Monday 25 November 2013

மார்ச் 13


சிறுகதை: 

மார்ச் 13





ஒரு வண்ணத்துப்பூச்சியைக் கொல்வது குறித்து அவனிடம் எந்த முன் திட்டமும் இல்லை.  தி. நகர் சென்றிருந்தபோதுதான் நடைபாதைக் கடை ஒன்றில் அந்தக் கத்தியைப் பார்த்தான். கைப்பிடியிலே அத்தனை அழகான வேலைப்பாடு. ஓர் ஆணும் பெண்ணும் பின்னிப் பிணைந்திருப்பது போன்ற வடிவம் கொண்டது. கையினால் பிடித்துக்கொள்ளும் பகுதியில் அப்பெண்ணின் புட்டம் இருந்தது. ஒரு கையால் புட்டத்தினை இறுக்கியபடி கத்தியால் ஓங்கிக் குத்திக் கொலை செய்வதில் அவனுக்கு வெகு  விருப்பமாயிருந்தது. வண்ணத்துப்பூச்சியினை மிக சாதாரணமாகக் கொன்றுவிடுகிறார்கள். ஒரே ஒரு சொல்லில் அது தன் அத்தனை வர்ணங்களையும் தொலைத்துவிட்டு செத்துப் போகிறது. நிறமற்ற ரத்தத்தினை பரிதாபமாய் அவன் விரலெங்கும் வழியவிட்டபடி இறந்திருந்த வண்ணத்துப்பூச்சியைக் கண்டதும் காற்று தொலைந்து போக அவனுக்கு மூச்சுத்திணறியது.  அணிந்திருந்த சட்டையின் முதல் பட்டனைத் திறந்துவிட்டான். நெஞ்சு மயிர்களில் அந்தக் கை தடவி இறங்கியதை நீல ஒளியில் அழித்தான்.

எப்போதும் போல தி.நகரில் கூட்டம். எத்தனை விதமான மனிதர்கள். எத்தனை விதமான முகங்கள். எல்லோர் கைகளிலும் சந்தோஷம் பார்சல்களாகத் தொங்கிக் கொண்டிருந்தது.  மழை வந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது. வராது என்று கண்டிப்பாகத் தெரியும்.இருந்தும் மழை தேவைப்பட்டது.  நிதானமற்ற மன நிலையில் நடந்துகொண்டிருந்தவனைச் சுற்றிலும் சத்தங்கள். எதுவும் அவன் செவிக்குள் செல்லவில்லை.  மேகம் மேலே விலகியிருக்கவேண்டும். திடீரென்று வெள்ளை வெயில் அவன் வட்டத்துக்குள் விழுந்தது. ஒரு நிமிடம் கண்களை மூடினான். ஓர் இலை மேலிருந்து மெல்ல இறங்கி அவன் கண்களில் மோதியது. மழையின் ஒரே ஒரு துளி உச்சியிலிருந்து நழுவுவதை உணர்ந்தான். இலையும் மழையுமாய் மாறிய நொடியில் சவுக்கு இறங்கியது.

