Thursday 7 March 2013

ப்ளோரசன்ட் இரவினைக் கடத்தும் பூனை

ப்ளோரசன்ட் இரவினைக் கடத்தும் பூனை

இந்த இரவில் நீ
தனித்திருக்கிறாய்
விழித்திருக்கிறாய்
பசித்திருக்கிறாய்

பெரும் கருணை கொண்டு
உன்னை அப்படியே விட்டுவிட
நான் அவ்வளவு நல்லவனில்லை

உன் தனிமையை என்னால் சிதைக்கமுடியும்
உன் நீளமான இரவின் கூந்தலை தடவியபடி
ஒரு பாடலுடன் அதனை உறங்கவைக்க முடியும்
எச்சில் விழுங்கும் தாகத்தினை
உடல் சுருங்கும் பசியினை
ஒரு நொடியில் என்னால் விரட்டமுடியும்

என் அனுமதியின்றி ஒரு பூனை வளர்கிறது
எனதறையில்

சாம்பல் முகத்தில் மிதக்கும் பச்சை விழிகளில்
அனுதினம் பெருகுகிறது மதுக்கடல்

நிசிக்கணத்தில் நாக்கைச் சுழற்றி
தன் மதுவினைக் குடிக்கும் கள்ளப்பூனைக்கு
என்னைப்பற்றி எல்லாம் தெரியும்

பிஞ்சு நடையில் என்னைப் புணரும் பூனை
எப்போதும்
தனித்திருக்கிறது
விழித்திருக்கிறது
பசித்திருக்கிறது.

No comments:

Post a Comment