Friday 16 November 2012

அந்தரச் சிறகு







அந்தரச் சிறகு

அவன் கண்கள் பெரிதாக இருக்கிறது
அவனுடைய ராத்திரிகளைப் போலவே

பத்தடி நீள அகலமுள்ள அறையை
நூறுமுறை சுற்றி வருகிறான்
ரகசியக் கசிவான பாடலின்
விரல் நுனியினைப் பிடித்தபடி

கடிகாரத்துக்குப் பசிக்கும் நிசியில் 
மௌனத்தை அள்ளி தட்டில் போட்டுப் பிசைகிறான்
முழங்கை வழி வழியும்
உப்புச்சுவையை உறிஞ்சித் தீர்க்கிறான்
ராத்திரியின் மீது பரிதாபம் கொள்ளுமவனின்நடனம்
காற்றை மோதி நழுவும் 
அந்தரச் சிறகின்  வயலினை
ஒத்திருக்கிறது

ஒரே புத்தகத்தை
திரும்பத் திரும்ப படிக்குமவன்
கணினித் திரையில் விளையாடும்
சூதாட்டத்தில் 
தொடர்ந்து ஜெயித்தவண்ணம் இருக்கிறான்
ஜோக்கரின் புன்னகையில் ராஜாவும் ராணியும் சாகிறார்கள்
  
திறந்தேக் கிடக்கும் வாசலில்
மிக மிக எளிமையான தனிமை ஒன்று
தயங்கி நிற்கிறது
பெருந்தனிமைக்காரனின் இரவை அப்படியே விட்டுவிட்டு 
மெல்லத் தேம்பியபடி விலகுகிறது
தன் பழைய வதைமுகாம் நோக்கி

( விஸ்வநாதன் கணேசனுக்கு)

No comments:

Post a Comment