Monday 6 August 2012

பிரிதல் நிமித்தம்


போர் நிமித்தம் 

காட்சி 1
தலைவன்:
குருதிக் கறைகளை
கழுவிட நேரமின்றி இன்னும் இருக்கிறது
என்னிரு கரங்கள்
களையும் சிரங்கள்
வாளாயவளையணைத்தபடி
பல நாள் உறங்கும்
உரோமக் கால்கள்
காமக் கால்களாய்
வதைக்கும் வேதனையறியாது
பாடுவாள் நதியிடம்
போர்க்களம் புகுந்தவன்
மார்க்களம் வரமாட்டான்

தலைவி:
நகரும் நதியின்
இரவை நிறமழித்து
அமர்ந்திருக்கும் பாறை
சூடேறியிருக்கும்


ஆகாயம் ஆடைமாற்றும் பொழுதில்
அசைத்துவிட்ட
கிளையுதிர்க்கும் மலர்கள்
காற்றாலோ நதியாலோ
புறப்படும் இறுதிப்பயணம்


தாமத மேகங்கள்
விரைவதைக் கண்டவன்
திரும்பும்போது பற்றியெரியும்
இதழ்களை
அணைக்கச் சொல்லாதே

தோழி:
போர்க்கள பூமியில்
தென்படா மேகங்கள்
கொண்டுவருவதில்லை
அவனின் மழையை


பிணந்தின்னிக் கழுகளின்
இறக்கை மூடும் வானம்
அறியாதவன் அறியமுடியாது
விட்டுவந்த
நிலவின் வெப்பத்தை 


எந்நதிகளிலும் இறங்கமுடியாமல்
காற்றெரித்து வரும் தீயை
அணைக்கக் குளிர்ந்திரு.

பொருள் நிமித்தம்:

தலைவன் :
ஒப்பந்த அடிப்படையில்
உயிர்விட்டு  வந்தாயிற்று


இந்தவானம் இப்படித்தானிருக்கும்
இன்னும் சில யுகங்களுக்கு


நாடு கண்ட வெப்பமும்
நான் கொண்ட வெப்பமும்
நான்கு சுவர்களில் தவிக்கிறது
நள்ளிரவுகளில்
எனையெரித்தபடி


வாரம் தொலைபேசினால்
இவ்வருடம் மழையிங்கே அதிகம்
என்கிறாள்

தலைவி:
விட்டுசென்ற
நீல சட்டையில்
ஒட்டிய வாசனை
ஒட்டும் உயிரை


தொலைபேசி அழைப்பும்
தொண்ணூறு நாள் வாழ்வும்
தொடருமோ மறுபிறவியிலும் 


அத்தனை பூக்களும் அழிகின்றன
அதிகம் பெய்த மழையில்

தோழி:
எல்லா பூக்களும்
டிசம்பரில் பூப்பதில்லை


கடல் கடந்து சென்றவன்
உடல் கலந்து கொன்றவன்
திரும்பி வரும் நாளில்
பூத்துவிடும்
ஒட்டுமொத்த பூக்களும்
உன் தோட்டத்தில் ஓரிரவில்


பூக்களின் இதழ்களில்
குறித்துவை
பெருமழைக்காலம்
பேசிய கவிதைகள். 

No comments:

Post a Comment