இமானுவேல் மூன்றாம் முறையாக விழுந்தான். முதுகு வலித்தது. சுற்றிலும் மக்கள் கண்களில் கருணையும் கண்ணீரும் கலந்து அவனைப் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். என்ன இது? இந்தக் கூட்டத்தில் எத்தனை திடகாத்திரமானவர்கள் இருக்கிறார்கள். இந்தச் சிலுவை இத்தனை சுமையாயிருப்பது ஒருவருக்குக்கூடவா தெரியவில்லை. இமானுவேலின் பர்வையில் இருந்த வெறுப்பு எவருக்கும் தென்படவில்லை.
இரண்டு முழங்காலும் மொன்னையாக்கப்பட்டு  குப்புறப்படுத்தபடி கிடந்தவனின் கண்களில் மிதந்த உலகம் அறுவறுப்பாக நகர்ந்துகொண்டிருந்தது.  அவனைத் தாண்டினான். ப்ளாட்பார்ம் மீது துணி விரித்து ஏகப்பட்ட கத்திகளைப் பரப்பி வைத்திருந்தவன் லேசான தாடி வைத்திருந்தான். கண்களிலும் கன்னத்து சதைப்பகுதியிலும் அத்தனை மென்மை. இப்படியெல்லாம் முகம் வைத்திருந்தால் யார் இவனிடம் கத்தி வாங்குவார்கள்? ஆனாலும் அவனுக்கு அந்தக் கத்தி ரொம்பவும் பிடித்திருந்தது. ஒரு கோடென ஆரம்பித்து மேலே நீளும் பழுப்பும் சந்தன நிறமும் கலந்த மரக்கட்டையில் உச்ச ஆலிங்கனம். ப்ரமாதமான சிற்பச்செதுக்கல். செதுக்கியவன் காமத்தில் நீந்திக் களைத்தபின் தொடங்கியிருக்க வேண்டும் அந்த வேலையை. முகமென்று எதுவுமில்லை. கைப்பிடியில் இருந்த ஆணின் கை அந்தப் பெண்ணின் புட்டத்தினை வெகு நெருக்கமாக அணைத்திருந்ததிலேயே அவளின் மோகம் ததும்பும் முகத்தைப் படித்துவிடலாம். கத்தியைக் கையில் எடுத்து ஒருமுறை குத்துவதுபோல் பிடித்துப் பார்த்தான். கைப்பிடியில் இருந்த ஆணின் கை மீது இவன் கை படிந்தது.
அறையெங்கும் நீலஒளி சிதறியிருக்க நிர்வாண உடல்களில் வியர்வை முளைத்திருந்தது. அவன் விரல்கள் அவள் காது மடலை வருடியபடியிருக்க மறுகை அவளின் தொடைப் பகுதியைப் பற்றியிருந்தது. நின்றபடியே இரண்டு ரகசிய நீல நிழல்கள் அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை. அவள் அவன் வியர்வை முதுகில் உள்ளங்கை பதித்து சீராக வெட்டப்பட்டு சிவப்பு வண்ண நெயில்பாலிஷ் பூசப்பட்ட நகங்களினால் ஐந்து பிறை பதித்தாள். மேலே மின்விசிறி உச்சத்தில் சுழன்று கொண்டிருக்க அவளின் பிடரியிலிருந்து ஒரு வியர்வைத் துளி விடுபடுவதை அவன் விரல் தொட்டு உணர்ந்தது.  தன் நடுவிரலினால் அந்தத் துளியை சேகரித்து பின்பற்றியபடி திசை மாற்றினான். அவளுக்குள் சூரியன் வெடித்தது. அவன் இடது தோளில் பற்கள் பதித்து ஆவேசமாக அவன் பெயரை எழுதினாள். வலதுகை நெஞ்சு மயிர்களில் அழுத்தமாகத் தடவி இறங்கியது.
தன் நாவினால் அவள் நாசியில் முத்தமிட்டவன் அவளின் நாக்கினில் அன்றைய தேதியை எழுதினான். அடிவயிற்றில் எழுந்த தாகத்துடன் வேகமாய் நீர் உறிஞ்சினான். அவளிடமிருந்து முனகல் எழுந்தது. இருவரின் அடிவயிற்று நிர்வாணம் ஒன்றையொன்று உரசிய நொடியில் அவளைக் கட்டிலில் சாய்த்தான். இறுகப் பிடித்திருந்த அவன் பிடரி மயி்ரினை விடாமலே மல்லாந்தாள். தன்னை அகல விரித்து அவனை உள்வாங்கினாள். அவன் அவளை முழுவதுமாக ஆக்ரமித்தவன் நாளை இந்த உலகம் அழிந்துவிட்டால் என்பதுபோல் இயங்கினான். அவள் இறுகப் பல் கடித்து நகங்களால் கிழித்தாள். காற்றுக்கு
வழியின்றி மார்பின் வேர்வை மூச்சுத் திணறியது. உச்சியிலிருந்து கால்விரல்கள் வரை நிகழ்ந்துகொண்டிருந்த நடனத்தினை அவன் ஒற்றைப் புள்ளியில் நிறுத்தினான். அவள் உடல் விரிந்து சுருங்கியது. அவன் ஆயிரமாய் சிதறி அவளுக்குள் பயணிக்கத் தொடங்கினான். லட்சக்கணக்கில் தனனை உடைத்திருந்தவள் அவன் முழுவதிலும் படரவிட்டு சேகரிக்க மறந்தாள். அவள் பற்களிலிருந்து எழுந்த வாசனை அவன் நாக்கு நரம்புகள் வழியே மூளையை அடைந்து தனது ஆக்டோபஸ் கரங்களை விரித்துப் படுத்திருந்தது.
