Sunday 9 August 2015

 
ஒரு புள்ளியில் தொடங்கி...
ஒரு புள்ளியில் தொடங்கும் வாதை
கோடென நீண்டு வளைந்து நெளிந்து
பின் உயரத்தில் சுருக்கிட்டுக் கொள்கிறது

நிலம் வனம் கடக்கும் அப்புள்ளி
நெடுந்தூரப் பயணத்திற்குப் பின்
மலை கண்டு மேலிருந்து வீழ்கிறது

தன்னை அழித்துக்கொள்ள
தனிமை தேடும் சிறுபுள்ளி
மெல்லப் பருத்து கனம் தாங்காமல்
சிதறிப் பரவுகிறது

ஆழ்கடல் கண்டு நடுங்கி
அறை திரும்பும் அப்புள்ளியின் தொண்டைக்குழியில் 
தேங்கி நிற்கிறது
எக்காலத்திலும் தீராத துளி விஷம்.

No comments:

Post a Comment