Monday 25 November 2013

காமத்தின் நிறம் வெள்ளை-


சிறுகதை-

காமத்தின் நிறம் வெள்ளை-




தயாளனின் அருகில்தான் அந்த பாம்பு படுத்திருந்தது. மௌனமாய் சட்டை உரித்துக்கொண்டிருந்தது. காற்றில் நீலம் கலந்திருக்க  மூச்சில் சாம்பல் வாசனை உணர்ந்தான் தயாளன். புரண்டு படுக்க எத்தனித்து பாம்பின் அருகாமை உணர்ந்து மல்லாந்து விட்டம் பார்த்தவனின் கண்களில் பச்சை உளுந்தின் நெடியும் சூடான சுக்கில வாசனையும் கலந்து இறங்கின. பாம்பின் அசைவில் மெலிதாய் வேகம் கூடியது. தயாளன் பதட்டமானான். தன் உடம்பில் நீர் ஊறுவதைத் தெளிந்து கை நீட்டி பாம்பினைத் தொட, பாம்பு நகர்ந்தது. சட்டை கிடந்தது தனியே. தயாளன் விரலில் பிசுபிசுப்பு நெளிந்தது. கறுப்பும் நீலமும் கலந்த அறை வெளிச்சம்  கண்களுக்குள் இறங்க பவானியின் கழுத்து நரம்பு  வியர்வையில் துடித்ததை தயாளன் உணர்ந்தான். கட்டிலை விட்டு இறங்கினான். உடல் மிக கனத்திருந்தது. சிறுநீர் கழிக்கும்போது தன் நிழலையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவன் கண்களில்  உரித்துப்போட்ட சட்டையெங்கும் விரவியிருந்த வெள்ளைப் புள்ளிகள் மிகப் பெரிதாகத் துவங்கின.


முதலில் அவன் புருவத்துக்கு மேலேதான்  தோன்றியது, சிறு வெள்ளைப் புள்ளி. பவானியின் கண்களிலும் பெரிதாய் கேள்வி எதுவும் எழவில்லை. அச்சிறு புள்ளி அம்பது பைசா அளவில் மாறியபோது தயாளனின் கால்களிலும் அங்கங்கே சின்னச்சின்னதாய் வெள்ளை வட்டங்கள். பவானியின் மூச்சில் சர்ப்பம் சீறியது அப்போதுதான். மருத்துவம் அதற்கான நியாயம் சொன்னது. பவானியின் கண்களில் ஒளிந்த பிளவுபட்ட நாக்கு எந்த சமாதானத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை. விஷம் கக்கத் தொடங்கிற்று.

அன்று ஒன்பதாவது வருட திருமண  நாள். காலையில் குளித்து முடித்து கோயிலுக்குச் சென்றுவிட்டு மலரை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தவர்களிடம் மெளனம் முகாமிட்டிருந்தது.   
ஓட்டு வீட்டில் வெளிச்சம் வர பதிக்கப்பட்டிருந்த கண்ணாடி பட்டை வழியே  ஒழுங்கற்ற சூரியன் பவானியி்ன் வியர்வை இடுப்பில்  நழுவிக் கொண்டிருந்தான். தயாளன் எச்சில் விழுங்கினான். கண்களில் காதல் குறும்புடன் மெல்லிய புன்னகை உதட்டில் தேக்கி பின்னாலிருந்து பவானியை அள்ளி அணைத்தான். 'ம்ப்ப்வ்வ்வ்வ்...' பவானியிடமிருந்து வினோதமான சத்தம் எழுந்தது. முழங்கையால் தயாளனின் வயிற்றில் மோதித் திரும்பினாள். தயாளனுக்கு வலித்தது. புருவம் சுருக்கியவனிடம் ' என்னத் தொடாதீங்க' என்றாள் தலை குனிந்தபடி. தயாளனுக்குப் புரியவில்லை. காலையில் கோயிலுக்குச் செல்லும்போது நன்றாகத்தானே இருந்தாள். அதற்குள்...' ஏன் பவா... என்னாச்சு? ஒடம்பு சரியில்லையா...' என்றபடி அவள் தோளைத் தொட, பவானியின் நரம்புகளில் நடுக்கம் நகர்ந்ததை உணர்ந்து கையை விலக்கினான். 'ஆமா...தலைய வலிக்குது. தொடதீங்க...'
தொடாதீங்க மட்டுமே தயாளன் காதில் விழுந்தது. விலகினான்.