மார்ச் 13. இருவரும் வேளாங்கண்ணிக்கு சென்றிருந்தபோது  பழைய மாதாகோவில் செல்லும் பாதையின் இருமருங்கிலும் இயேசுகிறிஸ்துவின் பிறப்புக்கும் இறப்புக்குமான சம்பவங்களை சிலைகளாக செதுக்கி வலைக் கூண்டிட்டு அடைத்து வைத்திருந்ததைக் கண்டார்கள். அவன் நேர்மேலே தெரிந்த சிலுவையை உற்று நோக்கியபடியே ''ஏன் அந்த நகரில் அந்தச் சிலுவையைச் சுமக்க ஒரு பலசாலி கூடவா இல்லை" . இயேசுகுமாரன் மூன்றாம் முறையாக கீழே விழுந்த காட்சியை அவள் பார்த்தாள்.''பைபிள் தெரியாம எதுவும் உளறாதீங்க" என்றவளின் சொற்கள் சிலுவையென மாறி தன் முதுகில் ஏறியதில் அவன் தளர்ந்திருந்தான். அவனின் மெளனம் அவளைக் கலவரப்படுத்தியது. ''இயேசுவைக் கடவுளாக்குவதற்காகவே நாம் அவருக்கு மிகப் பெரிய துன்பம் தந்துவிட்டோம். இயேசு கடைசிவரை சிரிக்காமல் போனதற்கு அதுதான் காரணமாயிருக்க முடியும். ஒருவன் கடவுளாக இத்தனை துயரம் சுமக்க வேண்டுமா... உனக்கு யேசுவின் வலி புரிகிறதா'' அவனின் கண்களில் உறைந்த சிலுவையில் இமானுவேல் அறையப்பட்டிருந்ததைக் கலவரத்துடன் பார்த்தாள்.
அவன் அறையில் அவனைத் தவிர வேறு யாருமே இல்லை என்றுதான் முதலில் நினைத்திருந்தான். மழை நாட்களில் சில கட்டெறும்புகள் வந்து போகும். வாசல் வேப்பமரம் வெகு ஈரமாய் பச்சை நிறத்தினைப் பூசிய இலைகளுடன் கொஞ்சம் கட்டெறும்புகளையும் வைத்திருந்தது. ஒருமுறை பாத்ரூமில் பல்லி பார்த்தான். ஒரு தடவை வந்ததுதான். அதற்குப் பிறகு அவனைப் பார்க்க அது வரவில்லை. ஆனால் வண்ணத்துப்பூச்சி வருமென்று அவன் கொஞ்சம்கூட நினைக்கவில்லை. ஒருநாள் மதியம் அவன் டி.வி பார்த்துக்கொண்டிருந்தபோது கவனம் திரையில் ஓடிக்கொண்டிருந்த காட்சியில் பதியாமல் கலைந்துகொண்டே இருந்தது. அப்புறமாய்தான் கவனித்தான். பின் சுவற்றில் ஒரு சிலந்தி அருகிலிருந்த ஜன்னல் வரையில் தன் வீட்டைக் கட்டியிருந்தது. சிலந்திக்கு எதற்கு ஜன்னல் என்று அவனுக்கு யோசனை. ஜன்னலை மூடினால் வீடு கிழிந்துவிடுமோ என்று அந்த ஒற்றை ஜன்னலை மட்டும் அவன் திறந்தே வைத்திருந்தான். அதன் வழியாகத்தான் அந்த வண்ணத்துப்பூச்சி வந்திருக்கவேண்டும். ஒரு வண்ணத்துப்பூச்சியைக் கொல்லும் அளவிற்குத் தன் அறைச் சிலந்தி கொடூர மனம் படைத்ததாய் இருக்காது என்று அவனுக்குத் தெரியும். சிலந்தியின் எச்சிலில் மகரந்தம் தேடிக்கொண்டிருந்த வண்ணத்துப்பூச்சி குறித்தும் அவனுக்குள் மிகப் பெரும் கேள்வி இருந்தது. பார்வையிழந்த வண்ணத்துப்பூச்சி வழி தவறித்தான் தன் அறைக்கு வந்திருக்க வேண்டும். ஒரு குருட்டு வண்ணத்துப்பூச்சிக்கு பூவுக்கும் வலைக்கும் வித்தியாசம் தெரியாமலா போகும்? கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் நெருங்க விடாமல் சிறு இடைவெளிவிட்டு ஒரு பியானோவின் ஸ்வரக் கருவினைத் தொடுவது போல் அந்த வண்ணத்துப்பூச்சியைப் பிடித்தான். வலைவிட்டு வந்த பூச்சியினை உள்ளங்கையில் வைத்தான். இரு விரல்களிலும் வண்ணத்துப்பூச்சியின் துளி உடல் வரையப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்து உடல் நடுங்கிட, சிலந்தி எழுதிக்கொண்டிருந்த கவிதையை நிறுத்திவிட்டு அவனை வெறுப்புடன் கவனித்தது. அடுத்த வார்த்தைக்குத் தவித்தது.

