்னந்தலை முடியினை பலம் கொண்ட மட்டும் இழுத்தேன். உச்ச வலியில் இமை செருக மிகப் பெரும்  சத்தத்துடன் ரயில் சக்கரம் என் கபாலத்தினை நொறுக்கி நகர்ந்தது. அடுத்த சக்கரத்தில் சிக்கிய கண்களை தண்டவாள இரும்பில் வைத்து தேய்த்தது. என் உடம்பு சற்றே கோணலாக கால்கள் சக்கரத்தில் சிக்கிக்கொண்டு ரயிலினூடே இழுத்துச் செல்லப்பட்டது. தன வெறி தீர உடலைக் கொண்டு சென்ற ரயில் சலிப்புற்று உதற இடது உள்ளங்கை தன இறுக்கத்தை மெல்ல விடுவித்து ரகசியப் பிறப்பினை உலகுக்கு காட்டியது. எவ்வித சேதாரமுமின்றி முழுமையாக இருந்தது நான் என்னிலிருந்து நீக்கியிருந்த  இயக்கமற்ற குறி.
                       ஆதியில் ஓர் அணு இருந்தது

எவ்வித அடையாளமுமின்றி ஒரு துளியாயிருந்த அணுதான் சிறு துளை துளைத்துக்
கொண்டு நீந்திச் சென்ற பாதையில்  கலந்த இன்னொரு அணுவிடம் முட்டி மோதிப் பயணப்பட்டு பத்திரமாக ஒரு சதைப்பையில் பாதுகாப்பாய் அமர்ந்து கொண்டன இரண்டணுவும் ஒன்றெனக் கலந்து. அப்போதும் எவ்வித அடையாளமுமில்லை. அடையாளமின்றி 56  நாட்கள் அப்பாதுகாப்பு நீரில் வாழ்ந்த கருவென்ற பெயர் தாங்கி பசியெடுத்து திணறி உயிர் தின்று வளரத் தொடங்கிய உயிரின் ஒன்பதாவது
வாரத்தில் முளைத்த அடையாளம் கண்டு அதிர்ந்தது கரு. பதினோராவது வாரம் மிகச்சிறிய இரு விரைகளும் நெருப்பின் சுவடு பதிந்த நீளமான மின்னல் கோடும் தெரிந்ததைக் கண்ட கருவின் உயிரில் நடுக்கம். கை கால்களினால் தன்னை சுருக்கி மறைத்துக் கொண்டது. உலகம் காண அச்சமுற்ற கருவின் கதறல் எச்செவிகளுக்கும் விழவில்லை. இந்த சிக்கலான உடல் நீக்க உள்ளிருப்பு போராட்டம் நிகழ்த்தியது. அதிக நாட்களுக்கு நீடிக்கவில்லை  அதன் போராட்டம். மிகச்சரியாக அந்த அணு தனது  270  வது நாளில் மிகப் பாதுகாப்பாய் உணர்ந்த அதன் உலகம் விட்டு நழுவி மிகப்பெரிய அலறலுடன் இப்பூமியில் ஆண் மகவாய் அடையாளம் பெற்று விழுந்தது.





                  

No comments:

Post a Comment