இரவு. கட்டிலில் படுத்திருந்தான் தயாளன். இன்னும் பவானி சமயலறையை விட்டு வரவில்லை. மதியம் தயாளன் கேட்டபோதும் சரிவர பதில் சொல்லாத பவானியிடம் மேலும் ஏதும் கேட்கத் தோன்றவில்லை.   இறுக்கத்திலிருந்து மீளாத பவானியின் முகம் தயாளன் மனதில் பெரிய வட்டமாயிருந்தது. மிகத் தாமதமாய் படுக்கைக்கு  வந்தவள் இரவு  விளக்கை எரியவிட்டு படுத்தாள். ஒருக்களித்து  படுத்த தயாளனின் கை நீண்டு பவானியின்  தலையினைத் தொட்டு வருடியது. அசைவினை உணர்ந்தான். ' தலைவலி பரவாயில்லையா?' என்றான். எவ்வித பதிலும் வராமல் போகவே, எழுந்து லைட்டைப் போட்டான். லேசான கோபம் மூச்சிரைப்பாய் மாறி இருந்தது. பவானியைப் பார்த்த வினாடி அதிர்ந்தான். விட்டம் பார்த்து மல்லாந்திருந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. 'என்னாச்சும்மா ' என்று பதறித் தொட உடல் குறுக்கி நகர்ந்தவள் சுவற்றில் மோதினாள். வெடித்துப் புறப்பட்டது அழுகை. திக்கித் திக்கிப் பேசியவளின்  சொற்கள்  தயாளனின் காதுக்குள் விஷக் கொடுக்கினைப் பதித்து விலகின. அன்று அவளை விட்டு விலகியவன்தான்.

வைத்திய முயற்சிகள் பலனளிக்கவில்லை. தயாளன் தளர்ந்தான். தன் உடம்பெங்கும் தழுவிய  வெள்ளை சாத்தானின் கரங்களை விலக்க வழியின்றி கருப்பு மறைந்த வெள்ளை இரவை தன் உலகெங்கும் பூசிக்கொண்டு நடந்தான். காமம் நீலப் போர்வையாய்  அவனை மூடியிருந்தது எப்போதும். எத்தனை விளக்கம் அளித்தும் கேட்கமறுத்த படித்த பவானியிடம் ஒரு நிலைக்கு மேல் பேசுவதை நிறுத்தினான். வீடு என்ற பிம்பம் அவன் மூளையில் பதிய மறுத்தது.

தயாளனின் நிறம் வெள்ளை என்று சொல்ல முடியாது. மாநிறம்தான். 40  வயதில் அவன் புதிய நிறத்திற்குள் புகுந்தான். உதட்டின் மேலேயும் காது மடல்களிலும் வெள்ளை தொடங்கியிருந்தது. கண்ணாடியைக் கழட்டி மேஜையில் வைத்த மருத்துவர் சொன்னது பவானியின் மனதில் சந்தேக வட்டத்தி்னைப் பெரிதாக்கியது. தயாளன் பெரும் அவஸ்தை உணர்ந்தான். ' டோன்ட் ஒர்ரி மிஸ்டர் தயாளன். முதல்ல இது நோயே இல்ல. வெண்புள்ளிங்கிறது நிறமிக் குறைபாடுதான். இட்ஸ் எ விட்டமின் ப்ராப்ளம். தொடர் ட்ரீட்மென்ட்ல சீக்கிரம் இது மறைஞ்சிடும். இது தொட்டா ஒட்டிக்குற நோய் இல்ல. பயப்புடுற அளவுக்கு ஒண்ணுமில்ல...நீங்க எப்போதும்போல நார்மலா இருக்கலாம்'.