அந்த யாசகனின் தட்டில் அவன் பத்து ரூபாய் போட்டுவிட்டு நகர்ந்தான். அவனின் கைகளை இறுகப் பிடித்திருந்தவள் அவனின் கருணை குறித்து எழுப்பிய கேள்விக்கு 'இரண்டு கைகளும் இல்லாத ஒருவன் பிச்சைதான் எடுக்க முடியும்' என்றவனின் சொற்களில் புத்தனின் வாசனையைக் கவனித்தாள். கடல் பார்த்து அமர்ந்திருந்தார்கள். 'என்னால் உன்போல் இருக்கமுடிவதில்லை என்பது குறித்து எனக்கு மிகப்பெரிய குற்ற உணர்வு உண்டு' என்றாள் கடலிடம். அவன் அவளைத் திரும்பிப் பார்த்து 'என் போல் நீ இருந்தால் உன் மீது எனக்கும் என் மீது உனக்கும் காதல் வந்திருக்காது'. அவனது கீழ் உதட்டின் நிகோடின் படியாத சிவப்பு அவளுக்குள் எச்சில் வரைந்தது. 'கடல், கடல் போல் இருப்பதால்தான் நாம் கடல் பார்க்க வருகிறோம். வேறு மாதிரி இருந்திருந்தால் நாம் வரப் போகிறோமா என்ன' என்றவனிடம், 'அன்று கோவிலில் நம்மைப் பின் தொடர்ந்த வண்ணத்துப்பூச்சியினை நீ ஏன் அவ்வளவு விரும்பினாய் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு அது மிகவும் தொந்தரவு தந்தது' என்றாள் எச்சில் விழுங்கியபடி. 'உனக்கொன்று தெரியுமா அந்தப் பட்டாம்பூச்சி என் அறைக்குச் செல்லும்வரை என்னுடன்தான் வந்தது. பைக்கை நிறுத்திவிட்டு அறைக்கதவைத் திறந்துவிட்டு திரும்பி வந்து பார்த்தால் அதைக் காணவில்லை'. சிரித்தான் அவன்.  'நீ மிகவும் சாஃப்ட் கார்னர் பர்சன்'. 'ஆமாம் கார்னர்ல மட்டும் கொஞ்சம் சாஃப்ட்'. அவள் கன்னம் தொட்டவனின் விரல்களை இறுகப் பிடித்துக்கொண்டாள். 'பிறந்தநாள் ட்ரீட் எதுவும் இல்லையா' கண்ணடித்து சிரித்தவனின் மீசையை இழுத்துப் பிடித்தபடி 'நான்தான் உன் ட்ரீட். எடுத்துக்கோ ப்ளீஸ்' கண்களில் காமம் உடல் அசைத்து வால் நெளித்த வாசனை  அவனின் நாசி தழுவியது .' உனக்கு தருவதற்கு என்னைவிட சிறந்த பரிசு இந்த உலகத்தில் எதுவும் இல்லை. என்னை எடுத்துக்கொள்' அவளின் கண்ணீர் பார்த்து புன்னகைத்தான். அவள் சிரித்தபடி அவன் விரல்களைப் பிடித்து நெறித்தாள். அந்த லாட்ஜ் ரிஜிஸ்டரில் ஹனிமூன் ட்ரிப் என்று அவன் எழுதியிருந்த பக்கத்தில் கொஞ்சம் கடற்கரை மணல் சிந்தியிருந்தது. அறையைத் தாழிட்டவுடன் அவனை இறுகக் கட்டிப்பிடித்தவள் அவன் உதடோடு உதடு வைத்து விலக்காமலே பேசினாள். 'கனவு மாதிரி இருக்கு'.அவனும் உதடுகளை விலக்காமலே 'இந்தக் கனவு முடியக்கூடாது' என்றான்.
இப்போது அறை இருளில் இருந்தது. தொலைக்காட்சியை அணைத்திருந்தான். ஜன்னலை இறுக மூடிச் சாத்தியதில் வலை சிதறி சிலந்தி மேலே ஏறியது. செல்போன் டார்ச்சினை ஆன் செய்தான். மிகக் கூர்மையான கத்தியின் நீண்ட நுனி போல் வெளிச்சம் விரிய அந்த வண்ணத்துப்பூச்சியின் இறக்கைகளை ஏற்கெனவே பிய்த்திருந்தான். அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது. அதிகம் வன்மமின்றி ஒரு வண்ணத்துப்பூச்சியினைக் கொன்றுவிடலாம் என்பது உலக நியதியாய் இருக்க இவர்கள் ஏன் வண்ணத்துப்பூச்சியினைக் கொல்வது குறித்து சிரமப்படுகிறார்கள். இத்தனை துன்புறுத்துகிறார்கள். இறக்கைகளற்ற வண்ணத்துப்பூச்சியின்  உடல் அத்தனை அருவருப்பாயிருந்தது. சாம்பல் நிற வயிறு மட்டும் ப்ரதானமாயிருக்க அவனுக்கு வண்ணத்துப்பூச்சியை ரசிக்க அவகாசமில்லை.  அந்தக் கத்தியை எடுத்தான்.  வண்ணத்துப்பூச்சியின் வீங்கிய வயிறின் மீது நடுவில் கத்தியினை வைத்து நேராய் ஒரே கிழி. எவ்வித அலறலுமில்லாமல் அவனின் காதல் நீராக வெளிப்பட்டு வலியோடு வழிந்தது. அறையில் வினோதமான ஒரு வாடை எழுந்து வண்ணங்களுடன் அவன் உயிரெங்கும் படிய,  'ச்சீ' யென்று உதறினான். செல்போன் அலைபாய்ந்து திசை தடுமாறி ஒளியை மேலே அனுப்ப அதிர்ச்சியுடன் சிலந்தி அவசர அவசரமாக அந்த அறையை விட்டு வெளியேறத் துவங்கியிருந்தது.
அதன்பின் அவளை ஒரு காபி ஷாப்பில் சந்திக்க நேர்ந்தது. தோழிகளுடன் இருந்தாள்.  அவன் அவளைப் பார்த்துக்கொண்டே சிரித்தபடி கடந்தான். அவளை போனிலும் சாட்டிலும் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் நிறைய வேலையிருப்பதாய்க் கூறி அவனை விலக்கினாள். அவனுக்குப் புரியவில்லை. மார்ச் 13க்குப்பிறகு இருவருக்குமே இடைவெளி விழுந்தது. அவன் அதிகாலை நிறைய கேள்விகளுடன் விடிந்தது. மதிய சூரியன் தெளிவின்றி குழப்பமாய் நகர்ந்தது. அமைதி என்பது மெளனமாயிருத்தல் அல்ல என்று நிலா அவனிடம் தினம் ஒரு கவிதை சொல்லி அவனைச் சீண்டியது. சிலுவைப் பயணத்தின் போது இம்மானுவேலின் கண்களில் இருந்த இந்த உலகினைப் பற்றிய அலட்சியத்தினை எப்போது அவர்கள் கருணையாய் மாற்றினார்கள் என்று தன் அறை புத்தனிடம் கேட்டபோது எந்த பதிலும் சொல்லாமல் புன்னகைத்த புத்தனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

