
அந்தரச் சிறகு
அவன் கண்கள் பெரிதாக இருக்கிறது
அவனுடைய ராத்திரிகளைப் போலவே
பத்தடி நீள அகலமுள்ள அறையை
நூறுமுறை சுற்றி வருகிறான்
ரகசியக் கசிவான பாடலின்
விரல் நுனியினைப் பிடித்தபடி
கடிகாரத்துக்குப் பசிக்கும் நிசியில்
மௌனத்தை அள்ளி தட்டில் போட்டுப் பிசைகிறான்
முழங்கை வழி வழியும்
உப்புச்சுவையை உறிஞ்சித் தீர்க்கிறான்
ராத்திரியின் மீது பரிதாபம் கொள்ளுமவனின்நடனம்
காற்றை மோதி நழுவும்
அந்தரச் சிறகின் வயலினை
ஒத்திருக்கிறது
ஒரே புத்தகத்தை
திரும்பத் திரும்ப படிக்குமவன்
கணினித் திரையில் விளையாடும்
சூதாட்டத்தில்
தொடர்ந்து ஜெயித்தவண்ணம் இருக்கிறான்
ஜோக்கரின் புன்னகையில் ராஜாவும் ராணியும் சாகிறார்கள்
திறந்தேக் கிடக்கும் வாசலில்
மிக மிக எளிமையான தனிமை ஒன்று
தயங்கி நிற்கிறது
பெருந்தனிமைக்காரனின் இரவை அப்படியே விட்டுவிட்டு
மெல்லத் தேம்பியபடி விலகுகிறது
தன் பழைய வதைமுகாம் நோக்கி
( விஸ்வநாதன் கணேசனுக்கு)
No comments:
Post a Comment