தயாளன் கண்ணாடி முன் நிற்கும்போது இனி வரும் நாட்கள் சாதாரணமாக நகரப் போவதில்லை என்று தெரிந்துகொண்டான். பவானி அவனைவிட்டு முற்றிலும் விலகினாள். தயாளன் தன்னைத் தொட வரும்போதெல்லாம் உடல் சுருங்கி அழத் தொடங்கினாள். தயாளனின் காமம் அவனை எரிக்கத் தொடங்கியது. தயாளன் முரட்டு சுபாவம் கொண்டவனல்ல. அதே சமயம் தன் காமத்தின் வடிகாலாகத் தன் மனைவியிடமே கெஞ்சும் அளவுக்கு போகக் கூடியவனுமல்ல. இருந்தும் 40 வயது ஆணுக்கு அந்த வயதில் கிடைக்கவேண்டிய பெண் அணைப்பு இல்லாமல் தனியே கலங்கினான்.

தயாளனின் நீல இரவுகள் வெகு நீளமாக ஆயின. உடல் வட்டங்கள் பெரிதாக அதனுள்ளே உயிர் சுருங்கினான். விரல்களுக்கு எட்டும் தூரத்தில் பவானியின் தலைமுடி மின்விசிறிக் காற்றில் பறந்தபடியிருக்க தயாளனின் விரல்களிலும் வெள்ளை பரவியது. இரவினைக் காவல் காக்கத் தொடங்கினான். பாருக்கு சென்று குடிக்க ஆரம்பித்தான். இரவு வீடு திரும்புதல் தாமதமானது. குழந்தையின் மீதும் பாசம் குறைந்தது. சினிமாவுக்கு சென்று தியேட்டரில் படுத்துத் தூங்கிவிட்டு வீடு திரும்பினான். சினிமாப் பெண்கள் அவனுக்குள் தீ மூட்டினார்கள். உடல் நெளித்தான். கதாநாயகனாக மாறி திரைப்பெண்களுடன்  காமம் சுகித்தான். கதாநாயகன் விலைமாதினைத் தேடிச் சென்றான். அந்த விபசார விடுதி வாசலில் நிறைய பெண்கள் அமர்ந்திருந்தனர். அத்தனை பெரிய கண்களில் அழைப்பு இருந்தது. செயற்கை ஈரத்தில் பளபளத்த உதடுகளில் தயாளனின் பெயர் எழுதி அழைத்தது. போதையின் ஆக்ரமிப்பில் தயாளனின் கால்கள் மயங்கின. வெள்ளைத் தோலுக்கு வசீகரித்தான் தயாளன். அவள் கொலுசுகள் சிதற இரு கைகளாலும் பாவாடையை உயர்த்திப் பிடித்தபடி வராண்டாவில் ஓடினாள். அவள் பின்னே பாம்பாய் விரைந்தான் தயாளன். அவன் முதுகில் இருகைகளையும் வைத்துத் தள்ளிக்கொண்டு பறந்தது காமம். கண்கள் செருக அவளை எட்டிப்பிடித்து திருப்பி மார்பில் முகம் புதைத்தான். பால் வாசனை தயாளனின் நாசி கடந்தது. 'அம்மா' ஆழ மூச்செறிந்தான். இறுக்கி அணைத்திருந்த தயாளனின் விரல்கள் அவளின் முதுகில் பரவின. நகங்களில் படர்ந்தது ஒரு பெரிய மச்சம்.  திடுக்கிட்டு நிமிர்ந்தான் தயாளன். புருவத்தில் மை அப்பிக்கொண்டு மூக்குத்தி, காதில் வளையத்துடன் அவன் அம்மா. '' நாந்தான்டா தயா...ஒன் அம்மா...மச்சத்தை வெச்சிக் கண்டுபுடிச்சிட்டியா... வா, வந்து கட்டிப்புடிச்சிக்கோ'' அவள் இருகைகளையும்  விரித்து அவனை நெருங்க தயாளன் அலறினான். ''அம்மா''.