மெரினாவின் இரைச்சலில் ஞாயிற்றுக்கிழமை இருந்தது. அவனும் அவளும் அமர்ந்திருந்த புல்வெளியில் நிசப்த அலை மோதிக்கொண்டிருக்க, அவள் ஒருமுறை தன் வாட்சினைப் பார்த்துக்கொண்டாள். பார்வையை விலக்காமலே 'ரோஜா அழகுதான். ஆனாலும் ரோஜாவைப் பார்ப்பது இப்போதெல்லாம் சலிப்பாயிருக்கிறது. ரோஜா என்றில்லை...பூக்களே சமயங்களில் எரிச்சலைத் தருகிறது. ஆனால் உன் வழிச் சாலையெங்கும் பூமரங்களே நட்டிருக்கிறாய். கிளைகளற்ற இலைகளற்ற...ஏன் மரத்தின் அடித்தண்டுகூட இல்லாமல் வெறும் பூ மட்டுமே இருக்கிற மரம். நிழலுக்கு ஒதுங்க மட்டுமல்ல, என் நிழல் ஒதுங்கக்கூட வழியற்ற ஒரு பூ மரம். அதை மரமென்று சொல்வது ஓர் அடையாளத்துக்குத்தான். வேறு வார்த்தை இல்லாமல்தான். உன் பாதையில் உன்னோடு வருகிற புத்தன், யேசு, காந்தி எல்லோருமே எனக்கு மிக அன்னியமாகத்தான் தெரிகிறார்கள். இப்போது நம் சாலை  திசைவழிகாட்டியின் கீழ் நிற்கிறது. வண்ணத்துப்பூச்சிகளோடு நீ போகும் பாதை எனக்கு கருப்பாயிருக்கிறது. நான் என் திசைக்கு திரும்புகிறேன்'. அவன் அவளின் இரு மார்புகளிடையே முகம் புதைத்து உச்ச இருட்டில் தன்னைத் தொலைத்திருந்தபோது அவளிடமிருந்து தொடர்ச்சியாக முனகல் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. ஒவ்வொரு ரகசிய முனகலுக்கு முன்னும் பின்னும் அவன் பெயர்.

