Thursday 7 March 2013

அந்தப் பாடலில் நீயுமில்லை நானுமில்லை

அந்தப் பாடலில் நீயுமில்லை நானுமில்லை

ஒரு புள்ளியில் ஆரம்பித்து
கோடென நீளும் உன் சிரிப்பு
இந்த இரவினைத் தாண்டிச் செல்கிறது

விரையும் நிலாப் பாதையில்
என் விரல் பிடித்து அலையும் லதா மங்கேஷ்கரின் குரல்

உனக்குத் தெரியாமலே
என் பாடல் வழி சாலையில்
உடன் வருகிறாய் நீ.

அர்த்தங்கள் அடங்கிய சோகத்தை
மொழி பெயர்க்க எனக்குத் தெரியவில்லை

நீ விலகிய இந்த நொடியில்
பிறக்கிறது நமக்கான பாடல்

கண்டம் தாண்டும் காற்றின் அலைவரிசையில்
நீயும் நானும் லதா மங்கேஷ்கரும்

மின்சாரம் இழந்த நள்ளிரவில்
செவியெங்கும் நிறைந்து வழியும் எங்கிருந்தோ அழைக்கும் கீதம்

நீயுமின்றி நானுமின்றி
நகரமெங்கும் திரியும் வெப்பத்தைக் கடத்துகிறது
லதா மங்கேஷ்கரின் குளிர் நிரம்பிய வலி.

No comments:

Post a Comment