யாரோ அவனை பின்னிருந்து இழுத்தார்கள். ' தூத்தேறி...ஒடம்புல திமிர் ஏறிடுச்சின்னா பெத்தவளுக்கும் மத்தவளுக்கும் வித்தியாசம் தெரியாது...இதெல்லாம் ஒரு ஜென்மம்...செத்து ஒழிஞ்சா என்ன?' தயாளன் திரும்பி உள்நோக்கி ஓடினான். ஒரு வளைவில் பவானியைச்சந்தித்தான்.'' எப்படியும் நீங்க இங்க வருவீங்கன்னு தெரியும் ...அதான் ஒங்களுக்கு முன்னாடி இங்க வந்துட்டேன்... ம். ஒங்க இஷ்டம் போல...''  இரு கைகளையும் விரித்தாள். தயாளன் பவானியின் காலில் விழுந்தான். உடலெல்லாம் மண் ஒட்டியிருந்தது. பார்க்கில் படுத்திருந்த தயாளனை வாட்ச்மேன் தட்டி எழுப்பினான்.

மறுநாள் தயாளன் புனிதாவைச் சந்தித்தான். குணாவின் புது மனைவி. தயாளனை வீதியில் பார்த்துவிட்டு வீட்டுக்கு அழைத்தான் குணா. ' கல்யாணத்துக்குக் கூட வரலியேடா மாப்ளே'. புனிதாவின் கன்னத்துக் குழி, வெட்டிய தர்பூசணி உதடுகள் தயாளனின் நரம்புகளுக்கு வெடிவைத்தன. குணாவின் வீட்டுக்குச் சென்றான். புனிதாவின் மஞ்சள் உடம்பு, கழுத்தில் பதிந்த சிவந்த அடையாளம், புட்டம் நெருக்கி அசைத்த நடை, நீளக் கூந்தல். தயாளனின் மிருகம் கூர் நகங்களால் அவனைப் பிராண்டத் தொடங்கியது. வீடு முழுவதும் வளையவந்த புனிதாவையே விரட்டிக்கொண்டிருந்தன தயாளனின் கண்கள். புனிதா கிச்சனில் இருந்தாள். சோபாவில் அமர்ந்திருந்த தயாளன் குணாவிடம் பாத்ரூம் எங்கே என்று கேட்டு எழுந்து கிச்சன் கடந்து செல்லும்போது நின்றான். புனிதா அந்தப் பக்கம் திரும்பி இருந்தாள். முந்தானையை இடுப்பில் செருகியிருந்தாள். சிகப்பான கனிந்த சதையில் ஒரு வளைவு பள்ளமாய் இருந்தது. லேசான வியர்வை. தயாளன் மூச்சில் சூடு உயர்ந்தது. அடிவயிற்றில் லேசான வலி. கால்கள் நடுங்க புனிதாவை நெருங்கினான்.  தயாளனின் தோள் தொட்டான் குணா. ' என்னாச்சுடா...இங்க நிக்குறே...புனிதா, காபி ரெடியா?'' புனிதா திரும்பிப் பார்த்தாள். தயாளனின் கண்கள் பதிந்திருந்த இடத்தினை நோக்கி அனிச்சையாய் அவள் கைகள் நீண்டு முந்தானையை இழுத்தது.

தயாளன் பைக்கில் வீட்டுக்குத் திரும்பி விரையும்போது, போன் வந்தது. எடுத்தான்.' என்னடா...வீட்டுல எதுவும் ப்ராப்ளமா?' என்றான் குணா.' இல்லியே..ஏண்டா' ' ஒன் கண்ணுல தூக்கம் தெரிஞ்சுது. நீ தூங்கி ரொம்ப நாளாச்சுன்னு நெனைக்கிறேன். மனசைக் கண்ட்ரோல்ல வெச்சுக்கோ... நீ தயாளன். ஞாபகம் இருக்குல்ல'  தயாளன் எச்சில் விழுங்கினான்.நெஞ்சில் முள்  உறுத்த, கண்ணீர் உடைந்தது. அன்று இரவு நிறைய குடித்தான். நள்ளிரவு வீட்டுக்குச் சென்று படுத்தபோது அவன் மனதில் ஒரு திட்டமிருந்தது.