   மெரினாவில் நீண்டகாலமாய் வசிக்கும் ஒரு வண்ணத்துப்பூச்சி பறந்துவந்து அவனருகில் அமர்ந்தது. 'எதை நம்பி நீ உன்னை பரிசளித்தாய்'  வண்ணத்துப்பூச்சியிடமிருந்து பார்வையை விலக்காமல் இருந்தான். 'நீ ஏற்றுக்கொள்வாய் என்று நம்பித்தான்' என்றவளின் பார்வை கடல் நிறத்தினில் உறைந்திருந்தது. 'உனக்கு அப்போது அது தேவையாய் இருந்திருக்கிறது'. அவன் விரல் நுனியில் பூச்சி அமர்ந்தது. 'நீயும் வேண்டாமென்று மறுக்கவில்லையே... சந்தர்ப்பத்துக்குக் காத்திருப்பவர்கள் வாய்ப்பினை எப்போதும் நழுவ விடுவதில்லை. இல்லையா?' சட்டென்று அந்த வண்ணத்துப்பூச்சி கடல் நோக்கிப் பறந்தது. 'மரங்களும் பூக்களும் கடலில் கிடையாது என்றே தெரியாத ஒரு குருட்டு வண்ணத்துப்பூச்சியினை நம்பி நான் பறக்கத் தயாரில்லை. என் சிறகின் நிறம் வேறு' என்று எழுந்தவளிடம் 'ஒரு வண்ணத்துப்பூச்சியினைக் கொல்வதற்கு நீ கத்தி உபயோகித்திருக்க வேண்டிய அவசியமில்லை' என்றான் மெளனமாய். அவள் அவனைக் கடைசியாய் பார்த்துவிட்டு நகர்ந்தாள். கடற்கரையோரம் அழகுக்காக நடப்பட்டிருந்த செயற்கை மரம் ஒன்றின் பிளாஸ்டிக் பூவில் அமர்ந்திருந்தது அந்த வண்ணத்துப்பூச்சி. அதற்கு இப்போது பசியில்லை. அதன் கால்கள் வருடிக்கொண்டிருந்த பிளாஸ்டிக்  உடல் கொஞ்சம் கொஞ்சமாக பூ உடலாய் மாறிக்கொண்டிருந்தது.
அவன் பெயர் ரகுநந்தன். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி. சென்னையில் ஸ்பென்சர் ப்ளாசா எஸ்கலேட்டர் படிகளில் நீங்கள் ஏறிக்கொண்டிருக்கும்போது கீழிறங்கும் அவனை என்றாவது சந்திக்க நேரிடலாம். அவள் பெயர் புவனா. தனியார் நிறுவனமொன்றில் ரிஷப்சனிஸ்ட்.  அதே சென்னையின் சத்யம் காம்ப்ளெக்சின் ஏதாவது ஒரு சினிமா இடை வேளையில் கூட்ட நெருக்கடியில் கையில் பாப்கார்ன் பக்கெட் வைத்துக் கொறித்துக் கொண்டிருக்கும் அவளையும் நீங்கள் சந்திக்க வாய்ப்புண்டு.

   

                 
    


      


No comments:

Post a Comment