மறுநாள் காலை குளித்துவிட்டு வங்கிக்குச் சென்று பவானியின் அக்கவுண்ட்டில் பணம் போட்டான். கணிசமான தொகை. கோயிலுக்குச் சென்றான். மதியம் வரை அமர்ந்திருந்தவன் எழுந்து ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டான். சாயங்காலமாய் வீட்டுக்குச் செல்ல பவானி இல்லை. பள்ளிக்கூடத்துக்கு  மலரை அழைத்துவர சென்றிருந்தாள். ஒரு காகிதத்தில் எழுதினான். ' பவானிக்கு, உனக்கும் நம் குழந்தைக்கும் எதிர்காலத்துக்குத் தேவையான பணம் செட்டில் செய்திருக்கிறேன். நான் போகிறேன்.' அவ்வளவுதான். வேறு எதுவும் இல்லை.

எங்கு என்று தீர்மானிக்கவில்லை. பஸ் விரைந்து கொண்டிருந்தது. இரவு சாப்பிடாததில் லேசான மயக்கமும் தூக்கமுமான நிலையில் இருந்தான் தயாளன். முதலில் திருவண்ணாமலை என்று தீர்மானித்திருந்தவன் பேருந்து நிலையத்துக்கு வந்ததும் நிலையான மனமின்றி அங்கே நின்று கொண்டிருந்த திருச்சி பஸ்ஸில் ஏறினான். திருச்சியில் இறங்கும்போது இரவு 9 மணி. பசி வயிற்றைக் கிள்ளியது. ஹோட்டல் நோக்கி நடந்தான். யாரோ அவன் மீது மோதிவிட்டு ஓடினார்கள். திடுக்கிடலுடன் திரும்பியவன் கண்களில் அவன் சிக்கினான். பஸ் ஸ்டாண்டிலேயே வாழும் ஒரு பைத்தியம். தயாளனின் கண்களை முதலில் அறைந்தது அவனின் நிர்வாணம்தான். பஸ் ஸ்டாண்டின் மஞ்சள் வெளிச்சம் தன் மீது படர்ந்திருப்பதைப் பற்றிய எவ்வித சலனமுமின்றி படுத்திருந்தான். கறுப்பு உருவம். அழுக்கு மயிர்கள். தளர்ந்த குறி. தயாளனின் கண்கள் கலங்கின. ஹாரன் அடித்தபடி தன் எதிரில் வந்து நின்ற மதுரைக்கு செல்லும் பஸ்ஸில் ஏறினான் தயாளன். பெரும் நிசப்தத்தினில் வீழ்ந்ததுபோல தயாளனின் மனதில் நகர்ந்த கடிகார  டிக்டிக் அவன் செவிக்குக் கேட்டது.

அது இருவர் அமரும் இருக்கை. ஜன்னலோரமாய் அமர்ந்திருந்தவனுக்கு 25  வயது இருக்கலாம். சிவப்பாய் இருந்தான். பஸ் திருப்பத்தில் வளையும் போதெல்லாம் தயாளனின் மீது சரிந்து விழுந்தான். விரைந்த பஸ்ஸுக்குள் காற்று விளையாடிக் கொண்டிருந்தது. லேசான குளிர் பரவியிருக்க தயாளனின் காது மடல்களில் சில்லிப்பை உணர்ந்தான். தூக்கமும் கனவும் அற்ற நிலையில் தயாளனின் உலகில் அந்தக் கை விழுந்தது. கண்விழித்த தயாளன் தன் மேல் விழுந்திருந்த பக்கத்து இருக்கை இளைஞனின் கையை விலக்கினான். கண்களை மூடி கைகளைக் கட்டிக்கொண்டு இன்னும் நன்றாக சாய்ந்து அமர்ந்தான். சில நொடிகளில் மறுபடியும் அந்த உராய்வு. சட்டென்று விழித்தான். அந்த இளைஞன் ஆழ்ந்த உறக்கத்திலிருப்பது தெரிந்தது. தன்னிச்சையாக தன் மீது சரிந்திருக்கிறான் என்பதை உணர்ந்த தயாளன் இன்னொன்றையும் அப்போதுதான் கவனித்தான். கிட்டத்தட்ட தயாளனின் கழுத்தின் மீது அந்த  இளைஞனின் முகம் சாய்வாகப் பதிந்திருந்தது. தயாளனின் உடம்பு முழுவதும் வெள்ளை பரவவில்லையென்றாலும் கழுத்துப் பகுதியில் நிறம் எப்போதோ மாறியிருந்தது. அந்த மாறிய தோலின் நிறத்தில்தான் அந்த இளைஞனின் மூச்சின் நடனம். தயாளன் அமைதி தொலைந்து இதயத்தின் நடுக்கத்தை உணர்ந்தான். இளைஞனை எழுப்பினான். நிமிர்ந்த அவன் சூழல் புரிந்து ' ஸாரி சார்' என்றபடி அந்தப் பக்கம் திரும்பி உறங்கத் தொடங்கினான். பெருமூச்சுவிட்டு சாய்ந்து கண்மூடிய தயாளனின் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவன் காதோரமாய் வந்து ' ஸாரிங்க' என்று பவானி முத்தமிடுவதை உணர்ந்து கண் திறந்தான். இப்போது அந்த இளைஞன் தயாளன் மீது முழுக்கச் சாய்ந்திருந்தான். தயாளனின் தொடை இடுக்கில் அவன் கை  விழுந்திருந்தது. சாலையில் நின்றுகொண்டிருந்த தெருவிளக்குகளின் வெளிச்சம் பஸ்ஸின் உள்ளே மோதி மோதி விலகியதில் அந்த இளைஞனைக் கவனித்தான். இப்போதுதான் மீசை அரும்பியிருந்தது. கழுத்துப்பக்கம் லேசான பூனை முடி. பவானிக்கு இருப்பதைப் போல். பவானியைப் போலவே வெள்ளை நிறம். நிகோடின் படியாத மெல்லிய உதடுகள் இளஞ்சிவப்பாய். தன்னிடம் விறைப்பினை உணர்ந்தான் தயாளன். உடல் முழுவதும் ஓர் உறுப்பாக மாறி தயாளனை வதைக்கத் தொடங்கியது. மெல்ல இளைஞனின் தோளில் கைபோட்டு தன்பக்கம் இழுத்து அணைத்துக்கொண்டான். எந்த நிறத்தினை அறுவறுப்பென்று கருதி பவானி விட்டு விலகிப் போனாளோ அந்த வெள்ளையின் மீதுதான் இன்னொரு உடல் மூச்சு. தயாளன் இன்னும் நெருக்கினான். முகம் திருப்பி உதடு குவித்து இளைஞனின் நெற்றியில் முத்தம் பதித்தான். கண்களை மூடினான். உலகின் அத்தனை சத்தமும் நின்றுபோய் தயாளனும் அந்த இளைஞனும் மட்டும் இருந்த கணத்தில் அவன் விழித்தான். சட்டென்று தன்னை விடுவித்தான். தயாளன் அதிரத் தொடங்கினான். காமம் தன் வீரிய ரத்தம் குறைத்து தளர்ந்திருந்தது. இதயம் தாறுமாறாக அடிக்கத் தொடங்க தயாளனின் கண்கள் ஏறும் வழி என்று எழுதப்பட்டிருந்த படிக்கட்டுகளைப் பார்த்தது. இறங்கிவிடத் தீர்மானித்தான். சட்டென்று இருக்கையிலிருந்து எழுந்து வேகமாய் விரைந்துகொண்டிருந்த பஸ்ஸிலிருந்து வெளியே பாய்ந்தான். சாலையில் மோதிய உடல் பஸ் சக்கரத்தில் சிக்கி ரத்தம் சிதறியது. துளித் துளியாய் சிவப்பு வட்டங்கள் தயாளனின் வெள்ளை வட்டங்களை  மூடத் தொடங்கின.

















No comments:

Post a Comment